விஜய்யின் விமான நேரத் திட்டம் என்ன?
செப்டம்பர் 27 அன்று காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்திற்கு விஜய் வருவார் என்று த.வெ.க தரப்பிலிருந்து 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு சென்று, அங்கிருந்து தரைவழி பயணமாக நாமக்கல் செல்வதே விஜய்யின் பயணத்திட்டம் என்ற நிலையில், விஜய் சென்னையில் தனது வீட்டிலிருந்து கிளம்பியதே காலை 8 மணிக்குப் பிறகே என்று தெரிய வருகிறது.
தனி விமானம் மூலம் பயணிக்க DGCA மற்றும் ATC அனுமதி அவசியம். அப்படியெனில், சென்னையிலிருந்து விஜய்யின் தனி விமானம் புறப்படும் நேரம் முன்கூட்டியே தாமதமான நேரத்திற்காகவே திட்டமிடப்பட்டதா, அல்லது திடீரென மாற்றப்பட்டதா என்பதைக் த.வெ.க விளக்கவில்லை. மேலும், நாமக்கல்லிருந்து சாலை வழியாக 45 கி.மீ அருகிலுள்ள கரூர் வேலுச்சாமிபுரம் வர 4 மணி நேரம் எடுத்துக் கொண்ட விஜய், கரூர் சம்பவத்திற்குப் பிறகு சட்டென சாலை வழியாக கரூரிலிருந்து சில மணித்துளிகளில் திருச்சிக்கு சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டார். அப்போது அந்த தனி விமானத்திற்கான ATC அனுமதி எத்தனை மணிக்கு, எவ்வாறு, யாரால் பெறப்பட்டது?
போதுமான போலீஸ் பாதுகாப்பு
பொதுவாக, ஒரு கூட்டத்தில் 50 பேருக்கு ஒருவரை போலீஸ் பாதுகாப்பிற்காக நியமிப்பது வழக்கம். ஆனால், கரூரில் த.வெ.க தரப்பு கேட்டு கொண்டதற்கிணங்க 10,000 பேர் கலந்து கொண்ட கூட்டத்திற்கு, போலீசார் 20 பேருக்கு ஒரு அதிகாரி என்ற அளவில் மொத்தம் 500 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினர்.
மின்வெட்டு நடக்கவில்லை
விஜய்யின் கரூர் வருகையின் போது த.வெ.க மின்தடையை கோரியது. ஆனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் மின்சார வாரியம் அந்தக் கோரிக்கையை நிராகரித்தது. இதன் விளைவாக, மின்வெட்டு செய்யப்படவில்லை. இதற்கிடையில், த.வெ.க தரப்பினர் கூட்டத்திற்காக ஜெனரேட்டர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், ரசிகர்களின் குறுக்கீட்டினால் அவை செயலிழந்தன என்பதை காணொளிகளில் பார்க்கலாம்.
தாக்குதல் நடக்கவில்லை
விஜய்யை எப்படியாவது காண வேண்டும் என்ற ஆவலில், அவரது ரசிகர்கள் மரக்கிளைகளில் ஏறினர். மரக்கிளைகள் சாய்ந்தபோது, கீழே நின்றிருந்த பல பெண்களும் குழந்தைகளும் சரிந்து விழுந்தனர். இதில் ஒரு குழந்தை உயிரிழந்ததோடு மட்டுமல்லாமல், பலர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்களின் விரைவான உதவியால் பலரை மீட்டதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை பெரிதும் குறைக்கப்பட்டது. இந்நிலையில், கூட்டத்தில் இருந்த சிலரால் பெண்கள் தாக்கப்பட்டதாகவும், ஆயுதங்களால் பலர் வெட்டப்பட்டதாகவும், கல்வீச்சு நடைபெற்றதாகவும் விஜய் ரசிகர்கள் கூறுவது எள்ளளவும் உண்மையல்ல.
செருப்பு வீச்சுக்கான காரணம்
கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு குடிநீர் வசதிகளை த.வெ.க தரப்பினர் முறையாக வழங்காததால், நீர்ப்போக்கால் சிலர் மயக்கமடைந்தனர். அந்த அசாதாரண சூழலை தெரிவித்து, விஜய்யின் கவனத்தை ஈர்க்க முயன்று அவரது பிரச்சாரப் பேருந்தை நோக்கி செருப்புகள் வீசப்பட்டதை காணொளிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் கூட்டத்தில் இருந்த அனைவரும் விஜய் ரசிகர்கள். இருப்பினும், இந்த சம்பவத்திற்குப் பிறகு, கூட்டத்தில் இருந்த "மர்ம நபர்கள்" செருப்புகளை வீசியதாக விஜய் ரசிகர்கள் பரப்பிய தகவல்கள் வெறும் வதந்திகள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக, கூடியிருந்த ரசிகர்கள் குடிநீருக்காக கூச்சலிட, விஜய் பேருந்திலிருந்து தண்ணீர் பாட்டில்கள் வீசியதை காணொளிகளில் காணலாம்.
ஆம்புலன்ஸ்களை தாக்கிய த.வெ.க
கரூர் கூட்டப்பகுதிக்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனங்களை விஜய் ரசிகர்கள் தொந்தரவாகக் கருதி, அவற்றை தடுக்க முயன்றதோடு, ஓட்டுநர்களையும் தாக்கினர். போலீசார் உடனடியாக தலையிட்டு, லேசான தடியடியுடன் ஆம்புலன்ஸ்களை மீட்டு, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசாரின் விரைவு நடவடிக்கைகள் பலரின் உயிரை காப்பாற்ற உதவியது.
விதிமுறைகளை புறக்கணித்த த.வெ.க
நாமக்கல்லில் காலை 8:45 மணிக்கு விஜய் பேசுவார் என்று த.வெ.க தெரிவித்திருந்த நிலையில், பிரச்சார இடத்திற்கு சுமார் 7 மணி நேரம் தாமதமாக விஜய் வந்தார். மதியம் 3 மணியளவில், கடும் வெயிலில் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது, அவரை திரண்ட கூட்டத்தில் 15 பேர் மயக்கமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நாமக்கல் கூட்டத்தை முடித்துவிட்டு கரூர் வந்த விஜய், கரூரில் கூட்டம் அதிகமாக இருந்ததால், கூட்டத்தின் முன்புறத்தில் பேசுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
ஆனால் அந்த கோரிக்கையை ஏற்காமல், கூட்டத்திற்குள் சென்று நடுவில் விஜய் பேசும்படி த.வெ.க ஏற்பாடு செய்தது. இதனால், கூட்டத்திற்குள் வரும் விஜய்யின் பேருந்துக்கு மக்கள் வழி விட போதுமான இடம் இல்லாமல், கூட்டத்திலிருந்து வெளியேற வழியுமில்லாத, இறுக்கமான சூழல் உருவானது. மேலும், தண்ணீர் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் த.வெ.க தரப்பால் முறையாக ஏற்பாடு செய்யப்படாததால், கூட்ட நெரிசலின் நடுவே விஜய் பேசிக் கொண்டிருந்த போது பலர் மயக்கமடைந்த நிலையில், 41 பேர் உயிரிழந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட 9 வயது குழந்தையை காணவில்லை; தேடுங்கள் என்று விஜய் குறிப்பிட்டது, அந்த பேரழிவின் தொடக்க சூழலை நன்கு வெளிப்படுத்தியது.
விஜய் தனது பேருந்துக்குள் சென்று அமர்ந்த பிறகு, பேருந்தில் இருந்த மின்விளக்குகள் அணைக்கப்பட்டதால், அவரது முகத்தை காண விரும்பிய ரசிகர்கள் பேருந்தை நோக்கி திரண்டனர். இதனால், கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் மூச்சுத் திணறல் மற்றும் தள்ளுமுள்ளுக்கு உள்ளாகி, அந்த இடம் களேபரமாக மாறியது. இறுதியாக, கூட்ட நெரிசலின் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இதில் 10 குழந்தைகள், 13 ஆண்கள், மற்றும் 18 பெண்கள் உள்ளனர். மேலும், இதில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை இழந்த கணவர், மகனை இழந்த பார்வையற்ற தாய், தாயை இழந்த மகன், மனைவியை இழந்த காவல்துறை அதிகாரி, இரண்டு குழந்தைகளை இழந்த பெற்றோர், கர்ப்பிணி மனைவியை இழந்த கணவன், கணவனை இழந்த கர்ப்பிணிப் பெண் ஆகியோர் அடங்குகின்றனர்.
சுருக்கமாகச் சொன்னால், போலீசாரின் அறிவுரைகளை த.வெ.க முறையாக பின்பற்றவில்லை. விஜய் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று கூட்டத்தின் முன்புறத்தில் பேசியிருந்தாலும், பேருந்தில் மின்விளக்குகள் அணைக்கப்படாமல் இருந்திருந்தாலும், கரூரில் நடந்த பேரழிவு தவிர்க்கப்பட்டிருக்கும்.
பொறுப்பைத் தவிர்க்க பழி சுமத்தல்
தலைமை பொறுப்புக்குரிய மாண்பு இல்லாமல், கரூர் பேரழிவுக்குப் பிறகு சம்பவ இடத்தை விட்டு சில மணித்துளிகளில் சென்னைக்கு தப்பியோடிய விஜய், சுமார் 69 மணி நேரம் (சுமார் 3 நாட்கள்) மௌனமாக இருந்த பிறகு, பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் விதமாகவும், பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கிலும் ஒரு காணொளி வெளியிட்டு பேசினார்.
பொறுப்பான தலைவராக நடந்து கொள்ளாமல், ரசிகர்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் அந்த காணொளி தயாரிக்கப்பட்டது. திரைப்பட ஷூட்டிங் போன்ற மேக்கப்பில் காட்சியளித்த விஜய், உயிரிழந்தவர்களை நினைவுகூராமல், கரூர் பேரழிவில் தனது பங்கினைக் மறந்து, தவறான தகவல்களை பரப்பி, பொறுப்பை தமிழ்நாடு அரசின் மீது பழி சுமத்தும் போக்கில் காணொளி வடிவமைக்கப்பட்டது.
திரையில் வீரன், அரசியலில் வில்லன்
திரைப்படங்களில் விஜய் வெளிப்படுத்தும் வீரத்துக்கும் அரசியலில் அவர் வெளிப்படுத்தும் கோழைத்தனத்துக்கும் இடையிலான முரண்பாடு கரூர் பேரழிவில் வெளிப்படையாகத் தெரிந்தது. திரைப்படங்களில் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்த விஜய், கரூர் பேரழிவில் பொறுப்பற்ற செயல்பாட்டால் அரசியலில் வில்லன் வேடத்தை தரித்துக் கொண்டார்.
விஜய் வெளியிட்ட காணொளியில் கரூர் சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்கவில்லை, இறந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை, தனது ரசிகர்களை அமைதியாக இருக்கச் சொல்லவில்லை, சட்ட விசாரணையை எதிர்கொள்வதாக உறுதி அளிக்கவில்லை. எனவே, திரைப்படங்களில் கதாநாயகனாகக் கொண்டாடப்படும் விஜய், தனது அரசியல் நடத்தையில் “மோசடி, அலட்சியம் மற்றும் பழி சுமத்துதல்” மூலம் மக்கள் நலனை புறக்கணிப்பவராகவும், அரசியல் அபிலாஷைகளுக்காக சுயநலமாக செயல்படுவதாகவும் அம்பலப்பட்டு நிற்கிறார்.
இத்துடன், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைப் பற்றி ஊடகங்களை எதிர்கொள்ள அஞ்சிய விஜய் மற்றும் த.வெ.க தலைவர்கள், சம்பவம் நடந்த உடனேயே அந்த இடத்தை விட்டு வெளியேறினர். சம்பவத்துக்குப் பின் வெளியிடப்பட்ட அறிக்கையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்திருந்த போதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து நிவாரண நிதியை இன்னும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு நடவடிக்கை
கரூர் பேரழிவுக்குப் பிறர் மீது குற்றம் சுமத்தாமல், முதிர்ச்சியுடனும் பொறுப்புடனும் கையாண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். மேலும், அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கரூர் மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். கூடுதலாக, அந்தந்த குடும்பங்களை நேரில் சந்தித்து, அரசு நிவாரண நிதியை கனிமொழி நேரில் வழங்கினார். இதற்கிடையில், கரூர் பேரழிவை பற்றிய விவரங்களை தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுடன் பகிர்ந்தனர்.
கரூர் பேரழிவு விவகாரத்தில், வெளிப்படையாக பொறுப்புடன் செயல்படும் தமிழ்நாடு அரசு, இனி வருங்காலங்களில் "அரசியல் கூட்டங்களில் பாதுகாப்பையும் ஒழுங்கையும் உறுதி செய்ய சீர்தர இயக்கச் செய்முறைகள் (Standard Operating Procedure - SOP) உருவாக்கவும், இந்தியாவிற்கு முன்மாதிரியாக கூட்ட மேலாண்மை திட்டங்களை வடிவமைக்க நிபுணர்களை ஈடுபடுத்தவும்" திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கூட்டங்களில் தரம், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு உறுதி செய்யப்படும்.
விஜய்யை கண்டித்த உயர்நீதிமன்றம்
புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோருக்காக முன்ஜாமீன் கோரி த.வெ.க வழக்கறிஞர் அணி மனு தாக்கல் செய்தது. ஆதாரமில்லாமல் தமிழ்நாடு அரசுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் குற்றம் சுமத்திக் கொண்டிருந்த நிலையில், "கரூர் பேரழிவுக்கு தாங்கள் பொறுப்பல்ல; கரூர் த.வெ.க மாவட்டச் செயலாளர் மதியழகனே பொறுப்பாளர்" என த.வெ.க வழக்கறிஞர் அணியினர் முன்ஜாமீன் வழக்கில் வாதாடினர். எனினும், மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளதால், அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளனர். அவர்களின் கைது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்ததாகும்.
விபத்துக்குப் பிறகு கரூரிலிருந்து தப்பிச் சென்றதற்காக விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு, த.வெ.க தலைவர் விஜய் மற்றும் கட்சியினரின் மனநிலையைப் பற்றியும் கேள்வி எழுப்பியது. மேலும், "அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்வது கூட்டம் நடத்தும் கட்சியின் பொறுப்பு என்றும், விபத்தில் தொடர்புடைய விஜய்யின் பிரச்சாரப் பேருந்தை பறிமுதல் செய்யவும், நேபாளத்தில் ஏற்பட்ட சூழ்நிலையைப் போலவே தமிழ்நாட்டிலும் கலவரத்தைத் தூண்டும் வகையில் ட்வீட் செய்த ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும்" உயர்நீதிமன்றம் தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், கரூர் பேரழிவு குறித்து தீர விசாரிக்க, அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்த சென்னை உயர்நீதிமன்றம், கரூர் துயரச் சம்பவம் குறித்த தகவல்களையும் ஆதாரங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க கரூர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டது.