Chocks: மாஃபியா வரலாறு

Saturday, January 23, 2021

மாஃபியா வரலாறு

மாஃபியா வரலாறு

குறிப்பு = இந்த சுருக்கமான கட்டுரை முன்பின் காலகட்டங்களை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கட்டுரை ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் பொதுவான தகவல்களை வழங்குகிறது. இது தலைப்பின் இறுதி ஆய்வாக கருதப்படக்கூடாது. ஒரு முழுமையான புரிதலுக்காக, தலைப்பில் இன்னும் விரிவான ஆதாரங்களைப் பார்க்க வாசகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

சுருக்கம் 
  1. முகவுரை 
  2. மாஃபியா சொல்லின் வேர் 
  3. காஸ்டெல்லம்மரேஸ் போர்
  4. ஐந்து குடும்பங்கள்
  5. நியூ ஆர்லியன்ஸ் குடும்பம் 
  6. அட்லாண்டிக் நகர மாநாடு
  7. ஹவானா மாநாடு
  8. அப்பலாச்சின் கூட்டம்
  9. பலேர்மோ கூட்டம்
  10. நிழல் உலக நடவடிக்கை
  11. மெடலின் கார்டெல்
  12. இந்தியன் மாஃபியா
  13. விவரணைகள் 
முகவுரை (Introduction)

உலகளவில், மாஃபியா என்பது, ஒரு மாநிலத்தில் சர்வாதிகாரம் அல்லது ஜனநாயகம் என்று இயங்கும்  அரசாங்கத்தின் வடிவத்தை பொருட்படுத்தாமல் செயல்படும் ஒரு தனித்துவமான இரகசிய அரசாங்கமாகும். சுருக்கமாக, மாஃபியா அமைப்புகள் தன்னாட்சி முறையில் செயல்படுகின்றன மற்றும் வெளிப்புற அதிகார வரம்பிற்கு அடிபணிவதில்லை. உலகின் மிகப்பெரிய தீங்காக கருதப்படும் மாஃபியா என்பது "பஞ்சாயத்து, தரகு, அமலாக்கம், சூதாட்டம், கடத்தல், இணைய மோசடி, கொள்ளை, கொலை, மிரட்டி பணம் பறித்தல், கள்ளச்சாராயம் மற்றும் கடத்தல்" போன்ற குற்றச் செயல்களை மேற்கொள்ளும் சர்வதேச வலையமைப்பை கொண்ட ஒரு அமைப்பாகும்.

மாஃபியா சொல்லின் வேர் (Root of the Word Mafia)

மாஃபியா என்றால் பொதுவாக சிசிலியன் மாஃபியா மற்றும் அதனுடன் தொடர்புடைய இத்தாலிய-அமெரிக்க மாஃபியாவை குறிக்கிறது. மேலும் மாஃபியா என்ற சொல் சிசிலியில் முஸ்லீம் ஆட்சியின் (Emirate of Sicily, 831-1091) போது தோன்றியதாக கருதப்படுகிறது. பரந்த பொருளை கொண்டுள்ள மாஃபியா என்ற சொல் பொதுவாக பயமற்றது அல்லது அச்சமற்றது என்று பொருள் கொள்ளப்பட்டாலும், சிசிலி ஒரு காலத்தில் முஸ்லீம் ஆட்சியின் கீழ் இருந்ததால், மாஃபியா என்ற சொல் அரபு வழியாக சிசிலிக்கு வந்திருக்கலாம். அதாவது விலக்கு என்று பொருள்படும் “மாஃபி” (Mafi), இரகசிய அடைக்கலம் என்று பொருள்படும் “மாஃபியா” (Mafya) போன்ற சொற்களில் இருந்து மாஃபியா என்ற சொல் பெறப்பட்டிருக்கலாம்.

இத்தாலியில் கோசா நோஸ்ட்ரா (Cosa Nostra), ஜப்பானில் யாகுசா (Yakuza) மற்றும் ரஷ்யாவில் பிராட்வா (Bratva) ஆகியவை அந்தந்த நாடுகளின் குற்றவியல் அமைப்புகளை குறிக்கின்றன. இப்போது, ​​இத்தாலிய-அமெரிக்க மாஃபியா அல்லது மாஃபியா என்று ஒன்றுக்கொன்று மாற்றாக அறியப்படும் அமெரிக்க மாஃபியாவின் விவரங்களை ஆராய்வோம்.
காஸ்டெல்லம்மரேஸ் போர் (Castellammarese War)

பிப்ரவரி 1930 முதல் ஏப்ரல் 1931 வரை இத்தாலிய-அமெரிக்க மாஃபியாவின் தலைவரை தீர்மானிக்க ஜோ மஸ்சேரியா மற்றும் சால்வடோர் மராசனோ உறுப்பினர்களிடையே பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதையொட்டி, நியூயார்க்கில் உள்ள கோனி தீவில் அமைந்துள்ள இத்தாலிய உணவகமான நுவா வில்லா டம்மர்ரோவில் 15-04-1931 அன்று முக்கியமான கூட்டம் நடந்தது. தலைமைக்கான மோதல் காஸ்டெல்லம்மரே போர் என்று அறியப்பட்டது, இது சிசிலியில் உள்ள சால்வடோர் மாரன்சானோவின் பிறப்பிடமான காஸ்டெல்லாம்மரே டெல் கோல்ஃபோவிலிருந்து பெறப்பட்டது. சால்வடோர் மரன்சானோவின் பிரிவு இத்தாலிய-அமெரிக்க மாஃபியா குற்றவியல் அமைப்பை ஐந்து குடும்பங்களாக பிரித்து, அனைத்து தலைவர்களுக்கும் தன்னையே உச்ச தலைவராக அறிவித்து, போரில் வெற்றி பெற்றது.

இதற்கிடையே,  சால்வடோர் மராசானோ தன்னையும் கூட்டாளிகளையும் கொல்ல சதித்திட்டம் தீட்டுவதாக நம்பிய சார்லஸ் லூசியானோவின் உத்தரவின் பேரில் 10-09-1931 அன்று சால்வடோர் மராசானோ கொலை செய்யப்பட்டார். மேலும், சார்லஸ் லூசியானோ வெவ்வேறு மாஃபியா குடும்பங்களுக்கு இடையே எதிர்கால போர்களை தவிர்ப்பதற்காக ஒரு ஆணையத்தை (The Commission) நிறுவினார். 1931 இல் நியூயார்க்கில் பிரிந்துகிடந்த இத்தாலிய மாஃபியா குழுவை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட, சக்திவாய்ந்த, பெருநிறுவன குற்ற கூட்டமைப்பாக உருவாக காஸ்டெல்லம்மாரீஸ் போர் உதவியது என்று F.B.I கூறுகிறது.

ஐந்து குடும்பங்கள் (Five Families)
1931 இல் காஸ்டெல்லம்மரேஸ் போரின் முடிவை தொடர்ந்து சால்வடோர் மரன்சானோவால் உருவாக்கப்பட்ட ஐந்து குடும்பங்கள் தான் இத்தாலிய-அமெரிக்க மாஃபியா நடவடிக்கைகளை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நிறுவனமாக நடத்தி வந்தது. போனன்னோ, கொழும்பு, காம்பினோ, ஜெனோவேஸ் மற்றும் லூசீஸ் ஆகியவையே அந்த ஐந்து குடும்பங்கள். மேலும் ஐந்து குடும்பங்கள், பப்பலோ (Buffalo) குடும்பம் மற்றும் சிகாகோ குடும்பம் தலைமையிலான அமெரிக்க மாஃபியா நடவடிக்கைகளை ஆணையம் மேற்பார்வையிடுகிறது.
நியூ ஆர்லியன்ஸ் குற்றக் குடும்பம் (New Orleans Criminal Family)

19 ஆம் நூற்றாண்டில் லூசியானாவில் நிறுவப்பட்ட நியூ ஆர்லியன்ஸ் குற்றக் குடும்பம், ஐந்து குடும்பங்கள் விட சிறிய அளவில் இயங்கியது. நியூ ஆர்லியன்ஸ் மாஃபியா குழுவின் தலைவரான கார்லோஸ் மார்செல்லோ உள்ளூர் அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு செலுத்தியதாக கூறப்படுகிறது. ஜான் கென்னடி தனது ஆரம்பகால அரசியல் பயணத்தின் போது கார்லோஸ் மார்செல்லோ கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக யூகிக்கப்படுகிறது.

22-11-1963 அன்று டெக்சாஸில் உள்ள டல்லாஸில் ஜனாதிபதி ஜான் கென்னடி படுகொலை செய்யப்பட்டார். மாஃபியாவை, குறிப்பாக கார்லோஸ் மார்செல்லோவை ஜான் கென்னடியின் படுகொலையுடன் இணைக்கும் சதி கோட்பாடுகள் முக்கியத்துவம் பெற்றன. உறுதியான ஆதாரங்கள் இல்லாத நிலையில், நியூ ஆர்லியன்ஸ் மாஃபியாவுடன் ஜான் கென்னடியின் தொடர்பு விவாதத்திற்குரியது என்றாலும், ஜான் கென்னடியின் படுகொலை வரலாற்றில் இது ஒரு முக்கியமான அத்தியாயமாக உள்ளது.

அட்லாண்டிக் நகர மாநாடு (1929 Atlantic City Conference)

13-05-1929 முதல் 16-05-1929 வரை நடைபெற்ற அட்லாண்டிக் நகர மாநாடு இத்தாலிய-அமெரிக்க மாஃபியாவால் பிரத்தியேகமாக நடத்தப்படவில்லை. மாறாக, இத்தாலிய, யூத மற்றும் ஐரிஷ் உட்பட பல்வேறு இனப் பின்னணியை கொண்ட மாஃபியா அமைப்புகளின் தலைவர்களை ஒன்றிணைத்து மாநாடு நடத்தப்பட்டது.

மாஃபியா வரலாற்றில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கருதப்படும் அட்லாண்டிக் நகர மாநாட்டின் விவரங்கள் இரகசியமாக மறைக்கப்பட்டிருந்தாலும், பிராந்திய மோதல்களைத் தீர்ப்பது, ஒத்துழைப்பை வளர்ப்பது, தேவையற்ற வன்முறையை தடுப்பது, சூதாட்ட சந்தைகளை விரிவுபடுத்துவது, சட்டவிரோத நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு அமைதியான அணுகுமுறையை ஏற்படுத்துவது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டதாக பரவலாக ஊகிக்கப்படுகிறது.

ஹவானா மாநாடு (1946 Havana Conference)

ஹவானா மாநாடு என்பது கியூபாவின் தலைநகரான ஹவானாவில் உள்ள ஹோட்டல் நேசனலில் டிசம்பர் 1946 இல் நடைபெற்ற மாஃபியா கூட்டமாகும். அதன் விவரங்கள் சில இரகசியமாக மறைக்கப்பட்டிருந்தாலும், சார்லஸ் லூசியானோ ஏற்பாடு செய்த கூட்டத்தில் மாஃபியா குற்றச்செயல்களின் கொள்கைகள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக பரவலாக ஊகிக்கப்படுகிறது.

1920 களின் தொடக்கத்தில், கியூபன் மாஃபியா என்று அழைக்கப்படும் ஹவானா கும்பல், போதைப்பொருள் மற்றும் சூதாட்டம் உட்பட ஹவானாவில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்தியது. 1930 களில், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை திட்டமிடும் ஒரு பயங்கரமான குற்றவியல் சாம்ராஜ்யமாக மாறியது. இருப்பினும், 1950 களில் கியூபா புரட்சியின் எழுச்சியுடன் இப்பகுதியில் மாஃபியாவின் ஆதிக்கம் குறைந்தது.

அப்பலாச்சின் கூட்டம் (1957 Apalachin Meeting)

14-11-1957 அன்று நியூயார்க் நகரின் அப்பலாச்சினில் உள்ள மெக்பால் சாலையில் நடந்த அப்பலாச்சின் கூட்டத்தின் உண்மையான நோக்கம் மற்றும் பங்கேற்பாளர் பட்டியல் அமெரிக்க மாஃபியா வரலாற்றில் மறைக்கப்பட்ட நிகழ்வாக உள்ளது. ஜோசப் பார்பராவால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், படுகொலை செய்யப்பட்ட ஆல்பர்ட் அனஸ்தேசியாவால் நடத்தப்பட்ட மாஃபியா நடவடிக்கைகளின் பங்குகளை பிரித்து கொள்வது தொடர்பாகவும் வட்டிக் கடன்கள், போதைப்பொருள் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றின் சந்தைகளை விரிவாக்குவது தொடர்பாகவும் விவாதங்கள் இருந்ததாக பரவலாக யூகிக்கப்படுகிறது.

பலேர்மோ கூட்டம் (1957 Palermo Meeting)

சிசிலி தலைநகரான பலேர்மோவில் உள்ள கிராண்ட் ஹோட்டல் எட் டெஸ் பால்ம்ஸில் (Grand Hotel et des Palmes) 12-10-1957 முதல் 16-10 -1957 வரை சிசிலியன்-அமெரிக்க மாஃபியா கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பின் விவரங்கள் ரகசியமாக மறைக்கப்பட்டிருந்தாலும், சட்டவிரோத ஹெராயின் வர்த்தகத்தின் விதிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக பரவலாக நம்பப்படுகிறது.

நிழல் உலக நடவடிக்கை (Operation Underworld)
இரண்டாம் உலகப் போரின் போது, ​​1943 இல் சிசிலி மீது படையெடுப்பதற்கான பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் கோரிக்கையை அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஆதரித்தார். ஹஸ்கி நடவடிக்கை என்று அழைக்கப்படும் இந்த ஏற்பாடு, அச்சு நாடுகளை பலவீனப்படுத்தவும், இறுதியில் இத்தாலியின் மீது படையெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டது. இதையொட்டி, அமெரிக்க அரசாங்கம் இத்தாலிய-அமெரிக்க மாஃபியாவுடன் இணைந்து நிழல் உலக நடவடிக்கை என்ற இரகசிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது. 

இந்த பின்னணியில், 1942 இல் நியூயார்க் நீர்முனையில் அமைதியை பேணவும், ஜெர்மன்-இத்தாலிய முகவர்கள் மற்றும் சிசிலி மாஃபியாக்களின் உளவுத் தகவல்களை சேகரிக்கவும் அமெரிக்க அரசாங்கம் சிறையில் அடைக்கப்பட்ட மாஃபியா தலைவர் சார்லஸ் லூசியானோவை அணுகியது. ஒத்துழைப்புக்கு ஈடாக, சார்லஸ் லூசியானோவின் சிறைத்தண்டனை குறைக்கப்பட்டு 1946 இல் விடுவிக்கப்பட்டார்.

மெடலின் கார்டெல் (Medellin Cartel)
இன்று வரை மாஃபியா உலகில் முதன்மையான தொழில் போதைப்பொருள் கடத்தலாகும். இதில் மிகவும் பிரபலமான மாஃபியா அமைப்பு கொலம்பியாவின் மெடலின் கார்டெல் ஆகும். அதன் நிறுவனர் பப்லோ எசுகோபர், உலகின் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஆவார். 1989 இல் போர்ப்ஸ் இதழ் 25 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு சொத்துக்களை கொண்ட பப்லோ எசுகோபரை உலகின் ஏழாவது பணக்காரர் என்று கூறியது.

1991 இல் பப்லோ எசுகோபர் கொலம்பிய அதிகாரிகளிடம் சரணடைந்தார் மற்றும் அவரது குற்றங்களுக்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். கொலம்பிய அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அவரது கோரிக்கையின் பேரில் லா கேடரல் என்ற புதிய சிறைச்சாலையில் தனது தண்டனையை அனுபவிக்க தேர்வு செய்தார். அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம் என கொலம்பிய அரசாங்கம் உறுதி அளித்தது.

இருப்பினும், 1992 இல் பப்லோ எசுகோபர் தப்பித்து தலைமறைவானார். இதையடுத்து, நாடு முழுவதும் தேடப்பட்டு வந்த பப்லோ எசுகோபர் 1993 இல் அவரது 44 வது பிறந்தநாளுக்கு ஒரு நாள் கழித்து, மெடலினில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கிடையில், பப்லோ எசுகோபர் எப்படி இறந்தார் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. கொலம்பிய அதிகாரிகள் அவர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றனர், ஆனால் பப்லோ எசுகோபரின் சகோதரர்கள் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று வாதிடுகின்றனர்.

இந்தியன் மாஃபியா (Indian Mafia)
இந்திய மாஃபியா இத்தாலிய-அமெரிக்க மாஃபியாவை போல ஒழுங்கமைக்கப்படவில்லை. இந்திய மாஃபியா பெரும்பாலும் இந்தியாவின் நிதி தலைநகரான மும்பையில் இருந்து செயல்படுகிறது. 1980 கள் வரை மும்பை மாஃபியா உலகை ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார், கரீம் லாலா மூவரும் கட்டுப்படுத்தினர்.

கரீம் லாலா தலைமையிலான பதான் மாஃபியா, கப்பல் சரக்கு, நிதி மோசடி, சூதாட்டம், கடத்தல், கொலை போன்ற செயல்களில் ஈடுபட்டது. தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஹாஜி மஸ்தான் மும்பை துறைமுகத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றினார். அதன் பிறகு, தங்கம் மற்றும் மின்னணுவியலை கடத்தும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டார். தனது நிதியை பாலிவுட் துறையில் முதலீடு செய்து திரைப்பிரபலங்களுடன் நெருங்கிய தொடர்புடையவராக அறியப்பட்டார். தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட வரதராஜன் முதலியார் (வர்தாபாய்) மும்பை  ரயில்வேயில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றினார். அதன் பிறகு, சட்டவிரோத மதுபான விநியோகத்தை தொடங்கினார் மற்றும் பல சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தாராவி மற்றும் மாட்டுங்காவில் வசிக்கும் தமிழ் மக்களிடையே வர்தாபாய் மிகுந்த மரியாதைக்குரியவராக இருந்தார்.

கரீம் லாலா, ஹாஜி மஸ்தான் மற்றும் வரதராஜன் முதலியார் ஆகியோர் மும்பை காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் 1980 களுக்கு பிறகு தங்கள் குற்றச் செயல்களை குறைத்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் கரீம் லாலா, ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார் ஒதுங்கிய பிறகும், மான்யா சர்வே, மாயா டோலாஸ் ஒழிக்கப்பட்ட பிறகும், தாவூத் இப்ராகிம் மும்பை மாஃபியா உலகத்தை D Company என்ற பெயரில் கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகள் இல்லாமல் ஆளத் தொடங்கினார்.
தாவூத் இப்ராகிமின் செயல்பாடுகள் முந்தைய மும்பை மாஃபியாவுடன் ஒப்பிடும்போது மிகவும் அபாயகரமானவை, ஏனெனில் அவர் வழக்கமான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தாண்டி பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டார். உதாரணமாக, தாவூத் இப்ராகிம் 1993 மும்பை ரயில் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டார், இது இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதல் என்று அறியப்படுகிறது. இந்தியாவில், RDX வெடிமருந்துகளை பயன்படுத்திய இது போன்ற முதல் தாக்குதலில் 257 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,400 பேர் காயமடைந்தனர்.

சோட்டா ராஜன் என்று அழைக்கப்படும் ராஜேந்திர நிகல்ஜே, கேரளாவை சேர்ந்த படா ராஜன் என்ற ராஜன் நாயரின் மாஃபியா கும்பலில் தனது மாஃபியா வாழ்க்கையை தொடங்கினார். படா ராஜன் பதான் குழுவால் கொல்லப்பட்ட பிறகு, சோட்டா ராஜன் படா ராஜனின் செயல்பாடுகளின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டார். தாவூத் இப்ராகிமுக்காக வேலை செய்ய தொடங்கி இறுதியில் தாவூத் இப்ராகிமின் தொழில்முறை எதிரியாக உருவெடுத்தார். சோட்டா ராஜன் 2015 இல் பாலி தீவில் கைது செய்யப்பட்டு தற்போது இந்தியாவில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

ஒரு காலத்தில் மும்பையில் உள்ள ஜவுளி ஆலையில் பணிபுரிந்த அருண் கவ்லி, மட்கா சூதாட்டம், மிரட்டி பணம் பறித்தல், மதுபானம் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டார். 2007 இல் சிவசேனா கட்சி உறுப்பினர் கமலகர் ஜம்சண்டேகரை கொலை செய்த வழக்கில், 2012 இல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். 1997 இல் அகில பாரதிய சேனா கட்சியை நிறுவிய அருண் கவ்லி, ஒரு முறை மகாராஷ்டிராவில் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று, அருண் கவ்லி ஒரு முன்னாள் மாஃபியா நபராக அறியப்படுகிறார்.

அபு சலேம் தாவூத் இப்ராகிம் கும்பலில் ஆயுதக் கடத்தலுக்கு ஓட்டுநராக பணிபுரிந்தார், மேலும் ஒரு காலத்தில் பாலிவுட் துறைக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டார். 2002 இல் போர்ச்சுகலில் போலி கடவுச்சீட்டு வழக்கில் சிக்கினார். தற்போது, மும்பை குண்டுவெடிப்பு மற்றும் ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

முடிவுரை (Conclusion)

மாஃபியாவின் சில உறுப்பினர்கள் தங்கள் சமூகம் பாதுகாப்பானதாக கருதுவதை அடிப்படையாக கொண்டு தங்கள் செயல்களை நியாயப்படுத்த முயற்சித்தாலும், அதன் பொதுவான விளைவு பயங்கரமானது. ஏனெனில், சட்டவிரோத வழிகளில் அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைய முயல்வது இரத்தக்களரிக்கும், ஊழலுக்கும், சட்டத்தை புறக்கணிப்பதற்கும் வழிவகுக்கிறது. எனவே, உலக அளவில் மாஃபியா குழுக்களின் தலையீடு இல்லாமல், சட்ட வழிகளில் மட்டுமே நீதி மற்றும் நிதி சுதந்திரத்தை வழங்கும் ஒரு சமூகத்திற்கான சர்வதேச கட்டமைப்பை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய பொறுப்பு உள்ளது.
 
விவரணைகள் (Reference)


Rise and Fall Of Organised Crime In United States


மும்பை நிழல் உலகம் 


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -