அ.தி.மு.க பிறந்த கதை
குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
பொருளடக்கம்
- முகவுரை
- காரணம் ஒன்று - கணக்கு
- காரணம் இரண்டு - நாவலர்
- காரணம் மூன்று - ஜெயலலிதா
- காரணம் நான்கு - மு.க.முத்து
- காரணம் ஐந்து - இந்திரா காங்கிரஸ்
- காரணம் ஆறு - அமைச்சர் பதவி
- அ.தி.மு.க உருவாக காரணிகள்
- கால அட்டவணை
- விவரணைகள்
- முடிவுரை
முகவுரை
தமிழ்நாடு முதல்வரும் தி.மு.க தலைவருமான அண்ணாதுரை 3 பிப்ரவரி 1969 அன்று மறைந்தார். அவரின் மறைவிற்கு பின் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்ற குழப்பமான சூழல் நிலவியது. தமிழ்நாட்டின் முதல்வராக நாவலர் நெடுஞ்செழியன் விரும்பியிருந்தாலும், கட்சிக்குள் அவருக்கு பெரிய ஆதரவு இல்லை.
எம்.ஜி.ஆர் உட்பட தி.மு.க உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும்பான்மையாக, கலைஞர் தாமே முன்வரத் தயங்கியிருந்த நிலையிலும், அவரையே முதல்வராக ஆதரித்தனர். இறுதியில் கலைஞர் தமிழ்நாட்டின் முதல்வராகவும் தி.மு.க தலைவராகவும் பொறுப்பேற்றார். நாவலர் நெடுஞ்செழியன் அமைச்சராகவும் தி.மு.க பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்றார்.
காரணம் ஒன்று - கணக்கு
1971ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தனது பரங்கிமலைத் தொகுதியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டு பேசினார். அப்போது “கருணாநிதிபுரம்” எனப் பெயரிடப்பட்ட புதிய குடியிருப்பு பகுதியையும் அவர் திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் கலைஞருடன் கொண்டிருந்த தனது நீண்டகால நட்பைப் பற்றி அவர் பாராட்டிப் பேசினார்.
1972இல் மதுரையில் நடைபெற்ற தி.மு.க மாநாட்டில் மேடையில் பேசிய எம்.ஜி.ஆர், “தி.மு.க ஒரு ஊழல் கட்சி என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது; மக்களாகிய நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். உடனே மக்கள் “இல்லை” என்று கரகோஷத்துடன் பதிலளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்று கூறினார்.
இவ்வாறு தி.மு.க அரசியல்வாதியாக தனது நிலையை வெளிப்படுத்திக் கொண்ட எம்.ஜி.ஆர், படிப்படியாக கட்சியைப் பற்றிய தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை காட்டத் தொடங்கினார். அதே ஆண்டில் தி.மு.க பொருளாளர் பதவியில் இருந்தபடியே, உட்கட்சி கூட்டத்தில் பேசப்பட வேண்டிய ஒரு விஷயத்தை பொதுவெளியில் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டாக முன்வைத்தார். தி.மு.க தலைவர்கள் வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர்கள் தங்களது சொத்துக் கணக்குகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் 1972ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற கட்சி மாநாட்டிற்காக சேகரிக்கப்பட்ட நிதியின் கணக்கு குறித்தே முதலில் சர்ச்சை எழுந்தது. அந்த நிதி ஐந்து லட்சம் ரூபாய் என எம்.ஜி.ஆர் கூறியபோது, அது ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே என கலைஞர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தி.மு.க செயற்குழு கூட்டத்தில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி எம்.ஜி.ஆர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலைஞரிடம் வலியுறுத்தினர். 1972 அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்ற தி.மு.க கட்சி கூட்டத்தில் 32 உறுப்பினர்களில் 26 பேர் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில், தி.மு.கவிலிருந்து எம்.ஜி.ஆர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக நாவலர் நெடுஞ்செழியன் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 1972 அக்டோபர் 11ஆம் தேதி தி.மு.க சார்பில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு எம்.ஜி.ஆருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்த இடைநீக்கச் செய்தி “நேற்று இன்று நாளை” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக சத்யா ஸ்டுடியோவில் இருந்த எம்.ஜி.ஆருக்கு சென்றடைந்தது. படப்பிடிப்பு முடிந்த பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பாயசம் வழங்கி, தன்னை இடைநீக்கம் செய்ததற்கு மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். தங்களது உச்ச நட்சத்திரம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்; அதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. நோட்டீஸ் வழங்கப்பட்ட பிறகு தி.மு.க சார்பில் நாஞ்சில் மனோகரன், சத்யவாணி முத்து உள்ளிட்டவர்கள் எம்.ஜி.ஆருடன் மத்தியஸ்தம் பேச முயன்றனர். இருப்பினும் அந்த நோட்டீஸுக்கு பதில் அளிக்காமல், 1972 அக்டோபர் 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க) என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார்.
காரணம் இரண்டு - நாவலர்
எம்.ஜி.ஆரை இடைநீக்கம் செய்வதில் கலைஞர் பெரிதாக அவசரம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கலைஞரால்தான் தமக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்று கருதிய தி.மு.க பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன், அந்நேர அரசியல் சூழ்நிலையை திறமையாக பயன்படுத்தி கலைஞரை சிரமத்திற்கு உள்ளாக்க முயன்றார். கட்சிக்குள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படுவதற்கும் முன்பாகவும், கலைஞருடன் ஆலோசிக்காமலும், எம்.ஜி.ஆர் இடைநீக்கச் செய்தியை ஊடகங்களுக்கு அவர் கசியவிட்டார்.
தி.மு.க அரசில் அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன், 1977 ஏப்ரல் மாதத்தில் ராஜாராம், மாதவன், சண்முகம் உள்ளிட்டவர்களுடன் கட்சியை விட்டு வெளியேறி “மக்கள் தி.மு.க” என்ற கட்சியைத் தொடங்கினார். மக்கள் தி.மு.க 1977 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. ஆனால் 1977ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மக்கள் தி.மு.க, அ.தி.மு.கவுடன் இணைந்தது.
தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆரை இடைநீக்கம் செய்ய முக்கிய காரணிகளில் ஒருவராக இருந்தவரும், எம்.ஜி.ஆரை மிகவும் கடுமையாக விமர்சித்தவருமான நாவலர் நெடுஞ்செழியன், ஒருகாலத்தில் "எம்.ஜி.ஆரின் வப்பாட்டி ஜானகி, ஜெயலலிதாவின் கைப்பாவை எம்.ஜி.ஆர்" என விமர்சித்தவராக இருந்தார். ஆனால் பின்னர் அவர் இறுதியில் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க கட்சியிலேயே இரண்டாவது முக்கிய நிலையை வகிக்கும் நிலைக்கு வந்தார்.
1972இல் மதுரையில் நடைபெற்ற தி.மு.க மாநாட்டில் ஜெயலலிதாவை மேடையில் அமர வைக்குமாறு மதுரை முத்துவிடம் எம்.ஜி.ஆர் கோரிக்கை வைத்தார். ஆனால் மதுரை முத்து அதை மறுத்தார். இதையடுத்து எம்.ஜி.ஆர் கலைஞரிடம் சென்று முறையிட்டார்.
தி.மு.கவின் முன்னணி தோழர்களுடன், தி.மு.கவின் உறுப்பினரல்லாத ஒருவரை மேடையில் அமர வைக்க இயலாது என்று கலைஞர் நாசூக்காகவும் நியாயமான முறையிலும் அந்த கோரிக்கையை நிராகரித்தார். இந்த மறுப்பு எம்.ஜி.ஆருக்கு பெரும் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
கலைஞரின் மகன் மு.க.முத்து கதாநாயகனாக அறிமுகமான “பிள்ளையோ பிள்ளை” திரைப்படத்தின் தொடக்க விழாவை 1972ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தொடங்கி வைத்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற “மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ” என்ற பாடலை வாலி எழுதியிருந்தார். அந்த வரிகளை கேட்டு, “மூன்று தமிழ் தோன்றியது மு.க.முத்துவிடம்தானா?” என்று எம்.ஜி.ஆர் சினத்துடன் வாலியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
மு.க.முத்துவின் திரைப்பாத்திரங்களும் அவரது திரைமுகமும் எம்.ஜி.ஆரை ஒத்திருந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் மு.க.முத்துவின் படங்களையும் கொண்டாடத் தொடங்கியதும் எம்.ஜி.ஆருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இதனால் தி.மு.கவில் தனது செல்வாக்கை குறைக்கும் முயற்சிகள் நடக்கிறதோ என்ற சந்தேகம் எம்.ஜி.ஆரின் மனதில் உருவாகத் தொடங்கியது.
காரணம் ஐந்து - இந்திரா காங்கிரஸ்
1971ஆம் ஆண்டு “ரிக்க்ஷாக்காரன்” திரைப்படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வழங்கி காங்கிரஸ் அரசு அவரை கௌரவித்தது.
1972ஆம் ஆண்டு “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்தை எம்.ஜி.ஆர் மிகுந்த பொருட்செலவில் தயாரித்தார். அந்த நேரத்தில், எம்.ஜி.ஆரின் கணக்குகளை ஆய்வு செய்ய மத்திய அரசு வருமான வரி சோதனை நடத்தலாம் என்ற பேச்சுகளும் நிலவின. தமிழ்நாட்டில் காங்கிரஸ் மீண்டும் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள, மாநிலக் கட்சியான தி.மு.கவில் பிளவு ஏற்படுவது அவசியம் என்று இந்திரா கருதியதாகக் கூறப்பட்டது. அந்த நோக்கத்திற்கு பயன்படும் கருவியாக எம்.ஜி.ஆர் பார்க்கப்பட்டார்.
“இதயவீணை” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக காஷ்மீரில் இருந்த எம்.ஜி.ஆர், அங்கிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு 1971ஆம் ஆண்டு தி.மு.க பெற்ற தேர்தல் வெற்றிக்காக கலைஞரை வாழ்த்தி, தனக்கு ஒரு அமைச்சர் பதவியை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு பதிலளித்த கலைஞர் அமைச்சர் பதவி வழங்கத் தயார் என்றும், ஆனால் முழுநேர அரசியல்வாதியாகவும் குறிப்பாக அமைச்சராகவும் செயல்பட விரும்பினால் சினிமாவில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் கூறி அந்த கோரிக்கையை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. சினிமாவையே தனது அரசியல் ஆயுதமாகக் கருதிய எம்.ஜி.ஆர், அதிலிருந்து விலக விரும்பவில்லை. இதன் காரணமாக அந்நேரத்தில் தி.மு.க அரசில் எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
*தி.மு.க = கணக்கு சர்ச்சை
*மு.க.முத்து = நாயகனாக அறிமுகமானது
*ஜெயலலிதா = மதுரை மாநாட்டு மேடை மறுப்பு
*நாவலர் = அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வர் பதவி கிடைக்காத வெறுப்பு
*கலைஞர் = எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி மறுப்பு
*இந்திரா காந்தி = தமிழ்நாட்டில் காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெற முயற்சி
கால அட்டவணை
8 ஏப்ரல் 1972 = தி.மு.க செங்கல்பட்டு கூட்டத்தில் எம்.ஜி.ஆர் உரையாற்றினார்.
27 ஏப்ரல் 1972 = பல்லாவரம் குடிநீர் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் எம்.ஜி.ஆர் உரையாற்றினார்.
28 ஜூலை 1972 = சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற எம்.ஜி.ஆருக்கு தி.மு.க நடத்திய பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர் நன்றி உரையாற்றினார்.
5 ஆகஸ்ட் 1972 = தி.மு.க மதுரை மாநாட்டில் எம்.ஜி.ஆர் உரையாற்றினார்.
8 அக்டோபர் 1972 = தி.மு.க தலைவர்கள் தங்களது சொத்துக் கணக்குகளை வெளியிட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் உரையாற்றினார்.
10 அக்டோபர் 1972 = தி.மு.க செயற்குழுவில் எம்.ஜி.ஆர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவரை தற்காலிகமாக கட்சியிலிருந்து விலக்கி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
11 அக்டோபர் 1972 = தி.மு.க சார்பில் விளக்கம் கேட்டு எம்.ஜி.ஆருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
14 அக்டோபர் 1972 = தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எம்.ஜி.ஆர் அதிகாரப்பூர்வமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
17 அக்டோபர் 1972 = மதுரையில் எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க) கட்சியை தொடங்கினார்.
முடிவுரை
பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆரை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். ஆனால் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் போக்குகள் மாறின. அந்த மாற்றத்தை அண்ணா உயிருடன் இருந்த காலத்தில் வெளியான எம்.ஜி.ஆர் படங்களையும், அண்ணா மறைவுக்குப் பிறகு வெளியான படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது உணர முடிகிறது.
அண்ணா உயிருடன் இருந்த காலத்தில் “நாடோடி மன்னன்”, “ஆயிரத்தில் ஒருவன்” போன்ற எம்.ஜி.ஆரின் பல படங்களில் அரசியல் சாயல் இருந்தாலும், அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969ஆம் ஆண்டு “நம் நாடு” திரைப்படம் மூலம் தேர்தல் அரசியலை நேரடியாக பேசும் கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். முழுநேர அரசியலில் இறங்கவும், மக்களின் மனநிலையை அறிந்து கொள்ளவும் “நம் நாடு” திரைப்படத்தை எம்.ஜி.ஆர் ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டார். இவ்வாறு தனது திரைச் செல்வாக்கை பயன்படுத்தி மக்களின் ஆதரவை பெற்ற எம்.ஜி.ஆர், அண்ணா மறைந்ததிலிருந்து வெறும் 44 மாதங்களுக்குள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) என்ற தனி இயக்கத்தை தொடங்கினார்.
மொத்தத்தில், எம்.ஜி.ஆரின் "கணக்கு" என்பது நிதிக் கணக்கு அல்ல; அது தி.மு.கவுடனான "பிணக்கு" பற்றிய அரசியல் கணக்கு.
விவரணைகள்
அ.தி.மு.க பிறக்க காரணமான நிகழ்வு எது?
கலைஞரின் செயலர் சண்முகநாதன் பேட்டி
Periyar About MGR Politics
MGR Expulsion From DMK
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.




























