Chocks

Thursday, December 11, 2025

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை : ஓர் சுருக்கமான பார்வை

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை : ஓர் சுருக்கமான பார்வை

குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
பொருளடக்கம் 
  1. முகவுரை
  2. இந்துத்துவா அரசியலின் ஆரம்பநிலை  
  3. முஸ்லீம் அரசியலின் ஆரம்பநிலை 
  4. சாவர்க்கரின் இரு தேசக் கோட்பாடு
  5. 1937 மாகாணத் தேர்தலால் திருப்புமுனை
  6. லாகூர் தீர்மானம்
  7. சுதந்திரப் போராட்டமா? அதிகாரப் போராட்டமா?
  8. பெரியார் – ஜின்னா – அம்பேத்கர் சந்திப்புகள்
  9. அமைச்சரவைத் தூதுக்குழு
  10. காந்தி உண்ணாவிரதம் 
  11. காந்தி படுகொலை  
  12. முடிவுரை 
  13. விவரணைகள் 
முகவுரை

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையைப் புரிந்துகொள்ள, வரலாற்றின் இரண்டு முக்கிய மனிதர்களான மகாத்மா காந்தி மற்றும் முகமது அலி ஜின்னா ஆகியோரின் சிந்தனைக் பயணத்தை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. ஆரம்பக் கட்டத்தில், காந்தி சனாதன தர்மத்தின் அடிப்படைகளைப் பேசியவர்; அதே சமயம், ஜின்னா “இந்து – முஸ்லீம்” ஒற்றுமையை வலியுறுத்திய ஒரு அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தினார். ஆனால் காலப்போக்கில், இருவரின் அரசியல் பாதைகளும் மாற்றமடைந்தன. இறுதி வரை இந்துவாக வாழ்ந்த காந்தி, பிரிவினைச் சூழலில் “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கொள்கையைத் தன் அரசியலின் மையமாக மாற்றினார். மறுபுறம், தொடக்கத்தில் ஒற்றுமையைப் பேசிய ஜின்னா, இறுதியில் “நேரடி நடவடிக்கை நாள்” (Direct Action Day) போன்ற அரசியல் நடவடிக்கைகள் மூலம் “இந்து – முஸ்லீம்” பிரிவினையை முன்னெடுத்தார். 

நமது இந்தியக் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படும் வரலாற்றுப் பாடங்கள் முழுமையான உண்மையை சொல்வதில்லை. அப்படியானால், உண்மைதான் என்ன? காந்தியும் ஜின்னாவும் வெவ்வேறு காலகட்டங்களில் தங்கள் நிலைப்பாடுகளை ஏன் மாற்றிக்கொண்டார்கள்? சுதந்திரத்திற்கும் பிரிவினைக்கும் வழிவகுத்தது எது? இதை அறிந்துகொள்ள, நாம் அந்தக் காலகட்டத்தின் அரசியல் சூழலை காலவரிசைப்படி ஆராய வேண்டும்.

இந்துத்துவா அரசியலின் ஆரம்பநிலை  

19 ஆம் நூற்றாண்டின் இறுதியும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கமும் “இந்து – முஸ்லீம்” அரசியல் சிந்தனையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்த காலமாகும். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுத்தாளர் சந்திரநாத் பாசு “இந்துத்துவா” என்ற சொல்லை முதன்முறையாகப் பயன்படுத்தினார். காந்தியின் தேசிய அரசியலுக்கு முன்பே, இந்திய சுதந்திர இயக்கத்தின் ஆரம்ப வடிவத்தை உருவாக்கிய உறுதியான தேசியவாதிகளாக “லால் – பால் – பால்” (லாலா லஜ்பத் ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால்) உருவெடுத்தனர்.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களின் அரசியல் பங்கேற்பை விரிவுபடுத்த, இவர்களின் அணுகுமுறையில் இந்து கலாச்சார அடையாளங்கள் தெளிவாகக் காணப்பட்டன. குறிப்பாக, பால கங்காதர திலகர் விநாயகர் சதுர்த்தி மற்றும் சிவாஜி ஜெயந்தி போன்ற விழாக்களை அரசியல் ஒருங்கிணைப்பு கருவிகளாக பயன்படுத்தினார். மேலும், ஆர்.எஸ்.எஸ் முன்னோடியான இந்து மகாசபையின் தலைவராக லாலா லஜ்பத் ராய் செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம் அரசியலின் ஆரம்பநிலை 

