Chocks: முருகன் - விநாயகர் பற்றிய பார்வை

Tuesday, February 2, 2021

முருகன் - விநாயகர் பற்றிய பார்வை

முருகன் - விநாயகர் பற்றிய பார்வை

குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

பொருளடக்கம்
  1. முகவுரை 
  2. முருகனை வணங்கும் மரபு 
  3. தமிழ்க்கடவுள் 
  4. வெறியாடல்
  5.  முருகன் - வள்ளி - தெய்வானை
  6. திருமுருகாற்றுப்படை
  7. தவறான நம்பிக்கை
  8. பிற்காலச் சேர்க்கை
  9. முருகன் - ஸ்கந்தன் இணைப்பு
  10. விநாயகர் வழிபாட்டின் அறிமுகம் 
  11. பௌத்தமும் விநாயகரும் 
  12. அடையாள அரசியலுக்கு விநாயகர் 
  13. தென் இந்திய - வட இந்திய வேறுபாடு
  14. முடிவுரை
  15. விவரணைகள் 
முகவுரை

தமிழ் சமூகத்தின் இறை நம்பிக்கையில் முக்கிய இடம் வகிக்கும் முருகன் மற்றும் விநாயகர் வழிபாடுகள் குறித்து கிடைக்கும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, இக்கட்டுரை சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறது.

முருகனை வணங்கும் மரபு 

"சேயோன் மேய மைவரை உலகமும்" என தொல்காப்பியம் குறிஞ்சி நிலத்தை பற்றி குறிப்பிடுகிறது. குறிஞ்சி நிலம் என்பது மலையும், மலை சார்ந்த இடங்களும் ஆகும். மலைகளுக்கு உரிய வணக்க மரபாக சேயோன் என்ற முருகன் இருக்கிறார். முருகு என்றால் "அழகு" அல்லது "இளமை" எனப் பொருள்படும். இங்கு அழகு/இளமை என்பது நிறத்தை அல்ல; இயற்கையை குறிக்கும். முருகு + அன் = முருகன், இது ஆண்பால் பெயர் விகுதியால் உருவாகியுள்ளது.

வேல் ஆயுதம் கொண்டு உணவு தேடிய சமூகத்தில் “வேடன்” என அழைக்கப்பட்ட தலைவன், உணவு உற்பத்தி செய்யும் சமூகத்தில் “வேலன்” என்ற அடையாளத்தைப் பெற்றான். முருகன் வேலுடன் தொடர்புபடுத்தப்படுவது கவனிக்கத்தக்கதாகும். நடுகல் வழிபாட்டுக்குப் பின்னர் தனி வழிபாடாக உருவெடுத்த முருகன், சங்க காலத்தில் பொதுக் கடவுளாக உயர்ந்துள்ளார்.
தமிழ்க்கடவுள்

தமிழர்கள் வாழும் இடமெல்லாம் கோவில் கொண்டு வணங்கப்படும் முருகன், சங்கத்தமிழர் போற்றிய களவியற் காதலை முழுமையாக வாழ்ந்து காட்டிய கதாநாயகனாக விளங்குகிறார். அதனால்தான் முருகன் "தமிழ்க்கடவுள்" ஆகிறார்.

பல கடவுள்கள் தமிழோடும் தமிழர்களோடும் தொடர்பு கொண்டிருந்தாலும், தமிழின் அசல் காதலை வாழ்ந்து காட்டிய கடவுள் முருகன் ஒருவனே ஆவான். இந்தத் தனித்துவத்தால்தான் முருகன் மட்டுமே "தமிழ்க்கடவுள்" என்ற சிறப்புப் பெயருக்கு உரியவராகிறார்.

களவியல் = திருமணத்திற்கு முன் நிகழும் மரபுசார் காதல் வாழ்க்கை!

வெறியாடல்

தலைவன் தலைவியை நேரில் சந்திக்காமல் அடக்கமாக இருக்கிறார். அதே சமயம், தலைவி தலைவனைப் பற்றியே நினைத்து உடல் மெலிந்து வாடுகிறாள். அவளது தாய் குறிசொல்லும் வேலனிடம் இதற்கான காரணத்தை கேட்கிறார். வேலன் “முருகன் அணங்கினான்” என்று கூறி, தனது வெறியாடலால் முருகனின் சினத்தைத் தணிக்கிறார். இவ்வாறு, மகளுக்கு வெறியாட்டு விழாவை நடத்தி, மகளின் கவலையைப் போக்கி, மகளை நலமாக வைக்க தாய் முயல்கிறார்.

“முருகயர்தல்” எனப்படும் வெறியாடல், சங்க காலத்தில் ஒரு முக்கிய விழாவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முருகன் - வள்ளி - தெய்வானை

"முருகன் - வள்ளி" தான் தமிழர்களின் ஆதிகால நம்பிக்கை; அதாவது, வள்ளி என்ற குறத்திப் பெண்ணை முருகன் மணந்த கதை. குறத்தி இனத்தை சேர்ந்த வள்ளியை தாழ்த்தப்பட்ட பெண்ணாக கருதிய ஆரியர்களுக்கு, வள்ளியை வணங்க மனம் வரவில்லை. 

இதனால், அரசன் இந்திரனின் மகள் தெய்வானையை முருகனுடன் இணைத்து, அவளின் கணவனாக முருகனை மாற்றினார். இறுதியாக, இரு பெண்டாட்டிகளுக்கும் கணவனாக முருகன் நிலைநிறுத்தப்பட்டார். தெய்வானை பற்றிய குறிப்புகள் கந்தபுராணத்தில் முதன்முதலில் தோன்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

திருமுருகாற்றுப்படை

ஒருவர் ஓரிடத்தில் தாம் பெற்ற செல்வத்தை மற்றவருக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் அதைப் பெற உதவுவதை "ஆற்றுப்படை" எனக் கூறுவர். அதாவது, ஆற்றுப்படை என்பது "ஆற்றுப்படுத்துதல்" அல்லது "வழிப்படுத்துதல்" எனப் பொருள்படும். அதுபோல், ஒருவர் முருகனிடத்தில் தாம் பெற்ற ஆற்றலை மற்றவருக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் அதைப் பெற்று ஆற்றுப்படுவதை "முருகாற்றுப்படை" எனப்படும்.

சங்க காலப் புலவர் மதுரை நக்கீரர் இயற்றிய "திருமுருகாற்றுப்படை" நூலில், முருகனுக்கு "பரங்குன்றம், அலைவாய், ஆவினன் குடி, ஏரகம்" என்ற நான்கு ஆற்றுப்படை வீடுகள் மற்றும் குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என்ற இரண்டு பொது வீடுகள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட "திருமுருகாற்றுப்படை" நூலுக்குப் பிறகு, முருகனைப் பற்றி இயற்றப்பட்ட மிக முக்கியமான நூல்களாக 12 ஆம் நூற்றாண்டில் கச்சியப்பர் இயற்றிய "கந்தபுராணம்" மற்றும் 14 ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் இயற்றிய "திருப்புகழ்" ஆகியவை கருதப்படுகின்றன. திருமுருகாற்றுப்படை, கந்தபுராணம், திருப்புகழ் ஆகிய மூன்றும் முருகனைப் பற்றிய முக்கியமான பக்தி இலக்கியங்களாகும்.

தவறான நம்பிக்கை

"ஆற்றுப்படை வீடு" என்ற சொல் மக்களின் பேச்சுவழக்கில் "ஆறுபடை வீடு" எனத் தவறாகத் திரிந்துள்ளது. ஏனெனில், முருகனைப் பற்றிய பக்தி இலக்கிய நூல்களில் எங்கும் "ஆறு" என்ற எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. ஆனால், திருமுருகாற்றுப்படையில் வரும் "குன்றுதோறாடல்" மற்றும் "பழமுதிர்சோலை" ஆகியவற்றை இரண்டு தனி முருகன் கோவில்களின் பெயர்களாக மக்கள் தவறாகக் கருதுகின்றனர்.

தமிழ்நாட்டில் பழங்கால முருகன் கோவில்கள் பல இருந்தாலும், "ஆறுபடை வீடு" என்பது மக்களிடையே உருவான தவறான நம்பிக்கை மட்டுமே; வரலாற்று உண்மையல்ல.

பிற்காலச் சேர்க்கை

வரலாற்று ரீதியாக, திருப்பரங்குன்றம் என்பது மதுரை, சீரலைவாய் என்பது திருச்செந்தூர், ஆவினன் குடி என்பது பழனி என குறிப்பிடப்பட்டாலும், ஏரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகியவற்றின் இடம் குறித்து ஆய்வாளர்களிடையே முரண்பாடுகள் உள்ளன.

குறிப்பாக, ஏரகம் என்பது சுவாமிமலை, குன்றுதோறாடல் என்பது திருத்தணி, பழமுதிர்சோலை என்பது அழகர் மலையில் உள்ள முருகன் கோவில் என பிற்காலச் சேர்க்கையாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சுவாமிமலைக்குப் பதிலாக வெள்ளிமலை, குமாரபுரம், வள்ளியூர் அல்லது குமாரபர்வதம் என ஆய்வாளர்களிடையே பல்வேறு கருத்துக்கள் உள்ளன.

