தஞ்சை மராத்திய அரசு (1674 - 1855)
தஞ்சை விஜயராகவ நாயக்கர் அவரது மகளை தமக்கு திருமணம் செய்து வைக்க மறுத்த காரணத்தால் கோபம் கொண்ட மதுரை சொக்கநாத நாயக்கர் தஞ்சை விஜயராகவ நாயக்கரின் தலையை துண்டித்து அவர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மதுரை சொக்கநாத நாயக்கர் தன் தம்பி அழகிரி நாயக்கரை தஞ்சை நாயக்கராக நியமனம் செய்தார். சில காலம் மதுரைக்கு உட்பட்டு ஆண்டு வந்த அழகிரி நாயக்கர் பிறகு சுயேச்சையாக ஆளத் தொடங்கினார். வேதியர் வெங்கண்ணா மந்திரி பதவி கிடைக்காத விரக்தியில் அழகிரி நாயக்கரை வீழ்த்த எண்ணி விஜயராகவ நாயக்கரின் மகன் செங்கமலதாச நாயக்கரை தஞ்சை அரசனாக்க பீஜப்பூர் சுல்தானிடம் உதவி கோரினார்.
கோரிக்கைக்கு செவி சாய்த்து பீஜப்பூர் சுல்தான் தனது பிரதிநிதியாக வெங்கோஜியை (மராத்திய பேரரசன் சத்ரபதி சிவாஜியின் தம்பி) தஞ்சைக்கு அனுப்பி வைத்தார். வெங்கோஜி அழகிரி நாயக்கரை எளிதில் வீழ்த்தி செங்கமலதாச நாயக்கரை அரசனாக்கினார். செங்கமலதாசரும் அரசவையில் பணிபுரிய மந்திரி பதவி தராததால் அவரை வீழ்த்த எண்ணிய வேதியர் வெங்கண்ணா வெங்கோஜியை சந்தித்து நீங்களே தஞ்சையை ஆள வேண்டும் என்று யோசனை கூறினார். வெங்கண்ணாவின் தூண்டுதலின் பெயரில் செங்கமலதாசரை வீழ்த்திய வெங்கோஜி பீஜப்பூர் சுல்தானிடம் இருந்து விலகி தனி அரசாக 1674 அன்று தஞ்சை மராத்திய அரசை நிறுவினார். 1674 முதல் 1799 வரை தனி அரசாகவும் பிறகு ஆங்கிலேயர்களின் ஒருங்கிணைந்த கிழக்கு இந்தியா கம்பெனியின் கட்டுப்பாட்டில் 1855 வரை தஞ்சை மராத்தியினர் ஆட்சி புரிந்து வந்தனர். தென் நாட்டவர்களை தாண்டி வட நாட்டவர்களான மராத்தியர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி புரிய வேதியர் வெங்கண்ணாவின் அரசியல் சூழ்ச்சி முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆற்காடு நவாப் (1692 - 1867)
முகலாய அரசன் அவுரங்கசீப் கர்நாடக பகுதிகளில் வரிவசூல் செய்ய நவாப்புகளை நியமித்தார். அவ்வாறு நியமிக்கப்பட்ட நவாப்புகள் வரிவசூல் செய்ததுடன் விஜயநகர, மராத்திய, நாயக்க அரசுகளையும் வீழ்த்தினர். ஒரு கட்டத்தில் முகலாய அரசு பிரதிநிதியாக இருந்து வந்த நிசாம்-உல்-முல்க் 1724 இல் இருந்து ஹைதராபாத் நிசாம் என்ற சுயாட்சியை நிறுவினார். 1765 இல் முகலாய பேரரசிற்கு அடிபணியாமல் ஹைதராபாத் நிசாம் உடன் நட்பு பாராட்டி ஆற்காடு நவாப்புகளும் தங்களை தனி ராஜ்ஜியமாக அறிவித்து கொண்டனர். தென் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நுழைய ஆற்காடு நவாப்புகளின் அரசியல் சச்சரவுகள் முக்கிய காரணம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
1731 இல் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் வாரிசு இல்லாமல் இறந்ததால் மனைவி மீனாட்சி தமது நாயக்கர் குடும்பத்தை சேர்ந்த அரசு பிரதிநிதி பங்காரு திருமலை நாயக்கர் மகனை தத்தெடுத்தார். வளர்ப்பு மகன் வளரும் வரை நாயக்கர் ஆட்சியை வழி நடத்தும் ராணியாக மூடி சூட்டி கொண்டார் மீனாட்சி.
வளர்ப்பு மகனின் தந்தை பங்காரு திருமலை நாயக்கர் ஆட்சி பொறுப்பை ராணியிடம் இருந்து தனக்கு வாங்கி தரும்படி ஆற்காடு நவாப் தோஸ்த் அலி கானிடம் உதவி கேட்டார். பங்காரு திருமலை நாயக்கர் உதவி கேட்டதற்காக தோஸ்த் அலி கான் தனது மகன் சப்தார் அலி கானை பஞ்சாயம் செய்ய அனுப்பி வைத்தார். பங்காரு திருமலை நாயக்கரை அரசராக அறிவித்துவிட்ட பிறகு தன் உறவினர் சந்தா சாகிப்பை (தோஸ்த் அலி கானின் மருமகன்) மேலும் ஆக வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க கூறிவிட்டு சப்தார் அலி கான் ஆற்காடு திரும்பினார். இதற்கிடையில் ராணி மீனாட்சி சந்தா சாகிப்பிடம் தனக்கு மூடி சூட்டிட உதவி கேட்டார். ராணி மீனாட்சிக்கு உதவுவதாக கூறிவிட்டு வலுவிழந்த அரசியல் சூழலை பயன்படுத்தி சந்தா சாகிப் பங்காரு திருமலை நாயக்ககர் ஆட்சியை வீழ்த்தி ராணி மீனாட்சியை கைது செய்து ஆற்காடு நவாப் ஆட்சியை நிறுவினார். தோல்வி காரணமாக ராணி மீனாட்சி தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக 1867 இல் ஆற்காடு நவாப் அரச மரபை சார்ந்த ஆஸிம் ஜா பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவிடம் ஒப்பந்தம் செய்ததன் அடிப்படையில் நவாப் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமையை பிரிட்டிஷ் பெற்றனர். அதற்கு பிரிட்டிஷ் அரசால் ஆர்காடு இளவரசர் என்றும் அங்கிகரிக்கப்பட்டு ஓய்வுதியமாக தொகையினை ஆஸிம் ஜா பெற்றார்.

கிழக்கு இந்தியா கம்பெனி
கிழக்கு இந்தியா கம்பெனி 1608 இல் முகலாய பேரரசின் அனுமதியுடன் இந்தியாவில் சூரத் பகுதியில் தங்களது ஜவுளி வணிகத்தை தொடங்கினர். 1612 இல் போர்ச்சுகல் படைகளை வீழ்த்தி சூரத்தில் ஆங்கிலேயர்கள் தொழிற்சாலையை நிறுவியது பரவலாக அறியப்பட்டாலும் அதற்கு முன்பே 1611 இல் தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆந்திராவில் மச்சிலிப்பட்டணம் பகுதியில் வணிக தொழிற்சாலைகளை அமைத்தனர். தொடர்ந்து தென்னிந்தியா முழுவதும் வணிகம் செய்யும் நோக்கில் 1640 இல் சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை (இன்றைய தலைமை செயலகம்) ஒன்றை நிறுவி வணிகம் செய்து வந்தனர். 1746 இல் பிரெஞ்சுக்காரர்கள் சென்னையை கைப்பற்றினர். இதனால் கிழக்கு இந்தியா கம்பெனி கடலூர் பகுதிக்கு இடம் மாறி செயின்ட் டேவிட் கோட்டையில் இருந்து கொண்டு வணிகம் செய்து வந்தது. பிறகு மீண்டும் 1748 இல் ஆங்கிலேய படைகள் சென்னையை வெற்றிகரமாக மீட்டனர்.
வங்காள நவாப்பின் படை பிரெஞ்சுக்காரர்ககளின் படை ஆதரவுடன் கல்கட்டாவில் ஆங்கிலேயர்களை தொடர்ந்து தாக்கினர். வங்காள நவாப்பின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் ஆங்கிலேய படைகள் வங்காளத்தை தாக்கினர். இதற்கிடையில் ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேய படைகளுடன் வங்காள நவாப்பின் தளபதி மீர் ஜாஃபர் அணிமாறியதால் கிழக்கு இந்தியா கம்பெனி வங்காளத்தை எளிதில் வென்றது. 1757 பிளாசி சண்டை என அழைக்கப்படும் இதுவே கிழக்கு இந்தியா கம்பெனியின் முதல் இந்திய அரசியல் தலையீடு மற்றும் வெற்றி என்று கருதப்படுகிறது. இந்தியாவில் கிழக்கு இந்தியா கம்பெனி வலுவாக கால் ஊன்ற "ராபர்ட் கிளைவ்" என்பவரின் வியூகங்கள் முக்கிய காரணமாகும்.
பிரெஞ்சுக்காரர்களை வென்ற ஆங்கிலேயர்கள்
1744 இல் ஆற்காடு நவாப் சப்தர் அலி கான் மகன் இரண்டாம் சததுல்லா கான் மரணித்த பிறகு அன்வருதீன் கான் ஆங்கிலேயர்களுடன் நெருக்கம் காட்டி நவாப் ஆனார். 1749 இல் அன்வருதீன் கான் மரணித்த பிறகு ஆங்கிலேயர்கள் அன்வருதீன் கான் மகன் முகமது அலி கான் வாலாஜாவை ஆற்காடு நவாப்பாக ஆதரித்தனர், பிரெஞ்சுக்காரர்கள் சந்தா சாகிப் ஆற்காடு நவாப்பாக ஆதரித்தனர்.
பிரெஞ்சு உதவியுடன் பலம் பொருந்திய சந்தா சாகிப் ஆற்காடு நவாப்பாக பதவியேற்றார். அரசியல் சூழல் தமக்கு சாதகமா இல்லாததால் வெளியுறவு தொடர்பை அறுத்துவிட்டு முகமது அலி கான் வாலாஜா திருச்சி கோட்டைக்குள் தங்கி கொண்டு ஆங்கிலேயர்கள் உதவியை நாடினார். இச்சமயத்தில் திருச்சி கோட்டையை கைப்பற்ற சந்தா சாகிப் தமது வீரர்களுடன் சென்ற நேரத்தில் சந்தா சாகிப்பின் தலைமை நகரான ஆற்காட்டை ராபர்ட் கிளைவ் ஆங்கிலேய படைகளுடன் சென்று 1751 இல் கைப்பற்றினார். இப்படி தோல்வி அடைந்த பிறகு ஆங்கிலேயர்களின் தொடர் தாக்குதலில் இருந்து தப்பிக்க தஞ்சை சென்ற சந்தா சாகிபை 1752 இல் தஞ்சை மராத்திய அரசன் பிரதாப் சிங் உத்தரவின் பெயரில் கொலை செய்யப்பட்டார்.
பிறகு 1754 இல் ஒருங்கிணைத்த ஆற்காடு நவாப்பாக முகமது அலி கான் வாலாஜா பதவியேற்றார். 1765 இல் முகலாயப் பேரரசிற்கு அடிபணிவதை மறுத்து நவாப் ஆட்சியை சுதந்திர அரசாக முகமது அலி கான் வாலாஜா அறிவித்து கொண்டார். தனது சமஸ்தானங்களை விரிவுபடுத்தவும் கட்டுப்படுத்தவும் கிழக்கு இந்தியா கம்பெனி படைகளை பயன்படுத்தி கொள்ள ஆங்கிலேயர்களுடன் நட்புறவை மேற்கொண்டார். ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் சண்டையில் ஆங்கிலேயர்களை ஆதரித்து முகமது அலி கான் வாலாஜா கடனில் மூழ்கினார். அதன் பலனாக கிழக்கு இந்தியா கம்பெனிக்கு தனது நாட்டின் பல பகுதிகளை விற்றார்.
1795 இல் முகமது அலி கான் வாலாஜா மரணித்த பிறகு மகன் உம்தத் உல் உமாரா ஆற்காடு நவாப்பாக பதவியேற்று திப்பு சுல்தானிடம் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீவிரமாக போராடினார். 1799 இல் திப்பு சுல்தான் மரணித்தார். 1801 இல் உம்தத் உல் உமாரா மரணித்தார். பிறகு ஆற்காடு நவாப்பாக 1801 இல் அஸிம் உத் டவுலா (உம்தத் உல் உமாரா உறவினர்) பதவியேற்றார். புதிதாக பதவியேற்ற நவாப்பிடம் உம்தத் உல் உமாரா ஆற்காடு நவாப்பாக திப்பு சுல்தானுடன் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதாக குற்றம் சாட்டி ஆற்காடு பகுதிகள் முழுவதையும் எழுதி வாங்கி கொண்டது கிழக்கு இந்தியா கம்பெனி.
வேலூர் சிப்பாய் கலகம்
குறிப்பு - கலகம், கிளர்ச்சி, புரட்சி, போர் போன்ற வெவ்வேறு சொற்கள் தரும் பொருளானது அதிகாரத்திற்கு எதிரான போராட்டங்கள் எனப்படும்.
1805 இல் கிழக்கு இந்தியா கம்பெனி அதிகாரி வேலூர் கோட்டையில் பணியில் இருந்த வீரர்களிடம் சமய அடையாளங்கள் கூடாது எனவும், ஐரோப்பிய ராணுவ உடைகளை அணியவும், குழாய் வடிவ தொப்பியுடன் தோல் பட்டையைப் அணியவும் உத்தரவிட்டார். இப்படி சமய கொள்கைகளில் ஆங்கிலேயர்களின் தலையீட்டை எதிர்த்து வேலூர் சிறையில் இருந்த திப்பு சுல்தான் மகன்களின் ஆதரவுடன் வேலூர் சிப்பாய் கலகம் வெடித்தது. 1857 சிப்பாய் கலகத்திற்கு 1805 வேலூர் சிப்பாய் கலகம் முன்னோடியாக கருதப்படுகிறது.
1857 சிப்பாய் கலகம்
சிப்பாய் கலகம் பல்வேறு மாநிலங்களில் பரவ காரணங்கள்,
*வணிக நோக்கங்களுக்காக இந்தியா வந்த கிழக்கு இந்தியா கம்பெனி இந்தியாவின் அரசியல் மற்றும் சமய நடவடிக்கைகளில் தலையிட்டது.
*இந்தியாவின் வளங்களை எடுத்து கொண்டாலும் இந்தியர்களுக்கு பொருளாதார நன்மைகளை செய்யாதது.
*இந்திய வீரர்கள் என்பீல்டு வகை துப்பாக்கிகளை உபயோகிக்க மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்களின் உறையை வாயால் கடித்து அகற்ற வேண்டுவதால் சமய சார்புக்கு குந்தகம் விளைவிக்கும் என்று கருதப்பட்டது.
பெருந்திரள் மக்கள் போராட்டமாக சிப்பாய் கலகம் மாறினாலும் ஆங்கிலேய படைகள் இதனை முறியடித்தனர்.
பிரிட்டிஷ் ஆட்சி
சிப்பாய் கலகத்தை தொடர்ந்து 1857 முதல் கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சி நேரடி பிரிட்டிஷ் ஆட்சிக்கு கைமாறியது. பிரிட்டிஷ் ஆட்சியிலும் இந்தியர்களுக்கு நன்மைகள் பயக்கவில்லை. இந்தியாவில் விடுதலை வேண்டி பல புரட்சி இயக்கங்கள் தோன்றின. இதில் சில இந்திய விடுதலை இயக்கங்கள் ஜெர்மனி (இந்து - ஜெர்மானிய சதியும் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் ரஷ்ய போல்ஷெவிக்குடன் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அதனை விசாரப்பதற்கு ரௌலட் கமிட்டியை அமைத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். இவ்விசாரணையின் முடிவாக காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை விசாரணையின்றி பிணை இல்லாமல் இரண்டு ஆண்டுகள் வரை சிறையிலிடவும், கூட்டங்களில் பங்கெடுக்கத் தடை விதிக்கவும், நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு மேல்முறையீட்டை மறுக்கவும் ரௌலட் சட்டம் மார்ச் 1919 இல் இயற்றப்பட்டது. ஏப்ரல் 1919 இல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ஜாலியன் வாலாபாக் பகுதியில் ரௌலட் சட்டத்தை எதிர்த்து போராடும் விதமாகக் கூடியிருந்த பொதுமக்களை ராணுவ அதிகாரி ஜெனரல் டயர் உத்தரவின் பெயரில் ஆங்கிலேய படைகளின் துப்பாக்கியால் சுடப்பட்டு சுமார் 400 பேர் மரணித்தனர், 1200 பேர் படுகாயமடைந்தனர். இதுவே ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு முன்னரே தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களின் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக அரங்கேறிய பெருங்காமநல்லூர் படுகொலை, மருது சகோதரர்களை வேதனைக்குள்ளாக்க சிவகங்கையில் அரங்கேறிய படுகொலை போன்ற துன்பியல் சம்பவங்கள் பலருக்கும் தெரியாமல் போனது ஆய்வுக்குரியதாகும்.

ரௌலட் சட்டத்திற்கு எதிராகவும், ஜாலியன்வாலாபாக் படுகொலையை கண்டித்தும், இந்திய விடுதலையை வேண்டியும் காந்தி ஒத்துழையாமை இயக்கம் என்ற மக்கள் இயக்கத்தை 1920 இல் முன்னெடுத்தார். பிப்ரவரி 1922 இல் இப்போராட்டம் உத்தர பிரதேசத்தில் நடந்த போது வன்முறை (சௌரி சௌரா) வெடித்து பல பொது மக்களும் காவலர்களும் இறந்த காரணத்தினால் காந்தி இப்போராட்டத்தை கைவிட்டார். பிரிட்டிஷ் அரசும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு மார்ச் 1922 இல் ரௌலட் சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது.
பிரிட்டிஷ் அரசு விதித்த உப்பு வரிக்கு எதிராக, 1930 இல் காந்தி தண்டி யாத்திரையை (உப்புச் சத்தியாகிரகம்) நடத்தினார். இரண்டாம் உலகப் போர் (செப்டம்பர் 1939 – செப்டம்பர் 1945) காலத்தில், 1942 இல் “வெள்ளையனே வெளியேறு” என்ற அறவழி போராட்டத்தை காந்தி அறிவித்தார். அக்காலத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆயுதப் போராட்டத்தின் வழியைத் தேர்ந்தெடுத்து, அந்நிய நாடுகளின் உதவியுடன் ஆங்கிலேயர்களை எதிர்த்தார். பின்னர், 1946 இல் பிரிட்டிஷ் இந்திய கடற்படையில் பணியாற்றிய இந்திய மாலுமிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கலகம் (பம்பாய் கலகம் அல்லது இந்திய கடற்படைக் கலகம்) செய்தனர்.
இவ்வாறு, தொடர்ந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பல்வேறு முக்கியமான போராட்டங்களை பல்வேறு தலைவர்கள் முன்னெடுத்தனர். இறுதியில் இரண்டாம் உலக போர் (செப்டம்பர் 1939 - செப்டம்பர் 1945) முடிவில் பிரிட்டிஷ் அரசாங்கம் வென்றாலும் பொருளாதார சிக்கலில் தவித்ததை (காலனிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட செலவினங்கள் கூடியதால்) தொடர்ந்து தன்னுடைய காலனிகளை சுதந்திரமாக நாடாக விடுவித்து வந்தது. அவ்வகையில் இந்தியர்களின் தொடர் போராட்ட வாயிலாகவும் பேச்சுவார்த்தை வாயிலாகவும் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க முடிவு செய்து 15 ஆகஸ்ட் 1947 நள்ளிரவு அன்று சுதந்திரம் வழங்கியது.
சுதந்திர இந்தியா
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக காங்கிரஸ் கட்சி சார்பில் பதவியேற்றார் ஜவகர்லால் நேரு. சுதந்திர இந்தியா ஜனநாயக நாடாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நடுவண் அரசு - மாநில அரசுகள் செயல்படும் என்பதை உறுதி செய்தவர் நேரு. மேலும் ஐந்தாண்டுத் திட்டங்கள், IIT, IIM, AIIMS, பெருநிறுவனங்கள், மதசார்பின்மை, சோசலிசம், வெளியுறவு கொள்கை உட்பட அடிப்படை இந்திய கட்டமைப்பு நேருவின் 18 ஆண்டு கால ஆட்சியில் நிகழ்த்தப்பட்டது. உலகில் உள்ள வளரும் நாடுகளை ஓர் அணியாக ஒருங்கிணைக்க முயன்ற பெருமைக்குரியவர் நேரு. சுதந்திர இந்தியாவுக்கு உலகின் பிரசித்தி பெற்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் வடிவமைத்தார். 01-11-1956 அன்று மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இன்று இந்தியாவில் 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. நேருவை தொடர்ந்து கீழ்கண்ட பிரதமர்கள் இந்தியாவை ஆண்டு உள்ளனர்.
*லால் பகதூர் சாஸ்திரி (ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற முழக்கத்துடன் விவசாயிகள் வளர்ச்சி)
*இந்திரா காந்தி (வங்கி தேசியமயமாக்கல், கார் தொழிற்சாலை, மிதமான வரி, பசுமைப் புரட்சி)
*மொரார்ஜி தேசாய் (Coco-Cola மற்றும் IBM போன்ற அந்நிய நிறுவனங்கள் வெளியேற்றம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை)
*ராஜிவ் காந்தி (உயர்ரக தொழில்நுட்பம், முறையான சீர்திருத்தங்கள், பட்ஜெட் விரிவாக்கம்)
*வி. பி. சிங் (பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, இந்திய அமைதி படையை திரும்ப பெறுதல்)
*நரசிம்ம ராவ் (தாராளமயமாக்கல், தேசிய பாதுகாப்பு, அணு பாதுகாப்பு, பாபர் மசூதி இடிப்பு சம்பவம்)
*வாஜ்பாய் (வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தல், தனியார்மயமாக்குதல், தங்க நாற்கரச் சாலைத் திட்டம், அணுகுண்டு சோதனை)
*மன்மோகன் சிங் (மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நேரடி அந்நிய முதலீடு, சுகாதாரமான இந்தியா, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், 100 நாள் வேலைத்திட்டம்)
திராவிட அரசியல்
1924 இல் திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் என்ற ஊரில் சோமநாதர் கோவிலுக்குள் செல்லவும் கோவிலை சுற்றியிருக்கும் தெருக்களில் நடக்கவும் கீழ் சாதியினருக்கு தடை என்ற தீண்டாமை உத்தரவுக்கு எதிராக வைக்கம் போராட்டம் நடைபெற்றது. வைக்கம் போராட்டத்தில் பெரியார், ஸ்ரீ நாராயண குரு, டி.கே.மாதவன், கேசவ மேனன், சகோதரன் ஐயப்பன் மற்றும் பல்வேறு சமூக நீதி ஆர்வலர்கள் கலந்துக் கொண்டு களப்பணி ஆற்றினர். 1924 இல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் தன் பொறுப்புகளை ராஜாஜியிடம் கொடுத்துவிட்டு இப்போராட்டத்தில் களப்பணி ஆற்றினார். வைக்கம் போராட்ட காலகட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சாதிய பாகுபாடுகளை ஊக்குவிப்பதை எண்ணி வருந்தி காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி சுயமரியாதை இயக்கத்தை 1925 இல் தொடங்கினார் பெரியார். தமது குடிஅரசு பத்திரிகையில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக வளரும் நீதிக்கட்சி (நீதிக்கட்சி அல்லது தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு 1917) செயல்பாடுகள் குறித்து பாராட்டி எழுதி வந்தார். நாளடைவில் நீதிக்கட்சியானது பெரியாரின் சமூக நீதி திட்டங்களையும், பெரியாரின் தலைமையையும், சுயமரியாதை கொள்கைகளையும் ஏற்று கொண்டது. 1944 இல் நீதிக்கட்சியானது திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு தேர்தல்களில் போட்டியிடுவதை நிறுத்தி கொண்டு தொடர்ந்து சமூக சீர்திருத்தங்களில் ஈடுபட தொடங்கியது.

1949 இல் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து முரணால் விலகி ராபின்சன் பூங்காவில் பெரியாரின் கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட முன்னேற்ற கழகத்தை (தி.மு.க) தொடங்கினார் அண்ணா. 8 வருடங்கள் கழித்து 1957 முதல் தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டது தி.மு.க. பெரியார் காட்டிய பாதையில் அண்ணா சென்ற வழியில் கலைஞர், கே.அன்பழகன், ஈ.வெ.கி.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராஜன், கண்ணதாசன், மதுரை முத்து, சத்தியவாணி முத்து, சி.பி.சிற்றரசு, டி.கே.சீனிவாசன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, கே.கே.நீலமேகம், ராம.அரங்கண்ணல், எஸ். சேதுராமன், எஸ்.மாதவன், ராம.சுப்பையா, முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி, எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், பண்ருட்டி ராமச்சந்திரன், சாதிக் பாஷா, காரோட்டி கண்ணப்பன், ராஜாராம், சுப்பு, ரகுமான் கான், துரை முருகன் மற்றும் எண்ணற்ற தோழர்கள் தி.மு.க கட்சியை வலுப்படுத்தினர்.
Good collection.... author has taken lot of efforts to consolidate the history and it has come out nicely
ReplyDeleteGood consolidated facts of Tamilnadu history.
ReplyDelete