Chocks

Wednesday, March 11, 2026

எரிசக்தி அரசியலில் மோடியால் வந்த புதிய சிக்கல்

எரிசக்தி அரசியலில் மோடியால் வந்த புதிய சிக்கல்

பொருளடக்கம் 
  1. முகவுரை  
  2. இந்தியா மீதான அமெரிக்காவின் அழுத்தம்
  3. எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு அச்சம்
  4. அமெரிக்காவில் தடம் பதிக்கும் ரிலையன்ஸ்
  5. "மோடி-அம்பானி-அதானி-அமெரிக்கா" கூட்டணி
  6. முடிவுரை
  7. விவரணைகள் 
முகவுரை  

இந்தியாவின் பரந்த மக்கள் தொகை உலக வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதால் அது ஒருபோதும் குறிப்பிட்ட எந்தவொரு அந்நிய ஆதிக்கத்திற்கும் உட்படக்கூடாது என்று நேரு விரும்பினார். அதனால், இந்தியாவின் சுதந்திரத்தையும் வர்த்தக தன்னாட்சியையும் காக்க, எந்த வல்லரசின் கட்டுப்பாட்டிலும் சிக்காமல் இருக்க அணிசேரா கொள்கையை அவர் உருவாக்கினார். இந்நிலையில் நேருவை இடைவிடாமல் விமர்சித்த மோடி, இன்று இந்தியாவை நேரடியாக அமெரிக்க அதிகாரத்தின் பிடியின் கீழ் இட்டுச் சென்றுள்ளார்.

இந்தியா மீதான அமெரிக்காவின் அழுத்தம்

ரஷ்யா இந்தியாவிற்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை விற்று வந்தாலும், அமெரிக்காவின் அழுத்தத்தின் கீழ் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் காரணமாக இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது. இன்று, இந்தியா யாரிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்வது அமெரிக்க அதிபர் டிரம்ப் தான். இதற்கிடையில், ஈரான் போர் காரணமாக, அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (30 நாட்களுக்கு) ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை "அனுமதித்துள்ளது". நமது நாட்டிற்கான சொந்த எண்ணெய்யை வாங்க அமெரிக்காவின் அனுமதியை கோருவது தேசிய அவமானத்தின் உச்சம். இப்போது, ​​அமெரிக்காவுடன் இந்தியா கூட்டு சேர்ந்து ரஷ்யாவை விரோதித்ததன் மூலம், ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை வழங்க மறுத்துவிட்டதால், இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு அச்சம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு உயரக்கூடும் என்று பெட்ரோலிய ஆய்வாளர்கள் எச்சரிக்கும் போது, ​​இந்த அத்தியாவசியப் பொருட்கள் விரைவில் எந்த விலையிலும் கிடைக்காது என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்கனவே இந்தியா முழுவதும் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது, ஆனால் மோடி முற்றிலும் கவலைப்படாமல் சிலிண்டர் விலையை உயர்த்தினார். 
அமெரிக்காவில் தடம் பதிக்கும் ரிலையன்ஸ்

இந்தியாவின் இறையாண்மையை மோடி அமெரிக்காவிடம் அடகு வைத்ததன் நேரடி விளைவு இது. குறிப்பாக, இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தால் அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்தைப் பாராட்டி, அதை "அமெரிக்க எரிசக்தி ஆதிக்கத்தின்" ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப், விவரித்துள்ளார். இந்தத் திட்டம் 300 பில்லியன் டாலர்களுடன் தொடர்புடையது, இது உடனடியாக பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.

300 பில்லியன் டாலர் குறித்து எழும் கேள்வி

அமெரிக்காவிற்குள் ரிலையன்ஸ் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நிதி ஆதாரம் என்ன? முழு திட்டத்திற்கும் ரிலையன்ஸ் தனது சொந்த வளங்களிலிருந்து நிதியை அளிக்கிறதா அல்லது இந்திய பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடன் பெறுகிறதா? முதலில் ரிலையன்ஸ் போன்ற ஒரு நிறுவனம் ஒரே திட்டத்தின் கீழ் 300 பில்லியன் டாலர்களை (ரூ.2,76,000 கோடி) முதலீடு செய்வது சாத்தியமானதா? மேலும், 300 பில்லியன் டாலர் என்பது முதலீடா அல்லது ஆலை உருவாக்கப்போகும் பொருளாதார மதிப்பைக் குறிக்கிறதா?

"மோடி-அம்பானி-அதானி-அமெரிக்கா" கூட்டணி

இந்திய நிறுவன முதலாளித்துவ நலன்களுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அமெரிக்க எரிசக்தி கொள்கைக்கும் இடையிலான இத்தகைய நெருக்கமான இணக்கம், இந்தியாவின் தேசிய முன்னுரிமைகள் "மோடி-அம்பானி-அதானி-அமெரிக்கா" கூட்டணிகளின் நலன்களுக்கு சேவை செய்வதற்காக ஒதுக்கித் தள்ளப்படுகின்றன என்ற கடுமையான கவலைகளை எழுப்புகிறது. இந்த வகையான நெருக்கமான முதலாளித்துவ கூட்டணிகள் இந்தியாவின் பொருளாதார இறையாண்மையை பலவீனப்படுத்துவதைக் குறிக்கின்றன. மொத்தத்தில் இன்று, இந்திய மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு தெளிவான பாதை இல்லாமல் மோடி நடுரோட்டில் நாட்டை தவிக்க விட்டுவிட்டதாகத் தெரிகிறது.
முடிவுரை 

வல்லரசுகளுக்கு எதிராக சவால் விட துணிந்தால், இறுதியில் அதற்கான விலை யார் கொடுப்பார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இந்த பின்னணியில், எதிர்காலத்தில் இந்தியாவின் இத்தகைய நிலை ஒரே இரவில் மாறிவிடும் என்று கருதுவது நடைமுறைக்கு மாறானது. ஏனெனில் வரலாற்று ரீதியாக வல்லரசுகள் எப்போதும் மோசமான அரசியல் விளையாட்டுகளை விளையாட முயற்சித்துள்ளன.

இதனால்தான் நேருவின் அணிசேரா கொள்கை மிகவும் தொலைநோக்குடையதாக இருந்தது; அது அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இந்திய இறையாண்மையை பாதுகாக்க முயன்றது. துரதிர்ஷ்டவசமாக, மோடியின் அடிபணிந்த அணுகுமுறை (Submissive Attitude) மற்றும் அம்பானி, அதானி மீதான மோடியின் முதலாளித்துவ பாசம் காரணமாக, நேருவின் அணிசேரா கொள்கை ரீதியான நிலைப்பாட்டிலிருந்து இந்தியா விலகியுள்ளது. இதன் விளைவாக, இன்று இந்தியா அமெரிக்க வல்லரசின் கைப்பாவையாக மாறி, தனக்கு ஒருபோதும் தேவையில்லாத சிக்கலில் சிக்கியுள்ளது.

துணுக்குச்செய்தி

எண்ணெய் தொழிலில் அம்பானி கொடிகட்டிப் பறக்க தொடக்க நிலையில் வித்திட்டது வாஜ்பாய் என்றால் அது மிகையாகாது. அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்றது. பெட்ரோலியத் துறையில் உரிமத்தை ரத்து (Delicensing) செய்யும் கொள்கையை (ஜெயலலிதா ஆதரவுடன்) பா.ஜ.க அரசு அறிமுகப்படுத்தியது. பா.ஜ.கவிற்கான தனது ஆதரவை வாபஸ் பெறுவதற்கு முன்பு, ஜெயலலிதா வாஜ்பாயை பெட்ரோலிய அமைச்சர் பதவியை கேட்டும் தொந்தரவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அம்பானியின் "ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம்" வாஜ்பாய் பதவிக் காலத்தில்தான் தொடங்கப்பட்டது. மொத்தத்தில், வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இருந்து இந்தியாவின் பெட்ரோலியக் கொள்கைகளில் மெல்ல மாற்றங்களை ஏற்படுத்தின.

விவரணைகள்

வாசித்தமைக்கு  நன்றி.

வணக்கம்.

எரிசக்தி அரசியலில் மோடியால் வந்த புதிய சிக்கல்

எரிசக்தி அரசியலில் மோடியால் வந்த புதிய சிக்கல் பொருளடக்கம்  முகவுரை   இந்தியா மீதான அமெரிக்காவின் அழுத்தம் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உய...