Chocks: இஸ்ரேல்-ஈரான் மோதல் மற்றும் யூத-அரேபிய உறவுகள்

Wednesday, October 2, 2024

இஸ்ரேல்-ஈரான் மோதல் மற்றும் யூத-அரேபிய உறவுகள்

இஸ்ரேல்-ஈரான் மோதல் மற்றும் யூத-அரேபிய உறவுகள்

குறிப்பு = இந்த சுருக்கமான கட்டுரை, ஆழமாக (Depth) விவரிக்காமல், குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் மேலோட்டத்தை அகலமாக (Broad) வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்பின் காலகட்டங்களை உள்ளடக்கிய இந்த கட்டுரை ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் பொதுவான தகவல்களை வழங்குகிறது. இது தலைப்பின் இறுதி ஆய்வாக கருதப்படக்கூடாது. ஒரு முழுமையான புரிதலுக்காக, தலைப்பில் இன்னும் விரிவான ஆதாரங்களைப் பார்க்க வாசகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

பொருளடக்கம் 
  1. முகவுரை 
  2. தற்கால போர்கள்
  3. ஒளிந்திருக்கும் உள் அரசியல்
  4. புவிசார் அரசியல்
  5. ஈரான் அரசியல் 
  6. இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்
  7. பின்னிணைப்பு
  8. விவரணைகள்
  9. முடிவுரை 
முகவுரை 

ஒரு வல்லரசு மற்றொரு வல்லரசின் அண்டை நாடுகளுக்கு அல்லது எதிரி நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்கும் போது, ​​அதனை வல்லரசுகள் பெரிதாக அலட்டிக் கொள்ளாது. ஆனால், தொழில் ரீதியாக ஆயுதங்களை வழங்குவதோடு நிறுத்தாமல், ஒரு வல்லரசு மற்றொரு வல்லரசின் விவகாரங்களில் நேரடியாக தலையிட்டால், அது குறிப்பிடத்தக்க மோதலுக்கு வழிவகுக்கும். மேலும், வல்லரசுகள் தங்களுக்கிடையே நேரடி மோதலில் ஈடுபட்டால், அது உலகப் போர் அல்லது மிகப் பெரிய மோதலாக விரிவடையக்கூடிய சாத்தியம் உள்ளது. இந்த கட்டுரையில், 2020 முதல் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க போர்களை வரலாற்று சூழலுடன் சுருக்கமாக ஆராய்வோம்.
தற்கால போர்கள்

தற்கால போர்களின் நிகழ்வுகள் 2014 இல் "ரஷ்யா-கிரிமியா" மோதலுடன் தொடங்கின. இது உலகளாவிய அரசியல் பதட்டத்திற்கு சாத்தியமான ஊக்கமாக கருதப்பட்ட போதிலும், ரஷ்யா-கிரிமியா மோதல் உலகத்தின் கவனத்தைப் பெறவில்லை. அதன் தொடர்ச்சியாக, 2022 இல் "ரஷ்யா-உக்ரைன்" மோதல் ஏற்பட்டது. அதன் பின், யூத-அரேபிய இடையிலான மோதலாக 2023 இல் "இஸ்ரேல்-பாலஸ்தீனம்" மோதல் உருவானது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதலின் தாக்கத்தால் 2024 இல் "இஸ்ரேல்-ஈரான்" இடையிலான பதட்டங்களை உருவாக்கி, யூத-அரேபிய பிரிவின் பரந்த சூழலை பரிணமித்தது.

மொத்தத்தில், ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் மற்றும் இஸ்ரேல்-ஈரான் போர் சூழல்கள் உலக நாடுகளையும் ஊடகங்களையும் அதிக அளவில் ஈர்த்துள்ளன.

ஒளிந்திருக்கும் உள் அரசியல்

சபஹார் துறைமுகம் (Chabahar Port) தொடர்பாக இந்தியாவுடன் ஈரான் செய்துள்ள ஒப்பந்தத்தை அமெரிக்கா ரசிக்கவில்லை. இந்த பின்னணியில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாடு, யூத வழி வந்த இஸ்ரேலின் வளர்ச்சிக்கு எதிராக ஷியா வழி வந்த ஈரான் கொண்டுள்ள நிலைப்பாடு போன்றவை கூர்ந்து கவனிக்க வேண்டியதாகும்.

யூத-அரேபிய போரில் ரஷ்யாவின் பங்கு ஆய்வுக்குரியதாகும், ஏனெனில் தற்சமயம் ரஷ்யா வகிக்கும் நடுநிலைமை முக்கியத்துவம் வாய்ந்தது. அதே நேரத்தில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. ஒரு வேளை, ரஷ்யா களத்தில் இறங்கி அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தால், யூத-அரேபிய மோதலில் குறிப்பாக "இஸ்ரேல்-ஈரான்" மோதல் உலகளாவிய மூன்றாம் உலகப் போராக அல்லது மீண்டும் ஒரு பனிப்போராக வெடிக்கும் வாய்ப்பு உள்ளது.
புவிசார் அரசியல்

ஈரானியர்கள் ஷியா (Shia) பிரிவை, பாலஸ்தீனியர்கள் சன்னி (Sunni) பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆவர். எனவே, இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் என்பது பாலஸ்தீனிய அரசியல் கோரிக்கைகளை ஆதரிப்பதற்காக அல்ல; மாறாக, இஸ்ரேலின் பிராந்திய மேலாதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாகும்.

சன்னி பிரிவை சேர்ந்த பாலஸ்தீனியர்கள், "ஏமன், ஈரான், ஈராக், லெபனான், சிரியா" போன்ற ஷியா பிறை (Shiite Crescent) நாடுகளில் உள்ள அரசியல் செல்வாக்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குகிறார்கள். ஷியாவை சேர்ந்த சிரியா மற்றும் பிற பிராந்தியங்களுக்கு எதிரான சன்னி தலைமையிலான ISIS போர் போன்ற பல்வேறு மோதல்களின் மூலம், சன்னி தரப்பினர் ஷியா சக்தி பலவீனமடைவதை விரும்புகிறார்கள்.

மொத்தத்தில், ஷியா நாடுகள், சன்னிகள் அதிகமாக உள்ள பாலஸ்தீனப் போராட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. மாறாக, அரேபியர்களுக்கு (சன்னிகள்) எதிராக யூத இஸ்ரேலின் அரசியல் எழுச்சி, ஈரான் மற்றும் ஈராக் (ஷியாக்கள்) நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. எனவே, இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் போரிடுகிறது. அதாவது, இஸ்ரேல்-ஈரான் மோதல் புவிசார் அரசியலில் (Geopolitical Dynamics) வேரூன்றியுள்ளது.

ஈரான் அரசியல் 

தற்கால போர்களின் நெருக்கடியான சூழலில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விமான விபத்தில் மரணித்துள்ளார். ஈரானின் அடுத்த உச்சத் தலைவராக இப்ராஹிம் ரைசி வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இந்த விமான விபத்தை சாதாரணமாகக் கருத முடியாது. இதற்கிடையில், ஈரானும் உலக அரசியலும் புதிதல்ல. எடுத்துக்காட்டாக, 1953 மற்றும் 1979 சம்பவங்களை சுருக்கமாகப் பகிர்கிறேன். 

1951 இல் ஈரான் எண்ணெய் தொழிலில் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா உரிமை கொண்டாடுவதை விரும்பாத ஈரான் பிரதமர் முகமது மொசாதேக், ஈரான் எண்ணெய் தொழிலை தேசியமயமாக்கினார். இதற்கு எதிராக, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா அரசுகள் 1953 இல் ஈரான் அரசை சதித்திட்டம் தீட்டி கவிழ்த்தனர். இதற்காக, அமெரிக்காவின் CIA மற்றும் பிரிட்டிஷின் MI6 உறுதுணையாகப் பணியாற்றின. வல்லரசு ஆதரவில், ஈரானின் அனைத்து அதிகாரங்களையும் புதிதாக பெற்ற பஹ்லவி, ஈரான் அரசராக அமர்ந்தார். அரசரான பஹ்லவி, ஈரான் எண்ணெய் தொழிலில் அமெரிக்க நிறுவனங்களுக்கு 40% உரிமையை வழங்கினார்.

1953 முதல் 1979 வரை, மேற்கத்திய நாடுகளின், குறிப்பாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஆதரவால் ஆட்சி செய்த பஹ்லவி ஆட்சியை விரும்பாத ஈரான் மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். புரட்சியின் வெளிப்பாடாக, பஹ்லவி ஆட்சி கலைக்கப்பட்டு, கொமேனி (Khomeini) ஈரானின் உச்சத் தலைவராக புதிய பதவிக்கு வந்தார். ஷியா பிரிவை சேர்ந்த பஹ்லவியின் மேற்கத்திய அடிப்படையிலான ஆட்சி தூக்கியெறியப்பட்டு, அதே பிரிவை சேர்ந்த கொமேனியின் இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையில் மதவாத ஆட்சி அமைக்கப்பட்டது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்

ஆபிரகாமின் வழித்தோன்றல்களான பண்டைய இஸ்ரவேலர்கள் கானானில் குடியேறினர். கானானில் ஏற்பட்ட பஞ்சம், இஸ்ரவேலர்களை எகிப்துக்கு குடிபெயர வழிவகுத்தது; அங்கு அவர்கள் இறுதியில் அடிமைப்படுத்தப்பட்டனர். பத்து கட்டளைகளை பெற்ற பிறகு, மோசே இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வாக்களிக்கப்பட்ட தேசத்தை (The Promised Land) நோக்கி அழைத்து சென்றார். பாலைவனத்தில் தண்ணீர் வழங்கல் தொடர்பாக மோசேயின் கீழ்ப்படியாமை (Striking the Rock), அவரை வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் நுழைவதை தடுத்தது. மோசேக்கு பதிலாக, யோசுவா இஸ்ரவேலர்களை கானானுக்கு அழைத்து சென்றார்; அங்கு அவர்கள் கானானிய பழங்குடியினரை எதிர்கொண்டனர்.

பல்வேறு பேரரசுகளின் வரலாற்றை கொண்ட இன்றைய நாடுகளின் பகுதிகளை கானான் உள்ளடக்கியது. 7 ஆம் நூற்றாண்டு தொடங்கி, கானானில் அரேபியர்களின் செல்வாக்கால் மதமாக இஸ்லாம் உருவானது. 1917 இல் பால்ஃபோர் பிரகடனம் (Balfour Declaration), யூத தாயகத்தை ஆதரித்தது; பிரிட்டிஷ் ஆட்சியின் போது, பாலஸ்தீனத்தில் யூதர்கள் அதிக அளவில் குடியேற்றத்திற்கு வழிவகுத்தது. பல நூற்றாண்டுகளாக ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த பாலஸ்தீனம், சுயநிர்ணயம் மற்றும் மாநில உரிமையை கோரி வந்த நிலையில், 1948 இல் உருவாக்கப்பட்ட இஸ்ரேல், இஸ்ரேல் எதிர் நிலையில் பாலஸ்தீனம் என இரு நாட்டு மோதலுக்கு வழிவகுத்தது.

யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்களுக்கு புனிதமான இடமாகக் கருதப்படும் கோவில் மலையை (Temple Mount) இஸ்ரேல் பராமரிக்கிறது. கானான் பகுதியில் அமைந்துள்ள காசா (Gaza Strip) பகுதியை பாலஸ்தீனம் நிர்வகிக்கிறது. காசா மற்றும் கோவில் மலை, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான அரசியல், மத மற்றும் கலாச்சார மோதல்களுக்கு மைய புள்ளிகளாக மாறி, யூத-அரபு மோதலின் அடிப்படையை உருவாக்குகின்றன.

யூதர்கள் தங்களை கடவுளின் குழந்தைகள் என்றும், உலகின் மூத்த குடிமக்கள் என்றும் கருதுகின்றனர். யூத மதத்தில் வேரூன்றிய கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்கள், உலகளாவிய சமூகம், அரசியல், பொருளாதாரம் மற்றும் மத விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்துவதால், மேட்டிமை மனப்பான்மை கொண்ட யூத மதம் அதை விரும்பவில்லை. இதுவே தொடரும் மோதல்களின் அடிப்படையாக இருக்கிறது என வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.
முடிவுரை 

யூத-அரேபிய மோதலுக்கு கிறிஸ்தவ பெரும்பான்மையுள்ள நாடுகள் மத்தியஸ்தப் பாத்திரத்தை கையாண்டு வந்தாலும், பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்திய போது, அந்நாடுகள் செயலற்ற நிலையில் வேடிக்கை பார்த்தன. இருப்பினும், இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுத்த போது, திடீரென விழித்து கொண்டது போல கண்டனங்களை தெரிவித்தன. இதனால், தற்கால போர்களில் முக்கியமாக "இஸ்ரேல்-ஈரான்" மோதல் தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. இந்த மோதல் தனிப்பட்ட நாடுகளுக்கிடையே வளைகுடா போராக விரிவடையலாம், வல்லரசுகள் ஈடுபட்டால் மூன்றாம் உலகப் போராக பரிணமிக்கலாம், அல்லது அமைதிக் கொடியை உயர்த்தி, அடுத்தடுத்து போரே நடைபெறாமல் போகலாம்.

உலக நாடுகளில் நிலவும் அரசியல் நிகழ்வுகள் போர் பதட்டங்களை மட்டுமல்ல, பொருளாதார இழப்புகளை அதிகரிக்கவும் செய்கின்றன. இதனால், இந்த மோதலின் உலகளாவிய விளைவுகளையும் அடுத்ததாக வரவிருக்கும் நிலைமைகளையும் பொறுத்திருந்து கவனிக்க வேண்டும்.

பின்னிணைப்பு 

// நேரு-மோடி நிலைப்பாடு //

வரலாற்று ரீதியாக, 1950 களுக்குப் பிறகு, பாலஸ்தீனிய நிலங்கள் இஸ்ரேலால் சர்வதேச ஆதரவும் எதிர்ப்பும் எதிர்கொண்ட நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டன. இந்நிலையில், நேருவின் ஆட்சிக்காலத்தில், இந்தியா பாலஸ்தீனின் கோரிக்கைகளை ஆதரித்தது. ஆனால் மோடியின் ஆட்சிக்காலத்தில், இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கத் தொடங்கியது.

// ஆரிய அரசியல்  // 

பாலஸ்தீனம் முதல் ஈரான் வரை உள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளை இந்துத்துவா கும்பல் தீவிரமாக ஆதரிக்கிறது. இவ்வாறு, இஸ்ரேலுக்கான இந்துத்துவா கும்பலின் ஆதரவு ஒரு வரலாற்று தொடர்பைக் கொண்டுள்ளது. அதாவது, யூதர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும், அவர்கள் அரசியல் நடவடிக்கைகள் மூலம் பாலஸ்தீனத்தில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறார்கள். அதே நேரத்தில், ஆரியர்கள் (இந்துத்துவா கும்பல்) எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும், அவர்கள் மத சடங்குகள் மூலம் இந்தியாவில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறார்கள். மேலும், யூதர்களும் ஆரியர்களும் பிற இனங்களுடன் கலந்தாலும், இனத்தூய்மை பற்றி இன்னமும் பேசிக் கொண்டிருப்பது விசித்திரமானது.

விவரணைகள்

யூதம் - கிறிஸ்தவம் - இஸ்லாம் ஓர் பார்வை

https://chocksvlog.blogspot.com/2020/10/1.html

ஆதாம் ஏவாள் வம்சமும் ஆபிரகாமிய மதங்களும்

https://chocksvlog.blogspot.com/2020/11/3.html

Israeli-Palestinian Conflict

https://chocksvlog.blogspot.com/2023/10/israeli-palestinian-conflict.html

Fundamentals of Abrahamic Religions

https://chocksvlog.blogspot.com/2020/11/2.html




Scientist Einstein and Socialist Nehru on Israel and Palestine


Israel’s first PM asked Nehru to help promote peace in the Region


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

சோழர்கள் பற்றி சில செய்திகள்

சோழர்கள் பற்றி சில செய்திகள் விளக்கம் =  இந்த சுருக்கமான கட்டுரை, ஆழமாக (Depth) விவரிக்காமல், குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் மேலோட்டத்தை அகலம...