Chocks: November 2021

Sunday, November 28, 2021

மும்பை நிழல் உலகம்

மும்பை நிழல் உலகம்

குறிப்பு = இந்த சுருக்கமான கட்டுரை முன்பின் காலகட்டங்களை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கட்டுரை ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் பொதுவான தகவல்களை வழங்குகிறது. இது தலைப்பின் இறுதி ஆய்வாக கருதப்படக்கூடாது. ஒரு முழுமையான புரிதலுக்காக, தலைப்பில் இன்னும் விரிவான ஆதாரங்களைப் பார்க்க வாசகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

சுருக்கம் 
  1. முகவுரை
  2. மூவர் சாம்ராஜ்யம் 
  3. ஹாஜி மஸ்தான்
  4. வரதராஜன் முதலியார்
  5. கரீம் லாலா 
  6. மன்யா சர்வே
  7. வடலாவில் துப்பாக்கிச் சூடு
  8. தாவூத் இப்ராஹிம்
  9. கிரிக்கெட் சூதாட்டம்
  10. லோகந்த்வாலா துப்பாக்கிச் சூடு
  11. தாவூத் இப்ராஹிமின் வளர்ச்சி 
  12. 1993 மும்பை குண்டுவெடிப்பு
  13. அபு சலேம் 
  14. சஞ்சய் தத் வழக்கு 
  15. குல்ஷன் குமார் கொலை 
  16. அருண் கவ்லி
  17. ராஜன் வகையறா
  18. முடிவுரை 
  19. விவரணைகள் 
முகவுரை

இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பகுதிகள் உள்ளன, அதில் 806 மாவட்டங்கள் உள்ளன, அதில் மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய இரண்டு மாவட்டங்கள் குற்றங்களின் தலைநகரங்களாக வர்ணிக்கப்படுவதுண்டு. மும்பை வட இந்தியாவின் பொருளாதார தலைநகரம் மற்றும் பெங்களூரு தென்னிந்தியாவின் பொருளாதார தலைநகரம் ஆகும்.  இங்கு நடக்கும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது அல்லது தடுப்பது என்பது அதிகாரிகளுக்கு எப்போதுமே கடினமான செயலாக இருந்து வருகிறது. 
மும்பை நிழல் உலகம் பற்றிய கட்டுரைகள் ஆய்வுக்குரியதாக இருந்தாலும், பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரையை எழுதினேன். அவ்வகையில் ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார் மற்றும் கரீம் லாலா ஆகியோர் மும்பை நிழல் உலகை 1960 கள் முதல் 1980 கள் வரை ஆண்டனர். 1980 களுக்கு பிறகு இன்று வரை, தாவூத் இப்ராஹிம் மும்பையின் நிழல் உலகத்தை ஆள்கிறார். இரவுக்கு ஆயிரம் கண்கள் உடைய மும்பையில் தலைவிரித்தாடும் நிழல் உலகம் (மாஃபியா) பற்றி காண்போம், வாருங்கள்!

மூவர் சாம்ராஜ்யம் 
1950 களின் பிற்பகுதியிலிருந்து 1980 களின் ஆரம்பம் வரை இந்த மூவரும் மும்பை நிழல் உலகத்தை ஆண்டனர். அவர்கள் முறையே ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார் மற்றும் கரீம் லாலா. ஹாஜி மஸ்தான் மற்றும் வரதராஜன் முதலியார் ஆகியோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று பேர் கொண்ட கும்பலுக்கு இடையே மரியாதைக்குரிய தொழில்முறை இடைவெளி பராமரிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலிலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தால் மும்பையின் முதல் பெண் தாதா ஜெனாபாய் தர்வாலி சமரசம் பேசி தீர்த்து வைப்பார்.

ஹாஜி மஸ்தான்
1926 இல் இந்தியாவின் முதல் நிழல் உலக தாதா என்று அழைக்கப்படும் மஸ்தான் மிர்சா என்ற ஹாஜி மஸ்தான், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பனைக்குளம் கிராமத்தில் பிறந்தார். ஹாஜி என்பது மக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்ட முஸ்லிம்களைக் குறிக்கிறது. 8 வயதில் தந்தையுடன் மும்பைக்கு குடிபெயர்ந்து வறுமையில் வாடிய ஹாஜி மஸ்தான், இளம் வயதிலேயே கோடீஸ்வரனாக வேண்டும் என்று நினைத்தார்.

1944 இல் ஹாஜி மஸ்தான் மும்பை துறைமுகத்தில் வெளிநாட்டு கப்பல்களில் இருந்து கொள்கலன்களை இறக்கும் தொழிலாளியாக சேர்ந்தார். துறைமுகத் தொழிலாளியாக பணி புரிந்தபோது கடத்தல் வித்தைகளைக் கற்றுக்கொண்டார். அப்போது, ​​அரபு வம்சாவளியைச் சேர்ந்த ஷேக் முகமது அல் காலிப், ஹாஜி மஸ்தானிடம், கடத்தல் பொருள்களை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறும், கடத்தல் பொருட்களை மாற்ற உதவுமாறும் கேட்டுக் கொண்டார். இது மஸ்தானின் சகாப்தத்தை தொடங்கியது.

1956 இல் குஜராத்தை சேர்ந்த சுகுர் நாராயண் பாக்கியாவுடன் நட்பு ஏற்பட்ட பிறகு ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை மாறியது. ஆரம்ப காலத்தில், ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து மும்பை துறைமுகத்திற்கு வரும் தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் மின்னணு கடத்தல் பொருட்களை மஸ்தான் மற்றும் பாக்கியா கையாண்டனர்.

1975 இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட போது சிறையில் அடைக்கப்பட்ட ஹாஜி மஸ்தான், 18 மாத சிறைவாசத்துக்கு பிறகு வெளிவந்து, வியக்கத்தக்க வகையில் நிழல் உலக நாயகனாக உருவெடுத்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த பசுபதி பாண்டியன் ஹாஜி மஸ்தானுக்கு நெருக்கமாக இருந்து, நெருக்கடி நிலை காலத்தில் ஹாஜி மஸ்தானின் கூட்டாளிகள் பலருக்கு தமிழ்நாட்டில் அடைக்கலம் கொடுத்தார். கடந்த 2012 இல் பசுபதி பாண்டியன் பண்ணையார் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாஜி மஸ்தான், மும்பை சோபியா கல்லூரிக்கு எதிரே உள்ள ஆடம்பரமான பகுதியான பெதார் சாலையில் உள்ள பைத்துல் சுரூர் (அரபியில் மகிழ்ச்சியின் இல்லம்) என்ற மாளிகையில் வசித்து வந்தார். வெள்ளை நிற டிசைனர் ஆடைகளை அணிந்து கொண்டு, இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டை புகைத்தப்படி, வெள்ளை நிற மெர்சிடிஸ் பென்ஸ் காரில் பயணம் செய்வது ஹாஜி மஸ்தானின் கவர்ச்சி முத்திரை ஆகும். அவருடன் அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறை, ஊடகங்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் நெருங்கிப் பழகினர்.

பாலிவுட் நடிகை மதுபாலாவின் அழகை கண்டு வியந்த ஹாஜி மஸ்தான், மதுபாலாவை மனைவியாக்க பலமுறை முயற்சித்து தோல்வியடைந்தார். 1969 இல் மதுபாலாவின் மரணத்திற்கு பிறகு, மதுபாலாவைப் போல முகச்சாயலை கொண்ட நடிகை ஷாஜஹான் பேகத்தை மணந்தார்.

1983இல் அகில இந்திய தலித் முஸ்லிம் பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சியை தொடங்கி, நிழல் உலக நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கேற்காமல், வரதராஜன் முதலியார் மற்றும் கரீம் லாலாவுடன் இணைந்து தனது கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்ட ஹாஜி மஸ்தான் 25-06-1994 அன்று மாரடைப்பால் காலமானார்.

வரதராஜன் முதலியார்
தமிழ்நாட்டின் வட ஆற்காடு மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பம் வட ஆற்காட்டில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு கப்பல் தளவாட பணிக்காக குடிபெயர்ந்தது. இந்த குடும்பத்தில் 1926 இல் தூத்துக்குடியில் பிறந்தவர் வர்தாபாய் என்ற வரதராஜன் முனிசாமி முதலியார். வர்தாபாயின் குடும்பம் 1945 இல் மும்பைக்கு குடிபெயர்ந்தது. வர்தாபாய் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணி புரியும் போது ரயில்வே பொருட்களை திருடி தனது குற்ற வாழ்க்கையை தொடங்கினார்.

சுமை தூக்கும் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கி, சட்டவிரோதமாக மது விற்பனை செய்யத் தொடங்கிய போது தான் வர்தாபாயின் வளர்ச்சி எகிறியது. கள்ளக்கடத்தல், ஒப்பந்த கொலை, மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை, நில ஆக்கிரமிப்பு, சூதாட்டம், மதுபான பார், மதுபான உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றை வர்தாபாய் கவனித்து வந்தார்.

மும்பையில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் பேரவை என்ற சமூக நல அமைப்பை ஏற்படுத்தி மருத்துவ முகாம், மருத்துவ ஊர்தி, கல்விக்கடன், இரத்ததானம், அன்னதானம் போன்ற இலவச சேவைகளை வழங்குதல், வேலையில்லா தோழர்களை பெருநிறுவனங்களில் வேலைக்கு பரிந்துரை செய்தல் போன்ற நற்காரியங்களால் மும்பையில் வாழும் தமிழர்களின் மகத்தான ஆதரவு வர்தாபாய்க்கு கிட்டியது. 1983 இல்  சென்னையில் நடந்த வர்தாபாய் மகள் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரும் அவரது மனைவி ஜானகியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் திருமணமான தம்பதிகள் எம்.ஜி.ஆருடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியானது குறிப்பிடத்தக்கது.
குற்றச் செயல்களைப் பொறுத்தவரை, ஹாஜி மஸ்தான் கடத்தல் மற்றும் சட்டவிரோத நிதியுதவியையும், வர்தாபாய் தாராவி, மாகிம், மாட்டுங்கா, சியோன் கோலிவாடா, செம்பூர் மற்றும் கட்கோபர் போன்ற பகுதிகளையும் கரீம் லாலா பைதோனி, நாக்பாடா, மற்றும் கமாதிபுரா போன்ற பகுதிகளையும் கவனித்து வந்தனர். தமிழர்கள் அதிகம் வாழும் மாட்டுங்கா, தாராவி போன்ற பகுதிகளில் அரசுக்கு இணையாக தனி ராஜாங்கத்தை நடத்தி வந்தார் வர்தாபாய். மாட்டுங்கா ரயில் நிலையம் அருகே, வர்தாபாய் ஏற்பாடு செய்த மாட்டுங்கா கணபதி பந்தல் கொண்டாட்டத்தில் அரசியல் பிரமுகர்கள் முதல் திரைப்பட நட்சத்திரங்கள் வரை சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள மிகவும் பிரசித்தி பெற்றது.

இப்படிப்பட்ட சூழலில் 1980 களில் மும்பையில் குற்றச் செயல்களை தடுக்க IPS அதிகாரி Y.C.பவார் திட்டமிட்டு கடுமையான நடவடிக்கைளை மேற்கொண்டார். காவல்துறை உத்தரவின் பேரில் வர்தாபாய் கணபதி பந்தலுக்கு வெளியேற்ற நோட்டீஸ் (Eviction Notice) வழங்கப்பட்டது. காவல்துறையின் தொடர்ச்சியான அடக்குமுறைகளின் விளைவாக வர்தாபாய் கும்பலின் பெரும்பாலான உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் மற்றும் சிலர் மும்பையிலிருந்து தப்பி சென்றனர்.
இந்நிலையில், தனிப்பட்ட செல்வாக்கை இழந்த காலகட்டத்தில், காவல்துறை நடவடிக்கையை தவிர்க்க சர்க்கரை நோய்க்கு சிகிச்சை எடுப்பதாக கூறி, மும்பையில் குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு பெற்று சென்னைக்கு குடிபெயர்ந்த வர்தாபாய் 02-01-1988 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். வர்தாபாய் விருப்பப்படி வர்தாபாயின் உடலை இறுதிச் சடங்குகளுக்காக  தனி விமானத்தில் மும்பைக்கு கொண்டு வந்தார் ஹாஜி மஸ்தான். வரதராஜன் முதலியார் பற்றிய கூடுதல் தகவலுக்கு Nayagan (1987) திரைப்படத்தை காணவும்.

கரீம் லாலா
1911இல் ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் ஷேகல் மாவட்டத்தில் அப்துல் கரீம் ஷெர்கான் என்ற கரீம் லாலா பிறந்தார். பதான் பரம்பரையை சேர்ந்த கரீம் லாலாவின் குடும்பம் 1920 களில் ஆப்கானிஸ்தானில் இருந்து தெற்கு மும்பைக்கு குடிபெயர்ந்தது. பதான் பரம்பரை என்பது கிழக்கு - தெற்கு ஆப்கானிஸ்தான், வடமேற்கு பாகிஸ்தான் மற்றும் பலூச்சிஸ்தான் ஆகிய பழங்குடிப் பகுதிகளில் வாழும் பஷ்தூ மொழி பேசும் கிழக்கு ஈரானிய மக்களின் இனக்குழு ஆகும்.

கரீம் லாலா 1940 களின் முற்பகுதியில் மும்பை துறைமுகத்தில் ஒரு சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் மார்வாரி மற்றும் குஜராத்தி வியாபாரிகளுக்காக சட்டவிரோதமாக மிரட்டி பணம் பறிக்கும் முகவராக பணியாற்றினார். ஹாஜி மஸ்தான் மற்றும் வரதராஜன் முதலியார் ஆகியோருடன் இணைந்த பிறகு கரீம் லாலா குற்றச் செயல்களில் முக்கிய இடத்தை.

மும்பையில் சூதாட்டம், நில அபகரிப்பு, தங்கம் கடத்தல், மதுபான பார்கள், மிரட்டி பணம் பறித்தல், ஒப்பந்த கொலை, மோசடிகளை திட்டமிடுதல், மின்னணு பொருட்கள் விநியோகம், கள்ள நோட்டு விநியோகம், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளித்தல் என பல்வேறு சட்டவிரோத செயல்களில் கரீம் லாலா ஈடுபட்டு வந்தார். இந்த கும்பல் நடத்தும் கேரம் கிளப்புகள் பிரபலமானது.

​​கரீம் லாலா கொடிகட்டி பறந்த காலத்தில் நடத்திய பார்ட்டிகள் மற்றும் ஈத் கொண்டாட்டங்களில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஏழைகளுக்கு உதவுவதில் பெயர் பெற்ற கரீம் லாலா, வாரந்தோறும் தர்பார் நடத்தி வந்தார். தர்பாரில் பங்குபெறும் மக்களுக்கு அவர்களின் பல்வேறு குறைகளை கூறுவதன் மூலம் நிதி அல்லது நீதியைப் பெறுவதற்கு அவர் தனது கும்பலின் சக்தியைப் பயன்படுத்தினார்.

1970 களின் பிற்பகுதியில் கரீம் லாலா உடல் நலக்குறைவு காரணமாக பதான் கும்பலின் தலைமைப் பொறுப்பை தனது மருமகன் சமத் கானிடம் சகோதரர் ரஹீம் கானின் மேற்பார்வையில் படிப்படியாக ஒப்படைத்தார். பதான் கும்பலுக்கும் தாவூத் கும்பலுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வந்தது. பதான் கும்பல் சார்பில், மன்யா சர்வே, தாவூத் இப்ராகிமின் சகோதரர் சபீர் இப்ராகிமை 1981 இல் கொன்றார். இதற்கு பழிவாங்கும் வகையில் 1984 இல் சமத் கானும், 1986 இல் ரஹீம் கானும் தாவூத் இப்ராகிமின் கும்பலால் கொல்லப்பட்டனர். மருமகன் சமத் கான் மற்றும் சகோதரர் ரஹீம் கான் கொல்லப்பட்ட பிறகு, கரீம் லாலா சோர்வடைந்தார். இறுதியில் கரீம் லாலாவின் முதுமை காரணமாக பதான் கும்பல் வலுவிழந்தது. கரீம் லாலா முதுமை காரணமாக 19-02-2002 அன்று தனது 90வது வயதில் காலமானார்.

மன்யா சர்வே
08 ஆகஸ்ட் 1944 அன்று மகாராஷ்டிராவில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ரன்பார் கிராமத்தில் மனோகர் அர்ஜுன் சர்வே என்ற மன்யா சர்வே பிறந்தார். 1952 இல் தனது தாய் மற்றும் வளர்ப்புத் தந்தையுடன் மும்பைக்கு குடிபெயர்ந்தார். மும்பை கீர்த்தி எம்.தூங்குர்சி கலைக் கல்லூரியில் 78% மதிப்பெண்களுடன் B.A பட்டம் பெற்றார். பாலிவுட் நடிகர் நானா படேகரின் உறவினர் மன்யா சர்வே என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டம் பெற்ற பிறகு, மான்யா சர்வே தனது கூட்டாளியான சுமேஷ் தேசாய் உடன் சேர்ந்து சிறு குற்றங்களில் ஈடுபட்டார், இறுதியில் அவர் சகோதரர் பார்கவ் மற்றும் கூட்டாளி மன்யா போட்கரின் உதவியுடன் 1969 இல் தண்டேகர் என்பவரை படுகொலை செய்தார். 1969 இல் தண்டேகர் கொலை வழக்கில் மூவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். 9 ஆண்டுகள் சிறையில் இருந்த மன்யா சர்வே, 1979 இல் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்படும் கனநேரத்தில் தப்பித்தார்.

சிறையில் இருந்து தப்பிய மன்யா சர்வே மீண்டும் மும்பை வந்து புதிய கும்பலை உருவாக்கினார். 1979 இல் ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார் மற்றும் கரீம் லாலா கும்பல் பிரமிக்கும் வகையில், நிழல் உலகில் உயர்ந்தார். திட்டமிடுதலுக்கு பெயர் பெற்ற மன்யா சர்வே, நிழல் உலக செயல்பாட்டின் இரண்டு ஆண்டுகளுக்குள் முக்கியத்துவம் பெற்றார். மான்யா சர்வே கும்பல் கொலை, கொள்ளை, கடத்தல், சூதாட்டம் போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது. குறிப்பாக அரசு பால்வளத் துறையில் இருந்து பணத்தையும், கனரா வங்கி கிளையில் இருந்து ரூ.1.6 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்து மும்பை நிழல் உலகில் கவனத்தை ஈர்த்தனர்.

இரண்டு தசாப்தங்களாக நிழல் உலகை ஆண்டு வந்த கரீம் லாலாவின் பதான் கும்பல், வளர்ந்து வரும் எதிரியான D Company கும்பலின் தலைவர் சபீர் இப்ராகிம் மற்றும் அவரது சகோதரர் தாவூத் இப்ராகிமைக் கொலை செய்ய மன்யா சர்வே உதவியை நாடினர். அதையொட்டி, முதலில் சபீர் இப்ராகிமை 12 பிப்ரவரி 1981 அன்று கனகச்சிதமாக திட்டமிட்டு கொலை செய்தது மன்யா சர்வே கும்பல். அடுத்ததாக, தாவூத் இப்ராகிமை கொலை செய்ய நேரம் பார்த்துக் கொண்டிருந்த மன்யா சர்வேக்கு தாவூத் இப்ராகிம் முன்கூட்டியே நேரம் குறித்தார். 

சுருங்கச்சொன்னால், மன்யா சர்வே உயிரோடு இருந்திருந்தால் தாவூத் இப்ராகிமை  கொன்றிருக்க முடியும், சகோதரர் சபீர் இப்ராகிம் இறந்த 11 மாதங்களுக்குப் பிறகு, தன்னை தற்காத்து கொள்ள தாவூத் இப்ராகிம் கசியவிட்டதாக கூறப்படும் தகவலின் அடிப்படையில் 1982 இல் மன்யா சர்வே காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டார். குறுகிய காலமே வாழ்ந்தாலும், இரண்டு வருட நிழல் உலக பயணத்தில் தாவூத் இப்ராகிமுக்கு இன்று வரை யாரும் செய்யாத கணிசமான சேதத்தை மன்யா சர்வே செய்துள்ளார். தாவூத் இப்ராகிமை விட சக்தி வாய்ந்த மன்யா சர்வேயின் திடீர் மரணத்திற்கு பிறகு தாவூத் இப்ராகிம் மும்பை நிழல் உலகில் தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடலா துப்பாக்கிச் சூடு
மன்யா சர்வே கும்பலின் பல்வேறு குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டுமென அரசும் ஊடகமும் மக்களும் காவல்துறைக்கு பெரும் அழுத்தம் கொடுத்தனர். இதையொட்டி, மன்யா சர்வே கும்பலின் குற்றச் செயல்களைக் தடுக்க, மன்யா சர்வேயை என்கவுண்டர் செய்வது தான் ஒரே வழி என நினைத்த காவல்துறையினர் Operation Manya Surve திட்டத்தை வகுத்தனர். இதன் அடிப்படையில் 11 ஜனவரி 1982 அன்று அம்பேத்கர் கல்லூரி சந்திப்பு அருகே உள்ள அழகு நிலையத்திற்கு மன்யா சர்வே வாடகை காரில் வருவார் என தாவூத் இப்ராகிமிடம் இருந்து மும்பை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

மதியம் 1:30 மணியளவில், 18 குற்றப்பிரிவு அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து மன்யா சர்வே சம்பவ இடத்திற்கு வரும் வரை காத்திருந்தனர். அதிகாரிகளின் நடமாட்டத்தை தெரிந்தவுடன் மன்யா சர்வே துப்பாக்கியை வெளியே எடுத்தார். இருப்பினும், அவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு, காவல்துறை அதிகாரிகள் மன்யா சர்வேயை என்கவுண்டர் செய்தனர். மன்யா சர்வேயின் மரணம் மும்பையில் பதிவு செய்யப்பட்ட முதல் என்கவுன்டர் என்று அறியப்படுகிறது. வடலா துப்பாக்கிச் சூடு பற்றிய கூடுதல் தகவலுக்கு Agneepath (1990) மற்றும் Shootout at Wadala (2013) திரைப்படத்தை காணவும்.

தாவூத் இப்ராஹிம்
26-12-1955 அன்று மகாராஷ்டிராவில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கெத் கிராமத்தில் பொருளாதார சிக்கல் நிறைந்த குடும்பத்தில் 8 சகோதரர்கள் மற்றும் 4 சகோதரிகள் உடன் பிறந்த தாவூத் இப்ராகிம், மத்திய மும்பையின் டோங்ரியில் வளர்ந்தார். தந்தை இப்ராகிம் கஸ்கர் மும்பை காவல்துறையில் தலைமைக் காவலராகவும், தாய் அமினா இல்லத்தரசியாகவும் இருந்தார்.

அகமது சைலோர் உயர்நிலை பள்ளியில் படித்து வந்த தாவூத் இப்ராகிம், தனது தந்தையால் பள்ளிக் கட்டணத்தை தொடர்ந்து செலுத்த முடியாததால் பள்ளிப்பபடிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். அதன் பிறகு, விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசையால் டோங்கிரி சிறுவர்களை ஒருங்கிணைத்து சட்டவிரோத கும்பலை உருவாக்கி, சிறு கடத்தல் மற்றும் வன்முறை செயல்களில் ஈடுபட்டார். டோங்கிரியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட போது நிகழ் உலக கவனத்தை ஈர்த்த தாவூத் இப்ராகிம் ஹாஜி மஸ்தானுக்காக வேலை செய்ய தொடங்கினார். 1980 களில் முதன்முதலில் கொள்ளை வழக்கில் கைதாகி விடுதலையான பிறகு தாவூத் இப்ராகிமின் குற்றச் செயல்கள் அதிகரித்தன.
கரீம் லாலாவின் பதான் கும்பலுக்கும் தாவூத் இப்ராகிமின் கும்பலுக்கும் இடையே நடந்த சண்டை மும்பையில் நடந்த கொடூரமான கும்பல் சண்டைகளில் ஒன்றாக விவரிக்கப்படுகிறது. இந்த சண்டையில், 1981இல் தாவூத் இப்ராகிமின் சகோதரர் சபீர் இப்ராகிமை மன்யா சர்வே கொன்றார். இதன் விளைவாக, 1984 இல் கரீம் லாலாவின் மருமகன் சமத் கானும், 1986 இல் கரீம் லாலாவின் சகோதரர் ரஹீம் கானும் தாவூத் இப்ராகிமின் கும்பலால் கொல்லப்பட்டனர். இறுதியில் தாவூத் இப்ராஹிம், பதான் கும்பலையும் பிற கும்பலையும் கட்டுப்படுத்தி நிழல் உலகில் மெல்ல வளர தொடங்கினார்.

ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார், கரீம் லாலா கும்பல் கடைப்பிடித்த அடிச்சுவடுகளை பின்பற்றாமல் தனி நபராக செயல்பட போட்டி, வன்முறை மற்றும் பகைமையை வளர்க்க தொடங்கினார் தாவூத் இப்ராகிம். மன்யா சர்வேயின் மரணத்திற்கு பிறகு தனக்கு தொல்லை கொடுத்து வந்த கரீம் லாலாவின் உறவினர்களை கொன்று, வர்தாபாயின் கும்பலை அடக்கி சமாளித்து கொண்டிருக்கையில் ஹாஜி மஸ்தான் அரசியலில் குதித்த பிறகு, ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார், கரீம் லாலா தலைமையில் மூவேந்தர் சாம்ராஜ்யமாக இருந்த மும்பை நிழல் உலகை தனி ஒருவன் சாம்ராஜ்யமாக மாற்றி 1980 களின் மத்தியில் மும்பை நிழல் உலகின் முடிசூடா மன்னனாக உருவெடுத்தார் தாவூத் இப்ராகிம். 

சமத் கான் கொலைக்காக மும்பை காவல்துறையால் தேடப்பட்டு வந்த தாவூத் இப்ராகிம், 1986 இல் இந்தியாவை விட்டு துபாய்க்கு தப்பி சென்றார். இந்தியாவை விட்டு வெளியேறினாலும் D Company கூட்டாளிகள் மூலம் மும்பை நிழல் உலகத்தை தாவூத் இப்ராகிம் கட்டுப்படுத்துவதாக அறியப்படுகிறார். காலப்போக்கில் வெளிநாட்டு தொடர்புகள் அதிகரித்ததால் நிழல் உலகில் மிகவும் சக்திவாய்ந்தவராகவும் ஆபத்தானவராகவும் மாறினார். சில பாலிவுட் பிரபலங்கள் முதலீடுகளுக்காக தாவூத் இப்ராகிமை தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். மேலும் தாவூத் இப்ராகிம் நக்மா, அனிதா அயூப், மந்தாகினி போன்ற நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

போதைப்பொருள், பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி, ஹவாலா பரிவர்த்தனை, ஆயுதக்கடத்தல், சூதாட்டம், ஆட்ட நிர்ணயம், திரைத்துறையை கட்டுப்படுத்துதல் என பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார் தாவூத் இப்ராகிம். அவரது வலதுகரமான சோட்டா ஷகீலின் (இவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதில் மர்மம் நிலவுகிறது) மேற்பார்வையில் நடத்தப்படும் கிரிக்கெட் பந்தயம் சூதாட்டத்தின் முக்கிய அம்சமாகும். மேலும் உலகெங்கிலும் நடைபெறும் பிரபல விளையாட்டு போட்டிகளின் பந்தயங்களில் மூன்றில் இரண்டு பங்கு முடிவை தீர்மானிக்கும் இடத்தில் தாவூத் இப்ராகிம் இருப்பதாக நம்பப்படுகிறது.
கிரிக்கெட் சூதாட்டம்

1980 களில் இருந்து கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வரும் தாவூத் இப்ராகிம், 2000 ஆம் ஆண்டு ஆட்ட நிர்ணயம் சர்ச்சையிலும் சிக்கினார். 2008 இல் ஐ.பி.எல் அறிமுகமான பிறகு தான் பலர் அதில் நேரடியாக கவனம் செலுத்த ஆரம்பித்தனர். 2013 இல் தாவூத் இப்ராகிமின் சகோதரர் அனீஸ் இப்ராகிம் ஐ.பி.எல் பந்தயத்தை நடத்த நட்சத்திர வீரர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் சிலரை அச்சுறுத்தியதாகவும் இந்தியா டுடே பத்திரிகை செய்தி வெளியிட்டது. ஒவ்வொரு ஐ.பி.எல் தொடரிலும் பி.சி.சி.ஐ, அணி உரிமையாளர், அணி வீரர்கள், விளம்பரதாரர்கள் லாபம் ஈட்டுவதை காட்டிலும் தாவூத் இப்ராகிம் கும்பல் பந்தயங்கள் மூலம் பல மடங்கு லாபத்தை ஈட்டுகின்றனர். தாவூத் இப்ராகிம் கிரிக்கெட் பந்தயம் மட்டுமின்றி கிரிக்கெட் குடும்பத்துடன் தொடர்புடையவர். அதாவது, 2006 இல் தாவூத் இப்ராகிமின் மகள் மஹ்ருக் இப்ராகிம், பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டமின் மகன் ஜுனைத் மியாண்டம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

லோகந்த்வாலா துப்பாக்கிச் சூடு

1980 களின் பிற்பகுதியில் கஞ்சூர்மார்க்கில் அரசியல்வாதி அசோக் ஜோஷி கும்பலுக்காக மஹிந்திரா டோலாஸ் என்ற மாயா டோலாஸ் பல மோசடிகளை அரங்கேற்றினார். 03-12-1988 அன்று தாவூத் இப்ராகிமின் உத்தரவின் பேரில் சோட்டா ராஜன் கும்பல் அசோக் ஜோஷியை படுகொலை செய்தது. அசோக் ஜோஷியின் படுகொலைக்கு பிறகு, மாயா டோலாஸ் தனது சொந்த கும்பலை உருவாக்கி, தாவூத் இப்ராகிமுக்கு ஆதரவாக திலீப் புவாவுடன் இணைந்து பணியாற்றினார். ஆரம்பத்தில் இருந்தே மாயா டோலாஸ் நம்பகத்தன்மையற்றவராக கருதப்பட்டதால், ஒரு நாள் மாயா டோலாஸ் மூலம் காவல்துறை தங்களை நெருங்கிவிடுவார்கள் என்று நினைத்து தங்களை பாதுகாத்து கொள்ள மாயா டோலஸ் கும்பல் இருக்கும் இடத்தை தாவூத் இப்ராகிம் கும்பல் காவல்துறையிடம் கசியவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன.

16-11-1991 அன்று காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், லோகந்த்வாலா வளாகத்தில் மாயா டோலாஸ் உட்பட 7 குண்டர்களுக்கும் மும்பை கூடுதல் காவல் ஆணையர் அப்தாப் அகமது கான் குழுவினருக்கும், பயங்கரவாத எதிர்ப்புப் படைக்கும் இடையே 4 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது.  இதன் முடிவில் மாயா டோலாஸ் உட்பட 7 பேரும் மரணமடைந்தனர். இந்தியாவின் முதல் பகல்நேர என்கவுண்டர் சம்பவமான லோகந்த்வாலா வளாக துப்பாக்கிச் சூடு, பொதுமக்களின் பார்வைக்கு மத்தியில் காணொளி பதிவு செய்யப்பட்டது. லோகந்த்வாலா துப்பாக்கிச் சூடு குறித்து மேலும் அறிய Shootout at Lokhandwala (2007) திரைப்படத்தை காணவும்.
தாவூத் இப்ராஹிமின் வளர்ச்சி 

தாவூத் இப்ராகிம் தனது பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் பழிவாங்கலுக்காக மன்யா சர்வே மற்றும் மாயா டோலாஸை ஒழிக்க விரும்பினார். மேலும் தாவூத் இப்ராகிம் தனது பணம், அதிகாரம் மற்றும் தொடர்புகளை பயன்படுத்தி மும்பையில் குற்றங்களை தடுக்க மன்யா சர்வே மற்றும் மாயா டோலாஸ் ஆகிய இருவரையும் கொல்வதே சிறந்த வழி என்று மும்பை காவல்துறையை நம்ப வைத்தார் என்று பரவலாக நம்பப்படுகிறது.

ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார், கரீம் லாலா, மன்யா சர்வே, மாயா டோலாஸ் ஆகியோர் மும்பை நிழல் உலக போட்டியில் இருந்து விலக்கப்பட்டதை அடுத்து தாவூத் இப்ராகிமின் தேசிய குற்ற வலையமைப்பு சர்வதேச குற்ற வலையமைப்பாக வளர்ந்தது குறிப்பிடத்தக்கது. கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகள் இல்லாமல் வளர்ந்த தாவூத் இப்ராகிமின் சர்வதேச வலைப்பின்னலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாக 1993 மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்கு பிறகு உலகின் மிகவும் தேடப்படும் குற்றவாளியாக தாவூத் இப்ராகிம் மாறினார்.

1993 மும்பை குண்டுவெடிப்பு

06-12-1992 அன்று அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இந்து கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, டிசம்பர் 1992 மற்றும் ஜனவரி 1993 இல், ராமர் கோயிலுக்கு ஆதரவாகவும் பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக போராடிய முஸ்லிம்களுக்கு எதிராகவும் இந்து கரசேவகர்கள் கலவரத்தில் ஈடுபட நாடு முழுவதும் பரவலான மதக் கலவரங்கள் வெடித்தன. 1997 இல் வெளியான ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தின் அறிக்கைப்படி மும்பையில் நடந்த மதக் கலவரங்களால் தோராயமாக 900 நபர்கள் இறந்ததாகவும், 2000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் கண்டறியப்பட்டது. மேலும் பால் தாக்கரேவின் உத்தரவின் பேரில் பழிவாங்கும் நோக்கத்துடன் முஸ்லிம்கள் மற்றும் அவர்களது உடைமைகள் மீது சிவசேனா கட்சியினர் திட்டமிட்ட தாக்குதலை நடத்தியதாக அறிக்கை குற்றம்சாட்டியது.
டிசம்பர் 1992 மற்றும் ஜனவரி 1993 மத கலவரத்தைத் தொடர்ந்து மார்ச் 1993 மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இது இந்திய வரலாற்றில் நடந்த மிக மோசமான குண்டுவெடிப்பு சம்பவமாகும். 12-03-1993 மும்பையில் 12 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 257 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1400 பேர் காயமடைந்தனர். காவல்துறையின் தீவிர விசாரணையில், பயங்கரவாத தாக்குதலுக்கு கூட்டாளிகளான டைகர் மேமன் மற்றும் யாகூப் மேமன் மூலம் தாவூத் இப்ராகிம் ஒருங்கிணைத்தது தெரியவந்தது.

1993 மும்பை குண்டுவெடிப்பு விசாரணையில், 100 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு 99 பேருக்கு பல்வேறு கால அளவில் சிறைத்தண்டனை மற்றும் யாகூப் மேனனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. யாகூப் மேனன் 2015 இல் தூக்கிலிடப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாவூத் இப்ராகிம் மற்றும் டைகர் மேமன் கைது செய்யப்படவோ அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்படவோ இல்லை.
1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கு, கொலை வழக்கு, மோசடி வழக்கு, கடத்தல் வழக்கு போன்ற குற்ற வழக்குகளில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம் இன்று வரை பிடிபடவில்லை. இன்று, பல்வேறு சர்வதேச புலனாய்வு அமைப்புகளால் உலகம் முழுவதும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராக இருக்கும் தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க வடிவமைப்பை கொண்ட வெள்ளை மாளிகையில் இருப்பதாக நம்பப்படுகிறது.

அபு சலேம் 
உத்தரபிரதேசத்தில் ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள சராய் மிர் கிராமத்தில் பிறந்த அபு சலேம், ஆரம்பத்தில் தாவூத் இப்ராகிம் கும்பலில் கடத்தல் பொருட்களை கொண்டு செல்லும் ஓட்டுநராக பணிபுரிந்தார். இறுதியில் தாவூத் இப்ராகிமின் தயவால் நிழல் உலகில் மெதுவாக வளர்ந்து பாலிவுட் விவகாரங்களை கவனிக்க தொடங்கிய அபு சலேம், பாலிவுட் நடிகை மோனிகா பேடியுடன் தொடர்பில் இருந்தார்.

பாலிவுட் திரையுலகை கட்டுப்படுத்தும் வகையில், திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் பணம் பறிப்பது, விநியோக உரிமையை அபகரிப்பது, பாலிவுட் படங்களை பினாமி பெயர்களில் தயாரிப்பது போன்றவற்றில் அபு சலேம் கும்பல் ஈடுபட்டது. அவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு இணங்காத தயாரிப்பாளர் ஜாவேத் சித்திக், T-Series நிறுவனர் குல்ஷன் குமார் போன்ற பிரபலங்களை கொலை செய்தனர். மேலும் தங்களுக்கு கீழ்ப்படியாத சுபாஷ் கோய், ராஜீவ் ராய் மற்றும் ராகேஷ் ரோஷன் ஆகியோரைக் கொல்ல முயன்று தோல்வியடைந்தனர்.

ஓட்டுநர் பணி, பாலிவுட் பணி போக தாவூத் இப்ராகிமின் உத்தரவுக்கு இணங்க சொந்த ஊரான ஆசம்கரில் வேலையில்லாத இளைஞர்களிடம் பணத்தாசை காட்டி அவர்களை மும்பைக்கு வரவழைத்து கொலை, கொள்ளை போன்ற சட்டவிரோத காரியங்களை கச்சிதமாக அரங்கேற்றி மறுநாள் ஆசம்கருக்கு அனுப்பி வைப்பதும் அபு சலேமின் முக்கிய வேலையாக இருந்துள்ளது.

2002 இல் அபு சலேமும் நடிகை மோனிகா பேடியும் போலி கடவுச்சீட்டை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் போர்ச்சுகலின் தலைநகர் லிஸ்பனில் இன்டர்போலால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அபு சலேமுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், மோனிகா பேடிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து போர்ச்சுகல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர், அவர்கள் 2005 இல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கு, T-Series நிறுவனர் குல்ஷன் குமார் கொலை வழக்கு, நடிகை மனிஷா கொய்ராலா செயலாளர் அஜித் திவானி கொலை வழக்கு, ரியல் எஸ்டேட் நிறுவனர் பிரதீப் ஜெயின் கொலை வழக்கு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட வழக்குகளில் அபு சலேம் குற்றம் சாட்டப்பட்டார். 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குஜராத்தில் இருந்து மும்பைக்கு ஆயுதங்களை கடத்தியதாகவும் மற்றும் 1995 பிரதீப் ஜெயின் கொலை வழக்கிலும் அபு சலேமுக்கு 2017 இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இன்று மும்பை சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கிறார் அபு சலேம். மேலும், விசாரணையில், சஞ்சய் தத்துக்கு துப்பாக்கிகளை வழங்கியதாக அபு சலேம் ஒப்புக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சஞ்சய் தத் வழக்கு
ஜனவரி 1993 இல், தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகளான சமீர் ஹிங்கோரா மற்றும் ஹனிப் கடவாலா ஆகியோருடன் சஞ்சய் தத்தின் வீட்டிற்கு துப்பாக்கிகளை வழங்க சென்றதாகவும், அங்கு சஞ்சய் தத் வெடிமருந்துகளுடன் மூன்று AK-56 ரக துப்பாக்கிகளை பெற்றதாகவும் அபு சலேம் கூறினார். குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை சஞ்சய் தத்தின் வீட்டின் கேரேஜில் மறைத்து வைத்திருந்ததாக ஹனிப் கடவாலா மீது குற்றம் சாட்டப்பட்டது.

06-12-1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து நடந்த மும்பை கலவரத்தின் போது பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட தனது குடும்பத்தை பாதுகாக்க சஞ்சய் தத் ஆயுதங்களைப் பெற்றார். 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சமீர் ஹிங்கோரா மற்றும் ஹனிப் கடவாலா ஆகியோர் கைது செய்யப்பட்டதை அறிந்த சஞ்சய் தத் தனது நண்பர் யூசுப் நுல்வல்லாவிடம் துப்பாக்கிகளை அழிக்க சொல்லியுள்ளார்.

இதனிடையே, சஞ்சய் தத் AK-56 ரக துப்பாக்கி வைத்திருப்பதாக பத்திரிக்கையாளர் பல்ஜீத் பர்மர் மூலம் பத்திரிகைகளில் செய்தி கசிந்ததால், அந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து மகன் சஞ்சய் தத்திடம் தந்தை சுனில் தத் கேட்க அவரும் இல்லையென மறுத்துள்ளார். இந்நிலையில், 19-04-1993 அன்று மொரீஷியஸில் படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பை திரும்பிய சஞ்சய் தத்தை காவல்துறை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற விசாரணைக்கு பிறகு சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2016 இல், சிறையில் இருந்து வெளிவந்த சஞ்சய் தத் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். சஞ்சய் தத் வழக்கு பற்றிய தகவலுக்கு Sanju (2018) திரைப்படத்தை காணவும்.

குல்ஷன் குமார் கொலை 
T-Series நிறுவனர் குல்ஷன் குமார், ஜிதேஷ்வர் மகாதேவ் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது 16 தோட்டாக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குல்ஷன் குமாரை கொலை செய்வதற்கான திட்டம் தாவூத் இப்ராகிமின் சகோதரர் அனீஸ் இப்ராகிமின் வீட்டில் திட்டமிடப்பட்டது. குல்ஷன் குமார் சுட்டுக் கொல்லப்பட்ட போது குல்ஷன் குமாரின் கதறலை தொலைபேசியில் கேட்டு அபு சலேம் மகிழ்ந்ததாக கூறப்படுகிறது. தாவூத் இப்ராகிமின் கூட்டாளி அபு சலேம், அப்துல் ரவூப், TIPS ஆடியோஸ் நிறுவனர் ரமேஷ் தௌராணி, இசையமைப்பாளர் நதீம்-ஷ்ரவன் மற்றும் பலர் குற்றம் சாட்டப்பட்டனர்.

இரண்டு முறை மிரட்டப்பட்டாலும், எந்தவித முன்னெச்சரிக்கை உணர்வும் இல்லாமல் குல்ஷன் குமார் அசட்டு தைரியத்தில் இருந்துள்ளார். ஆனால் குல்ஷன் குமார் அகால மரணத்திற்கு பிறகும், அவரது குடும்பத்தினரின் முயற்சியால், T-Series இன்றும் இசைப்பதிவு துறையில் ஒரு வெற்றிகரமான நிறுவனமாக உள்ளது.

அருண் கவ்லி
17-07-1955 அன்று மகாராஷ்டிராவில் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள போஹேகான் கிராமத்தில் குலாப்ராவ் குடும்பத்தில் அருண் கவ்லி பிறந்தார். 1970 களில், மத்திய மும்பையில் அமைந்துள்ள ஜவுளி ஆலைகளில் மில் தொழிலாளியாக பணிபுரிந்தார். 1970 களின் பிற்பகுதியிலிருந்து 1980 களின் முற்பகுதி வரை, ஜவுளித் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மும்பை ஜவுளி ஆலைகள் பூட்டப்பட்டன. இதன் விளைவாக வேலை இழந்த அருண் கவ்லி, குறுக்கு வழியில் விரைவாக பணம் சம்பாதிக்க விரும்பி ராமா நாயக் மற்றும் பாபு ரெஷிம் தலைமையிலான பைகுல்லா கும்பலில் சேர்ந்து போதைப்பொருள், சட்டவிரோத மதுபானம், மிரட்டி பணம் பறித்தல்,  மட்கா சூதாட்டம் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். லாட்டரி பந்தயத்தின் ஒரு வடிவமான மட்கா சூதாட்டம் என்பது நியூயார்க் காட்டன் எக்ஸ்சேஞ்சில் இருந்து டெலிபிரிண்டர்கள் மூலம் பாம்பே காட்டன் எக்ஸ்சேஞ்சிற்கு அனுப்பப்படும் பருத்தியின் தொடக்க மற்றும் இறுதி விகிதங்களில் பந்தயம் கட்டுவதை உள்ளடக்கியது. 

1980 களில் அருண் கவ்லி உள்ளிட்ட கும்பல்களை ஒடுக்க மும்பை காவல்துறை முயன்ற போது, சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே "அவர்கள் நம்முடைய பையன்கள்" என்று அருண் கவ்லிக்கு ஆதரவாக பேசியதன் மூலம் அரசியலில் கவனம் பெற்றார். 1990 களின் பிற்பகுதியில் சிவசேனா கட்சியுடனான உறவை முறித்து கொண்ட பிறகு, 1997 இல் அகில பாரதிய சேனா கட்சியை தொடங்கினார் மற்றும் 2004 இல் சின்ச்போக்லி (Chinchpokli) சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

2007 இல் சிவசேனாவின் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் உறுப்பினரான கமலாகர் ஜாம்சண்டேகர், அருண் கவ்லி கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். நில பேரத்துடன் தொடர்புடைய இந்த கொலையை செய்ய அருண் கவ்லி ரூ.30 லட்சம் பெற்றார். கமலாகர் ஜம்சண்டேகரை கொலை செய்த குற்றத்திற்காக 2012 இல் அருண் கவ்லிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ராஜன் வகையறா
1970 களின் பிற்பகுதியில், கேரளாவை சேர்ந்த ராஜன் மகாதேவன் நாயர் என்ற படா ராஜன் மும்பையின் கிழக்கு புறநகர் பகுதிகளான காட்கோபர், பந்த் நகர், செம்பூர் மற்றும் திலக் நகர் போன்ற இடங்களில் சட்டவிரோத கும்பலை இயக்கி வந்தார். மும்பை நிழல் உலகில் தாவூத் இப்ராகிமுடன் இணக்கமாக பணியாற்றினார் படா ராஜன். மேலும், திரையரங்கில் பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்து கொண்டிருந்த ராஜேந்திர நிகல்ஜே கும்பலை படா ராஜன் தனது கும்பலில் சேர்த்து கொண்டார். இறுதியில் படா ராஜனின் வலதுகரமாக செயல்பட தொடங்கிய ராஜேந்திர நிகல்ஜே சோட்டா ராஜன் என்று அழைக்கப்பட்டார்.

செம்பூரில் உள்ள ஷெல் காலனியில் ஒரு பெண் தட்டச்சரை ஏகடியம் செய்ததற்காக அப்துல் குஞ்ச் கும்பலை படா ராஜன் கும்பல் தாக்கியதில் இருந்து அப்துல் குஞ்ச் படா ராஜனுடன் நீண்டகாலமாக பகை கொண்டிருந்தார். ஒருவரையொருவர் கொல்லத் துணியும் அளவுக்கு இச்சம்பவம் கொடிய பகையாக மாறியது.

தாவூத் இப்ராகிமுக்கு உதவியாக 06-09-1982 அன்று செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே படா ராஜனின் அறிவுறுத்தலின் பேரில் டேவிட் பர்தேசி என்பவரால் பதான் கும்பலைச் சேர்ந்த அமீர்சாதா நவாப் கான் கொல்லப்பட்டார். இந்த சூழலை பயன்படுத்தி கொண்ட அப்துல் குஞ்ச், பதான் கும்பலை சேர்ந்த மகேஷ் தோலாகியா மூலம் படா ராஜனை கொல்ல திட்டமிட்டார். இதனால், தங்கையின் திருமணத்திற்கு பணம் தேடி அலைந்து கொண்டிருந்த சந்திரசேகர் சபாலிகா என்ற ரிக்சா ஓட்டுநரை வேலைக்கு அமர்த்தினர். 21-09-1982 அன்று மகேஷ் தோலாகியா மற்றும் அப்துல் குஞ்ச் ஆகியோரின் திட்டத்தின் பேரில் எஸ்பிளனேட் நீதிமன்றத்திற்கு வெளியே படா ராஜனை வழிமறித்து சுட்டுக் கொன்றார் சந்திரசேகர் சபாலிகா. அமீர்சாதா நவாப் கான் கொல்லப்பட்ட 15 நாட்களுக்கு பிறகு படா ராஜன் கொலை செய்யப்பட்டார்.

தனது வழிகாட்டியான படா ராஜனை கொன்ற கொலையாளிகளை பழிவாங்க திட்டமிட்டு, அதன்படி சந்திரசேகர் சபாலிகா, அப்துல் குஞ்ச் மற்றும் அவர்களது கும்பலை சோட்டா ராஜன் அழித்தார். படா ராஜன் போல தாவூத் இப்ராகிமுடன் இணைந்து சட்டவிரோத வேலைகளை செய்து வந்த சோட்டா ராஜன், கடைசியில் தாவூத் இப்ராகிமின் எதிரியாக மாறி, தனித்து வேலைகளை செய்ய தொடங்கினார்.
27 வருடங்கள் தலைமறைவாக வாழ்ந்த சோட்டா ராஜன் 25-10-2015 அன்று பாலியில் இந்தோனேசிய காவல்துறையால் கைது செய்யப்பட்டு 06-11-2015 அன்று பாலியில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 02-05-2018 அன்று பத்திரிகையாளரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். தற்போது சிறை கண்காணிப்பில் இருந்து கொண்டு மற்ற வழக்குகளை சந்தித்து வருகிறார். சோட்டா ராஜனின் சகோதரர் தீபக் நிகல்ஜே பா.ஜ.க கூட்டணியில் உள்ள ராம்தாஸ் அத்வாலேயின் குடியரசு கட்சியின் தேசிய தலைவராக உள்ளார்.
முடிவுரை 

ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார், கரீம் லாலா, தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், யாகூப் மேனன், டைகர் மேனன், அபு சலேம், அருண் கவ்லி, படா ராஜன், சோட்டா ராஜன் போன்ற பல நபர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய மும்பை நிழல் உலகம் நிரம்பியுள்ளது. நிழல் உலகத்தின் முழு விவரங்களையும் ஆராய்வது சிக்கலான புராணக் கதையை அவிழ்ப்பது போல் இருக்கும் என்பதால் விவரங்களை விரிவாக்கவில்லை.

உலகம் முழுவதும் நிழல் உலக செயல்பாட்டால் வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தவர்களே அதிகம். இத்தகைய உண்மையான வரலாற்று சூழலில், நிழல் உலக சக்திகளின் செயல்பாடுகளை ஒடுக்குவதற்கு ஒரு நாள் சட்டம் தன் கடமையை செய்யும் என்று நம்புவோம்.
விவரணைகள் 

ஹாஜி மஸ்தான் கதை



வரதராஜன் முதலியார் கதை


கரீம் லாலா கதை


தாவூத் இப்ராஹிம் கதை


1992 பாபர் மசூதி கதை 


Naresh Fernandes Recollects Reporting the 1992-1993 Riots


1993 மும்பை குண்டுவெடிப்பின் கதை 


Srikrishna Commission Panel


1991 Lokhandwala Complex Shootout (Viewer Discretion Advised)


Criminal Files - The Indian Mafia


Few Indian Gangster Movies List


Few Indian Female Gangsters List


யார் இந்த சுகுமார குருப்?


மாஃபியா வரலாறு


Mafia History



Dawood Ibrahim Cover Stories





வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Monday, November 22, 2021

யாரிந்த சுகுமார குருப்?

யாரிந்த சுகுமார குருப்?

சுருக்கம் 
  1. முகவுரை
  2. இறந்தது யார்?
  3. சிக்கிய தடயங்கள்
  4. மர்மத்தை விலக்கிய மருத்துவ அறிக்கை
  5. இறந்தது சுகுமார குருப்பா?
  6. குற்றம் நடந்தது என்ன?
  7. கோபாலகிருஷ்ணா குருப்
  8. ஏன் போலி இறப்பு சான்றிதழ்?
  9. வளைகுடா வாழ்க்கை
  10. வளைகுடா இளவரசர்
  11. என்ன சதித்திட்டம்?
  12. அன்றிரவு காரில் ஏறிய நபர்
  13. கொல்லப்பட்டது யார்?
  14. விசாரணை படலம்
  15. வழக்கின் முடிவு 
  16. தேடும் படலம்
  17. ஆயுத வியாபாரி 
  18. உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?
  19. கவனத்தை ஈர்த்த வழக்கு 
  20. முடிவுரை
  21. விவரணைகள்
முகவுரை

இக்கட்டுரையை சுகுமார குருப் கூட வாசிக்கக்கூடும்? என்னப்பா! தொடக்கமே  விவகாரமாக இருக்கிறதே என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. உயிரோடு இருக்கிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அப்படி இருந்தால், 37 ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளி எங்கு எப்படி உருமாறி இருக்கிறார் என்பதை யாரறிவார்? சரி வாருங்கள்! "கதைக்குள் கதை" காண்போம்.
இறந்தது யார்?