முருகன் - ஸ்கந்தன் இணைப்பு

வெவ்வேறு மரபுகளைச் சேர்ந்த தமிழர்களின் முருகன் வழிபாடும், வட இந்தியர்களின் ஸ்கந்தன் (கார்த்திகேயன், சுப்ரமணியன்) வழிபாடும், ஆரியர்களின் சூழ்ச்சியின் காரணமாக ஒன்றாகக் கலந்துவிட்டன. இதன் விளைவாக, இன்றைய முருகன் வழிபாடு என்பது திராவிட மற்றும் ஆரிய மரபுகளின் கலவையாக அமைந்துள்ளது. 

உதாரணமாக, தமிழ்நாட்டில் பழங்கால முருகன் வழிபாடும், பிற்கால முருகன் வழிபாடும் மாறுபட்டவையாக காணப்படுகின்றன. இந்த இரண்டு காலக்கட்டங்களுக்கு இடையிலான பண்பாட்டு கலவையை தமிழ் இலக்கியங்களின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

ஆய்வாளர் நா.வானமாமலை அவர்கள் எழுதிய "தமிழர் பண்பாடும் தத்துவமும்" என்ற ஆய்வு நூலில், "முருக – ஸ்கந்த இணைப்பு" மற்றும் "பரிபாடலில் முருக வணக்கம்" ஆகிய தலைப்புகளின் கீழ் இந்த விஷயங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

விநாயகர் வழிபாட்டின் அறிமுகம்  

பௌத்த - ஜைன வீழ்ச்சிக்கும், சைவ - வைணவ பக்தி இயக்க எழுச்சிக்கும் இடையே தேவாரப் பாடல்களில் இருந்தே விநாயகரைப் பற்றிய குறிப்புகள் தமிழ்நாட்டில் அறிமுகமானது. 7 ஆம் நூற்றாண்டில் வாதாபியை (தற்போதைய மகாராஷ்டிரா) கைப்பற்றிய பல்லவ அரசன் நரசிம்மவர்மனின் வெற்றியை கொண்டாடுவதற்காக, அவரது படைத்தளபதி சிறுத்தொண்டர் வாதாபியில் இருந்து ஒரு விநாயகர் சிலையை தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக கொண்டு வந்து கணபதீஸ்வரம் கோவிலை கட்டியதாக கருதப்படுகிறது. இதன் மூலம், தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு அதிகாரபூர்வமாக வளர ஆரம்பித்தது. மேலும், தமிழ்நாட்டின் பழமையான குடைவரைக் கோவிலாக, பிள்ளையார்பட்டி கோவிலை ஆய்வாளர் தொ.பரமசிவன் கருதுகிறார்.

பௌத்தமும் விநாயகரும் 

புத்தர் ஞானம் பெற்ற அரச மரத்தை வழிபட்ட பௌத்தர்களின் எளிய பழக்கமே விநாயகர் வழிபாட்டிற்கு வழிவகுத்தது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி தனது "பௌத்தமும் தமிழும்" நூலில், அரச மரத்தை வழிபடும் பழக்கத்தை வைதீக சமயம் தன்வசப்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், பௌத்த சமயத்தை பின்பற்றிய வணிகர்கள் வைதீக சமயத்தை தழுவியதால், அவர்களின் வழியாக விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் பரவியது. அதே நேரத்தில், பௌத்தர்களிடம் இருந்து தன்வசப்படுத்திக் கொண்ட விநாயகரை, கோவிலின் பிரதான கருவறைக்கு வெளியே வைக்கச் செய்தது பார்ப்பனர்களின் நுண்ணரசியலாகும்.

அடையாள அரசியலுக்கு விநாயகர் 

19 ஆம் நூற்றாண்டின் இறுதி காலத்தில், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களின் அரசியல் பங்கேற்பை விரிவுபடுத்தும் நோக்கத்துடன், பால் கங்காதர் திலகர் "விநாயகர் சதுர்த்தி" விழாவை அரசியல் ஒருங்கிணைப்பு கருவியாக பயன்படுத்தினார். பின்னர், இந்துத்துவாதிகள் ராமரின் வில்லைக் கொண்டு பாபர் மசூதியை குறிவைத்து இடித்த காலகட்டத்திலிருந்து, "விநாயகர் சதுர்த்தி" விழா இந்துத்துவா அரசியல் அடையாளமாக கொண்டாடப்படத் தொடங்கியது.
தென் இந்திய - வட இந்திய வேறுபாடு

தென் இந்திய "முருகன்" வட இந்தியாவில் "கார்த்திகேயன்" என்ற பிரம்மச்சாரியாக வணங்கப்படுகிறார். தென் இந்திய பிரம்மச்சாரி "விநாயகர்" வட இந்திய "கணேஷ்" ஆகவும், "சித்தி - புத்தி" என இரு பெண்களுக்கு கணவனாகவும் வணங்கப்படுகிறார். தமிழ்நாட்டில் அண்ணன் விநாயகர், தம்பி முருகன் அதே நேரத்தில் வட இந்தியாவில் அண்ணன் கார்த்திகேயன், தம்பி கணேஷ்.

இதற்கிடையில், வட இந்திய பெண்கள் தமிழ்நாட்டில் உள்ள மீனாட்சி அம்மன், திருவரங்கம், இராமேஸ்வரம் போன்ற சைவ - வைணவ கோவில்களுக்கு பெருமளவு வருவார்கள். ஆனால், அவர்கள் முருகனை தனியாக வணங்க மாட்டார்கள்; காரணம், பிரம்மச்சாரி கார்த்திகேயன் (நம்மூரில் முருகன்) அவர்களை ஆட்கொள்வான் என்ற நம்பிக்கை.

மகாபாரதம் என்ற புராண கதையில், 16 வது காண்டம் பகுதியில் முருகனை "ஸ்கந்தன்" என்று ஆரியர்கள் வர்ணித்துள்ளனர். ஆனால், வரலாற்று ரீதியாக உண்மையில் முருகனும் வேலும் தமிழர்களின் வாழ்வியலுடன் தொடர்புடையது; அதற்காக ஆரியர்கள் கூறும் புராண வரலாறு எல்லாம் தரவாகாதுநம்மூர் கொற்றவையை பார்வதி ஆக்கி, "சிவன் - பார்வதி" தம்பதியினரின் மகன் "முருகன்" என்பதும், முருகனின் அண்ணன் "விநாயகர்" என்பதும் ஆரியர்களின் புராண புரட்டுதான்.

மொத்தத்தில், தென் இந்தியா மற்றும் வட இந்தியாவின் இந்து வழிபாட்டு முறைகள் வெவ்வேறாக உள்ளன. ஆனால், நாம் அனைவரும் "இந்து என்ற ஒரு மத சிந்தனையை திணித்து", ஆரியர்கள் பல பொய்களை கதைத்து மாய ஆன்மீக உலகை உருவாக்கி உள்ளார்கள். அதன் மூலம் லாபம் பெறுவது "பார்ப்பன - பனியா" கூட்டமைப்பே. இதை தான் பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட சமூக நீதித் தலைவர்கள் அந்த காலத்தில் மிக தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

முடிவுரை

வரலாற்று ரீதியாக, முருகன் மற்றும் விநாயகர் வழிபாடு குறித்து பலவிதமான கருத்துகள் இருந்தாலும், தமிழ்நாட்டில் இன்று, பார்ப்பன வரம்புகளைத் தாண்டியும், இந்த வழிபாடு எளிய முறையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

உதாரணமாக, வேலுடன் வீற்றிருக்கும் "தமிழ்க்கடவுள்" முருகனை ஆரியர்கள் ஸ்கந்தன் அல்லது சுப்பிரமண்யன் என மாற்றினாலும், முருகன் "நேற்றும், இன்றும், என்றும்" எளிய தமிழ் மக்களின் மனதிலும் நம்பிக்கையிலும் வாழ்கிறார். அதேபோல், பெருங்கோவில்களில் விநாயகரை சன்னதிக்கு வெளியே வைக்க பார்ப்பனர்கள் முயற்சித்தாலும், கிராமங்களில் எளிய மக்கள் மரத்தடியில் விநாயகரை வழிபடும் பழக்கங்கள் இன்று கூட தொடர்கின்றன.

விவரணைகள் 

முருகனின் வேல் 


வெறியாடல் விளக்கம் 


தமிழர் பண்பாடும் தத்துவமும் நூல் 


ஆறுபடை வீடுகளும் பழமுதிர்சோலையும்


விநாயகர்  அரசியலுக்கு வந்த வரலாறு


பிள்ளையார் அரசியல்


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை : ஓர் சுருக்கமான பார்வை

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை : ஓர் சுருக்கமான பார்வை குறிப்பு =   இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத...