மகளிர் இடஒதுக்கீட்டை தடுக்கும் "Census + Delimitation"
குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
பொருளடக்கம்
- முகவுரை
- 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதா
- சட்டம் அல்ல, சதித்திட்டமே தடுக்கப்பட்டது
- பா.ஜ.கவால் நீடிக்கும் சிக்கல்
- இணைப்பை நீக்குவதே தீர்வு
- பொய்களுக்கு எதிரான உண்மை விளக்கம்
- மகளிருக்கு ஆதரவாக தி.மு.க
- கூட்டாட்சிக்கு முன் நிற்கும் சவால்கள்
- முடிவுரை
- விவரணைகள்
முகவுரை
அரசியல் மன்றங்களில் மிக முக்கியமான "மகளிர் இடஒதுக்கீடு", ஒன்றிய பா.ஜ.க அரசின் "Census + Delimitation" என்ற சூழ்ச்சியால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. மகளிருக்கு அரசியல் வாய்ப்புகளை வழங்குவது முக்கியம்; அதே போல் மாநில உரிமைகளை பாதுகாப்பதும் அவசியம். இந்நிலையில், இது குறித்த உண்மை நிலையும் நீடித்து வரும் சிக்கல்களையும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் நோக்கில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதா
19 செப்டம்பர் 2023 அன்று, "Census + Delimitation" முடிந்த பின்னரே நடைமுறைக்கு வரும் என்ற நிபந்தனையுடன், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒன்றிய பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. இதையொட்டி, 20 செப்டம்பர் 2023 அன்று, மசோதாவின் தெளிவின்மை குறித்து தமிழ்நாட்டின் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே எச்சரித்தார். "Census + Delimitation" தாமதத்தால், மசோதாவின் அமலாக்கம் 2029 ஆம் ஆண்டிற்கு முன்னர் வராது என்றும், Census கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் Delimitation மூலம் எந்த மாநிலத்திற்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு தீங்கு விளைவிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த மசோதா குறித்த விவாதத்தின் போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கும் "Census + Delimitation" திட்டத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்விக்கு தெளிவான பதில் அளிக்கப்படாத நிலையில், அந்த நிபந்தனையை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு அதை ஏற்கவில்லை. இருப்பினும், மகளிர் நலன் கருதி, இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தின் 543 தொகுதிகளை "Freeze" செய்து, எந்த மாநிலமும் தனது பிரதிநிதித்துவத்தை இழக்காதபடி உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில், ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் Census அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்து, சமமான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் கோரிக்கையாகும். மேலும், இது இந்திரா காந்தி மற்றும் வாஜ்பாய் ஆட்சிக் காலங்களிலும் பின்பற்றப்பட்ட நடைமுறையாகும்.
சட்டம் அல்ல, சதித்திட்டமே தடுக்கப்பட்டது
16 ஏப்ரல் 2026 அன்று, ஒன்றிய பா.ஜ.க அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அரசியலமைப்பு திருத்தச் சட்டமாக [Officially Notified] அறிவித்தது. அதே நேரத்தில், அதனுடன் இணைந்த "Census + Delimitation" செயல்முறைகளை குறுக்கு வழியில் விரைவாக நிறைவேற்றும் நோக்கில், [1971 Census அடிப்படையில் Delimitation என்பது Freeze செய்யப்பட்டதற்கு மாறாக], கடைசியாக எடுக்கப்பட்ட 2011 Census கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, 543 தொகுதிகளை 850 ஆக உயர்த்தும் 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை முன்மொழிந்தது. மாநிலங்களுக்கு 50% வரை தொகுதிகள் அதிகரிக்கும் என்று அமித் ஷா கூறியிருந்தாலும், அது எழுத்துப்பூர்வமான உறுதிமொழி அல்ல; வாய்மொழி உறுதி மட்டுமே.
இந்த சூழ்ச்சியான முன்மொழிவு, தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தீர்க்கமான எதிர்ப்பால் நாடாளுமன்றத்தில் முறியடிக்கப்பட்டது. இதையொட்டி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் முறியடித்துவிட்டதாக, பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கின்றன.
உண்மை என்னவென்றால், 2023 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா அப்போதே நிறைவேற்றப்பட்டு, 2026 ஏப்ரலில் சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், அந்த சட்டத்தை அமல்படுத்தும் செயல்முறையில் [Procedure to Execute] இன்னமும் சிக்கல்கள் நீடிக்கின்றன. அந்த செயல்முறையைச் சார்ந்த ஒன்றிய பா.ஜ.க அரசின் சதித்திட்டமான 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை முறியடித்ததன் மூலம், தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் நாட்டை ஆபத்திலிருந்து காப்பாற்றியுள்ளன. இருந்தபோதிலும், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையே முறியடித்துவிட்டதாக ஒன்றிய பா.ஜ.க அரசும் அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.கவும் பொய் பரப்புரை செய்து வருகின்றன.
பா.ஜ.கவால் நீடிக்கும் சிக்கல்
மொத்தத்தில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்னும் செயல்பாட்டிற்கு வராத முக்கிய காரணம், அது "Census + Delimitation" செயல்முறைகளுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டிருப்பதே. இந்த இணைப்புகளை நீக்கி, மசோதாவை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, தி.மு.க எம்.பி. வில்சன் தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார். ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசால் அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இணைப்பை நீக்குவதே தீர்வு
இப்போது நமக்கு முன்னால் உள்ள நிலை தெளிவாக உள்ளது; அதன் முக்கிய கூறுகள் பின்வருமாறு,
*"Census + Delimitation" செயல்முறையிலிருந்து மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பிரித்து [Delink], 543 தொகுதிகளிலும் மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
*மகளிர் இடஒதுக்கீட்டில் "Minorities, OBC, SC, ST" உள் ஒதுக்கீடுகளை சேர்த்து, 2029 தேர்தல்களுக்கு முன்பாக அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
*Caste அடிப்படையிலே புதிய Census கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
*மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் "வட இந்தியாவில் அதிகமாகவும், தென் இந்தியாவில் குறைவாகவும்" உள்ள நிலையில், புதிய Census கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது.
*1971 Census கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு Delimitation செயல்முறைக்கு விதிக்கப்பட்டுள்ள "Freeze" மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.
*புதிய Census கணக்கெடுப்பிற்குப் பிறகு, தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல், தொகுதி எல்லைகளை மறுசீரமைத்து சமமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய வேண்டும்.
பொய்களுக்கு எதிரான உண்மை விளக்கம்
இந்தச் சூழலில் "பா.ஜ.க + அ.தி.மு.க" சில தவறான புரிதல்களை உருவாக்கும் வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றன.
பொய் பிரச்சாரம் 1: மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் போனதற்கு தி.மு.கவே காரணம்.
உண்மை நிலை: 2026 ஏப்ரலில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொய் பிரச்சாரம் 2: "Census + Delimitation" நடந்தால் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறையும்; அதற்கு தி.மு.கவே காரணம்.
உண்மை நிலை: தி.மு.க ஆரம்பத்திலிருந்தே Delimitation திட்டத்தை 25 ஆண்டுகளுக்கு "Freeze" செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
மகளிருக்கு ஆதரவாக தி.மு.க
மக்கள் நலன் சார்ந்த ஆட்சிக்காக பரவலாக அறியப்படும் தி.மு.கவின் சமூக நீதிக் கொள்கையின் முக்கிய அங்கமாக மகளிர் முன்னேற்றம் விளங்குகிறது. "சொல் அல்ல செயல்" என்ற அடிப்படையில் பெண்களின் கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தி.மு.க அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அவற்றில் "கடலில் ஒரு துளி" போன்ற சில நலத்திட்டங்கள் பின்வருமாறு,
1967 = அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் மூலம் கலப்புத் திருமணங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
1974 = காவல் துறையில் மகளிர் காவலர்கள் நியமிக்கப்பட்டதன் மூலம், சட்டம்-ஒழுங்கு பணிகளில் பெண்களின் பங்கு தொடங்கியது.
1989 = மகளிர் சுயஉதவி குழுக்கள் தொடங்கப்பட்டு, சேமிப்பு, கடன் மற்றும் சிறு தொழில் வாய்ப்புகள் மூலம் பெண்களின் பொருளாதார முன்னேற்றம் உறுதி செய்யப்பட்டது.
1989 = மகளிருக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டு, ஆண் - பெண் சமத்துவம் சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது.
1989 = அரசுப் பணிகளில் மகளிருக்கு 30% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, வேலைவாய்ப்பில் அவர்களின் பங்கேற்பு அதிகரிக்கப்பட்டது.
1989 = மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் மூலம் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
1989 = டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவச் செலவும் ஊட்டச்சத்திற்கும் நிதியுதவி வழங்கப்பட்டது.
1996 = உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, அவர்களின் அரசியல் பங்கேற்பு அதிகரிக்கப்பட்டது.
1999 = மகளிர் சிறு வணிகக் கடன் திட்டம் மூலம் பெண்களுக்கு சிறு தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டது.
2021 = அரசுப் பணிகளில் மகளிர் இடஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்பட்டு, வேலைவாய்ப்பில் அவர்களின் பங்கேற்பு மேலும் அதிகரிக்கப்பட்டது.
2021 = நகர்ப்புற உள்ளாட்சிகளில் 50% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, பெண்களின் அரசியல் சமத்துவம் உறுதி செய்யப்பட்டது.
2021 = விடியல் பயணம் திட்டம் மூலம் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்பட்டது.
2021 = மகளிர் சுயஉதவி குழுக்கள் வலுப்படுத்தப்பட்டு, குறைந்த வட்டியில் கடன் மற்றும் தொழில் ஆதரவு வழங்கப்பட்டது.
2022 = புதுமைப் பெண் திட்டம் மூலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு உயர்கல்விக்காக மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்பட்டது.
2022 = தோழி விடுதி திட்டம் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் குறைந்த விலையிலான தங்குமிடம் வழங்கப்பட்டது.
2023 = கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்பட்டது.
நாட்டின் மகளிர் நலனில் தி.மு.கவுக்கு அக்கறை இல்லை என்று பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் பொய்யான பரப்புரையை மேற்கொள்கின்றன. ஆனால், உண்மை என்னவென்றால், இந்திய அளவில் மகளிர் நலனுக்காக பல முன்னோடி திட்டங்களை அறிமுகப்படுத்திய இயக்கம் தி.மு.க தான். இதை மேற்கண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நலத்திட்டங்கள் தெளிவாக நிரூபிக்கின்றன.
கூட்டாட்சிக்கு முன் நிற்கும் சவால்கள்
மகளிர் இடஒதுக்கீடு மற்றும் "Census + Delimitation" ஆகியவை கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டிய சிக்கலான அரசியல், சமூகவியல் மற்றும் பொருளாதார அம்சங்களை உள்ளடக்கியவை. கொள்கை முடிவுகளுக்குத் தேவையான தரவுகளைச் சேகரிக்கும் Census கணக்கெடுப்பில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. எனினும், மகளிர் இடஒதுக்கீட்டுடன் Delimitation திட்டத்தை ஒன்றாக இணைப்பது, மாநிலங்களுக்கு இடையேயான அதிகாரச் சமநிலையைப் பாதித்து, கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்தக்கூடும்.
குறிப்பாக, புதிய Census கணக்கெடுப்பை Delimitation திட்டத்தின் அடிப்படையாகப் பயன்படுத்துவது, மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத வடக்கு மாநிலங்களுக்கு அதிக அரசியல் அதிகாரத்தை வழங்கவும், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தெற்கு மாநிலங்களை கடுமையாக பாதிக்கவும் வழிவகுக்கும். திராவிட மாடல் "தெற்கு தான் வழிகாட்டுகிறது" என்ற பெருமையை நிலைநாட்டியிருக்கும் இந்நிலையில், பேரறிஞர் அண்ணாவின் "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என்ற எச்சரிக்கையை மீண்டும் உண்மையாக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
அடுத்ததாக, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்திய சமூகத்தில், அரசியல் மன்றங்களில் இடஒதுக்கீடு மட்டுமே மகளிருக்கு முழுமையான அதிகாரத்தை வழங்க முடியாது. கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகள் போன்ற தொடர்ச்சியான ஆதரவு இல்லையெனில் அதன் தாக்கம் குறைந்ததாகவே இருக்கும். மேலும், இத்திட்டம் அரசியல் வட்டாரங்களில் மேட்டுக்குடியினருக்கே அதிகமாக பயனளிக்கும் அபாயமும் உள்ளது. இவ்வாறு, மகளிரை கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றவும், இடஒதுக்கீட்டைச் சுற்றியுள்ள ஐயங்களைத் தீர்க்கவும் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் தெளிவான திட்டம் எதுவும் இல்லாமல் இருப்பதே தற்போதைய கவலைக்குரிய நிலை.
எனவே, மகளிர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்தும் "Census + Delimitation" திட்டத்தின் பின்னால் உள்ள ஒன்றிய பா.ஜ.க அரசின் அரசியல் நோக்கங்களையும், நீண்டகாலத்தில் இது கூட்டாட்சி அமைப்பிற்கும் தெற்கு மாநிலங்களுக்கும் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளையும் எடுத்துரைத்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
முடிவுரை
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் "Census + Delimitation" நிபந்தனைகளை விதித்து அதைத் தாமதப்படுத்துவது ஒன்றிய பா.ஜ.க அரசு தான் என்பது வெள்ளிடைமலையாகும். எனவே, இந்தக் குழப்பங்களை நீக்கி மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே தி.மு.கவின் நிலைப்பாடு. ஏனெனில், மகளிர் இடஒதுக்கீடு என்பது வெறும் அரசியல் கருவி அல்ல; அது சமூக நீதியின் ஒரு முக்கிய அங்கமாகும்.
மொத்தத்தில், "மகளிர் இடஒதுக்கீடு" என்ற விவகாரத்தை வட மாநிலங்களில் அரசியல் ஆதாயங்களை ஈட்டும் நோக்கத்துடன் பா.ஜ.க அணுகுகிறது; மாறாக, "மகளிர் இடஒதுக்கீடு + மாநில உரிமைகள்" என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு "சமூக நீதி + சம நீதி" கொள்கையை நிலைநாட்டும் பொறுப்புணர்வுடன் தி.மு.க அணுகுகிறது.
விவரணைகள்
2023 Women's Reservation Bill
2026 Delimitation Bill
20-09-2023 = முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவு
தொகுதி மறுவரையறை விவகாரம்
தென் மாநிலங்களை பாதிக்கும் Delimitation
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.