ஜனவரி 22, 1984 அன்று பனிமூட்டம் நீடித்த அதிகாலை 4 மணியளவில் மாவேலிக்கரை காவல் நிலைய பணியில் இருந்த தலைமைக் காவலரை நோக்கி ஓடோடி வந்த உள்ளூர்வாசி "அருகிலுள்ள நெல் வயலில் KLQ 7831 என்ற எண் கொண்ட கருப்பு நிற அம்பாசிடர் கார் விபத்துக்குள்ளாகி ஓட்டுநர் இருக்கையில் கருகிய உடலுடன் ஒருவர் தீயில் எரிந்துவிட்டதாக" கூறி திடுக்கிட்டார். 

புகாரை பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர். அவ்விடத்தில் குழுமியிருந்த கிராமத்தினர் "கார் சாலையை விட்டு விலகி வயல்வெளியில் விழுந்து தீப்பிடித்திருக்கலாம் என்றும் அந்நேரத்தில் அதே சாலையில் மற்றொரு காரில் சிலர் செல்வதைக் கண்டதாகவும்" பேசிக்கொண்டனர்.
சிக்கிய தடயங்கள்

காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) ஹரிதாஸ் குழுவினர் அதிகாலை 5:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுற்றுப்புறச் சூழலை உன்னிப்பாக ஆய்வு செய்த பிறகு தான், இந்த சம்பவம் ஒரு சாதாரண கார் விபத்து என்பதை விட ஏதோ சதி நடந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டும் சிறிய தடயங்கள் குவியத் தொடங்கின. எடுத்துக்காட்டாக, தீப்பெட்டி, காலணி, முடியுடன் கூடிய ரப்பர் கையுறை, யாரோ தப்பி ஓடியதைக் குறிக்கும் வகையில் சேற்றில் கால்தடங்கள் போன்றவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மர்மத்தை விலக்கிய மருத்துவ அறிக்கை

சம்பவ இடத்திற்கு தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் உமாதாதன் (Dr Umadathan) குழு வரவழைக்கப்பட்டு இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இறந்தவரின் சுவாசக் குழாயில் கரி அல்லது சாம்பலின் தடயங்கள் இல்லாததால் காரின் ஓட்டுநர் இருக்கையில் அமருவதற்கு முன்பு இந்த நபர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் செரிமான மண்டலத்தில் மதுவும் ஈதரும் இருந்தது என்றும் தரப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை காவல்துறையினரின் ஐயத்தை உறுதிப்படுத்தியது.

சுகுமார குருப் வழக்கின் மருத்துவ ஆய்வு குறித்து டாக்டர் உமாதாதன் தனது "Dead Men Tell Tales" புத்தகத்தில் விவரித்துள்ளார். இப்புத்தகத்தில் சுகுமார குருப் வழக்கு, பானூர் சோமன் வழக்கு, போலக்குளம் பீதாம்பரன் வழக்கு (ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு படத்தின் கதை) போன்ற கேரளாவை உலுக்கிய முக்கிய வழக்குகள் குறித்து பதிவு செய்துள்ளார்.
இறந்தது சுகுமார குருப்பா?

காரில் இறந்தவர், மாவேலிக்கரைக்கு அருகில் உள்ள செரியநாட்டைச் சேர்ந்தவரும் வளைகுடாவில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு இந்தியா வந்தவருமான சுகுமார குருப் என தகவல் பரவியது. அவரது உறவினர்கள் சிலர் அழுது கொண்டே சம்பவ இடத்திற்கு வந்து அவரை கடைசியாகப் பார்க்க முயன்றனர். இறந்தவரின் முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியிருந்தாலும், உயரம் மற்றும் உடல்வாகு மூலம் அது சுகுமார குருப் தான் என்றும் முந்தைய நாள் அதே காரில் அருகில் உள்ள ஆலப்புழாவுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என்றும் அவரது மைத்துனன் பாஸ்கர பிள்ளை சாட்சியமளித்தார். முதல்கட்ட விசாரணை முடிந்த பிறகு உடலை தகனம் செய்யக்கூடாது, புதைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சுகுமார குருப் குடும்பத்தினரிடம் உடலை காவல்துறை ஒப்படைத்தது.
குற்றம் நடந்தது என்ன?

அடுத்த கட்ட விசாரணை தொடங்கிய போது, காரில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் என்றும் நான்கு பேர் இணைந்து தீட்டிய காப்பீட்டு மோசடி சதிக்கு அவர் பலியாகிவிட்டார் என்றும் தெரியவந்தது. அடுத்து என்ன நடந்தது என்பதை பற்றிய தெளிவான புரிதலை பெற, விசாரணைக்களம் விரிவடைவதை காண்போம் வாருங்கள்.
கோபாலகிருஷ்ணா குருப்

ஆலப்புழா மாவட்டத்தில், செரியநாடு கிராமத்தில், நாயர் குடும்பத்தில், நடுத்தர பின்னணியில் பிறந்த கோபாலகிருஷ்ணா குருப் சிறுவயதிலிருந்தே சாகச வாழ்க்கையை வாழ விரும்பினார். PUC படிப்பை முடித்த பிறகு இந்திய விமானப்படையில் விமானப்படை வீரராக சேர்ந்தார். அங்கு தீடீரென உடல்நலக் கோளாறு இருப்பதாகக் கூறி நீண்ட கால விடுப்புக்கு விண்ணப்பித்துவிட்டு வீடு திரும்பினார் கோபாலகிருஷ்ணா குருப்.

விடுப்பில் வந்த கோபாலகிருஷ்ணா குருப், மீண்டும் விமானப்படை பணிக்குத் திரும்ப விருப்பமில்லாமல் கிராமத்திலுள்ள காவல்துறையின் சிறப்புப் பிரிவு காவலருக்கு லஞ்சம் கொடுத்து தான் இறந்துவிட்டதாக போலியான இறப்பு சான்றிதழ் அறிக்கையை இந்திய விமானப்படை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.
ஏன் போலி இறப்பு சான்றிதழ்?

சென்னை விமானப்படை பணியில் இருந்த போது, விமானப்படை பொருட்களுக்கு கூடுதல் விலை தருவதாக வெளி நண்பர்கள் ஆசைக்காட்ட, விமானப்படை கிடங்கில் பணிபுரியும் கணக்காளர் உதவியுடன் விமானப்படை கிடங்கில் இருந்து முதல் தர மதுபானங்கள், செப்பல்கள், காலணிகள் போன்ற பொருட்களை வெளி நண்பர்களுக்கு விற்று வந்தார் கோபாலகிருஷ்ணா குருப். இதற்கிடையில், சென்னை விமானப்படை உயரதிகாரி கோபாலகிருஷ்ணா குருப் உட்பட பலரை வழக்கமான இடமாற்ற முறைப்படி மும்பைக்கு இடமாற்றம் செய்தார்.

திடீரென மும்பைக்கு இடம் மாறியதால் சென்னை விமானப்படை கிடங்கு சம்பாத்தியம் பறிபோனாலும், மும்பை விமானப்படையில் ஆயுதக்கிடங்கு கணக்காளராக பணி நியமனம் செய்யப்பட்டதால் புதிய பணியை விரும்பி ஏற்கலானார். சென்னை கிடங்கில் சின்ன சின்ன பொருட்களை விற்று காசு பார்த்தவர், மும்பை ஆயுதக்கிடங்கு பணியை நினைத்து பேராசை எண்ணங்களை வளர்ந்து கொண்டார்.

மும்பை ஆயுதக்கிடங்கின் கணக்காளர் பணியை கேடயமாகப் பயன்படுத்தி, 1971 இந்தியா (வங்காளதேசம்) - பாகிஸ்தான் போரின் போது இந்தியா பல்வேறு ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததால், மும்பை துறைமுகத்தில் உள்ள நண்பர்களின் உதவியுடன் ஆயுதக்கிடங்கு கணக்கில் வராத ஆயுதங்களை பிரிவினைவாத மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு ரகசியமாக அதிக விலைக்கு ஆயுதங்களை விற்று வந்தார்.

இதற்கிடையில், மும்பை விமானப்படையின் உயரதிகாரி ஒரு கட்டத்தில், போர் முடிந்த சில நாட்களுக்குள் துல்லியமான ஆயுதப் பட்டியலை சமர்ப்பிக்கும்படி கேட்டார். இதையெடுத்து, இதே பணியில் தொடர்ந்தால், ஒரு நாள் இல்லை ஒரு நாள் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்ற ஐயத்தில் எதிர்கால விசாரணையை தவிர்க்க, விமானப்படை பணியில் இருந்து விலக போலி இறப்பு சான்றிதழ் அறிக்கையை கொடுத்து தப்பித்தார் கோபாலகிருஷ்ணா குருப்.
வளைகுடா வாழ்க்கை

விமானப்படை பணியை உதறி தள்ளிய பிறகு, வளைகுடாவிற்கு குடிபெயர்வதற்காக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த போது கோபாலகிருஷ்ணா குருப் தனது பெயரை சுகுமார பிள்ளை என்று மாற்றிக் கொண்டார். இதை தொடர்ந்து சுகுமார பிள்ளை சுகுமார குருப் என்ற பெயராலேயே அழைக்கப்படலானார். கேரளாவில் உள்ள நாயர் சமூகத்தின் துணை சாதிகள் பிள்ளை மற்றும் குருப் என்பது குறிப்பிடத்தக்கது.

அபுதாபி மரைன் ஆப்பரேட்டிங் நிறுவனத்தில் உயரதிகாரி  பணியில் சேர்ந்தது, நிலையான வருமானத்தை ஈட்டியது, நெருங்கிய நண்பர்களின் வட்டம் பெரிதானது, சுகு நம்பிக்கைக்குரிய நண்பரானது, மனைவி தனியார் மருத்துவமனையில் செவிலியராக சேர்ந்தது என்று அபுதாபியில் சுகுமார குருப் வாழ்க்கை அமைதியாக கழிந்தது. தன் பெற்றோர் வீட்டில் வெகுகாலம் பணி செய்தவரின் மகள் சரசம்மாவை காதலித்து திருமணம் புரிந்து கொண்டார் சுகுமார குருப்.
வளைகுடா இளவரசர்

நெருங்கிய நண்பர்கள் மூலம் வளைகுடா மன்னரின் இளம் வாரிசான இளவரசரை நெருங்கி அவரது முழு நம்பிக்கையை பெற்றார் சுகுமார குருப். மன்னர் இருக்கும் வரை இளவரசர் வசதி வாய்ப்புகளை அனுபவிக்கலாம் ஆனால் ஆட்சி, அதிகாரம், தொழில் என்று எதுவும் மன்னரின் மேற்பார்வை இல்லாமல் செய்ய இயலாது என்பது நடைமுறை. அதனால், மன்னருக்கு தெரியாமல் கடத்தல் தொழில் செய்ய விரும்பிய இளவரசர் எண்ணத்திற்கு வண்ணம் கொடுத்தார் சுகுமார குருப். இளவரசரின் கடைக்கண் பார்வையால் கடத்தல் (எண்ணெய், ஆயுதம், தங்கம்) தொழிலில் கொடிகட்டி பறந்தாலும், இளவரசர் தனக்கு வரும் பெரும் லாபத்தில் சொற்ப அளவிலே சுகுமார குருப்புக்கு கொடுத்து வந்தார்.

ஒரு கட்டத்தில், அபாயகரமான பணிகளை செய்தாலும் அதற்குரிய லாபம் குறைந்த அளவிலே கிடைத்து வந்ததால், இளவரசருக்கு தெரியாமல் ஒரு பெரிய கடத்தலை செய்து கோடிக்கணக்கான பணத்தை ஈட்ட திட்டமிட்டார் சுகுமார குருப். அதன்படி, வெற்றிகரமாக கடத்தலை செய்து முடித்து, கோடிகளில் பணத்தை ஈட்டிய பிறகு, வளைகுடாவில் தன் பெயரில் காப்பீட்டை பதிவு செய்து கொண்டார்.

கடத்தல் தொழிலில் சுகுமார குருப்பின் துரோகத்தை அறிந்த இளவரசர் அவரை கொல்ல திட்டமிட்டார். சுகுமார குருப்பை கண்காணிக்க இளவரசர் திட்டமிட்ட நேரத்தில், அவர் தனது நண்பர் சுகுவுடன் சேர்ந்து, ஒரு பெரிய சதித்திட்டத்துடன் அவசரமாக இந்தியா திரும்பினார்.
என்ன சதித்திட்டம்?

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த சுகுமார குருப்பும் சுகுவும் 8,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட செகண்ட் ஹேண்ட் அம்பாசிடர் காரில் வீடு திரும்பியவுடன் சதித்திட்டம் குறித்து கலந்தாலோசித்தனர். ஒரு விபத்தில் சுகுமார குருப் இறந்துவிட்டதாக காவல்துறையையும் உள்ளூர் மக்களையும் நம்ப வைத்து, காப்பீட்டு பணம் 8 லட்சம் ரூபாயை கூட்டாளிகள் பிரித்து கொள்வதே அந்த சதித்திட்டமாகும். இந்த சதித்திட்டத்திற்கு, பண தேவையில் இருந்த நண்பர் சுகு, மைத்துனன் பாஸ்கர பிள்ளை மற்றும் ஓட்டுநர் பொன்னப்பன் ஆகியோரை பயன்படுத்தி கொண்டார் சுகுமார குருப்.

இதையொட்டி, சுகுமார குருப் போலவே உயரம் மற்றும் உடல்வாகு கொண்ட ஒரு இறந்த உடலை பெறுவதற்காக, "ஆலப்புழா மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்த பாஸ்கர பிள்ளையின் உறவினர் மூலம் உரிமை கோரப்படாத ஒரு சடலத்தைப் பெறுவது இல்லையேல் மயானத்தில் இருந்து உடலை திருடுவது" என்பதே ஆரம்பகட்ட யோசனையாக இருந்துள்ளது. சில நாட்கள் முயன்றும் இறந்த உடலை தேடும் படலம் பலனளிக்காததால், சதித்திட்டம் சாத்தியமில்லை என்று பாஸ்கர பிள்ளை வருத்தத்துடன் கூறிய போது ​​சுகுமார குருப் மிக சாதாரணமாக ஒரு கொலைத் திட்டத்தை பரிந்துரைத்தார். அப்போதிருந்து விஷயங்கள் விரைவாக நகர்த்தப்பட்டன.
அன்றிரவு காரில் ஏறிய நபர்

ஜனவரி 21, 1984 அன்று இரவு சுகுமார குருப், பாஸ்கர பிள்ளை, பொன்னப்பன், சுகு ஆகிய நால்வரும் கருவாட்டாவில் உள்ள கல்பகவாடி உணவகத்தில் இரவு உணவை உண்ட பிறகு, சுகுமார குருப் புதிதாக வாங்கிய KLQ 7831 காரிலும் மற்றவர்கள் KLY 5959 காரிலும் பயணித்தனர்.

சுகுமார குருப்புடன் யாரேனும் ஒத்திருப்பதைக் கண்டு கொலை செய்யலாம் என்ற எண்ணத்தில் நால்வரும் சரியான நபரை தேடி இரண்டு கார்களில் ஒன்றன் பின் ஒன்றாக இரவு பயணம் செய்தனர். அப்போது, ஹரிபாட் கிராமத்தில் உள்ள ஹரி திரையரங்கம் அருகே சென்ற போது, சாலையோரம் சுகுமார குருப் போல ஒத்திருந்த நபர் லிஃப்டுக்காக கையை நீட்டிக் கொண்டிருப்பதை கண்டு காரை நிறுத்தினர். "நீங்கள் ஆலப்புழா நோக்கி செல்கிறீர்களா?" என்று அந்த நபர் கேட்க, "ஆமாங்க! உள்ள வாங்க" என்றார் ஓட்டுநர் பொன்னப்பன். பாஸ்கர பிள்ளையையும் சுகுவையும் பார்த்து வணக்கம் வைத்த பிறகு, திரையரங்கில் டிக்கெட் வசூலை மதிப்பீடு செய்துவிட்டு வீடு திரும்புவதாக கூறிவிட்டு காரில் ஏறினார் அந்த நபர்.

கார் ஆலப்புழாவை நோக்கிச் சென்ற போது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த பாஸ்கர ​​பிள்ளை, ஈதர் தடவிய ஒரு கோப்பை மதுவை குடிக்கச் சொல்லி அந்த நபரிடம் நீட்டினார். அந்த நபர் மறுத்துவிடவே இரண்டாவது முறையாக கடுமையான தொனியில் குடிக்க வற்புறுத்தினார் பாஸ்கர ​​பிள்ளை. அந்த நபர் மறுபடியும் மறுப்பு சொன்னதும் ஓட்டுநர் பொன்னப்பன் காரை நிறுத்த, பின் இருக்கைக்கு மாறிய பாஸ்கர பிள்ளை "அட! சும்மா குடி" என்று குரலை உயர்த்த இந்த முறை பயத்தால் மதுவை குடித்த அந்த நபர் சில நொடிகளில் மயங்கினார்.
கொல்லப்பட்டது யார்?

பாஸ்கர பிள்ளையும் சுகுவும் சேர்ந்து ஒரு துண்டைப் பயன்படுத்தி அந்த நபரின் கழுத்தை நெரித்து கொன்றனர். பின்னர் நால்வரும் சுகுமார குருப் மனைவிக்கு சொந்தமான ஸ்மிதா பவனுக்கு சென்றனர். அங்கு அவர்கள் அந்த நபரின் முகத்தை அடையாளம் காண முடியாதபடி எரித்தனர். இறந்த நபரின் உடை, மோதிரம், கைக்கடிகாரம் ஆகியவற்றைக் கழற்றிவிட்டு சுகுமார குருப்பின் உடை, மோதிரம், கைக்கடிகாரம் ஆகியவற்றை அந்ந நபருக்கு அணிவித்தனர். அவரது உடலை KLY 5959 காருக்குள் வைத்து, இரண்டு கார்களில் அந்தக் கும்பல் தண்ணீர்முக்கத்தில் உள்ள நெல் வயலை நோக்கி பயணித்தது. அங்கு கொலை செய்யப்பட்ட உடலை எடுத்து KLQ 7831 காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர வைத்து நெல் வயலை நோக்கி காரை தள்ளிவிட்டு அதன் மீது பெட்ரோலை ஊற்றி தீயிட்டனர்.

மாவேலிக்கரை காவல் நிலையத்தில் புகாரளித்த உள்ளூர்வாசி மூலம் இந்த விவகாரம் வெளியானவுடன், இந்த கார் விபத்தில் ஐயம் கொண்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) ஹரிதாஸ், இறந்தவரின் அடையாளத்தை சரியாக கண்டறிய, ஆலப்புழா பகுதியில் பதிவான காணாமல் போனோர் விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டார். அப்போது, ஆலப்புழாவில் காணாமல் போனவரின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், உடல் ஒற்றுமையின் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளத்தை காவல்துறையால் உறுதிப்படுத்த முடிந்தது. கொல்லப்பட்ட பிறகு காரில் கொழுந்துவிட்டு எரிக்கப்பட்ட அந்த நபரின் பெயர் சாக்கோ என்பதும் சுகுமார குருப், பாஸ்கர பிள்ளை, பொன்னப்பன் மற்றும் சுகுவின் காப்பீட்டு மோசடி சதித்திட்டத்திற்கு ஆலப்புழாவை சேர்ந்த திரைப்பட பிரதிநிதி சாக்கோ பலியானார் என்பதும் தெரியவந்தது.
விசாரணை படலம்

விசாரணையின் தொடக்கத்தில், சுகுமார குருப் இறந்ததாகக் கூறப்பட்ட போது, "குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டார் என்ற துக்க மனநிலை அவரது வீட்டில் யாருக்கும் இருக்கவில்லை. மேலும், விபத்து நடந்த அன்று மதிய உணவிற்கு கோழிக்கறி கூட தயாரித்து வைத்திருந்தார்கள். ஆனால், குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அன்றே நாளில் கோழிக்கறி சமைக்கப்படுவதில்லை" என்று நினைவு கூர்ந்தார் காவலர் ஹரிதாஸ்.

மேலும், அன்று பாஸ்கர பிள்ளையின் நெற்றியிலும் கையிலும் ஏற்பட்ட தீக்காயங்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்த போது "முதலில் குளிரைத் தடுக்க தீ மூட்டும் போது தீக்காயம் ஏற்பட்டதாகவும், சில நிமிடங்களுக்கு பிறகு பாத்திரத்தில் வெந்நீரை எடுத்துச் செல்லும் போது தீக்காயம் ஏற்பட்டதாகவும்" பாஸ்கர பிள்ளை கூறினார். விசாரணையில் பாஸ்கர பிள்ளை முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்ததால், பாஸ்கர பிள்ளையின் தீக்காயங்களானது அவர் காரைத் தீ வைத்த போது தற்செயலாக ஏற்பட்டு இருக்கலாம் என்ற காவல்துறையின் ஐயத்திற்கு வலு சேர்த்தது.

கடலோர பகுதியான சாவக்காட்டில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி கொச்சிக்கு பேருந்தில் சென்று அங்கிருந்து வளைகுடாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்ட சுகுவை மாவேலிக்கரை காவல் ஆய்வாளர் தேவாசியா உரிய நேரத்தில் கைது செய்தார். சுகு கைது செய்யப்பட்டு சாக்கோவின் கொலை மற்றும் முன் சம்பவங்கள் குறித்து விசாரித்தனர். விசாரணையின் முடிவில் சுகுவின் சாட்சியம் வழக்கின் அடித்தளமாக அமைந்தது.

ஜெர்மனியில் ஒரு குற்றவாளி தனது மரணத்தை போலியாக உருவாக்கி காப்பீட்டு மோசடி திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டவர் (Nominee) மூலம் பணம் பெற்றதை உதாரணமாகக் கூறி, சுகுமார குருப்பை போன்ற ஒருவரைக் கொன்றால், அதன் மூலம் கிடைக்கும் காப்பீட்டு பணத்தை பிரித்து தருவதாக பாஸ்கர பிள்ளை, பொன்னப்பன், சுகு ஆகியோருக்கு பணத்தாசை காட்டியும் வளைகுடா இளவரசர் தான் இறந்துவிட்டதாக நம்ப வைக்கவும் சுகுமார குருப் கொலைத் திட்டத்தை தீட்டியதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும், விசாரணையில் சுகுமார் குருப்பின் சடலம் என கருதி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட போது ஆலப்புழாவில் உள்ள விடுதியில் சுகுமார் குருப் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதற்கிடையில், கேரள காவல்துறையின் உடனடி நடவடிக்கையால் காப்பீட்டு நிறுவனத்தினர் சுகுமார குருப்பின் காப்பீட்டு தொகையை முடக்கியதாகவும் தெரிகிறது.
வழக்கின் முடிவு 

சுகுமார குருப்பைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் கொலை, சதித்திட்டம், சாட்சியத்தை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முதலாவது குற்றவாளியாக பாஸ்கர பிள்ளை மற்றும் மற்றும் இரண்டாவது குற்றவாளியாக பொன்னப்பன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முதலில் குற்றவாளிகளில் ஒருவராக குற்றம் சாட்டப்பட்ட சுகு பின்னர் அரசு தரப்பில் சாட்சி சொல்லும் குற்றவாளியாக மாறினார். அமர்வு நீதிமன்றத்தால் பாஸ்கர பிள்ளை மற்றும் பொன்னப்பன் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கில் மூன்றாவது மற்றும் நான்காவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட சுகுமார குருப் மற்றும் பாஸ்கர பிள்ளையின் மனைவிகள் போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். 

விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய சுகுமார குருப் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மேலும், 1984 ஆம் ஆண்டு தலைமறைவான சுகுமார குருப்பை கைது செய்யுமாறு 33 ஆண்டுகளுக்குப் பிறகு மாவேலிக்கரை குற்றவியல் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு சி.பி.சி.ஐ.டிக்கு உத்தரவு பிறப்பித்தது.
தேடும் படலம்

வெவ்வேறு காலங்களில், இந்தியா முழுவதும் காவல்துறை அதிகாரிகளால் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் பின்தொடர்தல் முயற்சிகளின் மையமாக நான்கு குற்றவாளிகள் இருந்தனர். அந்த நான்கு குற்றவாளிகள் ஒத்தக்கண் சிவராசன், வீரப்பன், தாவூத் இப்ராஹிம் மற்றும் சுகுமார குருப் ஆவர். இதில் ஒத்தக்கண் சிவராசன் மற்றும் வீரப்பன் ஆகிய இருவரும் இறந்துவிட்டார்கள். பல்வேறு குழுக்களின் பாதுகாப்பில் தாவூத் இப்ராஹிம் வெளிநாட்டில் வசிப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், இன்று முகம் எப்படி இருக்கும்? எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்? அவர் முதலில் இருக்கிறாரா? என்று 37 ஆண்டுகளாக எந்த தகவலும் கிடைக்காமல் இருக்கும் ஒரே குற்றவாளி சுகுமார குருப். இன்று உயிருடன் இருந்தால் சுகுமார குருப்பிற்கு 77 வயது இருக்கும்.

அந்த காலகட்டத்தில், சுகுமார குருப்பின் தாடி வைத்த புகைப்படம் காவல்துறையினரால் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டதால், அவரைக் கண்டதாக கூறி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பல்வேறு அழைப்புகள் மற்றும் கடிதங்கள் வந்தன. அதில் நம்பகமான தகவல்களை சேகரித்து, கேரளா மாநிலம் தாண்டி உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்காளம், அசாம், சத்தீஸ்கர், அந்தமான் & நிக்கோபார் தீவுகள், அமெரிக்கா, பூட்டான், வளைகுடா மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சுகுமார் குருப்பைத் தேடி சென்று கேரள காவல்துறை தோல்வியுடன் திரும்பினர். கேரள காவல்துறையில் அதிக பயணப்படி (Travel Allowance) வழங்கப்பட்ட வழக்கு, சுகுமார குருப் வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுத வியாபாரி 

சுகுமார குருப், "அலெக்சாண்டர்" என்ற பெயரில் சட்டவிரோத ஆயுத வியாபாரத்தில் ஈடுபடுவதாக நம்பப்படுகிறது. விடுதலைப் புலிகளின் கறுப்புச் சந்தை ஆயுத வியாபாரியாகச் செயற்பட்ட செல்வராசா பத்மநாதன் (கே.பி.) போன்று அலெக்சாண்டர் என்ற பெயரை பயன்படுத்தி சுகுமார குருப் தலைமையிலான குழுவினர் கறுப்புச் சந்தையில் ஆயுதக் கொள்வனவு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முடியாட்சி மற்றும் பிரிவினைவாத குழுக்களின் இராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்கும் ஆயுத வியாபாரியாக அறியப்படுகிற அலெக்சாண்டரின் நடவடிக்கைகள் உலகின் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?

ராஞ்சி மருத்துவமனையில் சுகுமார் குருப் சிகிச்சை பெற்றதாக தகவல் பரவியதை அடுத்து கேரள போலீசார் ராஞ்சி சென்றனர். இது தொடர்பான விசாரணையில், தீவிர நோயால் பாதிக்கப்பட்ட சுகுமார் குருப் நீண்ட நாட்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று ராஞ்சி மருத்துவக் குழுவினர் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, ராஞ்சி தேடுதல் நடவடிக்கையில் சுகுமார குருப்பை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில், ஜோஷி என்ற பெயரில் சுகுமார் குரு புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் பரவியதையடுத்து கேரள போலீசார் புனே சென்றனர். ஆனால், தகனம் செய்யப்பட்ட உடலை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இந்த இரண்டு கோட்பாடுகளும் சுகுமார குரு வழக்குடன் உறுதிப்படுத்தப்படாத தொடர்பை கொண்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளவும்.

கட்டி முடிக்கப்படாத தனது வீட்டில் மாறுவேடத்தில் இருந்த சுகுமார குருப்பை முதலில் காவல்துறையினர் கைது செய்தனர். எனினும், கைரேகை விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர், சில நாட்கள் விசாரணைக்கு பிறகு, அவரது கைரேகையை எல்.ஐ.சி பாலிசியுடன் ஒப்பிட்டுப் பார்த்ததன் மூலம் அவரது உண்மையான அடையாளத்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். முன்னதாக, தனது தாடியை மழித்து, வெளிப்புற மச்சத்தை மறைத்து காவல்துறையினரிடம் இருந்து தப்பினார். அந்த நேரத்தில், அவர் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டார் என்று பரவலாக நம்பப்பட்டது.
கவனத்தை ஈர்த்த வழக்கு 

சுகுமார குரு பிடிபடாத நிலையிலும், சாதாரண கார் விபத்தை விசாரித்து அதன் சதி வலையை அவிழ்த்து, வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வந்த கேரளா காவல்துறையின் விசாரணை பாராட்டத்தக்கது. இந்நிலையில், சுகுமார குருப்பின் தலைமையில் பாஸ்கர பிள்ளை, பொன்னப்பன், சுகு ஆகியோர் அரங்கேற்றிய சதித்திட்டம் ஊடகங்களில் கவனம் பெற்றது. அந்த காலகட்டத்தில், இந்த வழக்கு ஆரம்பத்தில் செரியநாடு கிராம மக்களின் கவனத்தை ஈர்த்தது, பின்னர் ஆலப்புழா மாவட்ட மக்களின் ஆர்வத்தைத் தூண்டியது, பின்னர் அதன் செல்வாக்கு கேரள மாநிலம் முழுவதும் பரவியது. இறுதியில், இந்திய மக்கள் அதைப் பற்றி விவாதிக்கத் தொடங்கியபோது அது தேசிய கவனத்தை ஈர்த்தது. இந்த வழக்கு இன்டர்போல் அறிக்கை மூலம் உலகளாவிய கவனத்தை கூட ஈர்த்தது.
முடிவுரை

கோபாலகிருஷ்ணா குருப், சுகுமார குருப், சுகுமார பிள்ளை, அலெக்சாண்டர் ஆகிய நான்கு பெயரை கொண்ட ஒரே மனிதர். இந்தியாவில் விமானப்படை ஆயுதக் கடத்தல் சர்ச்சையில் இருந்து தப்பிக்க கோபாலகிருஷ்ணா குருப் தான் இறந்துவிட்டதாக நாடகமாடி சுகுமார குருப் ஆனார். வளைகுடாவில் இளவரசர் எடுக்கும் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சுகுமார குருப் அலெக்சாண்டர் ஆனார். வளைகுடா இளவரசரின் நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காகவும் தனது மனைவி மூலம் 8 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகையை பெறுவதற்காகவும் சுகுமார குருப் தான் இறந்துவிட்டதாக நாடகமாடி அலெக்சாண்டர் ஆனார். 

மேலும், இந்திய விமானப்படை பணியில் இருந்த போது ஆயுதக் கடத்தல் செய்யவும், வளைகுடா பணியில் இருந்த போது இளவரசரை நம்பிக்கைக்குரிய நபராக அணுகவும், அலெக்சாண்டர் என்ற பெயரில் சர்வதேச ஆயுத வியாபாரியாக வளரவும் சுகுமார குருப்புக்கு உதவியவர்கள் அடையாளம் காணப்படவில்லை. மேலும், சுகுமார குருப் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதை நிரூபிக்க உறுதியான ஆதாரம் இல்லை.

விவரணைகள் 

Malayalam Movies - NH47 (1984), Pinneyum (2016), Kurup (2021)

Sukumara Kurup Case


Most Travel Allowance



Sukumara Kurup destroyed many families


Sukumara Kurup would have killed me - Shahu 


Police nabbed Kurup once but was released as they failed to identify him 


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -