வாங்க சும்மா பேசலாம்
குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் ஒரு சொற்பொழிவில் சும்மா என்ற தலைப்பில் உரையாற்றியதை சும்மா படியுங்கள் நிச்சயம் அசந்து தான் போவீர்கள். பேச்சுவழக்கு சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியால் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு சொல் தான் சும்மா. சும்மா என்கிற சொல்லுக்கு தமிழில் 15க்கும் மேற்பட்ட பொருள் உண்டு என்றால் பாருங்களேன். வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை நாம் அடிக்கடி கூறும் இந்த சும்மா அழகாக எடுத்துக்காட்டுகிறது.
1. கொஞ்சம் "சும்மா" இருடா!
=> அமைதியாக / Quiet
2. கொஞ்ச நேரம் "சும்மா" இருந்து விட்டுப் போகலாமே?
=> களைப்பாறி கொண்டு / Leisurely
3. அவரைப் பற்றி "சும்மா" சொல்லக் கூடாது!
=> அருமை / Fact
4. இது என்ன "சும்மா" கிடைக்கும் என்று நினைத்தாயா?
=> இலவசமாக / Free
5. "சும்மா" கதை விடாதே?
=> பொய் / Lie
6. "சும்மா" தான் இருக்கு நீ வேண்டுமானால் எடுத்துக்கொள்.
=> உபயோகமற்று / Without Use
7. "சும்மா", "சும்மா" கிண்டல் பண்ணுகிறான்.
=> அடிக்கடி / Very Often
8. இவன் இப்படி தான் "சும்மா" சொல்லிக்கிட்டே இருப்பான்.
=> எப்போதும் / Always
9. ஒன்றுமில்லை "சும்மா" தான் சொல்லுகிறேன்.
=> தற்செயலாக / Just
10. இந்த பெட்டியில் வேறெதுவும் இல்லை "சும்மா" தான் இருக்கின்றது.
=> காலி / Empty
11. சொன்னதையே "சும்மா" சொல்லாதே.
=> மறுபடியும் / Repeat
12. ஒன்றுமில்லாமல் "சும்மா" போகக் கூடாது.
=> வெறுங்கையோடு / Bare
13. "சும்மா" தான் இருக்கின்றோம்.
=> சோம்பேறித்தனமாக / Lazily
14. அவன் "சும்மா" ஏதாவது உளறுவான்.
=> வெட்டியாக / Idle
15. எல்லாமே "சும்மா" தான் சொன்னேன்.
=> விளையாட்டிற்கு / Just For Fun
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சும்மா என்கிற ஒரு சொல் நாம் பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்றபடியும் தொடரும் சொற்களுக்கு ஏற்றபடியும் 15 விதமான பொருளை இங்கே கொடுக்கிறது என்றால் அது சும்மா இல்லை. உலகில் உள்ள மற்ற மொழிகள் அனைத்தும் வாயினால் பேச செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை. ஆனால் நம்முடைய தமிழ் மொழியானது இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாக இருக்கின்றது என்பதாலே தமிழுக்கு அமுதென்று பேர். இவ்வாறு நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் ஒரு சொற்பொழிவில் பேசினார்.
உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன ஆனால் தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும் எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும் தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக் கொண்டிருக்கின்றது.
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.

சும்மா சொல்ல கூடாது. நன்றாக இருக்கிறது.
ReplyDelete