தமிழ் ஏன் தேயாமல் வாழ்கிறது?
குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
பொருளடக்கம்
- முகவுரை
- பிரமாண்டமும் எளிமையும்
- மூவேந்தர்களின் அழிவு
- தமிழர்களின் எளிமை
- பழையதிலிருந்து புதியது
- திராவிட இயக்கம்
- மோடியின் பிரம்மாண்டம்
- எப்படி சாத்தியமானது?
- முடிவுரை
முகவுரை
தமிழ்நாட்டில் காணப்படாத தொல்லியல் எச்சங்கள் எகிப்து, கிரேக்கம், உரோம் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. அவை தமிழை விட மிகவும் பழமையானவை என்று அறியப்படுகிறது. ஆனால், இன்று எகிப்திய, கிரேக்க, உரோம நாகரீகங்கள் எங்கே?அம்மக்கள் பேசிய மொழிகள் எங்கே? எல்லாம் ஏன் அழிந்தது? தமிழ் மட்டும் எப்படி தேயாமல் நிமிர்ந்து நிற்கிறது? அதற்கு, ஒரு காரணம் இருக்கிறது, அது என்ன என்பதை சில பத்திகளில் ஆராய்வோம்.
பிரமாண்டமும் எளிமையும்
கிரேக்க அக்ரோபொலிஸ் (Acropolis of Athens), எகிப்திய பிரமிடு (Egyptian Pyramids), ரோமன் மன்றம் (Roman Forum) போன்றவை மன்னர்களின் ஆடம்பர கலை சின்னங்கள் ஆகும். மாறாக, நெகிழ்வுத்தன்மை (Flexibility) கொண்ட தமிழ் என்பது எளிமையின் (Simplicity) அடையாளம் ஆகும். ஆடம்பர மரபில் வேரூன்றிய எகிப்து, கிரேக்கம், உரோம் நாகரிகங்கள் வீழ்ந்த நிலையில், எளிமையின் மரபில் வேரூன்றிய தமிழ் நாகரிகம் இன்றும் செழித்தோங்கி வருகிறது.
மூவேந்தர்களின் அழிவு
பாண்டிய பேரரசர் முதுகுடுமிப் பெருவழுதி, பிரம்மாண்ட யாகங்கள் நடத்த தொடங்கிய பிறகு "பிரம்மாண்டம்" என்ற கவர்ச்சி சொல் அரசியல் முக்கியத்துவம் பெற தொடங்கியது. அதுவே சோழர்கள் ஆட்சியில் உச்சம் பெற்றது. மேலும், பார்ப்பனர்களின் வருகைக்கு பிறகான பேரரசுகளின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் கோவில்களும் அரண்மனைகளும் பிரம்மாண்டமான கட்டிடங்களாக கட்டப்பட்டன. இவ்வாறு, மக்களின் எளிமையான வாழ்வியலில் இருந்து விலகி, பிரம்மாண்டத்தின் வழியில் அதிகாரத்தை நிலைநிறுத்த முயன்ற மூவேந்தர்கள் 12-13 ஆம் நூற்றாண்டில் அழிந்து போனதுதான் வரலாறு.
தமிழர்களின் எளிமை
வெவ்வேறு காலகட்டங்களில், பல்வேறு இன்னல்களும் மாற்றங்களும் ஏற்பட்டாலும், தமிழ்நாடும் தமிழ் மொழியும் தனக்கான அடையாளத்தை தக்க வைத்து கொண்டிருக்கின்றன. ஏனெனில், ஆதிக் காலத்திலிருந்தே தமிழர்கள் தங்கள் அன்றாட வாழ்வியலிலும், வழிபாட்டிலும் எளிமையையே கடைபிடித்து வந்தனர்.
உதாரணமாக, பெருங்கோவில்களை பேரரசர்கள் தமிழ்நாடு முழுவதும் கட்டினாலும், அவை யாவும் தமிழ் மக்களுக்கு குலதெய்வமாக இல்லை. அவர்களுக்கு குலதெய்வம் என்றால் எளிமையை போதிக்கும் சிறுதெய்வ வழிபாடு தான். இவ்வாறு, எளிமையின் வேர்களை விட்டுவிடாமல் நம் மக்கள் கடைப்பிடிக்கும் எளிமையும் நெகிழ்வும் தான் தமிழ் தேயாமல் வாழ்கிறது.
பழையதிலிருந்து புதியது
*எகிப்து இஸ்லாத்தை தழுவியது, எகிப்திய மொழியின் வீழ்ச்சிக்கு பிறகு அரபு மொழி நிலைத்தது.
*ரோம் கிறித்தவத்தை தழுவியது, லத்தீன் மொழியின் வீழ்ச்சிக்கு பிறகு இத்தாலிய மொழி நிலைத்தது.
*கிரேக்கம் கிறித்தவத்தை தழுவியது, பண்டைய கிரேக்க மொழியின் வீழ்ச்சிக்கு பிறகு நவீன கிரேக்க மொழி நிலைத்தது.
ஆனால், நெடுங்காலம் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டாலும், தமிழ் சிற்சில மாற்றங்களுடன் வீறுநடை போடுகிறது. இதற்கு, நம் மக்கள் தங்களை இனத்தால் திராவிடர்கள் என்றும், மொழியால் தமிழர்கள் என்றும் அடையாளப்படுத்தி கொள்வது மற்றும் நவீன கால திராவிட இயக்க ஆட்சியாளர்கள் இன, மொழி அடையாளத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் முக்கிய காரணமாகும்.
திராவிட இயக்கம்
தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் தங்களது சகாக்களுடன் சேர்ந்து, நம் மக்களின் எளிமையும் நெகிழ்வும் பற்றிய வரலாற்று பார்வையை எடுத்துரைத்தனர். அவர்கள் நமக்கு அந்நியமான ஆரியர்கள் நுழைத்த பெரும் மாற்றங்களையும், அதனால் வீழ்ந்த மன்னர்களைப் பற்றியும் பேசினர். எளிமையை விட்டு விடுவதால் ஏற்படும் ஆபத்துக்களை எச்சரித்தும், அதிகாரம் என்பது மலர் கிரீடம் அல்ல; முள் கிரீடம் என்பதே உண்மை எனக் கூறி, அதனால் எளிமையை கடைப்பிடிக்க திராவிட இயக்கம் வலியுறுத்தியது. நம்மவர்களின் உள்ளத்தில் "எளிமையும் நெகிழ்வும்" இருப்பதால் தான் தமிழ் மொழி பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் வாழ்ந்து வருகிறது.
மோடியின் பிரம்மாண்டம்
2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஊடகங்கள் ஏற்படுத்திய "மோடி பிரம்மாண்டம்" தமிழ்நாட்டில் எடுபடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். பற்பல மன்னர்கள் தொடங்கி ஜெயலலிதா வரை வீழ்ந்திட காரணம் அவர்கள் விரும்பி ஏற்ற "பிரம்மாண்டம்".
"பிரம்மாண்டம்" தான் யூதம் வளர தடையாக இருந்தது. "எளிமையும் நெகிழ்வும்" தான் கிறிஸ்தவம் வளர காரணமாக இருந்தது. காந்தி, பெரியார் போன்றோர் எளிமையும் நெகிழ்வும் கொண்டவர்கள்; அதனால் உலகம் போற்றும் தலைவர்களாக உயர்ந்தனர்.
எப்படி சாத்தியமானது?
எகிப்து, கிரேக்கம், உரோம் ஆகிய நாடுகளின் வரலாற்று எச்சங்கள் உலகளவில் பயன்பாட்டில் இருந்தாலும் அந்நாடுகள் தங்கள் நீண்ட வரலாற்றை விட்டு விலகியே பொதுவெளியில் பயணிக்கின்றன. ஆனால், தமிழ் வரலாற்றுடனும் அதன் மரபுகளுடனும் நாம் காலங்காலமாக இணைந்தே பொதுவெளியில் பயணிக்கிறோம். அப்படி நம்மவர்கள் பொதுவெளியில் பயணிக்க காரணம் எளிமையும் நெகிழ்வும் தான். ஆரியர்கள் நம் நாட்டை ஆதிக்கம் செய்யும் முன்னரே, எளிமையுடனும் நெகிழ்வுடனும் பயணித்தவர்கள் நம் முன்னோர்கள். உதாரணமாக, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" பழமொழி கூட எளிமையை நெகிழ்வை பறைசாற்றுகிறது.
"எளிமையும் நெகிழ்வும் தான் தமிழ் மரபு தொடர்ச்சியாக தழைத்தோங்க காரணம்" என்பது சர்வதேச அளவில் வரலாற்று ஆசிரியர்கள் வழங்கும் பொதுவான விளக்கமாகும். உலகளவில், குறிப்பாக எகிப்து, கிரேக்கம், உரோம் இலக்கியங்கள் மன்னர்களைப் பற்றியே சிலாகித்து பேசுகின்றன; ஆனால் தமிழ் இலக்கியங்கள் மக்களைப் பற்றியும் பேசியுள்ளது. உதாரணமாக, குடிமக்களை சார்ந்த அற்புதமான காப்பியமான சிலப்பதிகாரம் போன்றவை, மற்ற நாகரிகங்களுக்கு தனித்துவமான குடிமக்களின் காப்பிய பங்களிப்புகள் இல்லாத நிலையில் உருவானவை; அல்லது இருந்தால், அவை ஒற்றை மதத்தை சார்ந்தவையாகும்.
முடிவுரை
பண்டைய எகிப்து, கிரேக்கம், உரோம் ஆகியவற்றின் கலாச்சார பாரம்பரியம் இன்றைய மேற்கத்திய கலாச்சாரத்தை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டிருந்தாலும், அதன் பண்டைய தொடர்ச்சி மறைந்துவிட்டது என்பதை மறுக்க முடியாது. ஆனால், தமிழ்நாடும், தமிழ் பண்பாடும் "நேற்றும், இன்றும், என்றும்" செழித்தோங்க காரணம் நம் குடிமக்களின் எளிமையான வாழ்வியலை சார்ந்த மன உறுதியே காரணம்.
// பின்னிணைப்பு //
பண்டைய எகிப்து, கிரேக்கம், உரோம் ஆகிய நாகரிகங்கள், இந்தியாவைப் போல் பல்வேறு கடவுள்கள் மற்றும் புராணக் கதைகளில் ஆழமான நம்பிக்கையை கொண்டிருந்தன. இருப்பினும், அந்த சமூகங்கள் கல்வி மற்றும் பகுத்தறிவு சிந்தனையின் வழியே முன்னேறியதால், அவர்களது புராண நம்பிக்கைகள் படிப்படியாக மங்கின. இதற்கு நேர்மாறாக, ஆரியர்களின் பண்பாட்டு படையெடுப்பால் அறிமுகமான கலாச்சார பழக்க வழக்கங்கள் காரணமாக, இந்தியா தனது புராணக் கதைகளை தொடர்ந்து உயர்த்திப் பிடித்து, அதற்கேற்ப கடவுள்களுக்கு பற்பல விழாக்களை நடத்தி வருகிறது. இவை, நமது நாட்டின் சாமானியர்களின் முன்னேற்றத்திற்கு எவ்வகையிலும் உதவவில்லை. தமிழ்நாடு, ஆரியர்களின் பண்பாட்டு தாக்கங்களுக்கு ஓரளவிற்கு எதிர்வினை காட்டியிருந்தாலும், ஒட்டுமொத்தமாக, புராண கட்டுக்கதைகளை விட்டொழித்து, பகுத்தறிவும் அறிவார்ந்த கண்ணோட்டமும் கொண்ட ஒரு சமூகத்தை நோக்கி நாம் இன்னும் நீண்டதூரம் பயணிக்க வேண்டிய நிலைதான் உள்ளது என்றால் அது மிகையாகாது.
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.

No comments:
Post a Comment