இந்தச் சூழலில், 1880 களில் இஸ்லாமிய தத்துவவாதி சையது அகமது கான், “இந்தியாவிற்கு உட்பட்ட முஸ்லீம் தேசியம்” குறித்து பேசினார். 1930 களில், உருது கவிஞர் முகமது இக்பால், இந்தியாவில் முஸ்லீம்களுக்கு அரசியல் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தேவை என வலியுறுத்தினார். இவை எதுவும் தனி நாட்டுக்கான கோரிக்கையாக இல்லை.

முஸ்லீம் லீக் கட்சி உருவானபோது அதன் நோக்கம் பாகிஸ்தான் உருவாக்குவது அல்ல; மாறாக, “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற அடிப்படையில் முஸ்லீம் மத மற்றும் கலாச்சார அடையாளங்களைப் பாதுகாப்பதே ஆகும். உண்மையில், இந்துத்துவ இயக்கங்கள் “இந்து – முஸ்லீம்” பிரிவினையை தீவிரமாகப் பேசிய காலகட்டத்திலும், ஜின்னா தொடர்ந்து “இந்து – முஸ்லீம்” ஒற்றுமை அரசியலை மட்டுமே முன்னெடுத்தார்.

சாவர்க்கரின் இரு தேசக் கோட்பாடு

1920 களில் தொடங்கி, இரு தேசக் கோட்பாட்டை முதன்முதலில் முன்வைத்தது சாவர்க்கர் தலைமையிலான இந்துத்துவ இயக்கமே என்பது நினைவில் கொள்ளத்தக்கது. “இந்துக்கள் ஒரு தேசம், முஸ்லீம்கள் ஒரு தேசம்” என்ற கருத்து, முஸ்லீம் லீக்குக்கு முன்பே இந்துத்துவ அரசியலில் வலியுறுத்தப்பட்டது. இந்த அரசியல் பின்னணியில், முஸ்லீம்களுக்குள் பாதுகாப்பற்ற உணர்வு மெதுவாக வளரத் தொடங்கியது.

1937 மாகாணத் தேர்தலால் திருப்புமுனை

1937 மாகாணத் தேர்தல்களில் ஜின்னாவின் முஸ்லீம் லீக் பெரும் பின்னடைவைச் சந்தித்தது; காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. மேலாட்சி அரசு (Dominion) முறையின் கீழ் மாகாணங்களில் ஆட்சியமைத்த காங்கிரஸின் வலதுசாரி பிரிவுகளின் ஆதரவுடன் இந்துத்துவ இயக்கங்களின் மத ஆதிக்கம் மேலோங்கக் கூடும் என்ற அச்சம், ஜின்னாவை ஆழமான அரசியல் மறுபரிசீலனைக்கு தள்ளியது.

இதன் பின்னர், 1937 க்கு பிறகு, ஜின்னா முஸ்லீம்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பாதுகாப்பைப் பற்றி தீவிரமாகப் பேசத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஒற்றுமையை வலியுறுத்திய ஜின்னாவின் அரசியல் நிலைப்பாடு, இக்காலகட்டத்தில் பாகிஸ்தான் கோரிக்கையை நோக்கி நகர்ந்தது.

லாகூர் தீர்மானம்

1940 லாகூர் மாநாட்டில், முஸ்லீம் லீக் “பாகிஸ்தான் முன்மொழிவு” தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன் பின்னர், பாகிஸ்தானே ஜின்னாவின் மைய அரசியல் கோஷமாக மாறியது. “நேரடி நடவடிக்கை நாள்” போன்ற நிகழ்வுகள், இந்த கோரிக்கையை ஒரு பெருமளவிலான மக்கள் இயக்கமாக மாற்றின. இதே காலகட்டத்தில், இந்தியா முழுவதும் “இந்தியா – பாகிஸ்தான்” என்ற இரு தேசக் கோட்பாடு அரசியல் ரீதியாக வலுப்பெற்றது.

சுதந்திரப் போராட்டமா? அதிகாரப் போராட்டமா?

இந்திய சுதந்திரப் போராட்டம், பிரிட்டிஷ் பிரதமர் இராம்சே மெக்டொனால்ட் நடத்திய வட்டமேசை மாநாட்டிலேயே முடிந்ததாகக் கூறலாம். அதன் பிறகு நடைபெற்ற அனைத்தும் அதிகாரப் பகிர்வு பற்றிய பேச்சுவார்த்தைகளாகவே இருந்தன.

வட்டமேசை மாநாட்டில், சிறுபான்மையினரின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக முஸ்லீம்களுக்கும் தலித்துகளுக்கும் பிரிட்டிஷ் அரசால் அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டன. இதற்கிடையில், அடுத்த 17 ஆண்டுகளில் இந்தியாவை விட்டு வெளியேறத் தயாரான பிரிட்டிஷ் அரசு, தங்களது இந்திய சொத்துக்களை லாபகரமாக விற்றுவிட முயன்றது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, பிரிட்டிஷ் அரசு வணிகர்களின் சொத்துகளை சாதகமான விலையில் கைப்பற்றியதுடன், அதற்குப் பதிலாக இந்தியாவை ஆளும் உரிமையையும் “பார்ப்பன - பனியா” கூட்டணி பெற்றது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த வலதுசாரிப் பிரிவினரும், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவா இயக்கங்களும் இணைந்து, முஸ்லீம்கள் மற்றும் தலித்துகளின் உரிமைகளை படிப்படியாகப் பறித்தன. இதன் விளைவாக, இந்தியா முழுவதும் “பார்ப்பன - பனியா” கூட்டணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது; இதில் பார்ப்பனர்கள் அரசியல் அதிகாரத்தையும், பனியாக்கள் பொருளாதார அதிகாரத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

“பார்ப்பன - பனியா” கூட்டணியால் இழைக்கப்பட்ட அநீதிகளை அடையாளம் கண்ட சமூக நீதித் தலைவர்களான பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரும், அவர்களது இரண்டாம் கட்ட தலைவர்களும், “பிரச்சாரங்கள், இயக்கங்கள், புத்தகங்கள், பத்திரிகைகள்” போன்றவற்றின் மூலம் “பார்ப்பன - பனியா” கூட்டணியின் ஒடுக்குமுறைக்கு எதிராக விளிம்புநிலை சமூகங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தினார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், 1920 களில் முஸ்லீம் மற்றும் தலித் சிறுபான்மையினர் அரசியல் உரிமைகளைப் பெறத் தொடங்கியபோது, ​​காந்தி சனாதன தர்மத்தை முன்னிறுத்துவதில் கவனம் செலுத்தினார், அதே சமயம் ஜின்னா “இந்து - முஸ்லீம்” ஒற்றுமைக்காக வாதிட்டார். இதற்கு மாறாக, 1940 களில் முஸ்லீம் மற்றும் தலித்துகளின் சமூக - பொருளாதார உரிமைகள் குறையத் தொடங்கி, “பார்ப்பன - பனியா” கூட்டணி வலுப்பெற்றபோது, ​​காந்தி தேசிய ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளித்தார், அதே சமயம் ஜின்னா முஸ்லீம்களின் நலன்களைப் பாதுகாக்கப் பிரிவினைவாதத்தை ஆதரித்தார் என்பது கவனிக்க வேண்டிய நுண்ணரசியல் ஆகும்.

பெரியார் – ஜின்னா – அம்பேத்கர் சந்திப்புகள்

1940 களில், பாகிஸ்தான் மற்றும் திராவிடஸ்தான் குறித்து பெரியார், ஜின்னா, அம்பேத்கர் ஆகியோருக்கிடையே சந்திப்புகளும் கடிதத் தொடர்புகளும் நடந்தன. திராவிடஸ்தான் உருவாக்க ஜின்னாவின் ஆதரவை பெரியார் கேட்டபோது, “இந்திய முஸ்லீம்களின் பிரதிநிதியாக நான் பேசுவது போல, திராவிடஸ்தான் குறித்து பார்ப்பனர் அல்லாத கூட்டமைப்பே பேச வேண்டும்” என்று ஜின்னா பதிலளித்தார்.

திராவிடஸ்தான் உருவாகாமல் போனதற்கு பல காரணங்கள் இருந்தன. மதம் அங்கு மைய அரசியல் விஷயமாக இல்லை; சாதி, இந்து மதத்தின் உள் பிரச்சினையாகவே பிரிட்டிஷ் அரசால் பார்க்கப்பட்டது. மேலும், திராவிட இயக்கம் முஸ்லீம் லீக் போல ஒரு தேசிய மாற்று சக்தியாக வளர முடியாத சூழலில் இருந்தது.

அமைச்சரவைத் தூதுக்குழு

பிரிட்டிஷ் அரசு இந்தியாவிலிருந்து விலகுவதற்கு முன், நாட்டின் பிரிவினையைத் தவிர்க்க அமைச்சரவைத் தூதுக்குழு (Cabinet Mission) பல முக்கிய ஆலோசனைகளை முன்மொழிந்தது. கூட்டாட்சி அமைப்பு உட்பட பல தீர்வுகள் முன்வைக்கப்பட்டன. ஆரம்பத்தில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பின்னர் அவற்றின் அரசியல் விளக்கங்கள் குறித்து காங்கிரஸ் – முஸ்லீம் லீக் இடையேயான தீர்க்க முடியாத முரண்பாடுகள் காரணமாக, அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

காந்தி உண்ணாவிரதம் 

பிரிவினைக்குப் பிறகு, ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.75 கோடியில், 15 ஆகஸ்ட் 1947 அன்று இந்திய அரசு ரூ.20 கோடி மட்டுமே வழங்கியது. 22 அக்டோபர் 1947 அன்று, பாகிஸ்தான் ஆதரவுடன் பதான் குழுக்கள் காஷ்மீரில் படையெடுத்ததால், மீதமுள்ள ரூ.55 கோடி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

இருப்பினும், ஒப்பந்தத்தின்படி ரூ.55 கோடியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, 13 ஜனவரி 1948 அன்று காந்தி உண்ணாவிரதம் தொடங்கினார். அவரது கோரிக்கைக்கு இணங்க இந்திய அரசு முழுத் தொகையையும் பாகிஸ்தானுக்கு வழங்கியதைத் தொடர்ந்து, 18 ஜனவரி 1948 அன்று அவர் உண்ணாவிரதத்தை நிறுத்தினார்.

காந்தி படுகொலை 

“வேற்றுமையில் ஒற்றுமை கொள்கை, இந்திக்கு பதிலாக இந்தி - உருது கலந்த இந்துஸ்தானி மொழிக்கு வழங்கிய ஆதரவு, பாகிஸ்தானுக்குச் சேர வேண்டிய நிதியை விடுவிக்க மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்” ஆகிய காந்தியின் அரசியல் நிலைப்பாடுகளை எதிர்த்த இந்துத்வவாதி நாதுராம் கோட்சே, பாகிஸ்தான் உருவாக்கத்தை காந்தி தடுக்கத் தவறியதால் இந்தியாவின் அகண்ட பாரதக் கனவு சிதைந்ததாகவும், காந்தி இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்றும் கருதி, 30 ஜனவரி 1948 அன்று காந்தியைக் படுகொலை செய்தார்.

முடிவுரை 

முஸ்லீம்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு அணுகிய இந்துத்துவ இயக்கங்களின் ஆதிக்கம், சிறுபான்மையினரிடையே ஆழமான அச்சத்தை உருவாக்கியது. மொத்தத்தில், அன்றைய அரசியல், சமூக மற்றும் உளவியல் சூழலில் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை தவிர்க்க முடியாததாக இருந்தது. 

காந்தி – ஜின்னா சிந்தனைகளின் மாற்றங்கள், இந்துத்துவ அரசியல் ஆதிக்கம், முஸ்லீம்களின் அச்சங்கள், அதிகாரப் போராட்டம், பிரிட்டிஷ் அரசின் வெளியேற்றம், சமூக மனோநிலைகள் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து உருவாக்கிய வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வாகவே இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை அமைந்தது.

விவரணைகள் 





வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை : ஓர் சுருக்கமான பார்வை

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை : ஓர் சுருக்கமான பார்வை குறிப்பு =   இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத...