Chocks: மந்திரி ஆகாத ஒரு ராஜாவின் கதை

Saturday, February 5, 2022

மந்திரி ஆகாத ஒரு ராஜாவின் கதை

மந்திரி ஆகாத ஒரு ராஜாவின் கதை

சுருக்கம்
  1. முகவுரை
  2. தொடக்க காலம்
  3. இளமைக் காலம்
  4. சிந்தித்து முடிவெடுத்தார்
  5. சிகையலங்கார நிபுணரின் பார்வை
  6. முயற்சியும் வெற்றியும்
  7. உடலால் மறைந்தார்
  8. புகழுரைக்கு உரியவர்
  9. சதி கோட்பாடுகள்
  10. முடிவுரை
  11. இதர செய்திகள்
  12. விவரணைகள்
முகவுரை

என்னடா “மந்திரி ஆகாத ஒரு ராஜாவின் கதை” என்று தலைப்பே பீடிகையாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? ஹா ஹா. தலைப்பை குறித்து சுருங்கச் சொன்னால் "இவர் 1970களில் அரசியல் மந்திரி ஆகவில்லை ஆனால் சினிமா மந்திரி ஆக ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு ராஜாவாக ஆண்டார்". 

தற்காப்பு கலைஞர், தற்காப்பு கலை பயிற்சியாளர், திரைப்பட நட்சத்திரம், திரைப்பட தயாரிப்பாளர், விடா முயற்சியாளர் மற்றும் சிந்தனையாளர் என்று பல்துறை வல்லுநராக வெற்றி நடை போட்டு திரைப்பட ரசிகர்களின் மனதில் மந்திரி ஆக கட்டி ஆண்ட அந்த ராஜா வேறு யாருமல்ல மகா கலைஞன் புரூஸ் லீ தான். புரூஸ் லீ நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம் ஆனால் அவர் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது. 
தொடக்க காலம்

டிசம்பர் 1939 அன்று ஹாங்காங்கை சேர்ந்த புகழ்பெற்ற கான்டோனீஸ் ஓபரா பாடகரும் நடிகருமான லீ ஹோய் சூன் கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவின் சைனா டவுனுக்கு சர்வதேச ஓபரா சுற்றுப்பயணத்திற்காக சென்றார். அங்கு 27 நவம்பர் 1940 இல் லீ ஹோய் சூன் - ரேஸ் ஹோ தம்பதியினருக்கு மகனாக புரூஸ் லீ பிறந்தார். ஹாங்காங்கிலும் அமெரிக்காவிலும் இரட்டைக் குடியுரிமை கொண்ட புரூஸ் லீ இளமைப் பருவம் வரை அவரது குடும்ப உறுப்பினர்களுடன் ஹாங்காங்கில் உள்ள கவுலூனில் வளர்ந்தார்.
தனது 13 வயதில் புகழ்பெற்ற விங் சுன் மாஸ்டர் யிப் மேனின் கீழ் விங் சுன் குங் ஃபூ படிப்பைத் தொடங்கினார். மேலும் 108 விதமான சா சா படிகளைக் கற்றுக் கொண்ட ஒரு அற்புதமான நடனக் கலைஞராகவும் இருந்தார். படிப்பு, குங் ஃபூ மற்றும் நடனம் ஆகியவற்றுடன் தந்தையின் பயிற்சியின் கீழ் சுமார் 20 திரைப்படங்களில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்தார். மேலும் புரூஸ் லீ இளைஞராக இருந்த போது உள்ளூர் கும்பல்களுடன் பல தெருச் சண்டைகளில் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இளமைக் காலம்

தனது 18வது வயதில் ஹாங்காங்கை விட்டு வெளியேறி அமெரிக்காவிற்கு வந்து வாஷிங்டனில் உள்ள சியாட்டிலுக்குச் சென்று அங்கு அவர் குடும்ப நண்பரின் உணவகத்தில் பணிபுரிந்தார். அதே நேரத்தில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவத்தில் பட்டம் பெற்றார்.

குங் ஃபூ மீதான ஆர்வத்தால் அக்டோபர் 1963 இல் உணவக பணியாளர் வேலையை விட்டுவிட்டு தனது முதல் தற்காப்புக் கலைப் பள்ளியான ஜுன் ஃபேன் குங் ஃபூ பயிற்சி மையத்தை சியாட்டிலில் திறந்தார். மேலும் இப்பள்ளியின் வெற்றியை தொடர்ந்து ஓக்லாண்ட் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் இரண்டு பள்ளிகளை திறந்தார். 17 ஆகஸ்ட் 1964 இல் புரூஸ் லீ தனது மனைவி லிண்டாவை மணந்தார். புரூஸ் லீ - லிண்டா லீ தம்பதியினருக்கு 1 பிப்ரவரி 1965 இல் பிராண்டன் லீ என்ற ஆண் குழந்தையும் 19 ஏப்ரல் 1969 இல் ஷானன் லீ என்ற பெண் குழந்தையும் பிறந்தது.
சிந்தித்து முடிவெடுத்தார்

அவரது மகன் பிராண்டன் லீ 1 பிப்ரவரி 1965 இல் பிறந்த ஒரு வாரம் கழித்து புரூஸ் லீயின் தந்தை லீ ஹோய் சூன் ஹாங்காங்கில் இறந்தார். தனது குடும்பத்தில் முதல் பேரக்குழந்தை பிறந்தது பற்றி இறப்புக்கு முன்னர் தனது தந்தை அறிந்து கொண்டதில் புரூஸ் லீ மகிழ்ச்சி அடைந்திருந்தார். 

1960களின் நடுப்பகுதியில் தனிப்பட்ட வாழ்க்கை மாற்றத்தின் காலகட்டத்தில் புரூஸ் லீ இருந்தார். இந்த நேரத்தில் தான் நடிப்பை தனது வாழ்க்கையாக ஆக்கலாமா அல்லது நாடு முழுவதும் குங் ஃபூ பள்ளிகளைத் திறக்கும் பாதையில் தொடரலாமா என்று சிந்திக்க தொடங்கினார். குங் ஃபூ பள்ளியில் தனது மாணவர்களை புரூஸ் லீ நேசித்தார். இருப்பினும் தனது பள்ளிகள் அதிகமானால் கற்பித்தல் தரத்தின் மீதான கட்டுப்பாட்டை தான் இழக்க நேரிடும் என்றும் சிந்தித்தார். ஏனெனில் தற்காப்புக் கலைகள் மீதான காதலும் அதை அணுகும் தரத்தையும் நீர்த்துப்போகச் செய்ய புரூஸ் லீ விரும்பவில்லை. இறுதியில் நடிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் உலகளவில் தற்காப்புக் கலை மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஒரு உற்பத்தித் தொழிலாக அதை மாற்ற முடியுமா என்று ஒரு கை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
சிகையலங்கார நிபுணரின் பார்வை

1964 இல் கலிபோர்னியாவில் நடைபெற்ற லாங் பீச் இன்டர்நேஷனல் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் புரூஸ் லீ கலந்து கொண்டார். இந்த போட்டியில் தான் ஹாலிவுட் சிகையலங்கார நிபுணர் ஜே செப்ரிங் என்பவரால் புரூஸ் லீயின் திறன்கள் அறியப்பட்டு அவர் தனது வாடிக்கையாளர் வில்லியம் டோசியர் என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து 26 வயதான வாலிபர் புரூஸ் லீ 1966 இல் வில்லியம் டோசியர் தயாரித்த The Green Hornet தொலைக்காட்சி தொடரில் கேட்டோ கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதே காலகட்டத்தில் புரூஸ் லீ தனது சொந்த தற்காப்புக் கலையையும் வளர்த்துக் கொண்டிருந்தார். அதற்கு அவர் ஜீத் குனே டோ என்று பெயரிட்டார். நீண்ட காலமாக இருந்த தற்காப்பு மரபுகளைப் பின்பற்றாமல் புரூஸ் லீயின் தற்காப்பு கலை ஒரு தத்துவ அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டது. அவரது படைப்புகளும் கருத்துக்களும் தனிப்பட்ட சுதந்திரம், நேரடி தன்மை மற்றும் எளிமையின் வழியில் அமைந்திருந்தது.
புரூஸ் லீயின் நெருங்கிய நண்பரான ஹாலிவுட் சிகையலங்கார நிபுணர் ஜே செப்ரிங் சிறந்த நடிகராகவும் குங் ஃபூ ஆசிரியராகவும் புரூஸ் லீ வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தார். எதிர்பாராவிதமாக 9 - 10 ஆகஸ்ட் 1969 இல் மேன்சன் குடும்ப (Manson Family) உறுப்பினர்களால் ஜே செப்ரிங் மற்றும் அவரது முன்னாள் காதலி ஷரோன் டேட்டு (Tate-LaBiance Murders) உட்பட ஏழு பேர் கொலை செய்யப்பட்டனர். இதன் சாராம்சம் பிரபல இயக்குனர் குவெண்டின் டேரண்டினோ இயக்கி 2019 இல் வெளிவந்த Once upon a time in Hollywood திரைப்படத்தில் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

முயற்சியும் வெற்றியும்

The Green Hornet அமெரிக்க தொடர் திடீரென ரத்து செய்யப்பட்ட பிறகு அமெரிக்காவை மையமாக கொண்ட ஹாலிவுட்டில் பணிபுரியும் போது புரூஸ் லீ எதிர்ப்பை எதிர்கொண்டார். அதனால் திரைப்பட வாழ்க்கையைத் தடையில்லாமல் தொடர ஹாங்காங்கிற்குச் சென்றார். ஹாங்காங்கில் The Big Boss, Fist of Fury, The Way of the Dragon ஆகிய 3 திரைப்படங்களை புரூஸ் லீ தயாரித்தார். அது தொடர்ச்சியாக அனைத்து பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் முறியடித்து முற்றிலும் புதிய முறையில் தற்காப்புக் கலைகளை வெளியுலகுக்கு வெளிப்படுத்தியது.
தற்காப்புக் கலை ஜாம்பவானாக உருவெடுத்திருந்த புரூஸ் லீயின் ஹாங்காங் திரைப்படங்களின் வெற்றி ஹாலிவுட் கவனத்தை ஈர்த்தது. அதை தொடர்ந்து Warner Bros ஆதரவில் முதல் ஹாலிவுட் / ஹாங்காங் கூட்டு தயாரிப்பில் Enter The Dragon என்ற திரைப்படத்தில் புரூஸ் லீ நடித்தார். துரதிர்ஷ்டவசமாக இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே 1973 இல் புரூஸ் லீ காலமானார். அவரது இறப்பிற்கு பிறகு வெளியான இந்த திரைப்படம் அவரை சர்வதேச அளவில் புகழ் பெறச் செய்தது.

மேலும் 1972 இல் தனது கனவுத் திட்டமாக உருவாக்கப்பட்ட The Game of Death திரைப்படத்தை இயக்கி, எழுதி, தயாரித்து, நடித்தார் புரூஸ் லீ. ஆனால் Warner Bros ஒப்பந்தம் காரணமாக முதலில் Enter the Dragon படப்பிடிப்பிற்கு வழி வகுக்கும் வகையில் The Game of Death படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. புரூஸ் லீ காலமானதற்கு பிறகு Enter the Dragon இயக்குனர் ராபர்ட் க்ளூஸ் தயாரிப்பாளர் ரேமண்ட் சோவ் ஆதரவில் The Game of Death திரைப்படத்தை Stand-in பயன்படுத்தி இயன்றவரை இயக்கி முடித்தார். புரூஸ் லீ இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1978 இல் Golden Harvest மூலம் The Game of Death திரைப்படம் வெளியிடப்பட்டு பெரும் வெற்றி பெற்றது.
உடலால் மறைந்தார்

20 ஜூலை 1973 இல் நடிகை நடிகை பெட்டி டிங் வீட்டில் இருந்த புரூஸ் லீக்கு சிறிய தலைவலி ஏற்பட்டது. புரூஸ் லீ வழக்கமாக எடுத்துக் கொள்ளும் Equagesic என்ற வலி நிவாரணி மருந்தை அவருக்கு பெட்டி டிங் வழங்கினார். மாத்திரை சாப்பிட்டுவிட்டு பெட்டி டிங் படுக்கையறைக்கு படுக்கச் சென்றார் புரூஸ் லீ. சுமார் இரண்டு மணி நேரம் கழித்து பெட்டி டிங் எழுப்ப முயன்ற போது புரூஸ் லீ பதிலளிக்கவில்லை. பெட்டி டிங் அழைத்த மருத்துவ உதவியாளர்கள் வீட்டிற்கு வருவதற்குள் கோமா நிலைக்குத் தள்ளப்பட்ட புரூஸ் லீ இறந்து போனார்.

புரூஸ் லீ மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்க விரிவான தடயவியல் நோயியல் செய்யப்பட்டது. உலகெங்கிலும் இருந்த புகழ் பெற்ற நோயியல் நிபுணர்கள் அளித்த சாட்சியத்துடன் ஒன்பது நாள் மரண விசாரணை நடத்தப்பட்டது. வலி மருந்து புரூஸ் லீயின் மூளையில் திரவத்தின் வீக்கத்தை (Cerebral Edema) ஏற்படுத்தியது. மேலும் வலி மருந்தின் மூலப்பொருள் புரூஸ் லீக்கு அதிக உணர்திறன் எதிர்வினையை (Hypersensitivity reaction) தூண்டியதால் ஆஸ்பிரின் ஒவ்வாமை (Aspirin Allergy) ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று பின்னர் மரணம் ஏற்பட்டது என்பது உறுதியானது. இறுதியில் ​​புரூஸ் லீயின் மரணம் "Death by Misadventure" (Acctidental Death) என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டது. இதற்கிடையே, புரூஸ் லீயின் அகால மரணத்திற்கு பிறகு ஏறக்குறைய ஒரே நேரத்தில் சதி கோட்பாடுகள் பெருகின. அது குறித்து அறிய சதி கோட்பாடுகள் பகுதியை காணவும்.
புகழுரைக்கு உரியவர்

பாரம்பரிய தற்காப்பு கலைத் திறன் மூலம் உலக திரைப்படங்களின் சண்டைக்காட்சிகளை மாற்றியமைக்கவும் ஹாலிவுட் உலகில் ஆசியர்களின் பங்களிப்பை உறுதி செய்திடவும் புரூஸ் லீ ஒரு தூண்டுகோலாக இருந்தார் என்று குறிப்பிடப்படுகிறார். 1970 களில் அதிரடி சீன சண்டை பாணிகளால் மேற்குலக நாடுகளின் ஆர்வத்தை தூண்டியதன் மூலம் புரூஸ் லீயின் சாகசங்கள் "தற்காப்பு கலையை ஒரு புத்தம் புதிய மரியாதைக்கு உயர்த்தியது" என்றால் மிகையல்ல.
சுருங்கச் சொன்னால் ஆய்வாளர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள், கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினராலும் 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய கலைஞராகவும் கலாச்சார சின்னமாகவும் புரூஸ் லீ கருதப்படுகிறார். மேலும் தனது திரைப்படங்களில் தேசியவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதால் உலகம் முழுவதும் குறிப்பாக அரசியல் விரும்பிகளிடையே நன்கு அறியப்பட்டவராக விளங்கினார். மொத்தத்தில் உடலால் உலகை விட்டு மறைந்தாலும் அழியாப் புகழால் என்றும் வாழ்பவர் புரூஸ் லீ.

சதி கோட்பாடுகள்

புரூஸ் லீயின் மரணம் குறித்து எழுதப்பட்ட சதி கோட்பாடுகள் முற்றிலும் கற்பனையான ஊடக அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
1 = குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புரூஸ் லீயின் நற்பெயரை காக்கும் வகையில் மனைவி லிண்டா உடனிருக்க புரூஸ் லீ காலமானார் என்ற செய்தி ரேமண்ட் சோவ் தரப்பில் இருந்து பரப்பப்பட்டது. ஆனால் ஹாங்காங் பத்திரிக்கைகள் அச்செய்தி உண்மையில்லை என்றும் நடிகை பெட்டி டிங் வீட்டில் தான் புரூஸ் லீ காலமானார் என்ற உண்மையையும் அறிந்து கொண்டன. இந்த செய்தி நடிகை பெட்டி டிங்குடன் புரூஸ் லீ கொண்ட தொடர்பு காதலாக இருந்திருக்க வேண்டும் என்ற வதந்தியை தூண்டியது. பெட்டி டிங் உடனான விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர புரூஸ் லீ விரும்பியதாகவும் அதையொட்டி புரூஸ் லீயை பழிவாங்க பெட்டி டிங் Equagesic என்ற அபாயகரமான வலி மருந்தை செலுத்தியதாகவும் கதைக்கப்படுகிறது. எனவே அதிகளவு வலி மருந்தை கொடுத்து பெட்டி டிங் தான் புரூஸ் லீயை கொன்றிருக்க வேண்டும் என்று புரூஸ் லீயின் தீவிர ரசிகர்கள் குற்றம் சாட்டினார்கள்.

2 = புரூஸ் லீக்கு மது குடிப்பது ஒத்துவரவில்லை ஏனெனில் சிறிதளவு மது அருந்திய உடனே அவர் முகம், கழுத்து மற்றும் மார்பு சிவந்து வியர்த்து குமட்டல் ஏற்படும் என்றும் ஆனால் மரிஜுவானா போதைப்பொருளை பயன்படுத்தியதாகவும் அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். பிரேத பரிசோதனையின் போது புரூஸ் லீ வயிற்றில் மரிஜுவானா போதைப்பொருள் வெளிப்பட்டது. இருப்பினும் புரூஸ் லீயின் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்ட தடயவியல் விஞ்ஞானி டொனால்ட் டீரே இதை மரணத்திற்கான காரணமல்ல என்று நிராகரித்தும் அவ்வாறு செய்வது "பொறுப்பற்றது மற்றும் பகுத்தறிவற்றது" என்றும் கூறினார். ஆனால் புரூஸ் லீ அதிகளவு மரிஜுவானா உட்கொண்டது தான் மரணத்திற்கு காரணம் என்று சிலர் கதைக்கின்றனர்.
3 = 1970களில் உலகளவில் பெரும்புகழ் பெற்ற புரூஸ் லீயின் திடீர் மரணத்திற்கு பிந்தைய புகழைப் பயன்படுத்தி அவரது திரைப்படங்களை சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு விற்க முடியும் என்று தயாரிப்பாளர் ரேமண்ட் சோவ் எண்ணி இருக்கலாம் என்றும் அதனால் புரூஸ் லீயின் மரணத்தில் அவரது பங்கு இருக்கலாம் என்றும் கதைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக “புரூஸ் லீயை வைத்து படமாக்கப்பட்ட 11 நிமிட காட்சிகளையும் புரூஸ் லீயின் மரணத்திற்கு பிறகு மீதமுள்ளவற்றை Stand-in பயன்படுத்தியும் புரூஸ் லீயின் நிஜ வாழ்க்கை இறுதிச் சடங்கின் காட்சிகளை வெட்கப்படாமல் சேர்த்தும் The Game of Death என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார்” தயாரிப்பாளர் ரேமண்ட் சோவ்.

4 = புரூஸ் லீயின் இறப்பிற்கு குடும்ப சாபமே காரணம் என்ற கோட்பாட்டின் நம்பிக்கையாளர்கள் புரூஸ் லீ பிறப்பதற்கு முன்பே புரூஸ் லீயின் பெற்றோர் ஒரு மகனை இழந்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டுகின்றனர். இந்த சாபத்தின் விளைவு புரூஸ் லீயின் மகன் பிராண்டன் லீ தனது 28 வயதில் The Crow படப்பிடிப்பின் போது துரதிர்ஷ்டவசமாக இறந்ததை விளக்கவும் பயன்படுத்தப்படுகிறது. The Game of Death படப்பிடிப்பின் போது புரூஸ் லீயின் கதாபாத்திரம் படமாக்கப்பட்டதை போலவே பிராண்டன் லீயும் தற்செயலாக செட்டில் சுடப்பட்டது என்பது ஒரு வினோதமான தற்செயல் நிகழ்வல்ல என்றும் கூறுகிறார்கள். ஆனால் இந்த சதி கோட்பாட்டை தகர்க்கும் விதமாக புரூஸ் லீயின் மூத்த சகோதரர் பீட்டர் லீ 69 வயது வரை வாழ்ந்ததையும் இளைய சகோதரர் ராபர்ட் லீ (73) இன்று வரை உயிருடன் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

5 = பழங்கால சீன கலை நுட்பங்களை சீனரல்லாத வெளிநாட்டு மாணவர்களுக்கு புரூஸ் லீ தொடர்ந்து கற்றுக் கொடுத்ததால் கோபமடைந்த சீன குங் ஃபூ மாஸ்டர்களின் குழுவால் புரூஸ் லீ கொல்லப்பட்டார். எடுத்துக்காட்டாக இந்த பிரச்சனையை ஒட்டி 1964 இல் “தற்காப்புக் கலை சண்டையில் தான் வென்றால் புரூஸ் லீ அமெரிக்க மாணவர்களுக்கு கற்பிப்பதை நிறுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்து வோங் ஜாக் மேன் புரூஸ் லீயுடன் சண்டையிட்டார். சண்டையின் முடிவைப் பற்றி இரு வேறு கதைகள் இருப்பினும் ஒரு புள்ளியில் இணையும் விதமாக புரூஸ் லீ வென்றதாக கூறப்பட்டது. பின்னர் ஆணவப் போக்குடன் புரூஸ் லீயுடன் சண்டையிட்டதற்கு வோங் ஜாக் மேன் வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

6 = ஹாங்காங்கை பூர்விகமாக கொண்டவரும் ஹாலிவுட் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த முதல் ஆசிய-அமெரிக்க நடிகருமான புரூஸ் லீயின் வெற்றி திரைப்படங்கள் சீன மொழி திரைப்படங்களின் ஆதிக்கத்தை அச்சுறுத்துவதால் புரூஸ் லீயை வெளியேற்ற வேண்டும் என்று சீன மாபியா கும்பலால் புரூஸ் லீ கொல்லப்பட்டார். சிலர் புரூஸ் லீ பணம் கொடுக்க மறுத்ததால் ஹாங்காங் மாபியா கும்பல் அவரை கொன்றதாகவும் கூறுகின்றனர்.

முடிவுரை

பல ஆதாரமற்ற சதித்திட்டங்கள் இருந்த போதிலும் உலகளவில் புரூஸ் லீ ஒரு அடையாள சின்னமாகவே இருக்கிறார். இந்த சதி கோட்பாடுகள் அவரது தனிப்பட்ட கவர்ச்சியையோ, உடல் வலிமையையோ அல்லது திரைப்படங்களின் மாயாஜாலத்தையோ மங்கச் செய்யவில்லை. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் புரூஸ் லீ எப்படி இறந்தார் என்று மக்கள் இன்னும் ஆச்சரியப்படுகிறார்கள். ஆனால் அதைவிட அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

20 ஜூலை 1973 இல் உலகம் ஒரு உச்ச நட்சத்திரத்தையும் சாகச கலைஞனையும் இழந்து தவித்தது. இருப்பினும் இன்று தனது சுய வெளிப்பாடு, சமத்துவம், தத்துவம் மற்றும் தற்காப்புக் கலை உட்பட பல்வேறு செயல்பாடுகளால் உலகெங்கிலும் உள்ள மக்களை புரூஸ் லீ தொடர்ந்து ஊக்குவிப்பார் என்றால் அது மிகையல்ல.
இதர செய்திகள்
  1. பிராண்டன் லீ
  2. பிரபல நடிகரான ஸ்டண்ட் நடிகர்
  3. புரூஸ் லீ குடும்பம்
  4. இந்தியாவில் புரூஸ் லீயின் தாக்கம் 
// பிராண்டன் லீ //

ஓக்லாண்ட்டிலும் ஹாங்காங்கிலும் பிறந்து வளர்ந்த பிராண்டன் லீ தனது தந்தை புரூஸ் லீயின் மரணத்திற்குப் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேறினார். நியூயார்க்கில் உள்ள லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சியிலும் பாஸ்டனில் உள்ள எமர்சன் கல்லூரியில் நாடகக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். நடிகராக வேண்டும் என்ற வேட்கையுடன் தனது வாழ்நாள் கனவைத் தொடர பிராண்டன் லீ லாஸ் ஏஞ்சல்ஸுக்குத் திரும்பினார். முயற்சியின் விளைவால் பல்வேறு நாடகங்கள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்தார். ஆற்றல்மிக்க, கவர்ச்சியான மற்றும் திறமையான நடிகராக அறியப்படும் பிராண்டன் லீ தனது வருங்கால மனைவி எலிசா ஹட்டன் என்பவருடன் வாழ்ந்து வந்தார்.
31 மார்ச் 1993 இல் The Crow என்ற திரைப்படத்திற்காக நடிகர் மைக்கேல் மாசி நடிகர் பிராண்டன் லீயை சுட்டுக் கொல்லும் மரணக் காட்சியை திரைப்படக் குழு படமாக்கிக் கொண்டிருந்தது. மைக்கேல் மாசியின் துப்பாக்கியால் சுடப்பட்ட பின்னர் இயக்குனர் அலெக்ஸ் ப்ரோயாஸ் கட் சொல்லியும் பிராண்டன் லீ எழுந்திருக்காமல் இருந்தார். அவர் வேடிக்கை காட்டுவதாக திரைப்படக் குழு நினைத்தது. அப்போது ஸ்டண்ட் நடிகர் பிராண்டன் லீயை சோதித்த போது அவர் அதிக மூச்சு விடுவதைக் கண்டார். அதை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் ஆறு மணிநேர அறுவை சிகிச்சை பலனளிக்காமல் மதியம் 1:03 மணியளவில் பிராண்டன் லீ காலமானார்.
மருத்துவ பரிசோதனையில் பிராண்டன் லீயின் முதுகெலும்புக்கு அருகில் ஒரு உண்மையான தோட்டா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் படப்பிடிப்பில் நிஜ துப்பாக்கி வெற்று தோட்டாக்களால் நிரப்பப்பட்டதாக எண்ணி மைக்கேல் மாசி பிராண்டன் லீயை சுட்டுள்ளார். ஆனால் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் நிஜ தோட்டா இருந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக நிஜ துப்பாக்கி கையாளுதலின் முக்கியத்துவத்தை திரைப்பட குழுவினர் கவனிக்கத் தவறியதன் விளைவாக தனது 28 வயதில் பிராண்டன் லீ மறைந்தார்.

பின்னர் பிராண்டன் லீயின் மீதமுள்ள காட்சிகளை Special Effects மற்றும் Stand-in உத்தி கொண்டு முடிக்கப்பட்டது. பிராண்டன் லீயின் மரணத்திற்கு பிறகு வெளியான The Crow திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டையும் வணிக ரீதியாக வெற்றியையும் பிராண்டன் லீயின் நடிப்பு கவனத்தையும் பெற்றது. மேலும் பிராண்டன் லீயின் மரணம் இன்று வரை திரைப்பட ஷூட்டிங் செட்டில் பாதுகாப்புத் தரங்களில் மாற்றங்களைத் தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 32 வயதில் காலமான புரூஸ் லீயும் 28 வயதில் காலமான அவரது மகன் பிராண்டன் லீயும் சியாட்டிலில் உள்ள தன்னார்வ பூங்காவிற்கு அருகிலுள்ள லேக் வியூ கல்லறையில் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
// பிரபல நடிகரான ஸ்டண்ட் நடிகர் //

புரூஸ் லீயின் Fist of Fury மற்றும் Enter the Dragon திரைப்படத்தில் ஒரு ஸ்டண்ட் நடிகர் பணியாற்றினார். Enter the Dragon திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் ஒரே நேரத்தில் புரூஸ் லீ சண்டையிட வேண்டிய பல பெயர் தெரியாத எதிரிகளில் இந்த ஸ்டண்ட் நடிகரும் ஒருவர். ஸ்டண்ட் நடிகர் புரூஸ் லீயைத் தாக்கிய போது தனது குச்சிகளில் ஒன்றை அந்த ஸ்டண்ட் நடிகரின் முகத்தில் புரூஸ் லீ ஓங்கி அடித்தார். டைரக்டர் கட் என்று சொன்னவுடன் குச்சிகளை கீழே வீசிவிட்டு தனது அடியை வாங்கிய ஸ்டண்ட் நடிகரிடம் விரைந்து சென்று நலம் விசாரித்தார் புரூஸ் லீ. இதன் பின்னர் இரவு நேர ஸ்டண்ட் வேலை மற்றும் தண்ணீர் சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சிகளுக்கு இந்த ஸ்டண்ட் நடிகரையும் தேர்ந்தெடுத்தார் புரூஸ் லீ.

“ஒவ்வொரு நாளும் உதைக்கப்பட்டு, குத்தப்பட்டு, அடிபட்டு பழகியவன் என்றாலும் புரூஸ் லீ என்னை நோக்கி வருவதை கண்டதும் நான் காயப்பட்டதாக நடித்தேன். ஐயோ! புரூஸ் லீ என்னைத் தொட்டார். எல்லோரும் அவரை மனிதக் கடவுள் என்று நினைத்தார்கள். படப்பிடிப்பில் அவரிடம் இருந்து பெற்ற கவனத்தை நான் ரசித்தேன். அந்த சம்பவத்தையே என் வாழ்நாளின் சிறந்த கதையாக சொல்வேன். மேலும் எனது திரையுலக முன்னேற்றத்தில் அவர் எனக்கு உத்வேகமாக இருந்தார்” என்று பின்னாட்களில் பிரபல நடிகரான அந்த ஸ்டண்ட் நடிகர் தெரிவித்தார். பிரபல நடிகராக உருவெடுத்த அந்த ஸ்டண்ட் நடிகர் வேறு யாருமல்ல ஜாக்கி சான் தான். புரூஸ் லீ விதைத்த விதைகளில் முளைத்த ஒருவர் ஜாக்கி சான் என்றால் மிகையல்ல.
// புரூஸ் லீ குடும்பம் //

1973 இல் புரூஸ் லீ காலமான பிறகு அவரது மனைவியும் தற்காப்புக் கலை கலைஞருமான லிண்டா லீ தனது குழந்தைகளை வளர்ப்பதில் முழு கவனம் செலுத்தினார். பின்னர் 1988 இல் டாம் பிளீக்கரை திருமணம் புரிந்தார் லிண்டா லீ. 1990 இல் டாம் பிளீக்கரை விவாகரத்து செய்துவிட்டு 1991 இல் பங்குத் தரகர் புரூஸ் கேட்வெல்லை புரிந்தார் லிண்டா லீ. 
புரூஸ் லீயின் மகளும் நடிகர் பிராண்டன் லீயின் தங்கையும் ஆன ஷானன் லீ 1994 இல் அந்தோனி இயன் கீஸ்லர் என்பவரை திருமணம் புரிந்து பின்னர் பிரிந்தார். இவர்களுக்கு ரென் என்ற ஒரு மகள் உள்ளார். சில திரைப்படங்களில் நடித்தும் சில தொலைக்காட்சி தொடர்களை தயாரித்தும் உள்ளார் ஷானன் லீ. கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் தனது தந்தை புரூஸ் லீயின் சிலையை நிறுவிட ஷானன் லீ முக்கிய பங்காற்றினார். அதுவே அமெரிக்காவில் உள்ள புரூஸ் லீயின் ஒரே சிலையாகும்.
// புரூஸ் லீயின் தாக்கம் //

உலகளவில் 1970களில் புரூஸ் லீயின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தது என்றால் அது மிகையல்ல. எடுத்துக்காட்டாக 1960களில் ஹாலிவுட்டின் Detective மற்றும் Cowboy திரைப்படங்கள் ஏற்படுத்திய எழுச்சியை 1970களில் புரூஸ் லீயின் சாகச திரைப்படங்கள் தணித்தது. 1970களின் பிற்பகுதியில் சில இந்திய நடிகர்கள் தங்களின் சண்டை காட்சிகளில் புரூஸ் லீயின் பாணியை பின்பற்ற முயற்சி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புரூஸ் லீயின் ரசிகர்கள் அதிகரித்ததன் காரணமாக இந்தியாவில் கராத்தே பள்ளிக்கூடங்கள் அதிகளவு திறக்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் இந்தியளவில் மறைந்த நடிகர் கராத்தே மணி பிரபல கராத்தே மாஸ்டராக விளங்கினார் என்பது நினைவுகூறத்தக்கது.

விவரணைகள்

புரூஸ் லீயின் கதை - News 7 Channel


Bruce Lee's Death Revealed - History Channel


Real Story of Bruce Lee's Death



Brandon Lee Death Cause


Bruce Lee Conspiracy


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

இந்திய சமூகங்கள் மீதான அரசியல் படுகொலைகளின் விளைவுகள்

இந்திய சமூகங்கள் மீதான அரசியல் படுகொலைகளின் விளைவுகள் பொருளடக்கம்  முகவுரை மகாத்மா காந்தியின் படுகொலை இந்திரா காந்தியின் படுகொலை ராஜீவ் காந்...