Chocks: February 2022

Sunday, February 27, 2022

ஈரானும் வல்லரசுகளும்

ஈரானும் வல்லரசுகளும்
சுருக்கம்
  1. முகவுரை
  2. ஆங்கிலோ-பாரசீக ஒப்பந்தம்
  3. 1921 இல் ஆட்சிக் கவிழ்ப்பு
  4. பஹ்லவி வம்ச ஆட்சி
  5. 1953 இல் ஆட்சிக் கவிழ்ப்பு
  6. எண்ணெய்யில் பங்கு
  7. ஈரானும் அணுஉலையும்
  8. வெண்மைப் புரட்சி
  9. OPEC எரிபொருள் கூட்டணி
  10. ரிச்சர்ட் நிக்சனும் ஈரானும்
  11. ஈரானிய புரட்சியும் மாற்றமும்
  12. ஈரானிய புரட்சியின் தாக்கம்
  13. ரொனால்ட் ரீகனும் ஈரானும்
  14. அமெரிக்கா - ஈரான் உறவுநிலை
  15. அமெரிக்காவின் இரகசிய உதவி
  16. அமெரிக்கா - ஈரான் சண்டை
  17. ஜார்ஜ் புஷும் ஈரானும் 
  18. ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்
  19. டிரம்ப்பும் ஈரானும்
  20. அமெரிக்கா - ஈரான் மோதல்
  21. சவுதி அரேபியாவில் தாக்குதல்
  22. எச்சரித்த டிரம்ப்
  23. ஈரான் தளபதி படுகொலை
  24. ஏவிய ஈரான் இறங்கிய அமெரிக்கா
  25. டிரம்ப் விதித்த தடைகள்
  26. ஜோ பிடனும் ஈரானும்
  27. ஈரானில் போராட்டம் 
  28. முடிவுரை
  29. விவரணைகள்
முகவுரை

ஈரானில் ஏகாதிபத்தியம் எண்ணெய் அரசியலால் பின்னப்பட்டது. ஒரு சக்தி வாய்ந்த நாடு தன்னைப் போல் சக்தி இல்லாத மற்ற நாடுகளை கட்டுப்படுத்தும் அரசியல் அமைப்பு ஏகாதிபத்தியம் எனப்படும். எண்ணெய் அரசியல் என்பது எண்ணெய் வளங்களைப் பயன்படுத்துவதற்காக இராணுவப் படைகளை நிலைநிறுத்துதல், ஆட்சிக் கவிழ்ப்புகளை நிகழ்த்துதல், கைப்பாவை அரசுகளை நிறுவுதல் போன்ற பல்வேறு வழிமுறைகள் மூலம் பெட்ரோலிய உற்பத்தியில் பெரும் பங்கைப் பெறுவதற்கான ஒரு ஒருங்கிணைந்த முயற்சியாகும். 

வாருங்கள்! வல்லரசு அரசியல் எப்படி இருக்கும் என்பதை இக்கட்டுரையின் மூலம் சிறிதளவு அறிந்து கொள்வோம்.

ஆங்கிலோ-பாரசீக ஒப்பந்தம்

1900 களின் முற்பகுதியில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து 1909 இல் ஆங்கிலோ-பெர்சியா எண்ணெய் நிறுவனம் (Anglo-Persian Oil Company) தொடங்கப்பட்டது. இது பிரிட்டனின் பார்வையில் ஈரானின் மூலோபாய முக்கியத்துவத்தை அதிகரித்தது. ஆங்கிலோ-பாரசீக எண்ணெய் நிறுவனத்தின் துளையிடும் உரிமைகளை மையமாகக் கொண்டு 1919 இல் பிரிட்டன் மற்றும் பெர்சியாவை உள்ளடக்கிய ஆங்கிலோ-பெர்சியா ஒப்பந்தம் (Anglo-Persian Agreement) கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் பெர்சியா எண்ணெய் விநியோகத்தில் பிரிட்டனுக்கு கிடைக்கின்ற ஏகபோக உரிமை பெர்சியா எண்ணெய் இருப்புக்களை பிரிப்பதில் சிக்கல்களை உருவாக்கும் என்று அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உட்பட பல வெளிநாட்டு அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

முதல் உலகப் போர் மற்றும் ரஷ்யப் புரட்சி வெடித்தவுடன் உலகின் சமூக-அரசியல் மற்றும் பொருளாதார-அரசியல் ஒரு மாற்றக் காலத்தை கடந்து கொண்டிருந்தது. பெர்சியாவை மறைமுகமாக பல்வேறு வழிகளில் கட்டுப்படுத்தி வந்த பிரிட்டன் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து பெர்சியாவில் இருந்து தனது படைகளை வாபஸ் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. மறுபுறம் பெர்சியாவில் சோவியத் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கைக் குறைப்பதற்கும் பெர்சியாவில் சோவியத் சார்பு ஆட்சி தோன்றுவதைத் தடுப்பதற்கும் பிரிட்டனுக்கு பெர்சியாவில் நம்பகமான மாற்று தேவைப்பட்டது. அதையொட்டியே 1919 ஆங்கிலோ-பெர்சியா ஒப்பந்தம் போன்ற பொருளாதார விவகாரங்களில் பிரிட்டன் வேலை செய்யத் தொடங்கியது.
1921 இல் ஆட்சிக் கவிழ்ப்பு

1919 ஆங்கிலோ-பெர்சியா ஒப்பந்தத்தை ஈரானின் கஜர் வம்ச அரசு (Qajar Dynasty) முறையாக நடைமுறைப்படுத்த தவறியதே 1921 ஆட்சி கவிழ்ப்புக்கான தொடக்கப்புள்ளி ஆகும். ஆட்சி கவிழ்ந்த பிறகு பெர்சியாவில் அமையப் போகும் புதிய அரசின் மூலம் ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று பிரிட்டன் கண்டறிந்தது.

பிரிட்டன் ஆதரவில் 21 பிப்ரவரி 1921 அன்று கஜர் வம்ச அரசின் 17வது பிரதமர் ஃபதோல்லா கான் அக்பர் (Fathollah Khan Akbar) ரேசா கான் பஹ்லவி (Reza Khan Pahlavi) உதவியுடன் சையத் ஜியாவுதீன் தபதாபாய் (Sayyed Ziaoddin Tabatabai) கவிழ்த்தார். பின்னர் சையத் ஜியா அல்தின் ஈரானின் 18வது பிரதமரானார். பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட பிறகு சில மாதங்களில் அவர் ரேசா கானுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த காரணத்தால் 1921 இல் நாடு கடத்தப்பட்டார். அதை தொடர்ந்து அஹமது குவாம் (Ahmad Qavam) ஈரானின் 19வது பிரதமரானார்.
பஹ்லவி வம்ச ஆட்சி

சையத் ஜியா அல்தினுக்காக அதிகாரத்தைக் கைப்பற்றி புதிய அரசிற்கு பலம் அளித்த இராணுவத் தளபதி ரேசா கான் பஹ்லவி 1921 இல் போர் அமைச்சராகவும் 1923 இல் பிரதமராகவும் 1924 இல் அதிகாரத்தை ஒருங்கிணைக்க முயன்று இறுதியில் 1925 இல் மன்னராக அரியணை ஏறினார். 

சட்டமன்ற ஆதரவின் மூலம் கத்தார் ஷாவை வெளியேற்றி 15 டிசம்பர் 1925 அன்று தன்னை ஷாவாக நியமித்து பஹ்லவி வம்ச ஆட்சியை நிறுவினார் ரேசா கான் பஹ்லவி. பிரிட்டன் ஆதரவுடன் கிளர்ச்சிகளை அடக்கி சர்வாதிகார சக்தியுடன் பெர்சியாவில் ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டை நிறுவி மேற்கத்தியமயமாக்கலுக்கு ஆதரவாக ஆட்சி செய்தார். மேலும் ரேசா கான் பஹ்லவியின் மூத்த மகன் முகமது ரேசா பஹ்லவி அரியணையின் வாரிசாக சட்டசபை அங்கீகரித்தது.

1921 ஆட்சி கவிழ்ப்பின் உண்மையான வெற்றியாளர்கள் ரேசா கான் பஹ்லவி மற்றும் பிரிட்டன். பிரிட்டனின் இராணுவ சதி ரேசா கான் பஹ்லவியை அரியணையில் அமர்த்தியது. பின்னர் அவர் பிரிட்டன் மற்றும் பெர்சியர்களுக்கு சாதகமாக நவீனமயமாக்கலை மேற்கொண்டார். 1935 இல் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடிதப் பரிமாற்றத்தில் பெர்சியா என்பதற்குப் பதிலாக ஈரான் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று ரேசா கான் பஹ்லவி ஆணையிட்டார். இவ்வகையில், பெர்சியாவுக்கு பதிலாக ஈரான் நாட்டின் அதிகாரப்பூர்வ பெயராக மாறியது.

இரண்டாம் உலகப் போரின் (1939-1945) தொடக்கத்தில் ஈரானை நடுநிலையான நாடாக அறிவித்தார் ரேசா கான் பஹ்லவி. அவர் ஈரான் மீது கண் வைத்திருந்த ரஷ்யா மற்றும் பிரிட்டனுக்கு அஞ்சினார். இன வளர்ச்சி மற்றும் தொழில் விரிவாக்க திட்டத்தில் ஜெர்மனி மிகவும் உறுதியாக இருப்பதை கண்டு ஜெர்மனியிடம் இருந்து அரசியல் மேலாண்மை மற்றும் தொழில் நுட்பம் பற்றி அறியவும் ஜெர்மனியுடன் வர்த்தகத்தை அதிகரிக்கவும் ரேசா கான் பஹ்லவி விருப்பம் கொண்டார். 

இந்நிலையில் 1941 இல் பிரிட்டனும் சோவியத் யூனியனும் ஈரானை ஆக்கிரமித்த பிறகு ரேசா கான் பஹ்லவி நாடு கடத்தப்பட்ட வாழ்க்கைக்கு ஒப்புக்கொண்டால் அவர்கள் ரேசா கான் பஹ்லவி குடும்பத்தை ஆட்சி அதிகாரத்தில் வைத்திருக்க முன்வந்தனர். இதையடுத்து 16 செப்டம்பர் 1941 அன்று ரேசா கான் மகன் முகமது ரேசா பஹ்லவி (Mohammad Reza Pahlavi) மன்னரானார். 1944 இல் ரேசா கான் தென் ஆப்பிரிக்காவில் காலமானார்.
1953 இல் ஆட்சிக் கவிழ்ப்பு

18 ஆம் நூற்றாண்டில் காலனித்துவ அமெரிக்கர்கள் பெர்சியாவை பற்றி நல்ல அபிப்ராயம் கொண்டிருந்தனர். 19 ஆம் நூற்றாண்டில் ஈரானிய சீர்திருத்தவாதிகள் அமெரிக்க ஜனநாயகம் மீது கவர்ச்சி கொண்டிருந்தனர். அமெரிக்க வழக்கறிஞரும் நிதி நிபுணரும் பெர்சிய அரசு பொருளாளருமான வில்லியம் மோர்கன் ஷஸ்டர் (William Morgan Shuster) 1911 இல் ஈரானின் அரசியலமைப்பையும் நிதியமைப்பையும் மறுசீரமைத்தார்.
1951 இல் ஆங்கிலோ-ஈரானிய எண்ணெய் நிறுவனத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும் எண்ணெய் தொழில்துறை நிறுவனங்களை தேசியமயமாக்க பிரதமர் முகமது மொசாதக் (Mohammad Mosaddegh) தலைமையிலான ஈரான் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து பிரிட்டன் பொருளாதாரத் தடை விதித்து எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி வைத்தது ஈரானின் பொருளாதாரத்தைப் பாதித்தது. மன்னர் முகமது ரேசா பஹ்லவிக்கும் பிரதமர் முகமது மொசாடெக்கிற்கும் இடையே அதிகாரப் போட்டி ஏற்படத் தொடங்கியது. மேலும் ஈரானிய எண்ணெய் தொழிலை தேசியமயமாக்கிய முகமது மொசாதக்கை வெளியேற்றுவது பற்றி 1952 இன் பிற்பகுதியில் பிரிட்டன் அமெரிக்காவை பரஸ்பர நலன்களுக்காக அணுகியதை அமெரிக்க அரசாங்க ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. 
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உளவுத்துறை சதித் திட்டத்தின் விளைவாக 19 ஆகஸ்ட் 1953 அன்று பிரதமர் முகமது மொசாதக்கின் ஆட்சி தூக்கியெறியப்பட்டது. அதை தொடர்ந்து ஜெனரல் ஃபஸ்லோல்லாஹ் சாஹெடி (Fazlollah Zahedi) ஈரானின் 36வது பிரதமரானார். 1925 முதல் 1953 வரை அரசியலமைப்பு முடியாட்சியின் வடிவமாக 28 ஆண்டுகள் ஈரானை பஹ்லவி வம்சம் ஆட்சி செய்தது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் 1953 இல் தூக்கியெறியப்பட்டதைத் தொடர்ந்து 1979 இல் பஹ்லவி வம்சம் தூக்கியெறியப்படும் வரை மேலும் 26 ஆண்டுகளுக்கு எதேச்சதிகார முடியாட்சியாக இருந்தது.
எண்ணெய்யில் பங்கு

1900 களின் பிற்பகுதியில் இருந்து தங்க முட்டையிடும் வாத்தாக உருவான எண்ணெய் தொழிலில் முக்கிய திருப்புமுனையாக 1953 இல் ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு 1954 இல் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கொடுத்த அழுத்தம் காரணமாக 29 அக்டோபர் 1954 அன்று 25 வருட எண்ணெய் கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் (The Consortium Agreement of 1954) கையெழுத்திட்டார் முகமது ரேசா பஹ்லவி. கூட்டமைப்பு ஒப்பந்தமானது ஈரானிய எண்ணெய் உற்பத்தியில் 50% உரிமையை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது. இவ்வொப்பந்தம் 1979 இல் காலாவதியானது.

ஈரானில் செயல்படும் மேற்கத்திய எண்ணெய் கூட்டமைப்பிடம் அதன் தற்போதைய ஒப்பந்தம் 1979 இல் காலாவதியான பிறகு புதுப்பிக்கப்படாது என்று 1973 இல் முகமது ரேசா பஹ்லவி கூறினார். மேலும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தற்போதைய உற்பத்தியை இரட்டிப்பாக்க வேண்டும் அல்லது நல்ல தள்ளுபடி விலையில் 25 ஆண்டுகள் எண்ணெய் வழங்குவதற்கான உத்தரவாதத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அவர் எச்சரித்தார். இதற்கிடையே 1979 இல் எண்ணெய் கூட்டமைப்பு ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியதன் காரணமாக ஈரானிய புரட்சி மூலம் முகமது ரேசா பஹ்லவி பதவியை மேற்கத்திய நாடுகள் நீக்கியதாக சதிக் கோட்பாடு உள்ளது. 

ஈரானும் அணுஉலையும்

8 டிசம்பர் 1953 அன்று நியூயார்க் நகரில் ஐ.நா பொதுச் சபையில் அமெரிக்க ஜனாதிபதி டுவைட் ஐசனோவர் (Dwight Eisenhower) அணுக்கள் பயன்பாடு தொடர்பாக “அமைதிக்கான அணுக்கள்” (Atoms for Peace) என்ற தலைப்பில் ஒரு முக்கியமான உரையை ஆற்றினார். அமைதிக்கான அணுக்கள் திட்டத்தின் மூலம் வளரும் நாடுகள் அமெரிக்காவிடமிருந்து அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பெற்று அணுசக்தித் திட்டத்திற்கான அடிப்படை அடித்தளத்தை அமைத்துக் கொள்ளும்.

1957 இல் அமெரிக்க முயற்சியின் ஒரு பகுதியாக “அமைதிக்கான அணுக்கள்” ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் கையெழுத்திட்டன. இதை தொடர்ந்து ஈரானுக்கு அணுஉலை மற்றும் ஆயுதங்கள் தர செறிவூட்டப்பட்ட யுரேனிய எரிபொருளை அமெரிக்கா வழங்கி வந்தது.

வெண்மைப் புரட்சி

26 ஜனவரி 1963 அன்று மேற்கத்திய தாக்கத்தின் வெளிப்பாடாக முகமது ரேசா பஹ்லவி ஈரானை உலகளாவிய சக்தியாக மாற்றும் நீண்ட கால நோக்கத்துடன் பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்கள் மூலம் மறுகட்டமைப்பைத் தொடங்கினார். முகமது ரேசா பஹ்லவி தொடங்கிய வெண்மைப் புரட்சியின் கீழ் லட்சக்கணக்கான தொழிலாளர் வர்க்கக் குடும்பங்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய நில மானியத்தை அறிமுகப்படுத்தினார், எழுத்தறிவு கழகங்களை உருவாக்கி ஈரானின் கல்வியறிவு விகிதத்தை இரட்டிப்பாக்கினார், தொழிலாளர்களுக்கு இலாபப் பகிர்வு போன்ற பொருளாதார திட்டங்களை அறிமுகப்படுத்தினார், அரசு நிதியுதவியுடன் கனரக தொழில் திட்டங்களைத் தொடங்கினார் மற்றும் மேய்ச்சல் நிலங்களை தேசியமயமாக்கினார். நிலச் சீர்திருத்தத் திட்டங்களால் ஈரானின் பரம்பரை நிலப்பிரபுக்கள் தங்கள் செல்வாக்கையும் அதிகாரத்தையும் இழந்தனர்.

1963 இல் அறிவிக்கப்பட்ட வெண்மைப் புரட்சிக்கு எதிராக முகமது ரேசா பஹ்லவியின் அரசை கடுமையாக எதிர்த்து வந்தார் மதகுரு அயதுல்லா ருஹோல்லா கொமேனி. 1963 இல் கொமேனியை சிறையில் தள்ளியது நாடு தழுவிய கலவரங்களுக்கு வழிவகுத்தது. இதையொட்டி, 1964 இல் ஈரானில் இருந்து கொமேனி நாடு கடத்தப்பட்டார்.

OPEC எரிபொருள் கூட்டணி

ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் உலக எண்ணெய் விநியோகத்தில் மேலாதிக்கம் செலுத்தும் மேற்கத்திய நிறுவனங்களுக்கு போட்டியாகவும் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி மீதான தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டவும் 14 செப்டம்பர் 1960 அன்று “பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு” (Organization of the Petroleum Exporting Countries - OPEC) நிறுவப்பட்டது. 1970 களில் OPEC லாபங்கள் உயர்ந்து மேற்கத்திய பொருளாதாரத்தின் மீது குழு கணிசமான செல்வாக்கைப் பெற்றது. ஈரானின் சந்தை செல்வாக்கு அதிகரித்ததால் அந்நாடு அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக மாற்றியது. தற்போது OPEC அமைப்பில் அல்ஜீரியா, அங்கோலா, எக்குவடோரியல் கினியா, காபோன், ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, காங்கோ குடியரசு, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வெனிசுலா ஆகிய 13 நாடுகள் உள்ளன.
ரிச்சர்ட் நிக்சனும் ஈரானும்

1972 இல் சோவியத் ரஷ்யாவின் நேச நாடான ஈராக்கை எதிர்க்கவும் மத்திய கிழக்கில் அமெரிக்க பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்கவும் உதவி கேட்டு முகமது ரேசா பஹ்லவியை ஈரானில் சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன். சந்திப்பின் போது ஈரான் தனக்குத் தேவையான அணுசக்தி அல்லாத ஆயுதங்களையும் வாங்கிக் கொள்ளலாம் என்று ரிச்சர்ட் நிக்சன் உறுதியளித்தார்.

1973 அரபு-இஸ்ரேலிய போரில் இஸ்ரேலை ஆதரித்த அமெரிக்காவிற்கு எதிராக OPEC அமைப்பிலுள்ள அரபு நாடுகளின் எண்ணெய் நிறுவனங்கள் பொருளாதாரத் தடை விதித்தன. அந்நேரத்தில் அரபு நாடு அல்லாத ஈரான் அமெரிக்காவை ஆதரித்ததால் முகமது ரேசா பஹ்லவியை எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை அமெரிக்காவிடம் வாங்கினார்.
ஈரானிய புரட்சியும் மாற்றமும்

7 ஜனவரி 1978 முதல் முகமது ரேசா பஹ்லவியின் மேற்கத்தியமயமாக்கல், நவீனமயமாக்கல் மற்றும் மதச்சார்பின்மை முயற்சிகளை எதிர்த்து முறைப்படுத்தப்பட்ட ஈரானிய புரட்சி தொடங்கப்பட்டது. பரவலான உள்நாட்டு அமைதியின்மைக்கு மத்தியில் முகமது ரேசா பஹ்லவி தற்காலிக வசிப்பிடத்தைத் தேடி ஜனவரி 1979 இல் எகிப்துக்கு தப்பிச் சென்றார். இடையில் அவர் புற்றுநோய் சிகிச்சைக்காக தனது செல்வாக்கை பயன்படுத்தி அமெரிக்காவிற்கு சென்றார். பல தரப்பிலிருந்து வந்த அழுத்தத்தின் கீழ் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் முகமது ரேசா பஹ்லவியை அமெரிக்காவில் சிகிச்சை பெற அனுமதித்தார்.

மேற்கத்திய நாடுகளின் அரசியல் ஆதிக்கத்திற்கு ஆதரவாக தலையாட்டி வந்த முகமது ரேசா பஹ்லவியின் ஆட்சியை மக்கள் எதிர்த்து வந்த வேளையில் ஈரானிய புரட்சி வெடித்தது. ஈரானின் மேற்கத்தியமயமாக்கலை தொடர்ந்து எதிர்த்து வந்த மதகுருவான அயதுல்லா ருஹோல்லா கொமேனி துருக்கி, ஈராக், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்ட 15 ஆண்டுகளுக்கு பின்னர் 1 பிப்ரவரி 1979 அன்று ஈரானுக்குத் திரும்பியது ஈரானியப் புரட்சியில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
11 பிப்ரவரி 1979 அன்று முகமது ரேசா பஹ்லவியின் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது. மேற்கத்திய சார்பு முடியாட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து முகமது ரேசா பஹ்லவியின் ஆட்சி அகற்றப்பட்டு ஷியா பிரிவின் இஸ்லாமிய மதகுருவான அயதுல்லா ருஹோல்லா கொமேனி ஈரான் நாட்டின் உச்ச தலைவராகி (Supreme Leader of Iran) முடியாட்சியில் இருந்து கடுமையான இஸ்லாமிய இறையாட்சிக்கு மாற்றினார். 

குரானுக்கு எதிராக உள்ள முதலாளித்துவம் மற்றும் கம்யூனிசம் ஆகிய இரண்டு கொள்கைகளையும் இஸ்லாமியர்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் நம் நாடு கிழக்கும் இல்லை மேற்கும் இல்லை இனிமேல் இஸ்லாமிய குடியரசு என்றும் கோமெய்னி பிரசங்கித்தார். மேலும் ஈரான் புரட்சியை அதன் அண்டை நாடுகளுக்கும் பரப்பிட முயற்சிக்கும் என்றும் கொமேனி கூறினார்.
ஈரானிய புரட்சியின் தாக்கம்

1980 களில் ஈரானியப் புரட்சி மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பை எதிரொலித்தது. சவுதி அரேபியா, எகிப்து, சிரியா, மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் எழுந்தனர். எடுத்துக்காட்டாக,

# சவுதி அரேபியா, 1979 = சவுதி அரேபிய இராணுவம் கிளர்ச்சியாளர்களிடமிருந்து பெரிய மசூதியின் (Grand Mosque) கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றது.

# எகிப்து, 1981 = இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு எகிப்திய அதிபர் அன்வர் சதாத் (Anwar Sadat) படுகொலை செய்யப்பட்டார்.

# சிரியா, 1982 = சிரியாவில் இஸ்லாமியர்களின் கிளர்ச்சி (Hama Masscare) ஒடுக்கப்பட்டது.

# லெபனான், 1983 = ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பு பெய்ரூட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தையும் அமெரிக்க ராணுவ வீரர்கள் முகாமையும் (US Embassy Bombing and Barracks Bombing) வெடிகுண்டுகளால் தகர்த்தது.

ரொனால்ட் ரீகனும் ஈரானும்

4 நவம்பர் 1979 அன்று ஈரானிய மாணவர் குழு 52 அமெரிக்கர்களை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட முகமது ரேசா பஹ்லவியை நாடு கடத்த வேண்டும் என்று கோரியது. ஈரான் குடிமக்களுக்கு எதிராக குற்றம் இழைத்ததாக முகமது ரேசா பஹ்லவி மீது பதியப்பட்ட வழக்குகளில் விசாரணை நடத்துவதற்காக அவரை திரும்பக் கோரியது. ஈரானிய மாணவர் குழுவின் கோரிக்கை அமெரிக்காவால் நிராகரிக்கப்பட்டு ஈரான் உடனான அனைத்துவித பொருளாதார உறவுகளையும் அமெரிக்கா துண்டித்தது.

444 நாட்களுக்குப் பிறகு 20 ஜனவரி 1981 அன்று ரொனால்ட் ரீகன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற சில நிமிடங்களுக்குப் பிறகு அல்ஜியர்ஸ் உடன்படிக்கை (Algiers Accords) கையொப்பம் இடப்பட்டவுடன் அமெரிக்க பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஈரானிய அரசியலில் தலையிட மாட்டோம் என்று அமெரிக்கா உறுதியளித்தது.

அமெரிக்கா - ஈரான் உறவுநிலை

1979 ஈரானியப் புரட்சி காரணமாக ஆட்சி மாறிய பிறகு 1980 முதல் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் முறையான தூதரக உறவுகள் இல்லை. மாறாக அமெரிக்காவில் ஈரானின் முகமாக பாகிஸ்தானும் ஈரானில் அமெரிக்காவின் முகமாக சுவிட்சர்லாந்தும் செயல்படுகிறது. வாஷிங்டன் டி.சியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ஈரானிய நலன்கள் பிரிவு மற்றும் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அமெரிக்க நலன்கள் பிரிவு மூலம் இரு நாட்டு தொடர்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அமெரிக்காவின் இரகசிய உதவி

நிகரகுவா (Nicaragua) அரசை கவிழ்க்கும் நோக்கத்திற்காக கான்ட்ராஸ் (Contras) கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க அரசு இராணுவ உதவி மற்றும் நிதியுதவி வழங்கக்கூடாது என்று அமெரிக்க காங்கிரஸ் தடை செய்தது. எனவே அமெரிக்க காங்கிரஸின் உத்தரவையும் ஈரான் மீதான ஆயுதத் தடையையும் மீறி நிகரகுவாவில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு நிதியளிக்க ஈரானுக்கு ஆயுத விற்பனை மூலம் கிடைத்த நிதியை அமெரிக்க அரசு பயன்படுத்தியது என்று செய்திகள் பரவியது. இச்செய்தியை மறுத்து லெபனான் பிணைக் கைதிகள் விவகாரத்தை ரொனால்ட் ரீகன் நிர்வாகம் கூறியது.

லெபனானில் ஹிஸ்புல்லாவால் அமெரிக்கர்கள் பலர் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். ஈரானிய துணை ராணுவமான இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையுடன் ஹிஸ்புல்லா கூட்டணி வைத்துள்ளது. அமெரிக்க பிணைக் கைதிகளை விடுவிக்க ஹிஸ்புல்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆயுத விற்பனை ஈரானுக்கு உதவும் என்று ரொனால்ட் ரீகன் நிர்வாகம் நம்பியது. அதனால் ஆயுதத் தடையை மீறி ஈரானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்றது என்று அதிகாரபூர்வமாக காரணம் சொல்லப்பட்டது. இருப்பினும் லெபனானில் அமெரிக்க பிணைக் கைதிகள் பிடிக்கப்படுவதற்கு முன்னர் 1981 இல் ஈரானுக்கு ஆயுத விற்பனை அங்கீகரிக்கப்பட்டது அமெரிக்க அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இறுதியாக லெபனானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு அமெரிக்கப் பிணைக் கைதிகளையும் ஹிஸ்புல்லா விடுவிக்க ஈரான் $1 மில்லியன் முதல் $2 மில்லியன் வரை நிதியுதவி அளித்தது.

20 ஆகஸ்ட் 1985 முதல் அமெரிக்க அரசியலில் பரப்பபை கிளப்பிய ஈரான் - கான்ட்ரா விவகாரத்திற்கு (Iran-Contra Affair) முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 4 மார்ச் 1987 அன்று தொலைக்காட்சி உரையில் “எனக்குத் தெரியாமல் மேற்கொள்ளப்படும் எனது நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன்” என்று ஊழலுக்கு ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் பொறுப்பேற்றார். இன்று வரை இந்த ஆயுத பரிவர்த்தனைகளில் ரொனால்ட் ரீகனின் பங்கு உறுதியாகத் தெரியவில்லை ஆனால் சில அதிகாரிகள் தண்டிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா - ஈரான் சண்டை

14 ஏப்ரல் 1988 அன்று ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) ஈரானிய அகழ்பீரங்கி ஒரு அமெரிக்க போர்க்கப்பலை கிட்டத்தட்ட அழித்தது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் பிரேயிங் மன்டிஸ் (Operation Praying Mantis) என்ற திட்டத்தின் கீழ் 18 ஏப்ரல் 1988 அன்று அமெரிக்கப் படைகள் இரண்டு ஈரானிய எண்ணெய் தளங்களை அழித்து ஒரு போர்க்கப்பலை மூழ்கடித்தது. மேலும் 3 ஜூலை 1988 அன்று ஈரானிய பயணிகள் விமானத்தை போர் விமானம் என்று தவறாக நினைத்து அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியது. பயணிகள் விமானத்தில் இருந்த 290 பேரும் கொல்லப்பட்டனர்.
ஜார்ஜ் புஷும் ஈரானும் 

9/11 பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு அல்-கொய்தா உறுப்பினர்களின் புகலிடமான ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக அகதிகளை பாதுகாக்க, முற்போக்கு சக்திகளை அரவணைக்க, ஜனநாயக அரசை நிறுவ பான் ஒப்பந்தத்தின் (Bonn Agreement) மூலம் அமெரிக்கா உறுதியளிக்கிறது. அமெரிக்காவின் பான் ஒப்பந்த திட்டத்தை ஈரானும் ஆதரித்தது.

ஈரானின் பான் ஒப்பந்த இணக்கத்திற்கு பிறகு 29 ஜனவரி 2002 அன்று ஸ்டேட் ஆஃப் தி யூனியன் (State of the Union) உரையில் பேரழிவு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈரான், ஈராக் மற்றும் வட கொரியா நாடுகள் "தீமையின் அச்சு" (Axis of Evils) என்று அமெரிக்கா ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் கூறியது சர்ச்சையானது. அவரது பேச்சு ஈரானின் முந்தைய அரசியல் நகர்வை உலுக்கியது. பான் ஒப்பந்தத்தை ஈரான் ஆதரித்த பிறகு வெளிவந்த “தீமையின் அச்சு” உரை ஈரானுக்கு துரோக உணர்வை விளைவித்தது.
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்

வெகு காலமாக ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் குறித்து அமெரிக்கா கவலையடைந்தது. அதையொட்டி 14 ஜூலை 2015 அன்று ஈரானுக்கும் அமெரிக்கா உட்பட பல உலக வல்லரசுகளுக்கும் இடையே ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் என்றதொரு கூட்டு விரிவான செயல் திட்டம் (Joint Comprehensive Plan of Action - JCPOA) செய்யப்பட்டது. பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு ஈடாக ஒப்பந்த விதிமுறைகளின் கீழ் அணு உலையை அகற்றி மறுவடிவமைப்பு செய்வது, ஆயுத சரிபார்ப்பு வழிமுறைகளை அனுமதிப்பது, குறைந்தது 15 ஆண்டுகளுக்கு யுரேனியம் செறிவூட்டலை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொண்டது.
டிரம்ப்பும் ஈரானும்

8 மே 2018 அன்று ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும் ஈரான் மீது அதிகபட்ச அழுத்தத்தை வழங்க பொருளாதாரத் தடைகள் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் எனவும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கையை ஆயுதக் கட்டுப்பாட்டு நிபுணர்கள் மற்றும் ஐரோப்பிய கூட்டாளிகள் கண்டித்தார்கள் ஆனால் குடியரசுக் கட்சியினர், இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் பாராட்டினர். அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக ஒப்பந்தத்தின் விதிமுறைகளை புறக்கணித்து யுரேனியம் செறிவூட்டலை ஈரான் அதிகரித்தது.

15 ஏப்ரல் 2019 அன்று ஈரானிய இராணுவத்தின் ஒரு கிளையான இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையை (Islamic Revolutionary Guard Corps - IRGC) டிரம்ப் ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தார். வேறொரு நாட்டின் அரசாங்க இராணுவத்தின் ஒரு பகுதியை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது அதுவே முதல் முறை. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன்னுடைய அழுத்தம் காரணமாக அமெரிக்கா இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறியது சர்ச்சையானது. இதற்கிடையே, அமெரிக்காவின் நடவடிக்கை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் பிரபலத்தை அதிகரிக்கும் என்று ஈரான் தலைவர் ரூஹானி கூறினார்.

அமெரிக்கா - ஈரான் மோதல்

12 மே 2019 அன்று ஓமன் வளைகுடாவில் புஜைரா கடற்கரையில் இரண்டு சவுதி அரேபிய எண்ணெய் டேங்கர்கள், ஒரு நோர்வே எண்ணெய் டேங்கர் மற்றும் ஒரு எமிராட்டி பதுங்குக் கப்பல் ஆகிய நான்கு எண்ணெய் கப்பல்கள் சேதமடைந்தன. 13 ஜூன் 2019 அன்று ஹோர்முஸ் ஜலசந்தி அருகே ஓமன் வளைகுடாவை கடக்கும் போது ஜப்பானிய எண்ணெய் கப்பல் மற்றும் ஒரு நோர்வே எண்ணெய் கப்பல் ஆகிய இரண்டு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டன. இந்த இரு தாக்குதலுக்கும் ஈரான் மீது குற்றம் சாட்டி ஈரான் நாட்டை பயங்கரவாத தேசம் என்று டிரம்ப் கூறினார். மத்திய கிழக்கிற்கு 1000 கூடுதல் படைகளை அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்த பிறகு அமெரிக்க ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதையொட்டி பிரிட்டன் பகுதியான ஜிப்ரால்டருக்கு (Gibraltar) அருகே சென்று கொண்டிருந்த ஈரானிய எண்ணெய் கப்பல் சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு செல்வதாக சந்தேகத்தின் பேரில் ஈரானிய கப்பலை கைப்பற்ற வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஜிப்ரால்டர் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவில்  தாக்குதல்

14 செப்டம்பர் 2019 அன்று சவுதி அரேபியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் மையமான சவுதி அராம்கோ (Saudi Aramco) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் நாட்டின் எண்ணெய் உற்பத்தியில் பாதியை நிறுத்தியது மற்றும் கச்சா விலையில் முன்னெப்போதும் இல்லாத உயர்வை ஏற்படுத்தியது. சவுதி அரேபியாவின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்புகளை வலுப்படுத்த அமெரிக்க துருப்புக்களை சவுதி அரேபியாவின் வேண்டுகோளின் பேரில் டிரம்ப் அனுப்பினார். ஏமனின் உள்நாட்டுப் போரில் சவுதி அரேபியாவின் தலையீட்டை மேற்கோள் காட்டி தாக்குதலுக்கு ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் (Houthi Rebels) பொறுப்பேற்றனர். ஆனால் அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் தாக்குதலுக்கு நேரடியாக ஈரானைக் குற்றம் சாட்டினர்.

எச்சரித்த டிரம்ப்

29 டிசம்பர் 2019 அன்று ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள கத்தாயிப் ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் பணி மையங்களுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தி சுமார் 25 போராளிகளை கொன்றது. அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் போராளிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடி தரும் விதமாக ஈராக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களும் ஈரானிய போராளிகளும் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை கைப்பற்ற முயன்றனர். எதிர்ப்பாளர்கள் "அமெரிக்காவிற்கு மரணம்" (Death to America) என்று கோஷமிட்டு ஈராக்கில் இருந்து அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோரினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவின் சொத்துக்களுக்கும் மக்களுக்கும் ஏற்படும் சேதங்களுக்கு ஈரான் மிகப் பெரிய விலையை கொடுக்கும் என்று ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.

ஈரான் தளபதி படுகொலை

3 ஜனவரி 2020 அன்று உச்ச தலைவர் அலி கமேனிக்கு (Ali Khamenei) அடுத்தபடியாக ஈரானின் இரண்டாவது சக்திவாய்ந்த நபராக கருதப்பட்ட ஈரான் ராணுவத்தின் தலைமை தளபதி காசிம் சுலைமானியை (Qasem Soleimani) பாக்தாத்தில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா கொன்றது. அவருடன் ஈராக் போராளிகளின் தலைவர் அபு மஹ்தி அல் முஹந்திஸும் ஏழு ஈரானிய மற்றும் ஈராக்கிய நாட்டவர்களும் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பழிவாங்குவதாக உறுதியளித்து அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் கட்டுப்பாடுகளுக்கு இனி உறுதியளிக்க மாட்டோம் என்று ஈரான் அறிவித்தது. மேலும் அமெரிக்க தாக்குதல்களுக்கு ஈரானிய படைகள் அதிக எச்சரிக்கையுடன் இருந்த நேரத்தில் தவறுதலாக உக்ரேனிய பயணிகள் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது.
ஏவிய ஈரான் இறங்கிய அமெரிக்கா

22 ஏப்ரல் 2020 அன்று தனது முதல் இராணுவ செயற்கைக்கோளை ஈரான் ஏவியதால் ஈரானின் நீண்ட தூர ஏவுகணை திறன்கள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டது. சில நாட்களுக்குப் பிறகு ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்தில் தாங்கள் இன்னும் இருப்பதாகவும் பாதுகாப்பு சபை தீர்மானத்தின் மூலம் ஈரானுக்கு எதிரான பலதரப்பு தடைகளை திரும்பப் பெற முயற்சிப்பதாகவும் அமெரிக்கா கூறியது. ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரஷ்யா டிரம்ப் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்த போது ஒப்பந்தத்தின் விதிமுறைகளை அமெரிக்கா கைவிட்டதாக வாதிட்டது. பாரசீக வளைகுடாவில் அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு மிக அருகில் ஈரானிய கடற்படை கப்பல்கள் வந்து அச்சுறுத்தியது. ஆனால் இராணுவ ரீதியாக பதிலளிக்காமல் அமெரிக்க கடற்படை இதை ஆபத்தான மற்றும் துன்புறுத்தும் அணுகுமுறை என்று கண்டித்தது.

ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் அக்டோபரில் காலாவதியாகவிருக்கும் ஈரான் மீதான ஐ.நா ஆயுதத் தடையை ஒரு தசாப்த கால நீடிக்க டிரம்ப் முயன்றார். மேலும் ஈரான் ஒப்பந்தத்தை மீறுவதாகவும் அதன் ஆயுதக் களஞ்சியத்தை நிரப்ப அனுமதிக்க முடியாது என்றும் டிரம்ப் வாதிட்டார். ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரான் மீதான ஆயுதத் தடையை நீட்டிப்பதற்கான அமெரிக்காவின் தீர்மானம் சர்வதேச ஆதரவின் பற்றாக்குறை காரணமாக தோல்வியடைந்தது.

டிரம்ப் விதித்த தடைகள்

அக்டோபர் - டிசம்பர் 2020 காலகட்டத்தில் எண்ணெய் மற்றும் நிதித் துறைகளில் உள்ள நிறுவனங்களைக் குறிவைத்து புதிய பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானுக்கு எதிராக தனது அதிகபட்ச அழுத்த பிரச்சாரத்தை டிரம்ப் அதிகரித்தார். 2020 ஜனாதிபதித் தேர்தலில் ஈரானிய அரசு குறுக்கீடு செய்ததாகவும், இரசாயன ஆயுதங்களை உருவாக்கியதாக சந்தேகித்தும், 2019 இல் ஈரானிய ஆர்ப்பாட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் காரணமாகவும் புதிய நடவடிக்கைகளுக்கான காரணங்களாக அமெரிக்கா மேற்கோளிட்டுள்ளது.

ஜோ பிடனும் ஈரானும்

ஜனவரி 2020 இல் ஜோ பிடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவை திரும்பக் கொண்டுவரும் நோக்கில் ஈரானிய அணுசக்தி ஒப்பந்த கூட்டணியினர் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் கூட்டங்களில் கலந்து கொண்டு ஒப்பந்தத்திற்கு திரும்புவதற்கான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

2021 ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் கடந்தகால நீதித்துறைத் தலைவராக இருந்த மதகுரு இப்ராஹிம் ரைசி வெற்றி பெற்றார். 2017 இல் முதன்முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் 2021 இல் இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1988 இல் வழக்கு விசாரணைக் குழுவில் இருந்த நான்கு பேரில் ஒருவராக ஈரானில் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை விதித்ததால் இப்ராஹிம் ரைசி கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளரால் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
இப்ராஹிம் ரைசி அரசு அதிகாரத்திற்கு மாறிய பிறகு கடினமான சூழல் நிலவிய போதும் ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து சட்டவிரோத அமெரிக்கத் தடைகளையும் நீக்குமாறு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது மற்றும் அமெரிக்கா மீண்டும் ஒப்பந்தத்தை விட்டு வெளியேறாது என்பதற்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

இஸ்ரேல் மீது குற்றம் சாட்டப்பட்ட ஈரானின் அணுசக்தி நிலையம் மீதான சைபர் தாக்குதலுக்குப் பிறகும் பேச்சுவார்த்தை நீடித்தது. இதையொட்டி, தாக்குதலுக்கு பதிலடியாக மேம்பட்டவற்றுடன் யுரேனியம் செறிவூட்டலின் தூய்மை அளவை 20% முதல் 60% வரை அதிகரித்து தரத்தை ஈரான் மாற்றியது.

ஈரானில் போராட்டம் 

1979 ஈரானியப் புரட்சிக்குப் பின் பழமைவாதத்திற்கு திரும்பிய ஈரானில் நீதி, மனித உரிமைகள், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் நிற்பதாக ஈரானியர்கள் உறுதியளிக்கின்றனர். உதாரணமாக இன்று ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மனித குலத்திற்கு எதிராக தான் செய்த குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு நிற்கும்படி உலக வல்லரசுகள் நிர்பந்திக்க வேண்டும் என்று ஈரானியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
முடிவுரை

1900 களின் பிற்பகுதியில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஈரான் எப்போதும் வல்லரசுகளின் கைகளில் இருந்தது. ஈரானியப் புரட்சிக்குப் பின்னர் ஈரானுக்கும் வல்லரசுகளுக்கும் குறிப்பாக அமெரிக்காவிற்கும் இடையேயான உறவுமுறை சீர்குலைந்தது. ஆனால் ஈரானுக்குள் அமைதியான அரசியல் இருக்கக் கூடாது என்பதை வல்லரசுகள் உறுதிப்படுத்தின.

சுருங்கச் சொன்னால் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மத்திய கிழக்கில் எரிபொருள் தொழில்துறையின் எழுச்சிக்குப் பிறகு எரிபொருள் அரசியல் என்பது வல்லரசுகளின் சர்வதேச இராஜதந்திரத்தின் முக்கியமான அம்சமாக உள்ளது. எரிபொருளுக்கான போட்டி தொடர்வதால் பெட்ரோலிய பொருட்களின் சுத்திகரிப்பு, போக்குவரத்து, விற்பனை மற்றும் பயன்பாடு கணக்கீடுகள்  முக்கியத்துவம் பெறுகின்றன.

விவரணைகள் 

1921 Persian Coup


1953 Iranian Coup





Iran History in 15 minutes


Video 1 = US - Iran Relations


Video 2 = US - Iran Relations




Iranian Nuclear Deal (JCPOA)


Trump quits Iranian Nuclear Deal


Bush defines enemies as "Axis of Evil"


Iran paid for release of US hostages in Lebanon


I could have wiped Iran off the Map, says Jimmy Carter 


வாசித்தமைக்கு நன்றி. 

வணக்கம்.

Sunday, February 13, 2022

சீனா - தைவான் அரசியல்

சீனா - தைவான் அரசியல்

சுருக்கம்
  1. முகவுரை
  2. தைவானிய மக்கள்
  3. முதலாம் சீன-ஜப்பானியப் போர்
  4. சீனாவில் தேசியவாத கட்சி ஆட்சி
  5. தேசியவாதமும் கம்யூனிஸ்டும் 
  6. இரண்டாம் சீன-ஜப்பானியப் போர்
  7. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி
  8. தைவானில் தேசியவாத கட்சி ஆட்சி
  9. முதலாம் கூட்டு அறிக்கை
  10. இரண்டாம் கூட்டு அறிக்கை
  11. தைவான் உறவுகள் சட்டம்
  12. மூன்றாம் கூட்டு அறிக்கை
  13. ஆறு உறுதிமொழிகள்
  14. சீனாவின் ஆசை வார்த்தை
  15. சுதந்திரத்தை நோக்கி தைவான்
  16. டிரம்ப்பும் பிடெனும்
  17. தைவானில் வளர்ச்சி
  18. சுருக்கமான கருத்து
  19. முடிவுரை
  20. விவரணைகள்
முகவுரை

தைவானின் அரசியல் நிலை தொடர்பான சர்ச்சை சீன உள்நாட்டு போரின் விளைவாகவும் சீனா தற்போது இரண்டாக பிரிந்ததன் விளைவாகும். சீன மக்கள் குடியரசு (சீனா என அழைக்கப்படுகிறது) மற்றும் சீனக் குடியரசு (தைவான் என அழைக்கப்படுகிறது) ஆகிய இரு நாட்டுக்கும் இடையே நிலவும் நாள்பட்ட பிரச்சனை தான் என்ன? வாருங்கள் அறிவோம்.

தைவானிய மக்கள்

தெற்கு சீனாவிலிருந்து வந்த ஆஸ்ட்ரோனேசிய (Austronesian) பழங்குடி மக்கள் தான் தைவானில் முதலில் அறியப்பட்ட பூர்வீக தைவானிய குடிகள் (Indigenous Taiwanese) என்று வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது.

நவீன சீனாவின் மஞ்சள் நதிப்படுகையைச் சேர்ந்த கிழக்கு ஆசிய இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஹான் சீனர்கள். ஹான் சீனர்கள் உட்பிரிவில் கான்டோனீஸ், மக்கானீஸ், ஹக்கா, ஹோக்லோ போன்ற பல துணை குழுக்கள் உள்ளன. சீனாவில் கலாச்சார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரும்பான்மையான ஹான் சீனர்கள் சுமார் 120 கோடிக்கும் அதிகமாக சீன மக்கள் குடியரசின் நேரடி அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் வாழ்கின்றனர். 

17 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் தைவானை காலனித்துவப்படுத்திய போது சீனாவில் நிலவிய இன்னல்களில் இருந்து தப்பிக்க சீனாவின் குவாங்டாங் (Guangdong) மாகாணத்தைச் சேர்ந்த ஹக்கா (Hakka) சீனர்கள் மற்றும் புஜியான் (Fujian) மாகாணத்தைச் சேர்ந்த ஹோக்லோ (Hoklo) சீனர்கள் கணிசமான எண்ணிக்கையில் தைவானில் குடியேறினர். ஹக்கா, ஹோக்லோ, பூர்வீக தைவானிய குடிகள் தான் பிரதான தைவானிய மக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

மேலும் 1945 இல் இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பிறகும் 1949 இல் சீன போரின் முடிவிற்குப் பிறகும் சீன தேசியவாதக் கட்சி பிரமுகர்கள் உட்பட பல மெயின்லேண்டர்கள் சீனாவிலிருந்து தைவானுக்கு புலம்பெயர்ந்தனர். மெயின்லேண்டர்கள் 20 நூற்றாண்டின் பிற்பகுதியில் தைவானில் பிறந்திருந்தாலும் மூதாதையர்கள் தைவானியல்லாத வம்சாவளியாக கருதப்படுவார்.
முதலாம் சீன-ஜப்பானியப் போர்

1683 முதல் 1895 வரை சீனாவின் குயிங் பேரரசால் தைவான் நிர்வகிக்கப்பட்டது. கொரியாவில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாக சீன குயிங் பேரரசுக்கும் ஜப்பானியப் பேரரசுக்கும் இடையே முதலாம் சீன-ஜப்பானியப் போர் ஆகஸ்ட் 1894 இல் தொடங்கி ஒரு வருடத்திற்கும் குறைவாகவே நீடித்து ஏப்ரல் 1895 இல் முடிவடைந்தது. இப்போரில் தோல்வியடைந்த சீன குயிங் பேரரசு தைவானை ஜப்பானிடம் ஒப்படைத்தது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளும் இரண்டாம் சீன-ஜப்பானியப் போர் என்று அழைக்கப்பட்ட போரில் மீண்டும் ஈடுபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் தேசியவாத கட்சி ஆட்சி

1912 இல் குயிங் பேரரசு ஆட்சியை சன் யாட்-சென் (Sun Yat-Sen) தலைமையிலான சீன தேசியவாத கட்சி வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து 1912 முதல் சீனாவை சீனக் குடியரசு (Republic of China) எனப் பெயரிட்டு சீன தேசியவாத கட்சி ஆட்சி செய்து வந்தது. இத்தகைய சூழலில் குயிங் பேரரசு வீழ்ச்சிக்கு பிறகு சீனாவில் தேசிய அதிகாரம் சிதைந்து நாடு பல பகுதிகளாக உடைந்து சக்தி வாய்ந்த போர் பிரபுத்துவவாதிகளான (Warlords) உள்ளூர் தலைவர்களால் ஒவ்வொரு பகுதியும் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. ஏறக்குறைய இந்தப் பிரச்சனையும் தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சி வீழ்ந்த பிறகு உள்ளூர் தலைவர்களான பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுடன் போரிட்டதைப் போன்றதே.

தேசியவாதமும் கம்யூனிஸ்டும் 

1924 இல் சீனாவில் போர் பிரபுத்துவத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சீன தேசியவாத கட்சி வளர்ந்து வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்தது. இதுவே முதலாம் ஐக்கிய முன்னணி (United Front) என்றானது. இருவரும் இணைந்து தேசிய புரட்சிப் படையை உருவாக்கி உள்ளூர் தலைவர்களை எதிர்த்து வந்தனர். 

இத்தகைய சூழலில் சீன தேசியவாத கட்சியின் மேன்மையைப் பயன்படுத்தி சீன கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிசத்தைப் பரப்பியது. மறுபுறம் கம்யூனிஸ்டுகளை உள்ளிருந்து கட்டுப்படுத்த சீன தேசியவாத கட்சி விரும்பியது. இவ்வாறு, இரு கட்சிகளும் தங்கள் சொந்த நோக்கங்களைக் கொண்டிருந்த காரணத்தால் ஐக்கிய முன்னணி தொடர்ந்து நீடிக்க முடியாததாக இருந்தது. 1927 இல் சீன தேசியவாத கட்சி தங்கள் கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்டுகளை அகற்றியது. இதையொட்டி, 1927 இல் சீனக் குடியரசு தலைவர் சியாங் கை-ஷேக் (Chiang Kai-Shek) தலைமையிலான சீன தேசியவாத கட்சிக்கும் மாவோ சேதுங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே சீனாவில் முதலாம் உள்நாட்டுப் போர் (1927-1936) மூண்டது.
இரண்டாம் சீன-ஜப்பானியப் போர்

ஜப்பானிய ஆதிக்கத்தை முழுமையாக எதிர்க்க சீனக் குடியரசுக்கும் ஜப்பானியப் பேரரசுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாம் சீன-ஜப்பானியப் போரில் (1937-1945) இரண்டாம் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டு உள்நாட்டின் நலன் கருதி மீண்டும் இருகட்சிகளும் இணைந்து செயல்பட்டனர்.

இதே காலகட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில் அச்சு நாடுகளின் ஒரு பகுதியாக ஜப்பானும் நேச நாடுகளின் ஒரு பகுதியாக சீனாவும் சண்டையிட்டது குறிப்பிடத்தக்கது. 1945 இல் இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு தைவான் மீதான கட்டுப்பாட்டை ஜப்பான் கைவிட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்ற நேச நாடுகளில் ஒன்றான சீனா அதன் நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஆதரவுடன் தைவானை ஆட்சி செய்யத் தொடங்கியது.

இதற்கிடையே, இரண்டாம் உலகப் போரும் இரண்டாம் சீன-ஜப்பானியப் போரும் முடிவுற்ற பிறகு இரு கட்சிகளின் கூட்டணி மீண்டும் முறிந்து 1945 இல் சீனாவில் இரண்டாம் உள்நாட்டுப் போர் (1945-1949) மூண்டது.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி

சீன தேசியவாத கட்சியின் ஆட்சியை வீழ்த்தி 1 அக்டோபர் 1949 இல் மதியம் 3:00 மணிக்கு பெய்ஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் மாவோ சேதுங் தலைமையில் சீன மக்கள் குடியரசு (People's Republic of China) ஆட்சி அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த சீன தேசியவாத கட்சியின் தலைவர் சியாங் கை-ஷேக்கும் அவரது படைகளும் டிசம்பர் 1949 இல் தைவானுக்குத் தப்பிச் சென்று சீனாவை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்துடன் பலமான இராணுவத்தை கட்டமைத்தனர்.

தைவானில் தேசியவாத கட்சி ஆட்சி

குயிங் ஆட்சியின் முடிவுக்குப் பிறகு முறையான மத்திய அரசு அதிகாரத்தில் இல்லாததால் பல உள்ளூர் தலைவர்களால் சீனா துண்டு துண்டானது. இந்த நேரத்தில் சியாங் காய்-ஷேக் சீன தேசியவாதக் கட்சியின் சன் யாட்-சென் அமைத்த புரட்சிகர இராணுவத்தின் தலைவராக உயர்ந்தார். சன் யாட்-சென் மரணத்திற்குப் பிறகு சியாங் காய்-ஷேக் இராணுவத்தைக் கைப்பற்றி குழப்ப நிலையில் இருந்த சீனாவை ஒன்றிணைத்தார். அவர் நவீனமயமாக்கலை ஊக்குவித்தார் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது (1939-45) சீன வெற்றிக்கு தலைமை தாங்கினார்.

1911 இல் நிறுவப்பட்ட சீனக் குடியரசு 1949 வரை முழு சீன நிலத்தையும் கட்டுப்படுத்தியது. சீன உள்நாட்டுப் போரில் தோற்ற பிறகு சீனக் குடியரசு தைவானை மட்டுமே கட்டுப்படுத்துகிறது. அதாவது 1949 இல் சீன கம்யூனிஸ்டுகளால் தோற்கடிக்கப்பட்ட பிறகு சீனாவில் இருந்து தப்பித்து சியாங் காய்-ஷேக் மற்றும் பல்லாயிரம் மெயின்லேண்டர்கள் தைவானுக்கு புலம்பெயர்ந்தனர். தைவான் மக்கள் தொகையில் சியாங் கை-ஷேக் குழுவினர் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவாக இருந்த போதிலும் பல ஆண்டுகளாக தைவானின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தினர். 1950 இல் தைவானில் மறைமுக ஜனாதிபதி தேர்தல் மூலம் ஜனாதிபதியாகி ஒரு அரசை நிறுவி தைவானை நவீனப்படுத்தினார் சியாங் காய்-ஷேக்.

தைவானில் சீன தேசியவாத கட்சி ஆட்சியின் ஆரம்ப தசாப்தங்களில் பல தைவானியர்கள் அதனை காலனித்துவ ஆட்சியாகக் கருதினர். மெயின்லேண்டர்களுக்கும் பூர்வீக தைவானியர்களுக்கும் இடையிலான இன வேறுபாடுகள் அரச வன்முறை மற்றும் அரசியல் ஒடுக்குமுறை மூலம் மெயின்லேண்டர்களுக்கு ஆதரவாக சீன தேசியவாத கட்சியால் கட்டமைக்கப்பட்டது. நாளடைவில் மக்கள்தொகையில் ஆதிக்கம் செலுத்திய பூர்வீக தைவானியர்கள் ஜனநாயக நடைமுறையை வலியுறுத்தி போராடத் தொடங்கினர்.

1975 இல் சியாங் கை-ஷேக் இறந்த பின்னர் அவரது மகன் சியாங் சிங்-குவோ (Chiang Ching-Kuo) 1978 மற்றும் 1984 இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1987 இல் ஜனாதிபதி சியாங் சிங்-குவோ 1949 முதல் தைவானில் நடைமுறையில் இருந்த இராணுவச் சட்டத்தை அதிரடியாக நீக்கியது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி, தைவானில் முதல் முறையாக சட்டப்பூர்வமாக அரசியல் கட்சிகள் தொடங்கிடும் சூழல் சுலபமானது.

முதலாம் கூட்டு அறிக்கை

1949 இல் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் அமெரிக்கா அதை முறையாக அங்கீகரிக்கவில்லை. 23 ஆண்டுகளாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே எந்த இராஜதந்திர உறவும் இல்லாமல் இருந்த சூழலில் சோவியத்து கம்யூனிஸ்ட் அரசுடனான உறவில் செல்வாக்கு பெறும் நோக்கில் 1972 இல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் சீன கம்யூனிஸ்ட் அரசுடனான அமெரிக்க உறவை இயல்பாக்க சீனாவுக்கு பயணம் செய்தார். அதையொட்டி இரு அரசுகளும் முதலாம் கூட்டு அறிக்கையை (First Communique) வெளியிட்டன.

முதலாம் கூட்டு அறிக்கையில் இரு தரப்பும் பரஸ்பரம் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை மதிக்கவும் தைவான் நீரிணையின் இருபுறமும் உள்ள அனைத்து சீன மக்களும் ஒரே ஒரு சீனாவை பராமரிப்பதாகவும் தைவான் சீனாவின் ஒரு பகுதி என்றால் அந்த நிலைப்பாட்டை சவால் செய்யாமலும் அமெரிக்கா ஒப்புக்கொள்கிறது என்றும் சீனா-தைவான் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியது. தைவானின் எதிர்காலம் தொடர்பான அமெரிக்காவின் தெளிவற்ற நிலைப்பாட்டிற்கு ஏற்றுக்கொள்கிறது (Accepts) என்பதற்கு பதிலாக ஒப்புக்கொள்கிறது (Agrees) என்ற சொல் விமர்சிக்கப்பட்டாலும் அது இராஜதந்திர பயன்பாடாக பார்க்கப்படுகிறது.
இரண்டாம் கூட்டு அறிக்கை

பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒருவரையொருவர் அங்கீகரித்து 1 ஜனவரி 1979 இல் இரு அரசுகளும் இராஜதந்திர உறவுகளை முழுமையாக நிறுவுவதாக இரண்டாம் கூட்டு அறிக்கையை (Second Communique) வெளியிட்டன. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் சீனாவும் தூதர்களை பரிமாறிக் கொண்டு தூதரகங்களை 1 மார்ச் 1979 இல் அமைத்தது. சுருங்கச் சொன்னால் 1979 ஒப்பந்தத்தின் மூலம் 1949 இல் நிறுவப்பட்ட சீன கம்யூனிஸ்ட் அரசை 30 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது.
தைவான் உறவுகள் சட்டம்

239 இல் பதிவு செய்யப்பட்ட சீன பதிவுகளில் ஒரு சீனப் பேரரசர் தைவான் தீவை ஆராய்வதற்கு ஒரு படையை அனுப்பியதாக உள்ள கூற்றை சீனா அதன் பிராந்திய உரிமைக்கோரல்களை ஆதரிக்கப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க தைவானுக்கு அமெரிக்கா ஆதரவுக்கரம் நீட்டி வந்தது. 

இருப்பினும் 1972 இல் சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கான விருப்பத்தை அமெரிக்கா அறிவித்த பிறகு தைவான் உடனடியாக அமெரிக்காவைக் கண்டித்தது தைவானிலும் அமெரிக்காவிலும் பரவலான எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. மேலும் ஜனவரி 1979 இல் அமெரிக்கா-சீனா உறவு முறையாக புதுப்பிக்கப்பட்ட பிறகு தைவான் பிரச்சினை சர்ச்சைக்குரியதாக மாறியது.

இதையொட்டி, ஏப்ரல் 1979 இல் அமெரிக்க மக்களுக்கும் தைவான் மக்களுக்கும் இடையே இராஜதந்திரம் இல்லாத உறவுகளை செழிக்க வைக்கும் நோக்கில் தைவான் உறவுகள் சட்டத்தில் (Taiwan Relations Act) அமெரிக்க கையெழுத்திட்டது. இராஜதந்திர உறவுகள் இல்லாத நிலையில் வெளிநாட்டு அரசு உடனான அமெரிக்க உறவுகளின் கிட்டத்தட்ட ஒவ்வொரு அம்சத்தையும் நிர்வகிக்கும் ஒரே சட்டம் இதுவாகும். 

ஒருபுறம் தைவானுடன் அதிகாரப்பூர்வமற்ற உறவுகளை கொண்டாலும் மறுபுறம் தைவானுக்கு தற்காப்பு ஆயுதங்களை வழங்குவதாகவும் சர்வதேச அமைப்புகளில் தைவானை உறுப்பினராக்க ஆதரிக்கவும் தைவானின் ஜனநாயகத்தை ஊக்குவிக்கவும் தைவானுக்கு எதிரான சீனாவின் எந்தவொரு தாக்குதலும் கடுமையான கவலையை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்கா உறுதியளித்தது.
மூன்றாம் கூட்டு அறிக்கை

தைவானுக்கு ஆயுதங்களை வழங்கிடும் அமெரிக்காவின் ஆயுத விற்பனை அளவு குறித்து சீனா கடும் ஆட்சேபனைகளை எழுப்பியதால் 1981 இல் அமெரிக்கா-சீனா உறவுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையொட்டி, தைவான் உடனான அமெரிக்காவின் உறவுகள் குறித்து சீனாவின் கவலைகளை தீர்க்கும் முயற்சியில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அலெக்சாண்டர் ஹெய்க் ஜூன் 1981 இல் சீனாவிற்கு பயணம் செய்தார். மேலும் மே 1982 இல் துணை ஜனாதிபதி புஷ் சீனாவிற்கு பயணம் செய்தார். 

ஆகஸ்ட் 1982 இல் தைவானுக்கான ஆயுத விற்பனை குறித்த மூன்றாவது கூட்டு அறிக்கையை (Third Communique) அமெரிக்காவும் சீனாவும் வெளியிட்டன. இதன்படி தைவானுக்கு ஆயுத விற்பனையை படிப்படியாக குறைக்கவும் தைவான் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை எட்டுவதற்கான முயற்சியையும் சீனாவின் விவகாரத்தில் முந்தைய இரண்டு அறிக்கைபடி நடப்போம் என்றும் அமெரிக்கா விவரித்தது.
ஆறு உறுதிமொழிகள்

ஆகஸ்ட் 1982 இன் மூன்றாவது கூட்டு அறிக்கை பிரகடனத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தைவான் உடனான உறவுகளை எளிதாக்க அமெரிக்கா முயன்றது. அதையொட்டி ஆறு உறுதிமொழிகள் (Six Assurance) ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதையொட்டி, இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும் தைவானுக்கும் இடையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இதன் அடிப்படையில் தைவானுக்கான ஆயுத விற்பனையை நிறுத்துவதற்கான தேதியை அமெரிக்கா நிர்ணயிக்காது, தைவான் உறவுகள் சட்டத்தின் விதிமுறைகளை அமெரிக்கா மீறாது, இறையாண்மை குறித்த தைவானின் கோரிக்கை மீது அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றாது, தைவான் பிரச்சனையை அமைதியான முறையில் சீனர்கள் தீர்க்க வேண்டும் என்று உறுதியளிக்கப்பட்டது. சீனா மற்றும் தைவான் உறவுகளை மூன்றாவது அறிக்கை மற்றும் ஆறு உறுதிமொழிகள் ஒப்பந்தம் மூலம் இரு நாட்டு கோரிக்கைகளையும் மென்மையான முறையில் அமெரிக்கா திறம்பட சமாளித்தது என்றால் மிகையல்ல.
சீனாவின் ஆசை வார்த்தை

1980 களில் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான உறவுகள் மேம்படத் தொடங்கினாலும் சீனக் குடியரசு பெயரில் இயங்கும் தைவான் அரசை சீனா சட்டவிரோதமானதாக கருதியதால் இரு தரப்புகளின் பிரதிநிதிகளுக்கு இடையே மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற பேச்சுக்கள் தான் நடந்தன. 

தைவான் மக்களை கவர்ந்திழுக்க "ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்" (One Country, Two Systems) என்ற ஹாங்காங் கொள்கையை வலியுறுத்தி சீன ஒருங்கிணைப்பை ஏற்றுக் கொண்டால் தைவானுக்கு குறிப்பிடத்தக்க சுயாட்சி வழங்கப்படும் என்று தொடர்ந்து ஆசை வார்த்தைகளை கூறி வருகிறது சீனா. அதையொட்டி, பொடி வைத்து பேசிய சீனாவின் ஆசை வார்த்தைகளை நிராகரித்தது தைவான் அரசு. 
சுதந்திரத்தை நோக்கி தைவான்

1950 முதல் 1990 வரை நடந்த ஏழு தேர்தல்களில் சீன தேசியவாத கட்சி வேட்பாளர் மட்டுமே மறைமுகமாக தைவான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990 இல் சீன தேசியவாத கட்சியை சேர்ந்த லீ டெங்-ஹுய் (Lee Teng-Hui) தைவான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னணியில் சீனாவும் தைவானும் நில உரிமைக்காகப் போராடி வந்தாலும் அவை 1990 களில் இருந்து பொருளாதார உறவுகளை மேம்படுத்தத் தொடங்கியது. 

தைவானில் “ஜனநாயகத்தின் தந்தை” என்று அழைக்கப்படும் ஜனாதிபதி லீ டெங்-ஹுய் (Lee Teng-Hui) தைவான் அரசியலமைப்பை ஜனநாயகம் நோக்கி வழிநடத்தி ஜனநாயகப்படுத்தினார். இதன் விளைவாக, 1996 தைவான் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கட்சி (Democratic Progressive Party) போட்டியிட்டது ஆனால் லீ டெங்-ஹூயிடம் தோற்றது. ஆனால், 2000 தைவான் ஜனாதிபதி தேர்தலில் சீன தேசியவாத கட்சியை சேர்ந்த லியன் சானை (Lien Chan) எதிர்த்து ஜனநாயக முற்போக்குக் கட்சி வேட்பாளர் சென் ஷுய்-பியான் (Chen Shui-Bian) தைவான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். இதையொட்டி 2000 இல் தைவானில் சீன தேசியவாத கட்சி சாராத முதல் ஜனாதிபதியாக சென் ஷுய்-பியான் தேர்வானார்.

2000 இல் தைவான் ஜனாதிபதி சென் ஷுய்-பியான் வெளிப்படையாக சுதந்திரத்தை ஆதரிக்க தொடங்கியது சீனாவை அச்சுறுத்தியது. இதற்கிடையே, 2004 இல் சென் ஷுய்-பியான் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, 2005 இல் சீனாவில் இருந்து பிரிந்து செல்ல முயன்றால், தைவானுக்கு எதிராக அமைதியற்ற வழிகளைப் பயன்படுத்த சீனாவின் உரிமையை கூறும் பிரிவினை எதிர்ப்பு சட்டத்தை (Anti-Secession Law) சீனா நிறைவேற்றியது.

2008 தைவான் ஜனாதிபதி தேர்தலில் சீன தேசியவாத கட்சி சார்பில் வென்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மா யிங்-ஜியோ (Ma Ying-Jeou) பொருளாதார ஒப்பந்தங்கள் மூலம் சீனா உடனான உறவுகளை மேம்படுத்த முயன்றார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2016 மற்றும் 2020 இல் ஜனநாயக முற்போக்குக் கட்சி சார்பில் தைவானின் தற்போதைய ஜனாதிபதி சாய் இங்-வென் (Tsai Ing-Wen) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரும் சீனாவிடமிருந்து அதிகாரப்பூர்வ சுதந்திரத்தை கோருகிறார். மேலும் தைவானின் Keep Taiwan Free போன்று பல்வேறு மக்கள் இயக்கங்கள் தைவானின் சுதந்திர உரிமைக்கோரலுக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.
டிரம்ப்பும் பிடெனும்

இராஜதந்திர உறவுகளைத் துண்டித்து 1979 இல் அமைக்கப்பட்ட அமெரிக்க-தைவான் கொள்கையை மீறும் வகையில் 2016 இல் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பை சீனக் குடியரசின் (தைவான்) ஜனாதிபதி சாய் இங்-வென் தொலைபேசியில் அழைத்து “அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து சுமார் 10 நிமிடங்கள்” பேசினார். நீண்ட காலமாக தங்களுக்குரிய அங்கீகாரத்திற்காக பாடுபட்ட தைவான் மக்களால் இந்த திடீர் தொலைபேசி அழைப்பு பரவலான வரவேற்பை பெற்றது. ஆனால், தைவான் அதிபருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசியது சீனாவை கோபப்படுத்தியது.

அக்டோபர் 2021 இல் ஜோ பிடெனின் அமெரிக்க அரசு "தைவான் பிராந்தியத்தை சுற்றி ஒருதலைப்பட்சமாக எந்த மாற்றத்தையும் சீனா மேற்கொள்ளக் கூடாது" என்று எச்சரித்தது. மேலும் நவம்பர் 2021 இல் "1979 தைவான் உறவுகள் சட்டத்தை காப்பதாகவும் தைவானின் சுதந்திரம் தைவானிடம் உள்ளது என்றும் அதை அவர்களுக்கு உள்ளாகவே சுமூகமாக பேசி முடிவெய்த வேண்டும்" என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் சீன அதிபர் சீ சின்பிங்கை சந்தித்த பின்னர் கூறினார்.
தைவானில் வளர்ச்சி

சீனா-தைவான் விவகாரத்தில் தைவான் மீதான சீன அரசின் உரிமைகோரலையும் தைவான் மீதான தைவான் அரசின் உரிமைகோரலையும் நேரடியாக அங்கீகரிக்காத வகையில் அமெரிக்காவின் நிலைப்பாடு உள்ளது. அமெரிக்காவின் நிலைப்பாடு ஆய்வுக்குரியது என்றாலும் அமெரிக்காவின் உதவியோடு தைவான் ஆசியாவின் மிகவும் செழிப்பான பொருளாதாரங்களில் ஒன்றாக வளரத் தொடங்கியது. மின்னணுவியல், ஜவுளி, ஆடை மற்றும் காலணி போன்ற தைவான் உற்பத்தியின் பெரும்பகுதி ஏற்றுமதியில் தொழில்களில் உலகப் புகழ் பெற்றது. 

அமெரிக்காவின் ஆதரவிற்கு பிறகு 1 ஜனவரி 2002 முதல் உலக வர்த்தக அமைப்பில் (World Trade Organisation - WTO) தைவான் உறுப்பினராக உள்ளது. இன்று தைவான் பொருளாதாரம் ஆசியாவில் 8வது பெரிய பொருளாதாரமாகவும் உலகில் 22வது பெரிய பொருளாதாரமாகவும் உள்ளது. 2022 இல் தைவானின் பொருளாதாரம் 4.6% வளர்ச்சியடையும் என்றும் தைவானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் $700 பில்லியன் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் மேம்பட்ட பொருளாதாரக் குழுவில் தைவான் சேர்க்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் 2021 இல் 11 ஆண்டுகளில் மிக விரைவான GDP வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இன்று சீனாவின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் தைவானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
சுருக்கமான கருத்து

சீனக் கம்யூனிஸ்ட் அரசு தைவானை ஒருபோதும் நேரடியாகக் கட்டுப்படுத்தவில்லை என்றாலும் அது எப்போதும் தைவானை ஒரு பிரிந்த மாகாணமாக கருதுகிறது. அதையொட்டி, சீனாவின் அழுத்தத்தால் பல்வேறு சர்வதேச அமைப்புகள் தைவானை சீனாவின் ஒரு மாகாண பகுதியாக (Taiwan, Province of China) பட்டியலிட்டுள்ளது. மொத்தத்தில் தைவானின் பிராந்திய உரிமையில் சீனாவின் அரசியல் நிலைப்பாடு மாறவில்லை. மேலும் சீனா - தைவான் மோதலில் சீனாவை சமரசம் செய்யாமல் மற்றும் தைவானுக்கு உறுதியளிக்காமல் அமெரிக்கா தனது அரசியல் சாதுரியத்துடன் எவ்வளவு காலம் முன்னேற முடியும்? என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.
முடிவுரை 

இன்று பூர்வீக தைவானியர்கள் மற்றும் மெயின்லேண்டர்கள் தங்கள் கசப்பான காலங்களை மறந்து தைவானின் எதிர்கால நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றனர் மற்றும் சீனாவிடம் இருந்து முழு ஜனநாயக சுதந்திரம் கோரி தைவானிய தேசியவாதத்தை வலியுறுத்துகின்றனர். உலகப் பொருளாதாரத்தில் உயரப் பறந்தாலும் தைவானின் சுதந்திரம் மோசமான நிலையில் இருப்பது வருத்தத்துக்குரியது. இருப்பினும் எதிர்காலத்தில் தைவானியர்களின் சுதந்திர போராட்ட முடிவில் ஒரு வெளிச்சம் இருக்கும் என்று நம்புவோம்.
விவரணைகள்

Who owns Taiwan?

Taiwan and China explained


Why China and Taiwan hate each other?


Why China and the US are at odds over Taiwan?


Three experts on U.S.A role and response options in Taiwan-China conflict


China and Taiwan - A really simple guide to a growing conflict


What's behind the China-Taiwan divide? 


US warns China over pressure on Taiwan


Trump and Tsai Call - The dynamics in Taiwan

https://thediplomat.com/2016/12/the-tsai-trump-call-the-dynamics-in-taiwan/

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Saturday, February 12, 2022

சீனா - ஹாங்காங் அரசியல்

சீனா - ஹாங்காங் அரசியல்

சுருக்கம்
  1. முகவுரை
  2. அபின் போர்கள் 
  3. ஹாங்காங்கின் வளர்ச்சி
  4. ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்
  5. ஹாங்காங்கின் அரசியல்
  6. சீனாவின் ஆதிக்கம்
  7. குடை இயக்கம்
  8. 2019 ஹாங்காங் போரட்டம்
  9. முடிவுரை
  10. விவரணைகள் 
முகவுரை

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் 1997 இல் பிரிட்டிஷ் அரசு தனது காலனி நாடான ஹாங்காங்கை ஒப்படைத்த போது ஹாங்காங்கின் பல தனித்துவமான அம்சங்களை சுதந்திரமாக அனுபவிக்க ஹாங்காங்கிற்கு 50 ஆண்டுகள் அவகாசம் அளிப்பதாகவும் பின்னர் வரும் ஆண்டுகளில் மேலும் முடிவு எடுப்பதாகவும் சீன அரசு உறுதியளித்தது. ஆனால், இன்று உலகின் மிக முக்கியமான நிதி மையங்களில் ஒன்றான ஹாங்காங்கில் ஜனநாயகத்தை கடுமையாக நிராகரிப்பதன் மூலம் சீனாவின் வாக்குறுதிகள் பொய்த்து போவதாக தெரிவது கவலைக்குரியது.

ஏன் அப்படி? வாருங்கள், இதைப் பற்றி மேலும் அறிய கட்டுரைக்குள் நுழைவோம். 

அபின் போர்கள் 

சீனர்கள் பிரிட்டிஷ் அபினை ஒரு பொழுதுபோக்கிற்கான போதைப்பொருளாக புகைத்தனர். ஆனால், நாளடைவில் பலருக்கு பொழுதுபோக்காக ஆரம்பித்தது விரைவில் ஒரு பெரிய போதையாக மாறியது. இதையொட்டி பிரிட்டிஷின் அபின் வர்த்தகத்தை சீன குயிங் பேரரசு எதிர்த்த காரணத்தால் 1839 இல் சீனாவுக்கும் பிரிட்டிஷிக்கும் இடையே முதல் அபின் போர் (First Opium War) தொடங்கியது. 1841 இல் சிறிய மீன்பிடி சமூகமாகவும் கடற்கொள்ளையர்களுக்கு புகலிடமாகவும் அரிதாக மக்கள் வசித்த இடமாகவும் விளங்கிய ஹாங்காங்கை ஆக்கிரமித்து அதை இராணுவ நிலையமாக பயன்படுத்த தொடங்கியது பிரிட்டிஷ். இறுதியாக 1842 இல் நான்கிங் ஒப்பந்தத்தின் (Treaty of Nanking) மூலம் முதல் அபின் போரை முடிவுக்கு கொண்டு வந்த சீன குயிங் பேரரசு ஹாங்காங்கை பிரிட்டிஷிற்கு வழங்கியது, வெளிநாட்டு வணிகர்களுக்கு ஐந்து சீன துறைமுகங்களை திறந்தது, வணிக சலுகைகளை வழங்கியது மற்றும் துறைமுக பகுதியில் உள்ள பிரிட்டிஷ் குடிமக்களுக்கு சீன சட்டம் பொருந்தாது என்பதை உறுதி செய்தது.
அபின் வர்த்தகத்தை இன்னும் எளிமையாக்கவும் சீனாவில் அதிகப்படியான வணிக சலுகைகளைப் பெறவும் பிரிட்டிஷும் பிரான்சும் கைகோர்த்து சீனாவுக்கு எதிராக 1856 இல் இரண்டாம் அபின் போரில் (Second Opium War) ஈடுபட்டது. 1860 இல் இரண்டாம் அபின் போர் முடிந்த பிறகு கவுலூன் தீபகற்பத்தை (Kowloon Peninsula) உள்ளடக்கியதாக பிரிட்டிஷ் காலனி விரிவடைந்தது. மேலும் 1898 இல் சீனாவிடம் இருந்து புதிய பிரதேசங்கள் (New Territories) என்று அழைக்கப்படும் ஹாங்காங்கின் எஞ்சிய பகுதிகளை 99 வருட குத்தகைக்கு பிரிட்டிஷ் பெற்ற போது ஹாங்காங்கின் எல்லை மேலும் நீட்டிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த ஹாங்காங்கின் நாகரீக வளர்ச்சியையும் பொருளாதார வளர்ச்சியையும் பிரிட்டிஷ் உறுதி செய்தது.

ஹாங்காங்கின் வளர்ச்சி

ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா ஆழ்கடல் துறைமுகம் ஆசியாவின் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாகும். மேலும் பல சிறந்த துறைமுகங்களை கொண்ட ஹாங்காங் ஏற்றுமதி இறக்குமதி மையத்தின் துறைமுகமாக மாறியது. 1950 களில் ஹாங்காங் பெருநிறுவனங்களுக்கு சர்வதேச நிதி மையம், வணிக மையம் மற்றும் வர்த்தக மையமானது. சிறிய மீன்பிடி சமூகமாக இருந்த ஹாங்காங் நாளடைவில் "கிழக்கின் முத்து" ஆனது என்றால் மிகையல்ல. மேலும் சீனாவின் பிரதான நிலப்பரப்பில் நிலவிய உறுதியற்ற தன்மை, வறுமை அல்லது துன்புறுத்தல் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் மத்தியில் ஹாங்காங் புகலிடமாக இருந்தது.
ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்

1980 களின் முற்பகுதியில் 99 ஆண்டு குத்தகைக்கான காலக்கெடு நெருங்கிய போது பிரிட்டிஷும் சீனாவும் ஹாங்காங்கின் எதிர்காலம் குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தன. சீனக் கம்யூனிஸ்ட் அரசு ஹாங்காங் முழுவதையும் மீண்டும் சீன ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று வாதிட்டது. இறுதியாக 1984 இல் இரு தரப்பும் சீன-பிரிட்டிஷ் கூட்டு ஒப்பந்தத்தில் (Sino-British Joint Declaration) கையெழுத்திட்டது. 

இவ்வொப்பந்தம் மூலம் 99 ஆண்டு குத்தகைக்கான காலக்கெடு முடிந்த பிறகு 1997 முதல் “ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்” (One Country, Two Systems) என்ற கொள்கையின் கீழ் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பகுதியாக (Hong Kong Special Administrative Region - HKSAR) நிர்வகிக்கப்படும் என்றும் 50 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை தவிர அதிக அளவிலான சுயாட்சியை கொண்டிருக்கும் என்றும் பிற்கால நிலை குறித்து வரும் ஆண்டுகளில் கலந்தாலோசிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. 

ஹாங்காங்கிற்கு சொந்த சட்ட அமைப்பு, எல்லைகள், ஒன்று கூடும் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகளை பாதுகாப்பதாக கூறினாலும் கூட்டு ஒப்பந்தத்தை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையில் "தற்போதைய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்கு மாற்று ஒப்பந்தம் இல்லை" என்ற கூற்று சீனாவின் குறிப்பிடத்தக்க செல்வாக்கை சுட்டிக்காட்டுவதாக விமர்சிக்கப்பட்டது.
ஹாங்காங்கின் அரசியல்

1997 முதல் சீன கம்யூனிஸ்ட் அரசின் ஆதரவை பெற்றவர் மட்டுமே ஹாங்காங் அரசின் தலைமை நிர்வாகியாக (Chief Executive of Hong Kong) பொறுப்பேற்கிறார். 75 லட்சம் மக்கள் தொகையும் 45 லட்சம் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1500 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் குழு மூலம் மட்டுமே தலைமை நிர்வாகி தேர்ந்தெடுக்கப்படுகிறார். 1997-2047 காலகட்டத்திற்குப் பிறகு ஹாங்காங்கின் அரசியல் நிலை என்னவாக அமையப்போகிறது என்பது எதிர்காலத்தில் தான் தெரியவரும்.
சீனாவின் ஆதிக்கம்

இன்று ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்ட சுதந்திரம் சீரழிந்து வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. ஹாங்காங்கில் சொந்த சட்ட அமைப்பு வழங்கிய ஜனநாயக உரிமை, பத்திரிகை சுதந்திரம் மற்றும் கல்வி சுதந்திரம் வீழ்ச்சியடைந்து வருவதாக பரவலாகக் கருதப்படுகிறது. மேலும் ஹாங்காங்கில் அரங்கேறும் சீன ஆதிக்கத்தை விமர்சித்து கட்டுரைகள் எழுதிய ஹாங்காங் எழுத்தாளர்களை சீன அரசு கைது செய்தது. ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் சீன அரசு தலையிடுவதாக ஹாங்காங் மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன. இதையொட்டி, ஹாங்காங்கில் உள்ள பெரும்பாலான மக்கள் சீன இனத்தவர்களாக இருந்தாலும் ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் அங்குள்ள பெரும்பான்மையான மக்கள் தங்களை சீனர்கள் என்று அடையாளப்படுத்துவதில்லை.
குடை இயக்கம்

2017 ஹாங்காங் தலைமை நிர்வாகி தேர்தல் குறித்த தேசிய மக்கள் காங்கிரஸ் (National People's Congress - NPC) நிலைக்குழுவின் 2014 ஆகஸ்ட் 31 ஆம் தேதி முடிவின் அடிப்படையில் சீனா ஒரு உண்மையான ஜனநாயக தேர்தல் முறையை உருவாக்க விரும்பவில்லை என்ற அச்சத்தை ஏற்படுத்திய காரணத்தால் 2014 இல் ஹாங்காங்கில் போராட்டம் வெடித்தது. 2014 ஹாங்காங் பொதுமக்கள் சீற்றத்தின் திடீர் வெடிப்புக்கு ஆழமான வேர்களைக் கொண்டிருந்தது.

2014 நிலைக்குழுவின் முடிவுக்கு முன்னர் வரை 2017 ஹாங்காங் தலைமை நிர்வாகி தேர்தலை உள்ளூர் கருத்துகளின் வரம்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சீனத் தலைவர்கள் நெகிழ்வுத்தன்மையுடன் அணுகுவார்கள் என்று ஹாங்காங்கில் நம்பிக்கை நிலவியது. அதற்கு பதிலாக நிலைக்குழு வகுத்துள்ள புதிய விதிகளின்படி சீன அரசு தங்கள் நலன்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யக்கூடிய வகையில் நியமனக் குழுவைக் கட்டுப்படுத்த முடியும் என்ற உட்பொருளை வெளிப்பட்டது.

காவல்துறையினரின் மிளகு தெளிப்பான் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள போராட்டக்காரர்கள் குடைகளைத் திறந்ததால் இந்த இயக்கத்திற்கு குடை இயக்கம் என்று பெயரிடப்பட்டது. ஹாங்காங் ஆட்சியின் உச்சபட்ச தலைவரான தலைமை நிர்வாகியை ஹாங்காங் மக்கள் அனைவரும் ஜனநாயக வழியில் ஓட்டளித்து தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் சீர்திருத்தம் கோரி குடை இயக்கம் போராடியது.
2019 ஹாங்காங் போரட்டம்

சீனா, தைவான் அல்லது மக்காவு பகுதிகளில் குற்றம் இழைத்து விட்டு தப்பியோடி வந்த ஹாங்காங்வாசிகளை சீனா, தைவான் அல்லது மக்காவு பகுதிகளுக்கு நாடு கடத்தி குற்ற வழக்கு விசாரணை நடத்த ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத் திருத்த மசோதாவை (Anti-Extradition Law Amendment Bill Movement) கேரி லாம் தலைமையிலான ஹாங்காங் அரசு பிப்ரவரி 2019 இல் முன்மொழிந்தது.
சீனாவிலிருந்து பூரண சுதந்திர அந்தஸ்து கோரும் அரசியல் ஆர்வலர்களையும் சீன அதிருப்தியாளர்களையும் நாடு கடத்துவதற்கு இந்த சட்ட மசோதா தவறாகப் பயன்படுத்தப்படும் என்று ஹாங்காங் மக்கள் கருதினர். இதையொட்டி, சீனாவின் கைப்பாவையாக செயல்படும் ஹாங்காங் அரசை விமர்சித்தும், சீனாவின் ஆதிக்கத்தை கண்டித்தும், புதிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் 15 மார்ச் 2019 முதல் ஹாங்காங் மக்கள் கடுமையாக போராட தொடங்கினர். சீன அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஹாங்காங் அரசு முழு அரசு பலத்தை பயன்படுத்தி போராட்டத்தை நிறுத்த தங்களால் இயன்றவரை முயற்சித்தது. ஆனால், மக்களின் தொடர் போராட்டத்தால் ஹாங்காங் அரசு பணிந்தது. இறுதியாக 23 அக்டோபர் 2019 அன்று அதிகாரப்பூர்வமாக மசோதா திரும்பப் பெறப்பட்டது.

போராட்டத்தை கலவரம் என்று வகைப்படுத்தல் கூடாது, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குதல், காவல்துறையின் அட்டூழியங்கள் குறித்து சுதந்திரமான விசாரணை, ஹாங்காங் அரசின் தலைமை நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஜனநாயக வாக்குரிமை வழங்குதல் போன்ற கோரிக்கையை எழுப்பிய மக்கள் குரலுக்கு ஹாங்காங் அரசு செவி சாய்க்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முடிவுரை

1997 இல் பிரிட்டிஷ் அரசு ஹாங்காங்கை ஒப்படைத்த போது "ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்" என்று அழைக்கப்படும் ஒரு கட்டமைப்பின் கீழ் 50 ஆண்டுகளுக்கு பிராந்தியத்திற்கு கணிசமான அரசியல் சுயாட்சியை அனுமதிக்க சீனா ஒப்புக்கொண்டது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் ஹாங்காங்கின் சுதந்திரத்தை ஒடுக்குவதன் மூலம் நகரத்தில் வெகுஜன எதிர்ப்புகளையும் சர்வதேச விமர்சனங்களையும் சீன அரசு சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய காலகட்டத்தில் ஹாங்காங் மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகள் ஒப்பீட்டளவில் பதட்டமானவை. இப்போதும் ஹாங்காங்கில் சுதந்திரம் கோரி போராட காரணங்கள் அப்படியே தான் உள்ளன. ஆனால், ஹாங்காங் விடுதலை கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் தெரியவில்லை. அதே நேரத்தில் ஹாங்காங்கில் சுதந்திரம் கோரிய போராட்ட உணர்வாளர்கள் உறங்கவில்லை என்பதையும் Be Water, My Friend என்று குறிப்பிட்ட One Man Army புரூஸ் லீ இதே ஹாங்காங்கிலிருந்து வந்தவர் என்பதையும் சான்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விவரணைகள் 


History of Hong Kong from Britain to Special Status

How Britain Got China Hooked on Opium?



வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -