Chocks: இந்திய அரசியல் சரித்திரத்தை மாற்றிய Bofors

Sunday, December 19, 2021

இந்திய அரசியல் சரித்திரத்தை மாற்றிய Bofors

இந்திய அரசியல் சரித்திரத்தை மாற்றிய Bofors

குறிப்பு = இந்த சுருக்கமான கட்டுரை முன்பின் காலகட்டங்களை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கட்டுரை ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் பொதுவான தகவல்களை வழங்குகிறது. இது தலைப்பின் இறுதி ஆய்வாக கருதப்படக்கூடாது. ஒரு முழுமையான புரிதலுக்காக, தலைப்பில் இன்னும் விரிவான ஆதாரங்களைப் பார்க்க வாசகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

சுருக்கம் 
  1. முகவுரை
  2. ஜெரால்டு புல் கைவண்ணம்
  3. ஈராக் பீரங்கி ஒப்பந்தமும் ரத்தும்
  4. ஜெரால்டு புல் படுகொலை
  5. இந்திரா காந்தி அணுமுறை
  6. பீரங்கி வாங்க திட்டமிட்ட இந்திரா காந்தி
  7. ராஜீவ் காந்தியும் ஓலோப் பால்மேயும்
  8. பீரங்கி வாங்க திட்டமிட்ட ராஜீவ் காந்தி
  9. Bofors பீரங்கி ஒப்பந்தம்
  10. பீரங்கி வெடிப்பதற்கு முன் ஊழல் வெடித்தது
  11. நாடாளுமன்ற கூட்டுக் குழு
  12. வி.பி.சிங் விலகல்
  13. அமிதாப் பச்சன் விலகல்
  14. அருண் நேரு மற்றும் அயோத்தி
  15. அரசியல் சதுரங்க விளையாட்டு
  16. 1989 தேர்தல் முடிவை மாற்றிய Bofors
  17. ஆட்சியமைத்த தேசிய முன்னணி
  18. சித்ரா சுப்ரமணியம்
  19. ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம்
  20. ராஜீவ் காந்தி படுகொலை
  21. Bofors மற்றும் அரசியல் சடுகுடு
  22. நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டு
  23. முடிவுரை
  24. துணுக்குச் செய்தி
  25. விவரணைகள்
முகவுரை

1985 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் Bofors ஊழல், சீக்கியர்கள் மீதான தாக்குதல், ஷா பானு ஜீவனாம்ச வழக்கு, அயோத்தி விவகாரம், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி, மூன்றாவது அணி ஆட்சி அமைப்பு, மண்டல் கமிஷன் பரிந்துரை ஏற்கப்பட்டது இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

1980 களின் பிற்பகுதியில் Bofors ஊழல் இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது. இப்புயலில் சிக்கிய ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் 1989 நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. ஒரு காலத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட Bofors ஊழல் குறித்து சில செய்திகளை இக்கட்டுரையில் காண்போம்.

ஜெரால்டு புல் கைவண்ணம்

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனரும் (Space Research Corporation-SRC) கனடா ஆயுத விஞ்ஞானியுமான ஜெரால்ட் புல் உளவு நாவலில் உள்ள கதாபாத்திரம் போன்று எதிரிகளுக்கு பஞ்சமில்லாத வாழ்க்கையை வாழ்ந்தார். உலகின் பல நாடுகளுக்கு ஆயுதங்களை வடிவமைத்தார். குறிப்பாக 1970 இன் பிற்பகுதியில் முந்தைய பீரங்கிகளை விட மிக நீண்ட தூரம் சென்றடையும் GC-45 என அழைக்கப்பட்ட 155 mm பீரங்கியை வடிவமைத்தார். 

ஜெரால்டு புல்லிடம் இருந்து GC-45 பீரங்கிக்கான வடிவமைப்பு உரிமையை ஆஸ்திரிய அரசுக்கு சொந்தமான Voestalpine நிறுவனத்தின் ஆயுதப் பிரிவான Noricum கழகம் வாங்கியது. ஜெரால்டு புல்லின் GC-45 பீரங்கி வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அதற்கு GHN-45 பீரங்கி என்று பெயரிடப்பட்டது.
ஈராக் பீரங்கி ஒப்பந்தமும் ரத்தும்

14-06-1980 அன்று சதாம் ஹுசைனின் அணுசக்தித் திட்டத்திற்குத் தலைமை தாங்கிய எகிப்திய விஞ்ஞானி யாஹ்யா எல் மஷாத் (Yahya El Mashad) பாரிஸில் உள்ள ஹோட்டல் அறையில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இப்படுகொலைக்கு இஸ்ரேலிய உளவுத்துறை Mossad மீது குற்றம் சாட்டப்பட்டது.

22-09-1980 முதல் 20-08-1988 வரை ஈரானுடன் போரில் ஈடுபட்டு கொண்டிருந்த ஈராக் அதிபர் சதாம் ஹுசைனுக்கு நிறைய படைக்கலம் (Arms) தேவைப்பட்டது. இப்போருக்கு மத்தியில் 07-06-1981 அன்று ஓபரா நடவடிக்கை (Operation Opera) மூலம் இஸ்ரேலிய விமானப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலால் கட்டி முடிக்கப்படாத ஈராக் அணு உலை தகர்க்கப்பட்டது. அரபு-இஸ்ரேல் உறவில் பதற்றம் நிலவிய சூழலில் அணு ஆயுதங்களை உருவாக்க வேண்டி சதாம் ஹுசைன் அணு உலை வடிவமைப்பதை இஸ்ரேல் விரும்பவில்லை.

யாஹ்யா எல் மஷாத் மறைவுக்கும் அணு உலை தகர்ப்புக்கும் பிறகு சதாம் ஹுசைன் ஆயுதங்களை வடிவமைக்க விஞ்ஞானியை தேடிய போது ஜெரால்டு புல் நட்பு கிட்டியது. Voestalpine நிறுவனத்தின் GHN-45 பீரங்கி பராமரிப்பதற்கு எளிதாகவும் மிக நீண்ட தூரம் துல்லியமாக சென்று தாக்கும் சக்தியாலும், ஜெரால்ட் புல்லின் மேற்பார்வையில் ஈராக்கிற்கு பீரங்கிகளை உருவாக்க Voestalpine நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதையொட்டி, ஈராக்கிற்கு 160 பீரங்கிகள் தயாராகி வந்தது.
இந்த சூழலில் 1979 இல் ஆஸ்திரிய நாடாளுமன்ற தேர்தலில் ஆஸ்திரிய மக்கள் கட்சி ஈராக்குடன் அனுதாபம் கொண்டிருந்தது. ஆனால் தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி சார்பில் யூத மதத்தை சேர்ந்த புருனோ கிரேஸ்கி ஆஸ்திரிய அதிபராக மீண்டும் பதவியேற்றார். பதவிக்கு வந்த பிறகு ஆஸ்திரியாவின் நடுநிலைச் சட்டங்களை ஈராக் மீறியதாக குற்றம்சாட்டி பீரங்கி ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வழிவகை செய்தார். இதனால் ஈராக்கிற்கு தயாரான 160 பீரங்கிகள் கிடப்பில் போடப்பட்டன.

ஜெரால்டு புல் படுகொலை

இன்று வரை ஈராக் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் சரியா? தவறா? என்று விவாதிக்கப்படுகிறது. ஏனெனில் 1980 இல் நடைபெற்ற திடீர் இஸ்ரேல் தாக்குதலுக்கு பிறகு சுதாரித்துக் கொண்ட சதாம் ஹுசைன் 1988 இல் அணு ஆயுத ஆராய்ச்சிகளை நிலத்தடிக்கு (Underground) மாற்றினார். அங்கு சதாம் ஹுசைன் வேண்டுகோளுக்கு இணங்க உலகின் அதி நவீன Supergun (Project Babylon) ஆராய்ச்சி மற்றும் எறிபடையியல் ஏவுகணை (Ballistic Missile) தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் ஆராய்ச்சியில் ஜெரால்டு புல் ஈடுபட்டு வந்தார்.

22-03-1990 அன்று ஜெரால்ட் புல் தனது பிரஸ்ஸல்ஸ் குடியிருப்பில் நுழைந்தபோது முதுகில் மூன்று முறையும், தலையில் இரண்டு முறையும் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். கொலையாளி யாரென அடையாளம் காணப்படாத சூழலில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ஜெரால்டு புல் வீட்டுக் கதவில் சாவி இருப்பதையும், அவரது பெட்டியில் $20,000 ரொக்கம் இருப்பதையும் கண்டனர். ஜெரால்டு புல்லின் ஆயுத ஆராய்ச்சிகள் ஆபத்தை விளைவிக்கும் என்று அஞ்சி இஸ்ரேலிய உளவுத்துறை Mossad ஜெரால்டு புல்லை படுகொலை செய்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.
இந்திரா காந்தி அணுமுறை

சோவியத் யூனியன் தலைவர் லியோனிட் ப்ரெஷ்நேவ் (Leonid Brezhnev) பரிந்துரை செய்ததின் பேரில் சோவியத் யூனியன் தயாரித்த Sukhoi Su-7 போர் விமானங்களை இந்திய விமானப்படை (Indian Air Force-IAF) அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்காமல் பிரதமர் இந்திரா காந்தி வாங்கினார். 1971 இல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக சோவியத் யூனியனின் போர் விமானங்களும் ஒரு காரணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்படும் நிகழ்வுகளை விட இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் நேரடியாக ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்படுவது வாடிக்கையானது.
பீரங்கி வாங்க திட்டமிட்ட இந்திரா காந்தி

இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் நெருங்கிய நண்பரான ஆஸ்திரிய அதிபர் புருனோ கிரேஸ்கி ஈராக்கிற்கு தயார் செய்யப்பட்ட 160 பீரங்கிகளை பெற்றுக் கொள்ளும்படி இந்திரா காந்தியிடம் கேட்டுக் கொண்டார். ஆயுத வியாபாரத்தில் இருந்து முற்றிலும் விலகும் வகையில் இந்தியாவுக்கு பீரங்கி வடிவமைப்பு தொழில்நுட்பத்தை வழங்க ஆஸ்திரிய அரசு முன்மொழிந்தது. இதற்கிடையில், 1983 இல் பிரதமர் இந்திரா காந்திக்கு 155 mm பீரங்கிகளை வழங்குவதற்கான வாய்ப்பை Bofors நிறுவனத்திற்கு தருமாறு ஆதரித்து ஸ்வீடன் பிரதமர் ஓலோப் பால்மே கடிதம் எழுதியிருந்தார்.
இந்தியாவின் ஆயுதக் களஞ்சியத்தை எளிதில் மிஞ்சும் வகையில் 1977 இல் பாகிஸ்தானுக்கு அதிநவீன ஆயுதங்களை விற்றது அமெரிக்கா. இதையொட்டி, 1980 இல் மீண்டும் பிரதமரான இந்திரா காந்தி இந்தியாவுக்கு அதிநவீன பீரங்கிகளை வாங்க முடிவு செய்தார். இந்திய அரசின் சார்பில் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு பிரான்சின் Sofma, ஸ்வீடனின் Bofors, இங்கிலாந்தின் International Military Services மற்றும் ஆஸ்திரியாவின் Voestalpine ஆகியோரிடம் பீரங்கி வாங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டது.

இறுதியாக, 1984 இல் பிரான்சின் Sofma மற்றும் ஆஸ்திரியாவின் Voestalpine நிறுவனங்கள் டெண்டரில் கூறிய சலுகைகள் சிறந்ததாகக் கண்டறியப்பட்டது. இந்தியா பீரங்கிகளை வாங்குவதற்கு முன்பு, 1983 இல் ஆஸ்திரிய நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை பெற தவறியதால், புருனோ கிரேஸ்கி ஆட்சி அமைக்காமல் விலகினார். மேலும் 31-10-1984 அன்று இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, பீரங்கி பேச்சுவார்த்தை முடங்கின.

ராஜீவ் காந்தியும் ஓலோப் பால்மேயும்
1984 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 31-12-1984 அன்று பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி 25-09-1985 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். இந்திய பிரதமரான ராஜீவ் காந்தியுடன் நெருங்கிய நட்பு பாராட்டினார் ஸ்வீடன் பிரதமர் ஓலோப் பால்மே. 16-01-1986 அன்று டெல்லிலியில் நடைபெற்ற இந்திரா காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று ஓலோப் பால்மே உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
1980 முதல் 1985 காலகட்டத்தில் ஸ்வீடன் கடுமையான பொருளாதார அழுத்தத்தில் இருந்ததோடு மட்டுமல்லாமல் 1985 செப்டம்பரில் பொதுத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருந்த ஓலோப் பால்மேயின் ஸ்வீடிஷ் சமூக ஜனநாயகக் கட்சியின் (Swedish Social Democratic Party-SSDP) கருவூலத்திற்கு பணமும் தேவைப்பட்டது. இதற்கிடையில், ஸ்வீடனின் ஆயுதத் துறையில் வேலையின்மையும் நிகர லாபமும் கடுமையாக வீழத் தொடங்கிய சூழலில் பென்டகன் ஆயுத ஒப்பந்தத்தை நூலிலையில் Bofors தவறவிட்டது. இதையடுத்து, பீரங்கிகளை வாங்க திட்டமிட்டிருந்த இந்தியாவுக்கு ராஜதந்திர ரீதியாக பீரங்கிகளை விற்க ஸ்வீடனை சேர்ந்த Bofors முடிவு செய்தது.

பீரங்கி வாங்க திட்டமிட்ட ராஜீவ் காந்தி

31-10-1984 அன்று இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து பீரங்கி ஒப்பந்தம் குறித்து ஸ்வீடன் அரசு கலக்கமடைந்திருந்தது. ஆனால் ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்த பிறகு பீரங்கி வாங்கும் அணுமுறையில் இந்திய அரசின் புதிய அத்தியாயம் தொடங்கியது.

இந்தியாவுக்கு புதிய பீரங்கிகளை வாங்க திட்டமிட்ட ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசு பீரங்கி தேர்வு செயல்முறையை விரைவுபடுத்தியது. மேலும் பீரங்கி உற்பத்தியாளர்களின் முகவர்களுடன் தொடர்பு கொள்ள மாட்டோம் என்றும் எந்த அதிகாரிகளையும் சந்திக்க முகவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. எந்தவொரு விற்பனை மற்றும் கொள்முதல் செயல்முறையிலும் முகவர்கள் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் சூழலில் இந்த நடவடிக்கை பரவலாக விவாதிக்கப்பட்டது.
Bofors பீரங்கி ஒப்பந்தம்

1985 இல் இந்திய அரசு பீரங்கிகளை வாங்குவதற்கு பாதுகாப்பு செயலாளர் எஸ்.கே.பட்நாகர் தலைமையில் ஒரு ராணுவ ஆலோசனை குழுவை  அமைத்தது. எஸ்.கே.பட்நாகரின் குழு பீரங்கியை வாங்குவதற்கு சிறந்ததாக ஆஸ்திரியாவின் Voestalpine நிறுவனத்தை தவிர்த்துவிட்டு பிரான்சின் Sofma மற்றும் ஸ்வீடனின் Bofors ஆகிய நிறுவனங்களை தேர்ந்தெடுத்தது. இறுதித் தேர்வைச் செய்ய வேண்டிய நேரத்தில் குழுவிற்குள் கருத்து பிளவு ஏற்பட்டது. தளபதி சுந்தர்ஜி வெளிப்படையாக ஸ்வீடனின் Bofors நிறுவனத்தை தேர்ந்தெடுத்தார். எதிர்தரப்பினர் சுந்தர்ஜியின் நோக்கத்தையும் முடிவையும் கேள்விக்குள்ளாக்கினர் ஆனால் இறுதிச் சுற்றில் இந்திய ராணுவம் Bofors நிறுவனத்தை தேர்ந்தெடுத்தது.

நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இறுதியான Bofors முன்மொழிவை நிதியமைச்சர் வி.பி.சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜீவ் காந்தி, பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அருண் சிங் ஆகிய மூவரும் அங்கீகரித்தனர். இதை தொடர்ந்து, 24-03-1986 அன்று இந்திய ராணுவத்திற்கு 400 FH 77 பீரங்கிகளை வாங்குவதற்கு இந்திய அரசுக்கும் ஸ்வீடன் அரசின் Bofors நிறுவனத்துக்கும் இடையே ரூ.1,437 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டது. இது அன்றைய காலகட்டத்தில் Bofors நிறுவனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஒப்பந்தமாகும் அத்துடன் வெளிநாட்டு நிறுவனத்துடன் இந்தியா மேற்கொண்ட முக்கிய ஒப்பந்தமாகும். 

பீரங்கி வெடிப்பதற்கு முன் ஊழல் வெடித்தது

Bofors தனது பீரங்கியின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளை திடீரென மாற்றி அதனை மறு டெண்டருக்கு சமர்ப்பிப்பதற்கு பதிலாக, மற்ற ஆயுத நிறுவனங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பழைய டெண்டரில், தனது ஏல விபரங்களை Bofors மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், ஒப்பந்தம் செய்யப்பட்ட நேரத்தில் ஸ்வீடிஷ் சமூக ஜனநாயகக் கட்சிக்கு Bofors நிறுவனம் அதிகளவில் நிதி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. Bofors ஒப்பந்தம் இறுதியாவதற்கு முன்பு, இந்தியா ராணுவம் பிரான்சின் Sofma அல்லது ஆஸ்திரியாவின் Voestalpine பீரங்கிகளை வாங்க திட்டமிட்டிருந்தது, ஆனால் ஸ்வீடனின் வலைப்பின்னல் காரணமாக அது நடக்கவில்லை என்று பத்திரிகைகளில் பரவலாக எழுதப்பட்டது.

இத்தாலி தொழிலதிபர் ஒட்டாவியோ குவாட்ரோச்சி, Bofors முகவர் வின் சத்தா, Bofors முன்னாள் தலைவர் மார்ட்டின் ஆர்ட்போ, ஏ.சி.முத்தையா, இந்துஜா சகோதரர்கள், செயலாளர் எஸ்.கே.பட்நாகர், கூடுதல் செயலாளர் என்.என்.வோஹ்ரா, தளபதி சுந்தர்ஜி, பிரதமர் ராஜிவ் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், நிறுவன முதலாளிகள் இந்தியாவுக்கும் ஸ்வீடனுக்கும் இடையே பீரங்கி ஒப்பந்தத்தை சட்டவிரோதமாக நிறைவேற்ற சுமார் 64 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, ஒட்டாவியோ குவாட்ரோச்சி மூலம் சோனியா காந்திக்கு Bofors லஞ்ச பணத்தை அனுப்ப ஏ.சி.முத்தையாவின் A.E. Services என்றொரு மோசடி நிறுவனம் (Shell Company) இடைத்தரகு வேலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 
மார்ட்டின் ஆர்ட்போவின் நாட்குறிப்பில் Q, G, H என்று குறியிடப்பட்ட பெயர்கள் பீரங்கி ஒப்பந்தத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஸ்வீடன் அரசு விசாரணைக் குழு கருதியது. Bofors முன்னாள் தலைவர் மார்ட்டின் ஆர்ட்போ சாமியார் சந்திராசாமி மற்றும் சவூதி அரேபியா ஆயுத வியாபாரி அட்னன் கஷோகி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நேரத்தில் அவர் ராஜீவ் காந்தியை சந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும், மார்ட்டின் ஆர்ட்போ மற்றும் ராஜீவ் காந்தி ஆகிய இருவரும் ஒருவரையொருவர் சந்தித்தாக வெளியான செய்திகளை மறுத்தனர்.
நாடாளுமன்ற கூட்டுக் குழு

நாடாளுமன்றத்தில் பீரங்கி ஒப்பந்தம் குறித்த ஊழல் வெடித்ததால் Bofors ஊழலை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை (Joint Parliamentary Committee-JPC) உருவாக்க பிரதமர் ராஜீவ் காந்தி ஒப்புக்கொண்டார். அவ்வகையில், 06-08-1987 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணா சந்திரா பந்த் முன்வைத்த பிரேரணையின் அடிப்படையில் பி.சங்கரானந்த் தலைமையில் JPC உருவாக்கப்பட்டது. JPC குழு 50 அமர்வுகளை நடத்தி Bofors ஒப்பந்தத்திற்காக ராஜீவ் காந்தி உட்பட யாராலும் பணம் கொடுக்கப்படவில்லை, வாங்கப்படவில்லை, கேட்கப்படவில்லை என்று இறுதி அறிக்கையை 26-04-1988 அன்று சமர்ப்பித்தது. 18-07-1989 அன்று JPC குழு காங்கிரஸ் ஆதரவாளர்களால் நிரப்பப்பட்டது என்று குற்றம் சாட்டி JPC அறிக்கையை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நிராகரித்தனர்.

இதற்கிடையில், அ.தி.மு.க ஜானகி அணியைச் சேர்ந்தவரும் JPC குழு உறுப்பினருமான ஆலடி அருணா JPC குழுவின் கருத்துகளுடன் உடன்படவில்லை என்றும் JPC குழுவின் அறிக்கையில் தனது ஆட்சேபனைகளை சேர்த்து வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார், இது ஆதாரமற்ற குறுக்கீடு என்று JPC தலைவர் பி.சங்கரானந்த் கூறினார். ஆலடி அருணா ஆட்சேபனைகளை தெரிவிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பல்ராம் ஜாக்கர் அனுமதி அளித்ததை அடுத்து, JPC குழுவினர் சரியான முறையில் செயல்படவில்லை என்று ஆலடி அருணா 38 பக்க அறிக்கையை வெளியிட்டார்.

1989 இல் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசு ஸ்வீடனின் Bofors ஒப்பந்தத்தை பெறுவதற்கு வழிவகுத்த செலவினங்கள் மதிப்பீட்டில் முறைகேடுகள் இருப்பதாகவும், பீரங்கி ஒப்பந்தம் அவசரமாக நிறைவேற்றப்பட்டது என்றும் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India-CAG) டி.என்.சதுர்வேதியின் சர்ச்சைக்குரிய அறிக்கை வெளியானது. 24-06-1989 அன்று CAG கூறிய குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ராஜீவ் காந்தியை ராஜினாமா செய்ய கோரியும், முறையான விசாரணையை கோரியும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 73 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். மேலும் "1989 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது ஏனெனில் இது உண்மையை வெளிக் கொண்டு வருவதற்கான கடைசி வாய்ப்பாக நாங்கள் கருதுகிறோம்" என்று பா.ஜ.க தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் கூறினார்.

வி.பி.சிங் விலகல்

31-12-1984 முதல் 23-01-1987 வரை நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங், வணிக ஒழுங்குமுறையை எளிமையாக்குதல், வரி ஏய்ப்பவர்களை கண்காணித்து வழக்கு தொடுத்தல், தங்கக் கடத்தலைக் குறைக்க தங்க வரியைக் குறைத்தல் போன்ற நற்காரியங்களை செய்தார். மேலும் வரி ஏய்ப்பு செய்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் திருபாய் அம்பானி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் மீது உயர்மட்ட சோதனைகளை நடத்தினார். வி.பி.சிங்கின் கடுமையான நடவடிக்கைகள் சர்ச்சையான நிலையில் நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து, ராஜீவ் காந்தி தனது பாதுகாப்புத்துறை இலாகாவை 24-01-1987 அன்று வி.பி.சிங்கிடம் ஒப்படைத்தார். 24-01-1987 முதல் 12-04-1987 வரை பாதுகாப்புத்துறை அமைச்சராக வி.பி.சிங் இருந்த காலத்தில் HDW நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் Bofors விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் பாதுகாப்புத்துறை மோசடிகளை விசாரிப்பதில் ஆர்வம் காட்டிய வி.பி. சிங் HDW நீர்மூழ்கிக் கப்பல் விவகாரத்தில் இந்திய முகவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து சுதந்திரமான விசாரணைக்கு வி.பி.சிங் உத்தரவிட்டார். வி.பி.சிங்கின் நோக்கம் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையா? அல்லது ராஜீவ் காந்தி அரசுக்கு எதிராக வழக்கைத் தயாரிப்பதா? என்று புகைச்சல் கிளம்பியது. அதை தொடர்ந்து, இலாகாவை சுதந்திரமாக கையாள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இருந்து வி.பி.சிங் ராஜினாமா செய்தார். 18-04-1987 அன்று வி.பி.சிங்கிற்கு பதிலாக கிருஷ்ணா சந்திரா பந்த் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1987 இல் அமைச்சர், ராஜ்யசபா உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை ராஜினாமா செய்த பிறகு, 1988 இல் அமிதாப் பச்சனால் காலியான அலகாபாத் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக வி.பி.சிங் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவையில் நுழைந்தார்.

அமிதாப் பச்சன் விலகல்

1984 இல் அமிதாப் பச்சன் நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்து, நீண்டகால குடும்ப நண்பரான ராஜீவ் காந்திக்கு ஆதரவாக அரசியலில் நுழைந்தார். 1984 இல் அலகாபாத் நாடாளுமன்ற தொகுதியில் லோக் தளம் கட்சியை சேர்ந்தவரும் உத்திரபிரதேச முன்னாள் முதல்வருமான எச்.என்.பகுகுணாவை எதிர்த்து போட்டியிட்டு 68.20% வாக்கு வித்தியாசத்தில் அமிதாப் பச்சன் வெற்றி பெற்றார். அலகாபாத் நாடாளுமன்ற தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமிதாப் பச்சனின் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.
1987 இல் அமிதாப் பச்சனின் சகோதரரும் தொழிலதிபருமான அஜிதாப் பச்சன் சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியதாக The Indian Express செய்தி வெளியிட்டு, Bofors ஊழலில் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பர் அமிதாப் பச்சனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற ஊகத்திற்கு வழிவகுத்தது. Bofors ஊழல் வெடித்ததை தொடர்ந்து ஜூலை 1987 இல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அமிதாப் பச்சன் ராஜினாமா செய்து அரசியலை விட்டு ஒதுங்கினார்.

இதற்கிடையில், 1990 இல் Bofors ஊழலில் அஜிதாப் பச்சன் பணம் பெற்றதாக ஸ்வீடன் செய்தித்தாள் Dagens Nyheter செய்தி வெளியிட்டது. உடனடியாக, அஜிதாப் பச்சன் லண்டன் நீதிமன்றத்தில் Dagens Nyheter செய்தித்தாள் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அஜிதாப் பச்சன் கதை இந்திய புலனாய்வாளர்களிடமிருந்து வந்ததாக கூறிய Dagens Nyheter அஜிதாப் பச்சனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டதை அடுத்து, அவதூறு வழக்கில் அஜிதாப் பச்சன் வெற்றி பெற்றார்.

அருண் நேரு மற்றும் அயோத்தி

இந்துக்கள் தரிசனம் செய்ய பாபர் மசூதியின் பூட்டுகளை திறக்க வேண்டும் என்று உமேஷ் சந்திர பாண்டே என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, 1986 இல், பைசாபாத் (இப்போது அயோத்தி) மாவட்ட நீதிமன்றம் பாபர் மசூதியின் பூட்டை திறக்க உத்தரவு பிறப்பித்து தரிசனத்துக்கு அனுமதித்தது. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல், காங்கிரஸ் அரசு பாபர் மசூதியை தரிசனத்திற்காக திறந்து விட்டது.

இந்நிலையில், பிரதமர் ராஜீவ் காந்தியை கலந்தாலோசிக்காமல், உள்துறை இணை அமைச்சராக இருந்த அவரது நெருங்கிய நண்பரான அருண் நேருவின் உத்தரவின் பேரில், உத்தரப் பிரதேச முதல்வர் வீர் பகதூர் சிங் மசூதியை தரிசனத்திற்காக திறக்க அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையில், பிரதமர் அலுவலக அதிகாரி வஜாஹத் ஹபிபுல்லாவிடம் "தன்னை கலந்தாலோசிக்காமல் பூட்டை திறக்க உத்தரவு பிறப்பித்து அதை செயல்படுத்திய பிறகு தான் தனக்கு தெரியும்" என்று ராஜீவ் காந்தி கூறியதாக வெளியான தகவல் குறிப்பிடத்தக்கது. ராஜீவ் காந்தியை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த அருண் நேரு பூட்டை திறக்க உத்தரவிட்டாரா? என்ற சர்ச்சை நீடித்த வேளையில், சில மாதங்கள் கழித்து அமைச்சர்கள் குழுவில் இருந்து அருண் நேருவை ராஜீவ் காந்தி நீக்கினார்.

மொத்தத்தில், தாத்தா ஜவஹர்லால் நேரு ஆட்சிக்காலத்தில் பூட்டப்பட்ட கதவுகள் பேரன் ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் திறக்கப்பட்டது அயோத்தி சர்ச்சையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மேலும், உள்கட்சி எதிரிகளுடன் போராடிக் கொண்டிருந்த ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில் சங்கப் பரிவார் அமைப்புகள் எழுச்சி பெற்றது என்பதை மறுப்பதற்கில்லை. அத்துடன், Bofors ஊழலை சுற்றியுள்ள கசப்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜைக்கு ராஜீவ் காந்தி அனுமதி அளித்தார், இது அவரது அரசியல் நகர்வை மேலும் சிக்கலாக்கியது.

அரசியல் சதுரங்க விளையாட்டு 
25-09-1985 முதல் 18-07-1987 வரை பாதுகாப்புத்துறை இணை அமைச்சராக இருந்த அருண் சிங், வெளியிடப்படாத தனிப்பட்ட காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில், பதவி விலகலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் விவகாரம் காரணமல்ல என்றார்.

ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக பணியாற்றிய முப்தி முகமது சயீத், 1987 இல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஸ்திரப்படுத்துவதற்கான ராஜீவ்-பாரூக் ஒப்பந்தத்தில் அதிருப்தி அடைந்து, தனது அமைச்சர் பதவி மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இவருடன் சத்ய பால் மாலிக்  Bofors ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸில் இருந்து விலகினார்.

பிரதமர் ராஜீவ் காந்தி மீது அதிருப்தியில் உள்ள சில காங்கிரஸ் எம்.பி.க்கள் அவருக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்த முயற்சிப்பதாக கருதப்பட்டதை தொடர்ந்து, 14-07-1987 அன்று கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அருண் நேரு, ஆரிப் முகமது கான், வி.சி.சுக்லா ஆகிய மூன்று அதிருப்தியாளர்களை காங்கிரஸில் இருந்து ராஜீவ் காந்தி வெளியேற்றினார்.

ராஜீவ் காந்தியின் உறவினரான அருண் நேரு, ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்த போது பிரதமரின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றினார். மேலும் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் உள்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார். ஆனால், அக்டோபர் 1986 இல் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட போது அருண் நேரு நீக்கப்பட்டார்.

1985 இல் ஷா பானு தீர்ப்பை தொடக்கத்தில் ஆதரித்து பின்னர் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசு ஒரு வருட விவாதத்திற்கு பிறகு சர்ச்சைக்குரிய முஸ்லீம் பெண்கள் (விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986 மசோதாவை நிறைவேற்றியது. இம்மசோதாவை எதிர்த்தும் ராஜீவ் காந்தியின் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சித்தும் எரிசக்தித்துறை இணை அமைச்சராக இருந்த ஆரிப் முகமது கான் ராஜினாமா செய்திருந்தார்.

ராஜீவ் காந்தியின் கட்சி செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து புகார் கூறி வந்த வி.சி.சுக்லா, 1987 இந்தியா ஜனாதிபதி தேர்தலில் ராஜீவ் காந்தியின் வேட்பாளரான ஆர்.வெங்கடராமனை எதிர்த்து ஜெயில் சிங்கை இரண்டாவது முறையாக போட்டியிட செய்து காங்கிரஸை பிளவுபடுத்த முயன்று தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிருப்தியாளர்களை வெளியேற்றுவது குறிப்பிடத்தக்க அரசியல் இயக்கமாக மாறி ராஜீவ் காந்தியின் அரசியல் சூழலுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அவ்வகையில், Bofors ஊழல் வெடித்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சிலர் ராஜினாமா செய்தாலும், சிலர் நீக்கப்பட்டாலும் அவர்கள் அனைவரும் அரசியலில் தங்கள் இடங்களை தக்க வைத்துக் கொண்டனர். காங்கிரஸ் உறவை முறித்துக் கொண்ட அருண் நேரு, ஆரிப் முகமது கான், வி.சி.சுக்லா, முப்தி முகமது சயீத், சத்யபால் மாலிக் உள்ளிட்டோர் வி.பி.சிங் தலைமையில் ஒருங்கிணைந்து ஜன் மோர்ச்சா கட்சியை 1987 இல் தொடங்கினர். அதன் பிறகு, 1988 இல் ஜனதா கட்சி, லோக் தளம், ஜன் மோர்ச்சா கட்சிகளை இணைத்து வி.பி.சிங் தலைமையில் ஜனதா தளம் கட்சி தொடங்கப்பட்டது.

1989 தேர்தல் முடிவை மாற்றிய Bofors 

பா.ஜ.க தலைமையிலான எதிர்க்கட்சிகளின் தொடர் நடவடிக்கைகள் காங்கிரஸ் அரசின் மீதான நம்பிக்கையையும், ராஜீவ் காந்தியின் பிம்பத்தையும் அசைத்து பார்த்தது. இதையொட்டி, பீரங்கிகளை வாங்கியதில் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் Bofors ஊழல் இந்திய அரசியலில் புயலை கிளப்பியது, 1989 நாடாளுமன்ற தேர்தலின் முடிவை மாற்றியது மற்றும் பல தசாப்தங்களாக இந்திய அரசியலின் முகத்தை மாற்றியது. 1989 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் படுதோல்விக்கு Bofors ஊழல் தொடர்பான எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் முதன்மைக் காரணமாகும்.
எவ்வாறாயினும், Bofors ஊழல் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு, ஒட்டாவியோ குவாத்ரோச்சி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டாலும், இறுதி விசாரணையில் ராஜீவ் காந்தி உட்பட யாரும் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சியமைத்த தேசிய முன்னணி

சென்னையில் அக்டோபர் 1988 இல் ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், அசாம் கண பரிஷத், இந்திய காங்கிரஸ் (சோசலிஸ்ட்) உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வி.பி.சிங், தேவி லால், என்.டி.ராமராவ், கலைஞர் போன்ற தலைவர்கள் ஒருங்கிணைந்து தேசிய முன்னணியை உருவாக்கினர். தேசிய முன்னணிக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் என்.டி.ராமாராவ் தலைவராக, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த பி.உபேந்திரா பொதுச் செயலாளராக, ஜனதா தளம் கட்சி தலைவர் வி.பி.சிங் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றனர். தேசிய முன்னணி தலைவர்களுக்கு சமூக நீதியை பறைசாற்றும் மண்டல் ஆணைக்குழுவின் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவது முதன்மையான திட்டமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் தேசிய முன்னணியின் அரசியல் செயல்பாட்டில் தி.மு.க தலைவர் கலைஞர் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. 1989 ஜனவரியில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கலைஞர் தலைமையிலான தி.மு.க அவ்வெற்றியை தேசிய முன்னணியின் வெற்றி விழாவாக கொண்டாடி மகிழ்ந்தது.

இதற்கிடையில், 1989 நவம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க வெளியில் இருந்து ஆதரவு கொடுக்க மூன்றாவது அணியான தேசிய முன்னணி சார்பில் வி.பி.சிங் பிரதமர் ஆனார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி  தோல்வியை தழுவினாலும் வி.பி.சிங் அமைச்சரவையில் தி.மு.க சார்பில் முரசொலி மாறன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

Bofors ஊழலை அணுகிய விதமும், Mr.Clean பிம்பமும் தேசிய முன்னணியின் சார்பில் வி.பி.சிங் பிரதமரானதில் மிக முக்கியப் பங்கு வகித்தது. 26-12-1989 அன்று வி.பி.சிங் அரசு எதிர்காலத்தில் இந்தியாவுடன் எந்தவிதமான பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் மேற்கொள்ள Bofors நிறுவனத்தை அனுமதிக்க மாட்டோம் என்று உத்தரவு பிறப்பித்தது. ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு குழுவின் (Special Protection Group-SPG) பாதுகாப்பை வி.பி.சிங் அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. மண்டல் ஆணைக்குழுவின் அறிக்கைப்படி முதல் கட்டமாக வேலைகளில் 27% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று பிரதமர் வி.பி.சிங் 07-08-1990 அன்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், சட்ட மேதை அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கி, அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடி கௌரவித்தது வி.பி.சிங் அரசு. வி.பி.சிங்கின் சமூக நீதி ஆட்சி அம்பேத்கரையும் பெரியாரையும் கொண்டாடும் ஆட்சியாக விளங்கியது. வி.பி.சிங் ஆட்சியில் தலித் இயக்கம் புதிய ஆற்றலை பெற்றது என்றால் அது மிகையாகாது.

இதனிடையே, பிரதமர் வி.பி.சிங் அறிவித்த இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமர் கோவில் கட்ட ராம் ரத யாத்திரைக்கு பா.ஜ.கவை சேர்ந்தவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அத்வானி ஏற்பாடு செய்தார். பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், பிரதமர் வி.பி.சிங் ஆதரவுடன், 23-10-1990 அன்று அயோத்தியில் பாபர் மசூதி பகுதிக்கு ராம் ரத யாத்திரையை செல்ல விடாமல் தடுத்து பா.ஜ.க தலைவர் அத்வானியை சமஸ்திபூரில் கைது செய்தார். அதை தொடர்ந்து, வி.பி.சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க வாபஸ் பெற்றதால் 07-11-1990 அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வி.பி.சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

வி.பி.சிங் ஆட்சி கவிழ்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன், பிரதமர் பதவி மீது கண் வைத்திருந்த சந்திரசேகர், 05-11-1990 அன்று ஜனதா தளத்திலிருந்து பிரிந்து சமாஜ்வாதி ஜனதா கட்சியை (ராஷ்ட்ரிய) தொடங்கினார். 10-11-1990 அன்று காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமர் ஆனார். நாளடைவில் ஜனதா தளம் பல கட்சிகளாக பிரிந்தது தனிக்கதை.
குறிப்பு = சமூக நீதி, இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் பாதுகாப்பு ஆகிய கொள்கைகளை எப்போதும் வெறுக்கும் பா.ஜ.கவால் சமூகநீதி காவலரான அம்பேத்கருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை ஜீரணிக்க முடியவில்லை. இந்த பின்னணியில், 06-12-1992 அன்று அம்பேத்கரின் நினைவு நாளன்றே திட்டமிட்டு பா.ஜ.க கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சித்ரா சுப்ரமணியம்
1979 இல் India Today இதழில் நிருபராக சேர்ந்தார் சித்ரா சுப்ரமணியம். 1983 இல் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) நிருபராக இருந்து The Hindu உள்ளிட்ட சில பத்திரிகைகளுக்கு செய்திகளை எழுதி வந்தார். 16-04-1987 அன்று ஒரு அநாமதேய நபர் ஸ்வீடன் வானொலியில் "இந்தியாவில் உள்ள முக்கிய நபர்களுக்கு கணிசமான லஞ்சம் கொடுத்ததன் மூலம் Bofors பீரங்கி ஒப்பந்தம் சாத்தியமானது" என்று குற்றம் சாட்டினார். ஸ்வீடன் வானொலியில் ஒலிபரப்பான Bofors செய்தி இந்திய மக்களின் காதுகளை எட்டும் முன்பே, வானொலி செய்தி ஐரோப்பாவில் வசித்த இந்திய பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியத்தின் காதுகளுக்கு எட்டியது. அதன் பிறகு,  ஜெனீவாவில் இருந்து புறப்பட்டு ஸ்வீடன் சென்ற அவர் அங்கு ஒரு அநாமதேய நபருடன் தொடர்பு கொண்டு பீரங்கி ஒப்பந்தம் குறித்த சுமார் 350 அசல் ஆவணங்களை பெற்று Bofors ஊழலை விசாரிக்க தொடங்கினார். 09-10-1989 அன்று ஆசிரியர் என்.ராமுடன் இணைந்து The Hindu பத்திரிகையில் Bofors ஊழலை புலனாய்வு செய்து வெளியுலகுக்கு முதன் முதலில் சித்ரா சுப்ரமணியம் தெரியப்படுத்தினார். இதை தொடர்ந்து, Bofors சர்ச்சை குறித்து பத்திரிகையில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதி வந்தார்.
பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம், Bofors ஊழலை பற்றி 10 ஆண்டுகள் புலனாய்வு செய்ததில் முதல் 20 மாதங்கள் The Hindu ஆசிரியர் என்.ராமுடன் பணியாற்றினார். ஸ்வீடன் வானொலியில் பேசிய அநாமதேய நபரே Bofors விசாரணையில் தனக்கு முக்கிய ஆதாரம் என்றும், அந்த விவரங்களை தன்னிடம் கலந்தாலோசிக்காமல் ஆசிரியர் என்.ராம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பகிர்ந்து கொண்டதாகவும் சித்ரா சுப்ரமணியம் குற்றம் சாட்டினார். நாளடைவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, Bofors ஊழல் குறித்த சித்ரா சுப்ரமணியத்தின் கட்டுரைகளை சர்ச்சைக்குரியதாக கூறி அவற்றை வெளியிடுவதை The Hindu நாளிதழ் நிறுத்தியது. அதன் பிறகு சித்ரா சுப்ரமணியம் The Indian Express நாளிதழில் எழுதி வந்தார்.

2014 இல் பத்திரிகையாளர்கள் விக்னேஷ் வெள்ளூர் மற்றும் தன்யா ராஜேந்திரன் ஆகியோருடன் இணைந்து The News Minute என்ற இணைய பத்திரிகையை சித்ரா சுப்ரமணியம் தொடங்கினார். மேலும் பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியால் நிர்வகிக்கப்படும் Republic TV ஆசிரியர் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.

ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம்

1987 இல் ஸ்வீடன் அரசியலில் புயலை கிளப்பிய Bofors வழக்கை விசாரித்து வந்த ஸ்வீடன் காவல்துறை தலைவர் ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் (Sten Lindstrom) என்பவரே ஸ்வீடன் வானொலியில் பேசிய அநாமதேய நபர் என்ற தகவல் 2012 இல் வெளியானது.
Dagens Nyheter பத்திரிகை வெளியிடப்பட்ட Bofors ஊழல் செய்திக்குறிப்பில் பச்சன் குடும்பத்தை புலனாய்வாளர்கள் பொய்யாக குறிப்பிட்டுள்ளனர் என்றும் இரு நாடுகளும் முறையான விசாரணையை நடத்த வாய்ப்பில்லை என்றும் கருதியே 1987 இல் ஸ்வீடன் வானொலியில் Bofors ஊழலை பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டதாக ஸ்டென் லிண்ட்ஸ்ட்ரோம் கூறினார். அந்த காலக்கட்டத்தில் Bofors விவகாரத்தில் இரு நாட்டு அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் சிலர் சேறு பூசினார்கள் என்று 2012 இல் ஸ்டென் லிண்ட்ஸ்ட்ரோம் புலம்பியதும் குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் காந்தி படுகொலை

இந்தியாவுக்கு பீரங்கிகளை வாங்க வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் ஆஸ்திரியாவுடன் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படுவதற்கு முன்பு 31-10-1984 அன்று இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். 1984 இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ராஜீவ் காந்தி, ஆஸ்திரியாவை முந்தைய பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, இந்தியாவுக்கு பீரங்கிகளை வாங்க ஸ்வீடனுடன் ரூ.1,437 கோடிக்கு ஒப்பந்தம் செய்தார். ஸ்வீடன் பிரதமர் ஓலோப் பால்மே மற்றும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோர் பீரங்கி ஒப்பந்தத்தை உறுதி செய்ய குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டனர். 

ஸ்வீடனுடனான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக, இந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் முகவர்கள் ரூ.64 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட சூழலில், Bofors ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, 28-02-1986 அன்று ஸ்வீடன் பிரதமர் ஓலோப் பால்மே படுகொலை செய்யப்பட்டார். மேலும், சுப்ரமணிய சுவாமி மற்றும் ஜெயலலிதாவின் அழுத்தம் காரணமாக 30-01-1991 அன்று பிரதமர் சந்திரசேகர் தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த தி.மு.க ஆட்சியை கலைத்தார். அந்நேரத்தில், ராஜீவ் காந்திக்குரிய Special Protection Group (SPG) பாதுகாப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் 21-05-1991 அன்று படுகொலை செய்யப்பட்டார்.

சீக்கிய விடுதலை அமைப்பு, காஷ்மீர் விடுதலை அமைப்பு, அசாம் விடுதலை அமைப்பு, ஈழ விடுதலை அமைப்பு, நேபாளம் மன்னர் வகையறா உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து ஒருங்கிணைந்த அச்சுறுத்தலை ராஜீவ் காந்தி எதிர்கொண்டதாக ஜெயின் ஆணையத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியது. இதற்கிடையில், ராஜீவ் காந்தி படுகொலையில் விடுதலைப் புலிகளின் பங்கு குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வந்தாலும், விடுதலைப் புலிகள் பொதுவாக அதன் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்பதாக கூறுவது குறிப்பிடத்தக்கது, ஆனால் இந்த படுகொலை நடவடிக்கையில் அவர்கள் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளனர். மேலும் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், காணொளி ஆதாரங்களை சிதைத்தாக சந்தேகிக்கப்பட்ட எம்.கே.நாராயணன், Bofors பீரங்கி பேரத்தில் கிசுகிசுக்கப்பட்ட சாமியார் சந்திராசாமி (ராஜீவ் காந்தி மறைவுக்கு பிறகு பிரதமரான நரசிம்ம ராவுக்கு நெருக்கமானவர்), சவூதி அரேபியா ஆயுத வியாபாரி அட்னன் கஷோகி, ராஜீவ் காந்தியை ஓரங்கக்கட்ட எண்ணிய சுப்ரமணியசாமி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது ஆனால் அவர்களிடம் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும் விடுதலைப் புலிகளை தாண்டி விசாரணை கோணம் நகரவில்லை என்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அதிகாரிகளில் ஒருவரான கே.ரகோத்தமன் கூறியது கவனிக்கத்தக்கது. 
சீக்கியர்கள் கோரும் காலிஸ்தான் போராட்டத்தை நீர்த்து போக செய்ய இந்திரா காந்தி படுகொலையும் தமிழர்கள் கோரும் தமிழீழ போராட்டத்தை நீர்த்து போக செய்ய ராஜீவ் காந்தி படுகொலையும் இன்று வரை பயன்படுகிறது. அதே நேரத்தில், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி இருவரையும் படுகொலை செய்வதால் காலிஸ்தான் மற்றும் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு அரசியல் ஆதாயம் இல்லாத நிலையில், அந்த போராளி இயக்கங்கள் அதை 100% செய்திருக்கும் என்று முடிவு செய்ய முடியாது என்றும் போராளி குழுக்களின் ஆதரவின்றி, இந்திரா காந்தியை சத்வந்த் சிங், பீண்ட் சிங் ஆகிய இரு சீக்கியர்களும், ராஜீவ் காந்தியை ஈழத் தமிழரான தனு "அறியப்படாத நபருக்காக" படுகொலைகளை நடத்தியிருக்கலாம் என்றும் சர்வதேச ஆயுத வியாபாரம், வல்லரசு சதி, இந்துத்துவா அரசியல் ஆதாயம் ஆகியவை தான் இந்த படுகொலைகளுக்கு இடையே உள்ள இணைப்பு புள்ளி என்று அரசியல் விமர்சகர்கள் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. 

ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி மற்றும் அவர்களது நெருங்கிய நண்பரான ஓலோப் பால்மே ஆகியோரின் மூன்று படுகொலைகளுக்கும் ஆயுத வியாபாரத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரிக்கப்படவில்லை. அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்டிருக்கக்கூடிய ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான விசாரணை, விரிவான ஆய்வு மற்றும் அலசல்களுக்கு உட்பட்டது. எனவே, விசாரணைக் குழு வெற்றிகரமாக உண்மையை வெளிப்படுத்தியதா அல்லது அவ்வாறு செய்யத் தவறியதா என்ற கேள்வி இன்றும் விவாதத்திற்குரியதாக உள்ளது.

ராஜீவ் காந்தி மறைவுக்கு பின்னர் பொது உடைமை (Socialism) என்பதை தாண்டி தாராளமயமாக்கல் (Liberalism) யுகத்திற்கு இந்தியா நுழைந்தது கவனிக்கத்தக்கது. மேலும் Bofors ஊழல் வெடித்த பிறகும் ராஜீவ் காந்தி மறைவுக்கு பிறகும் 32 வருடங்களில் காங்கிரஸ் 15 வருடங்கள் தான் ஆட்சி செய்துள்ளது. குறிப்பாக ராஜீவ் காந்தி மறைவுக்கு பிறகு நேரு-காந்தி குடும்பத்தில் இருந்து ஒருவரும் பிரதமர் பதவியை அலங்கரிக்கவில்லை.
Bofors மற்றும் அரசியல் சடுகுடு

Bofors ஊழலின் ஒரே முகமாக ராஜீவ் காந்தியை குற்றம் சாட்டி பல அரசியல்வாதிகள் அரசியல் ஆதாயம் அடைந்தனர். Bofors ஊழல் வெடித்த போது வி.பி.சிங், அருண் நேரு, வி.சி.சுக்லா உள்ளிட்ட பலர் முரண்பட்ட தகவல்களை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. Bofors ஊழலில் ஊடக ஆதரவுடன் கூடிய பரப்புரைக்கு பிறகு 1989 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது.

1989 தேர்தலின் போது Bofors கதையை கையாண்டதன் மூலம், Bofors ஊழல்  நடைபெற்றதா என்று நிரூபிப்பதற்கு பதிலாக, தேர்தலின் போக்கை மாற்றும் விதமாகவும் தனது ஊடக வாழ்க்கையை நிறுவும் விதமாகவும் Bofors கதையை சித்ரா சுப்ரமணியம் விவரித்தார் என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது. Bofors ஒப்பந்தத்தின் மூலம் ராஜீவ் காந்தி லஞ்சம் பெற்றதாக பட்டித்தொட்டி எங்கும் பேசிய வாஜ்பாய், Bofors ஊழலில் சிக்கிய இந்துஜா சகோதரர்களை மட்டும் காப்பாற்ற முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1999 முதல் 2004 வரை பா.ஜ.க சார்பில் வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், Bofors ஊழலுக்கு ராஜீவ் காந்தி அரசே காரணம் என்று குற்றம் சாட்டிய தலைமை கணக்குத் தணிக்கையாளர் டி.என்.சதுர்வேதிக்கு 2002-2007 வரை கர்நாடக ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. 18-04-1987 முதல் 03-12-1989 வரை ராஜீவ் காந்தி அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி வகித்த கிருஷ்ணா சந்திரா பந்த், திட்டக்குழு ஆணையத்தின் 23 வது துணைத்தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

1957 முதல் சட்டமன்ற உறுப்பினர், ஆந்திர முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர், பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை, உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் பணியாற்றிய நரசிம்ம ராவ், ஒரு கட்டத்தில் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு, தீவிர அரசியலுக்கு திரும்பிய நரசிம்ம ராவ், பிரதமரானார்.

Bofors ஊழலின் காரணமாக 1989 இல் காங்கிரஸின் தேர்தல் தோல்வி குறிப்பிடத்தக்க வழிகளில் இந்திய அரசியலில் எண்ணற்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. 1989 முதல் தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் பிம்பம் கலைக்கப்பட்டு, தேசிய அரசியலில் எதிர்நீச்சல் போட, தேசியக் கட்சிகள் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது அவசியம் என்று கண்டறியப்பட்டு, இந்தியா கூட்டணி அரசியல் யுகத்தில் நுழைந்தது.
நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டு

யூகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டை கூறுவது தவறல்ல, ஆனால் குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டியவரின் கடமை. மேலும் குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்காமல் வெறும் பிரச்சாரத்தின் அடிப்படையில் உண்மையாக  கருத முடியாது. அவ்வாறு செய்வது சட்ட அமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்கிவிடும். மொத்தத்தில், இன்று வரை நிரூபிக்கப்படாத Bofors ஊழலை சுற்றியுள்ள அரசியலை இரண்டு வழிகளில் அணுகலாம். Bofors ஒப்பந்தத்தில் ராஜீவ் காந்தி அரசில் யாரும் தவறு செய்யவில்லை அல்லது ராஜீவ் காந்தியின் அரசியல் பிம்பத்தை கெடுக்க பா.ஜ.க மற்றும் ஊடகங்களால் புனையப்பட்ட கதையாக பொருள் கொள்ளலாம்.
முடிவுரை

ஆதாரம் இல்லாமல், ஊதி பெரிதாக்கப்பட்ட Bofors ஊழலால் 1989 நாடாளுமன்ற தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் வெற்றியை இழந்தது. ராஜீவ் காந்தி காலத்தில் Bofors ஒரு அரசியல் பழமொழியாகவே மாறிப்போனது. பா.ஜ.கவாலும் ஊடகங்களாலும் மிகைப்படுத்தப்பட்ட Bofors ஊழல் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. 1980 களில் இருந்தே காங்கிரஸை சுற்றி ஊழல் கதைகளை பரப்பி பா.ஜ.க அரசியல் செல்வாக்கு பெற்று வருகிறது என்றே சொல்ல வேண்டும். எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தேர்தல் அரசியலில் பா.ஜ.க பெறுகிற வெற்றிகள், இந்தியாவின் அரசியல் சூழலை விளக்குகிறது.

துணுக்குச் செய்தி

# ஆரம்பத்தில் தடை செய்யப்பட்டாலும், Voestalpine நிறுவனம் 1984 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் சதாம் ஹுசைனின் ஈராக்கிற்கு GHN-45 பீரங்கிகளை தயாரித்து வழங்கியது. ஈரான்-ஈராக் போரில் ஈராக்கை ஆதரித்த அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனின் நிர்வாகம், ஈராக்கிற்கு GHN-45 பீரங்கிகளை விற்பதற்கு சத்தமின்றி உதவியது. இதன் பின்னணியில், Noricum ஊழல் தனிக்கதை.

# Bofors ஊழல் இந்தியாவில் பெரும் சர்ச்சையை உருவாக்கி, Bofors உடனான புதிய ஒப்பந்தத்தை நிறுத்தினாலும், ஏற்கனவே இருந்த Bofors பீரங்கி 1999 இல் பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்தியாவுக்கு தீர்க்கமான வெற்றியைக் கொடுத்தது.
விவரணைகள்


The Hindu Investigation Report about Bofors on 09-10-1989 


Seven party National Front formally launched in Madras 


Sten Lindstrom about Amitabh Bachchan clearance


A mistake that helped BJP to Survive, Grow and Rule


Indira Gandhi memorial speech by Olof Palme


Bofors Gun was not the Army's first choice



The Guns of Saddam Hussein


Amitabh Bachchan on Bofors



JPC Report about Bofors


A Murder in Stockholm


Bofors Scandal Story


Bofors Ghost


ஈழமும் சிங்களமும்


போபர்ஸ் ஊழலையும் ரபேல் ஊழலையும் ஒப்பிடாதீர்கள் - ப.சிதம்பரம்


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

1 comment:

  1. அருமையான தொகுப்பு. வாழ்த்துகள்

    ReplyDelete

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -