Chocks: ரெளலட் - சாஸ்திரி சட்டம்

Monday, May 17, 2021

ரெளலட் - சாஸ்திரி சட்டம்

ரெளலட் - சாஸ்திரி சட்டம்
சுருக்கம் 
  1. முகவுரை
  2. இந்திய அரசுச் சட்டம், 1919
  3. நீதிபதி சிட்னி ரௌலட் குழு 
  4. ரெளலட் சட்டத்தின் வரைவு
  5. ரெளலட் சட்டத்தின் சாராம்சம்
  6. ஜாலியன் வாலாபாக் படுகொலை
  7. காந்தியின் அரசியல் நுழைவு
  8. இந்திய அரசுச் சட்டம், 1935
  9. முடிவுரை
  10. விவரணைகள்
முகவுரை

இந்திய சுதந்திர போராளிகளுக்கு கைக்கொடுக்க வங்கம் மற்றும் பஞ்சாப் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி கிளர்ச்சியில் ஈடுபட ஜெர்மனி அரசு ஆதரவாளர்கள் மற்றும் ரஷ்ய போல்ஷ்விக் ஆதரவாளர்கள் முயற்சி செய்யலாம் என்ற செய்தியை அறிந்துக் கொண்ட பிரிட்டிஷ் அரசு ஒரு குற்றவியல் சட்டத்தைக் கொண்டு வர களமிறங்கியதன் விளைவாக உருவானதே ரௌலட் சட்டம்.

இந்திய அரசுச் சட்டம், 1919

1919 இல் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் தலைமை ஆளுநர் செம்ஸ்போர்டு பிரபுவும் செயலாளர் எட்வின் சாமுவேல் மாண்டேகுவும் இணைந்து (மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம்) பிரிட்டிஷ் இந்தியாவின் அரசியல் நிர்வாக சீர்திருத்தங்களை உள்ளடக்கிய அறிக்கையை தயாரித்து பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அனுப்பி ஒப்புதலை பெற்றனர். இதன் அடிப்படையில் இந்திய அரசுச் சட்டம், 1919 நிறைவேற்றப்பட்டு இரட்டை ஆட்சி முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் இந்தியாவில் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றங்கள் நிறுவப்பட்டது.

நீதிபதி சிட்னி ரௌலட் குழு 

மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்ததுடன் இந்தியாவில் அரசியல் பயங்கரவாதத்தை (Political Terrorism) மதிப்பீடு செய்வதற்காக நீதிபதி சிட்னி ரௌலட் தலைமையிலான குழுவில் முதன்மை உறுப்பினராக இந்தியாவை சேர்ந்த திவான் பகதூர் நீதிபதி சி.வி.குமாரசாமி சாஸ்திரி உட்பட மொத்தம் 6 உறுப்பினர்கள் இடம் பெற்றனர். இக்குழுவின் வரைவறிக்கையினை ஏற்று 1919 இல் குற்றவியல் சட்டமான ரெளலட் சட்டத்தை பிரிட்டிஷ் அரசு இயற்றியது.

ரெளலட் சட்டத்தின் வரைவு

விடுதலை வேண்டுமென போராடிய இந்தியர்களை அடக்கவும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான சதிகளை நசுக்கவும் உருவான ரெளலட் சட்டத்தின் வரைவை (Rowlatt Act Draft) எழுதியவர் சி.வி.குமாரசாமி சாஸ்திரி ஆவார். நாளடைவில் சிட்னி ரௌலட் குழுவில் முக்கிய பங்காற்றிய சி.வி.குமாரசாமி சாஸ்திரியின் பெயர் மறைக்கப்பட்டு அது வெறும் ரௌலட் சட்டம் என்றே கல்விப் பாடத்தில் இடம் பெற்றுவிட்டது. இதனை சுட்டிக்காட்டும் விதமாக ரெளலட் சட்டத்தை "ரெளலட் - சாஸ்திரி" சட்டம் என்றே பெரியார் தமது உரைகளில் கூறுவார்.

சி.வி.குமாராசாமி சாஸ்திரியின் சகோதரி சீத்தம்மாளை இந்திய தேசிய காங்கிரஸ் செயலாளர் சர் சி.பி.ராமசாமி ஐயர் திருமணம் செய்து கொண்டதன் வகையில் இருவரும் மைத்துனர்கள். சிட்னி ரௌலட் குழுவில் இந்தியரும் இடம் பெற வேண்டும் என்ற நோக்கில் சி.பி.ராமசாமி ஐயரின் பரிந்துரையால் சி.வி.குமாரசாமி சாஸ்திரி பிரிட்டிஷாரின் ரௌலட் குழு உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெளலட் சட்டத்தின் சாராம்சம்

ஜனநாயகமற்ற முறையில் இந்தியர்களை பிணைய ஆணை இல்லாமல் கைது செய்யவும், விசாரணை செய்யாமல் சிறைப்படுத்தவும், கூட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கவும், குறிப்பிட்ட இடத்தில் வசிக்க நிர்பந்திக்கவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மேல்முறையீடு செய்யும் அனுமதியை மறுக்கவும் ரௌலட் சட்டம் வழிவகை செய்கிறது.

ஜாலியன் வாலாபாக் படுகொலை

1919 இல் சர்வாதிகார ரெளலட் சட்டத்திற்கு எதிராக போராட அமிர்தசரஸ் மாவட்டத்தில் சுதந்திர போராளிகள் ஒன்றுகூடினர். பிரிட்டிஷ் ராணுவ உயரதிகாரி ரெஜினால்ட் டையர் உத்தரவினால் பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் சுமார் 10 நிமிடங்கள் நடத்திய துப்பாக்கி சூட்டினால் பல நூறு சுதந்திர போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்திய சுதந்திரப் பேராட்டத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் அதிகாரிகளின் ஆணையால் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை துயர நிகழ்வை கடுமையாக கண்டிக்காமல் மக்கள் கற்களைக் கொண்டு முதலில் காவல் துறை அதிகாரிகளை தாக்கியதே கலவரம் தொடங்க காரணமென அன்றைக்கு பிரிட்டிஷ் ஆதரவு மனநிலை கொண்ட ஒரு சில இந்திய அரசியல் தலைவர்கள் பேசியது சர்ச்சையானது.

காந்தியின் அரசியல் நுழைவு

ரௌலட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பிரதான நீரோட்டத்திற்கு வந்தார் காந்தி. இதன் பிறகே இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தியின் அரசியல் சகாப்தம் தோன்றியது. ரௌலட் சட்டத்திற்கு எதிராகவும் ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்டித்தும் குரல் எழுப்ப செப்டம்பர் 1920 இல் காந்தியின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் நாடெங்கும் தொடங்கப்பட்டது இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

உத்திரப் பிரதேசத்தில் சௌரி சௌரா (Chauri Chaura) என்ற இடத்தில் ஒத்துழையாமை இயக்கத்தினருக்கும் பிரிட்டிஷ் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு காவல் நிலையம் கொளுத்தப்பட்டது. இக்கலவரத்தில் 22 காவல் துறையினரும் 3 ஒத்துழையாமை இயக்கத்திரும் மரணமடைந்தனர். அகிம்சை வழியில் நடந்து வந்த போராட்டம் இம்சை வழியில் வன்முறையாக மாறியதை கண்டு அதிர்ச்சியடைந்த காந்தி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று வாரங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி இறுதியில் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திக் கொள்வதாக பிப்ரவரி 1922 இல் அறிவித்தார். பலதரப்பட்ட போராட்டத்திற்கு பின்னர் இறுதியில் பிரிட்டிஷ் அரசும் மார்ச் 1922 இல் கொடுமையான ரெளலட் சட்டத்தை திரும்பப் பெற்றது.

இந்திய அரசுச் சட்டம், 1935

1928 இல் மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சைமன் குழு அமைக்கப்பட்டது. இரட்டை ஆட்சி முறைக்கு பதிலாக அரசு ஆட்சி முறையை செயல்படுத்த 1930 இல் சைமன் குழு பரிந்துரைத்தது. மேலும் இந்தியர்களின் பல்வேறு அரசியல் கோரிக்கைகளுக்கு செவி மடுத்து லண்டனில் 1930, 1931, 1932 இல் மூன்று வட்டமேசை மாநாடு நடைபெற்றது. சைமன் குழு மற்றும் வட்டமேசை மாநாடு பரிந்துரைத்த முடிவுகளின் படி இந்திய அரசுச் சட்டம், 1935 நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு 1937 இல் மாகாண சுயாட்சி வழங்கப்பட்டது.

முடிவுரை

ஆரம்பம் முதலே பிரிட்டிஷின் ரௌலட் சட்டத்தை கடுமையாக எதிர்த்தது இந்தியா. ஆனால் சுதந்திரம் அடைந்தபின் இந்திய மத்திய அரசால் இயற்றப்பட்ட மிசா, தடா, பொடா போன்ற சட்டங்கள் ரௌலட் சட்டத்தின் மறுபதிப்புகளாகவே அமைந்தது விந்தையிலும் விந்தை.

விவரணைகள்

Jallianwala Bagh Massacre History


When India United In Grief For Jallianwala Bagh Massacre


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -