Chocks: தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழல்

Thursday, March 24, 2022

தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழல்

தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழல்
சுருக்கம்
  1. முகவுரை
  2. Moneylife கட்டுரை 
  3. யார் இந்த சித்ரா ராமகிருஷ்ணன்?
  4. யார் இந்த ஆனந்த் சுப்ரமணியன்?
  5. ஆனந்த் சுப்ரமணியத்தின் நியமனம்
  6. என்ன ஊழல்?
  7. என்ன நடந்தது?
  8. யோகியும் சித்ரா ராமகிருஷ்ணாவும்
  9. ஆனந்த் சுப்பிரமணியனும் மின்னஞ்சலும்
  10. என்ன உத்தரவுகள்?
  11. இந்திய ஊடகங்களின் மௌனம்
  12. முடிவுரை
  13. விவரணைகள்
முகவுரை

முன்பின் காலகட்டங்களை (Non-linear Time Zone) உள்ளடக்கி எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையை கவனமாகவும் பொறுமையாகவும் வாசிக்க வேண்டுகிறேன். ஏனெனில், தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழல் (NSE Co-location Scam) விசாரிக்கப்பட்டு வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலதிக ஆய்வுகளுக்கு உட்பட்ட இக்கட்டுரையின் மையத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தை பற்றி கூடுதல் விவரங்களை அறிய விரும்பினால் கூகுளை பயன்படுத்தவும்.

தற்போதைய தரவுகளின்படி, தேசிய பங்குச் சந்தை இணை இருப்பிட சேவை தொடர்பாக காங்கிரஸ் ஆட்சியில் ஐயத்திற்கிடமான நியமனங்கள் மற்றும் பா.ஜ.க ஆட்சியில் உறுதியாக ஊழல் நடந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் 50,000 கோடி முதல் 5 லட்சம் கோடி வரையிலான இழப்பு (Notional Loss) ஏற்பட்டு இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. எப்படியாகினும் தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழலால் எந்தவொரு முதலீட்டாளர்களுக்கும் அல்லது வர்த்தகர்களுக்கும் உரிய இழப்புகளை நிரூபிப்பது சிக்கலானது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். வாருங்கள், இனி கதைக்குள் செல்வோம்.

Moneylife கட்டுரை 

ஆகஸ்ட் 2009 அன்று தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட சேவைகளைத் தொடங்கியது. பங்குச்சந்தை சேவையகங்களுக்கு அருகாமையில் இருப்பதால் பங்குச்சந்தையால் விநியோகிக்கப்பட்ட விலைகளை வாங்குதல் அல்லது விற்பது போன்ற விலை ஊட்டத்தை தரகர்கள் விரைவாக அணுகினர். பல்வேறு சந்தைப் பங்கேற்பாளர்களிடம் இருந்து பரிமாற்றம் மூலம் பெறப்பட்ட ஒவ்வொரு டிக்கிற்கும் தரவை வழங்குவது Real Time Tick By Tick Data எனப்படும். சேவையகத்தில் இருந்து ஒரே தூரத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் விலைத் தகவலைப் பெறுவார்கள் ஆனால் இத்தகவல் ஒரே ஒளிபரப்பாக இல்லாமல் சிலருக்கு மட்டும் தனித்தனியாக முன்னுரிமையுடன் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஜனவரி 2015 அன்று தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட சேவையகத்தில் குறிப்பிட்ட தரகர்களுக்கு முன்னுரிமை அணுகல் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டி ஊழல் செயல்முறையை பத்திரிகையாளர்கள் சுசேதா தலால் மற்றும் தேபாஷிஸ் பாசு Moneylife வலைத்தளத்தில் அம்பலப்படுத்தினார்கள். ​​இதையெடுத்து, ஜூலை 2015 அன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் Moneylife மீது தேசியப் பங்குச்சந்தை ரூபாய் 100 கோடி கேட்டு அவதூறு வழக்குத் தொடுத்தது. 

செப்டம்பர் 2015 அன்று தேசியப் பங்குச்சந்தை தொடர்ந்த அவதூறு வழக்கைத் தள்ளுபடி செய்தும் ஊடகங்களுக்கு பதிலளிப்பதில் கையாண்ட அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்தும் சுசேதா தலால் மற்றும் தேபாஷிஸ் பாசு ஆகியோருக்கு தலா ரூபாய் 1,50,000 வழங்குமாறும் மும்பையில் உள்ள மசினா மருத்துவமனை மற்றும் டாடா மெமோரியல் மருத்துவமனைக்கு நன்கொடையாக ரூபாய் 47,00,000 வழங்குமாறும் தேசியப் பங்குச்சந்தைக்கு உத்தரவிட்டதுடன் Moneylife சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் செபிக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.

யார் இந்த சித்ரா ராமகிருஷ்ணன்?

1980 களின் இறுதியில் செபி வழிகாட்டுதல்களுக்கு அடித்தளம் அமைத்த IDBI குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்த சித்ரா ராம்கிருஷ்ணா செப்டம்பர் 2009 அன்று தேசியப் பங்குச்சந்தையின் இணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 2013 அன்று தேசியப் பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சித்ரா ராம்கிருஷ்ணா பதவி உயர்வு பெற்றார். 1985 முதல் பங்கு வர்த்தக துறையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த சித்ரா ராம்கிருஷ்ணா தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு தேசியப் பங்குச்சந்தையின் தினசரி வருவாய் இருமடங்காக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ஆனந்த் சுப்ரமணியன்?

பால்மர் லாரியின் துணை நிறுவனத்தில் இடைநிலை நிர்வாகியாக பணிபுரிந்து வந்த ஆனந்த் சுப்ரமணியனை ஏப்ரல் 2013 அன்று தேசியப் பங்குச்சந்தையின் தலைமை மூலோபாய ஆலோசகராக (Chief Strategic Advisor - CSA) சித்ரா ராமகிருஷ்ணன் பணியமர்த்தினார். ஏப்ரல் 2015 அன்று குழு இயக்க அதிகாரியாக (Group Operating Officer - GOO) ஆனந்த் சுப்ரமணியன் பதவி உயர்த்தப்பட்டார். சித்ரா ராமகிருஷ்ணாவின் முக்கிய ஆலோசகராக கூடுதல் அதிகாரத்துடன் வலம் வந்த ஆனந்த் சுப்ரமணியன் அலுவலக உயர் பாதுகாப்பு பரிமாற்ற தரவுத்தளத்திற்கான அணுகலை எடுத்துக் கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.

ஆனந்த் சுப்ரமணியத்தின் நியமனம்

2015-2016 காலகட்டத்தில் செபிக்கு அநாமதேய கடிதங்கள் தொடர்ச்சியாக வந்தன. அனைத்து கடிதங்களும் தேசியப் பங்குச்சந்தையில் நிலவும் முறைகேடுகள் குறித்து பரவலாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. பணி நியமனங்கள் மற்றும் தரவுகள் கையாளுதல் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கோரி 2016 மார்ச் மற்றும் டிசம்பர் இடையில் தேசியப் பங்குச்சந்தைக்கு செபி மூன்று முறை கடிதங்கள் மற்றும் மூன்று முறை நினைவூட்டல்கள் அனுப்பியது. இதற்கு சித்ரா ராமகிருஷ்ணா தலைமையிலான தேசியப் பங்குச்சந்தை பதிலளிக்காமல் ஏய்ப்பு செய்தது.

ஆனந்த் சுப்ரமணியத்தின் பதவி ஆலோசகர் ஒரு முக்கிய நிர்வாகப் பணி என்பதால் நிறுவனங்கள் சட்டம், 2013 இன் கீழ் நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவில்லை. செயலகத் தணிக்கை நடத்தப்பட்டதில் நியமனம் மற்றும் ஊதியக் குழு ஒப்புதல் இல்லாமல் ஆனந்த் சுப்ரமணியன் பதவி வகிப்பது தொடர்பாக சிக்கல்கள் எழுப்பப்பட்டன. இதையொட்டி, நியமனம் மற்றும் ஊதியக் குழு (Nomination and Remuneration Committee - NRC) நவம்பர் 2017 அன்று ஒரு அறிக்கையை செபியிடம் சமர்ப்பித்தது. மேலும் 2013-2016 காலகட்டத்தில் தேசியப் பங்குச்சந்தை நடத்திய வாரியக் கூட்டங்கள், உள் குழுக் கூட்டங்கள் மற்றும் மனித வள தரவுகள் ஆகிய ஆவணங்களை ஆய்வு செய்து தேசியப் பங்குச்சந்தையின் நிர்வாக தோல்விகளை செபி கண்டறிந்தது.

என்ன ஊழல்?

தேசியப் பங்குச்சந்தையின் சர்வர் கட்டமைப்பு மூலம் சந்தை தரவுகள் சில தரகர்களுக்கு முன்னுரிமையாக அளிக்கப்பட்டதாக எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டு தான் "தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழல்" எனப்படுகிறது. சுருங்கச்சொன்னால் தேசியப் பங்குச்சந்தையின் பரிமாற்ற அதிகாரிகளுடன் வர்த்தக தரகு உறுப்பினர்கள் கூட்டுச் சேர்ந்து தேசியப் பங்குச்சந்தையின் சர்வர் கட்டமைப்பை முன்னரிமையுடன் கையாண்டு முன்கூட்டிய வர்த்தக அறிவைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. தேசியப் பங்குச்சந்தை தரவுகள் மீது அனைத்து வர்த்தகர்களும் சமமான அணுகலை உறுதி செய்ய தேசியப் பங்குச்சந்தையின் உயர்மட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
தேசியப் பங்குச்சந்தை ஒரு தொகுப்பாளர் (Host) இடமிருந்து மற்றொரு தொகுப்பாளருக்கு அனுப்பப்படும் ஒரே ஒரு நேரடி கோரிக்கையான Unicast Routing மூலம் தகவல்களைப் பரப்பியது. அதாவது அந்த தொகுப்பாளர்கள் மட்டுமே வழித்தடத்தில் தொடர்பு கொள்ள முடியும். இதையொட்டி, தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட சேவையகத்தில் இடத்தை குத்தகைக்கு எடுத்து High Frequency Algorithmic Trading பணியில் ஈடுபட்டிருந்த சில தரகர்களால் சிறந்த வன்பொருள் (Specialised Hardware) விவரக்குறிப்புகளுடன் உள்ள தேசியப் பங்குச்சந்தையின் கணினிகளில் வேகமாக உள்நுழைய முடிந்தது. இது குறிப்பிட்ட தரகர்களுக்கு மட்டும் லாப நோக்க நன்மையை அனுமதிக்க வழங்கப்பட்ட நியாயமற்ற முன்னுரிமை அணுகல் ஆகும். ஏனெனில் ஒரு பிளவு வினாடி வேகமான அணுகல் (Split Second Fast Approach) கூட ஒரு தரகருக்கு பெரும் லாபத்தை விளைவிக்கக்கூடியது. 

என்ன நடந்தது?

2013-2016 காலகட்டத்தில் தேசியப் பங்குச்சந்தையின் தரவுகள் வழங்கலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அக்டோபர் 2016 அன்று தேசியப் பங்குச்சந்தையிலிருந்து ஆனந்த் சுப்ரமணியன் பதவி விலகினார். மேலும் டிசம்பர் 2016 அன்று பணி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக தலைமை செயல் அதிகாரி சித்ரா ராம்கிருஷ்ணா ராஜினாமா செய்தார்.

2016 அன்று தடயவியல் தணிக்கையை (Forensic Audit) மேற்கொள்ளுமாறு தேசியப் பங்குச்சந்தையை செபி கேட்டுக் கொண்டது. மேலும் அதன் இணை இருப்பிட சேவையகத்திலிருந்து முழு வருவாயையும் ஒரு Escrow ஒப்பந்த கணக்கில் Deposit செய்யும்படி தேசியப் பங்குச்சந்தையை கேட்டுக் கொண்டது. இறுதியாக தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழல் குறித்து Ernst & Young மற்றும் Deloitte கணக்கியல் நிறுவனம் தடயவியல் தணிக்கை அறிக்கையை தயாரித்து நவம்பர் 2017 அன்று செபியிடம் சமர்ப்பித்தது. இதன் பின்னணியில் குற்றம் சாட்டப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன், ரவி நரேன் மற்றும் சிலருக்கு காரண அறிவிப்புகளை (Show Cause Notice) அனுப்பி தங்கள் வாதங்களை முன்வைக்க செபி வாய்ப்பு வழங்கியது.

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேசியப் பங்குச்சந்தையின் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் தான் ஒரு நியமிக்கப்பட்ட முக்கிய நிர்வாகப் பணியாளர் அல்ல என்றும் தான் பரிமாற்றத்தின் வழக்கமான செயல்பாடுகளிலும் பரிமாற்றத்தின் ஒழுங்குமுறைகளிலும் மட்டுமே ஈடுபட்டதாக ஆனந்த் சுப்ரமணியன் கூறினார்.

செபி விசாரணையின் போது யோகியுடன் சித்ரா ராமகிருஷ்ணாவின் மின்னஞ்சல் தொடர்புகள் வெளிச்சத்திற்கு வந்தது. இமயமலை யோகிக்கு தேசியப் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்க கணிப்புகள், திட்டங்கள், நோக்கங்கள், ரகசியங்கள் போன்ற பல்வேறு பங்குச்சந்தை தகவல்களை வழங்கியதாகவும் யோகியின் வழிகாட்டுதல் தனது அன்றாட அலுவலக பணிகளை மேற்கொள்ள பயன்பட்டதாகவும் சித்ரா ராமகிருஷ்ணா கூறினார். விசாரணையில் செயல்திறன் மதிப்பீடு அடிப்படையில் இல்லாமல் சீரான இடைவெளியில் விகிதாச்சாரமற்ற ஊதிய உயர்வுகளைப் பெற்ற ஆனந்த் சுப்ரமணியனை சித்ரா ராமகிருஷ்ணா நியமித்தது யோகியின் செயல்களில் ஒன்றென தகவல் வெளியானது.

யோகியும் சித்ரா ராமகிருஷ்ணாவும்

தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட சேவையகத்தை ஆய்வு செய்த போது rigyajursama@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தேசியப் பங்குச்சந்தையின் ரகசிய தரவுகளை சித்ரா ராமகிருஷ்ணா அனுப்பியதை செபி கண்டது. இந்த மின்னஞ்சல் தகவல் பரிமாற்றம் குறித்து விசாரிக்கப்படுகையில் "மின்னஞ்சல் முகவரிக்கு பின்னால் இருப்பவர் இமயமலைத் தொடர்களில் வசிக்கும் ஒரு யோகி என்றும் உடல் வடிவமில்லாத யோகி தன் விருப்பப்படி வெளிப்படுவார் என்றும் தான் வெளிப்படுத்திய ரகசிய தகவல்கள் தனிப்பட்ட ஆதாயத்திற்க்கு பயன்படுத்தப்படவில்லை என்றும் நிர்வாக ரீதியாக கடந்த 20 ஆண்டுகளாக தன்னை வழி நடத்தி வரும் ஆன்மீக சக்தி யோகி என்றும் முறைசாரா நிபுணர்களிடமிருந்து ஆலோசனை பெறுவது இயல்பானது என்றும்" சித்ரா ராமகிருஷ்ணா கூறியுள்ளார். மேலும் சித்ரா ராமகிருஷ்ணா யோகியுடன் மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே இருந்ததாகவும் நேரில் சந்திக்கவில்லை என்றும் விளக்கியுள்ளார். ஆனால் விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணா 20 ஆண்டுகளுக்கு முன்பு கங்கை நதியில் யோகியை சந்தித்தது தெரியவந்துள்ளது.

தேசியப் பங்குச்சந்தை புகார்கள் வெடித்த போது ​​யோகி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு சிங்கப்பூர் அல்லது ஹாங்காங் வழியாக செஷல்ஸ் தீவுக்குச் செல்ல பயண ஏற்பாடு செய்ததும் அவரது அழகான சிகை அலங்காரத்தை விவரித்ததும் சீஷெல்ஸ் கடலில் குளிப்பது குறித்து விவாதித்தும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எளிமையாகச் சொன்னால், வரிப் புகலிடங்களுக்குப் பெயர் பெற்ற செஷல்ஸ் தீவுக்கு சித்ரா ராமகிருஷ்ணாவின் பயணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே, பிப்ரவரி 2021 அன்று சென்னை சீதம்மாள் காலனியில் உள்ள ஒரு வீட்டை ஆனந்த் சுப்ரமணியத்தின் மனைவி சுனிதா ஆனந்துக்கு ரூபாய் 3.2 கோடிக்கு சித்ரா ராமகிருஷ்ணா விற்றதும் ஆனந்த் சுப்ரமணியன் சித்ரா ராமகிருஷ்ணாவுடன் குடும்ப உறவுகள் மூலம் தொடர்புடையவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனந்த் சுப்பிரமணியனும் மின்னஞ்சலும்

கணக்கியல் நிறுவனம் சமர்ப்பித்த தடயவியல் தணிக்கை அறிக்கையை அடிப்படையாக வைத்து ஜூலை 2018 அன்று தேசியப் பங்குச்சந்தையின் முன்னாள் தலைவர் அசோக் சாவ்லா (Ashok Chawla) செபியின் முன்னாள் முழு நேர உறுப்பினர் மாதபி பூரி புச்சினுக்கு (Madhabi Puri Buch) எழுதிய கடிதத்தில் "தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழலில் குறிப்பிடப்பட்டுள்ள rigyajursama@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரியின் பின்னணியில் இருப்பது யோகி அல்ல அது ஆனந்த் சுப்ரமணியன் என்றும் மனித உளவியலில் சிறந்து விளங்கும் ஆனந்த் சுப்ரமணியன் யோகியின் பெயரில் சித்ரா ராமகிருஷ்ணாவை கைப்பாவையாக நடத்தியிருக்கிறார் என்றும்" கூறியுள்ளார்.

ஆனந்த் சுப்ரமணியத்தின் கணினியில் காணப்படும் "anand.subamanian9" மற்றும் "sironmani.10" Skype கணக்குகள் Skype பயன்பாட்டு தரவுத்தளத்தில் கட்டமைக்கப்பட்டு rigyajursama@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரியுடனும் ஆனந்த் சுப்ரமணியன் பயன்படுத்திய செல்போன் எண்ணுடனும் இணைக்கப்பட்டுள்ளன என்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் rigyajursama@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பப்பட்ட சில மின்னஞ்சல்களில் "ஆசிரியர், கடைசியாக மாற்றியமைத்தவர், உருவாக்கியவர்" போன்ற ஆவணப் பண்புகளில் சுப்ரமணியன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவணங்களை உருவாக்குவதற்கும் மின்னஞ்சல் இணைப்புகளின் நேரத்திற்கும் இடையேயான நேர வேறுபாடு சில நிமிடங்கள் மட்டுமே. கூடுதலாக மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படங்கள் ஆனந்த் சுப்ரமணியத்தின் சென்னை வசிப்பிடத்தின் புவி குறிச்சொல்லை (Geotagged Images) உள்ளடக்கி இருக்கிறது.

உமைத் பவன் அரண்மனையில் (Umaid Bhawan Palace) ஒரு ஹோட்டல் அறையை முன்பதிவு செய்ய rigyajursama@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தப்பட்ட அதே நேரத்தில் ஆனந்த் சுப்ரமணியத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ஹோட்டலுக்கு சுமார் 2.4 லட்சம் ரூபாய் செலுத்தியது கவனிக்கத்தக்கது. மொத்தத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தடயவியல் தணிக்கை அறிக்கையின்படி ஆனந்த் சுப்ரமணியன் தான் சித்ரா ராமகிருஷ்ணாவை இயக்கியிருக்க வேண்டும். இருப்பினும் தணிக்கை குழுவின் கண்டுபிடிப்புகளை செபி நிராகரித்தது மற்றும் பெயரிடப்படாத யோகியின் அடையாளம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் மின்னஞ்சல் முகவரி அடையாளம் தெரியாத நபருடையது என்றும் கூறியது.

என்ன உத்தரவுகள்?

அநாமதேய கடிதங்கள் மற்றும் தடயவியல் தணிக்கை அறிக்கை அடிப்படையில் தேசியப் பங்குச்சந்தை மீது எழுந்த குற்றச்சாட்டுகளை செபி தீவிரமாக விசாரிக்க தொடங்கியது. அதையொட்டி, ஏப்ரல் 2019 அன்று வழங்கப்பட்ட உத்தரவில் தேசியப் பங்குச்சந்தை 12% வட்டியுடன் ரூபாய் 625 கோடியை 2014 முதல் கணக்கிட்டு செலுத்துமாறும் தேசியப் பங்குச்சந்தை ஆறு மாதங்களுக்கு பங்குச்சந்தையில் இருந்து பணத்தை திரட்ட தடை விதித்தும் செபி உத்தரவிட்டது. மேலும் தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட சேவையை தவறாக பயன்படுத்தி OPG Securities நிறுவனம் சட்டவிரோதமாக ஈட்டிய ரூபாய் 15.7 கோடி ஆதாயத்தை ஏப்ரல் 2014 முதல் 12% வட்டியுடன் கணக்கிட்டு திருப்பி செலுத்தவும் OPG Securities பங்குச்சந்தையை ஐந்தாண்டுகளுக்கு அணுக தடை விதித்தும் செபி உத்தரவிட்டது.

பிப்ரவரி 2021 அன்று வழங்கப்பட்ட உத்தரவில் முதலீட்டாளர்கள் புகார் எதுவும் அளிக்கவில்லை எனினும் விதிமீறல்கள் நடைபெற்றதன் காரணமாக OPG Securities நிறுவனத்திற்கு ரூபாய் 5 கோடியும் தேசியப் பங்குச்சந்தை ரூபாய் 1 கோடியும் ரவி நரேன் மற்றும் சித்ரா ராமகிருஷ்ணா தலா ரூபாய் 25 லட்சமும் அபராதம் செலுத்துமாறு செபி உத்தரவிட்டது. ஏப்ரல் 1994 முதல் மார்ச் 2013 வரை தேசியப் பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ரவி நரேன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 2022 அன்று வழங்கப்பட்ட இறுதி உத்தரவில் பணி நியமனம், தெரியாத நபருடன் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றம் மற்றும் இணை இருப்பிடத்தில் ரகசிய தரவுகள் கையாளப்பட்ட விதம் தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணா ரூபாய் 3 கோடியும், ரவி நரேன் மற்றும் ஆனந்த் சுப்ரமணியன் தலா ரூபாய் 2 கோடியும் மற்றும் நரசிம்மன் ரூபாய் 6 லட்சமும் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சித்ரா ராமகிருஷ்ணாவின் விடுப்பு பணமாக ரூபாய் 1.54 கோடியையும் ஒத்திவைக்கப்பட்ட போனஸ் ரூபாய் 2.83 கோடியையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்களுடனும் பங்குச்சந்தை இடைத்தரகர்களுடனும் மூன்று ஆண்டுகளுக்கு சித்ரா ராமகிருஷ்ணாவும் ஆனந்த் சுப்ரமணியனும் இரண்டு ஆண்டுகளுக்கு ரவி நரேனும் தொடர்பு கொள்ள தடை செய்யப்பட்டுள்ளனர். 

இதற்கிடையே, தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழல் தொடர்பாக 24 பிப்ரவரி 2022 அன்று ஆனந்த் சுப்ரமணியன் மற்றும் 06 மார்ச் 2022 அன்று சித்ரா ராமகிருஷ்ணா ஆகிய இருவரையும் C.B.I கைது செய்தனர். தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஊடகங்களின் மௌனம்

அன்று 2G வழக்கின் போது ​​இந்திய ஊடகங்கள் தி.மு.கவையும் காங்கிரஸையும் அரசியல் ரீதியாக ஓரங்கட்டுவதில் ஆர்வம் காட்டியதும் சமூக வலைத்தளவாசிகள் அ.ராசா மற்றும் கனிமொழி குறித்து கொச்சையான வாதங்களை முன்வைத்ததும் ஊதிப் பெரிதாக்கப்பட்ட 2G வழக்கால் தி.மு.க 10 ஆண்டுகள் பெரும் பின்னடைவை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இறுதியாக 2G வழக்கில் C.B.I குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது என்று நீதிபதி தீர்ப்பளித்த பிறகு இந்திய ஊடகங்கள் ஜோடித்த கதைகள் பல்லிளித்தது. எப்படியாகினும் 2G வழக்கை இந்தியாவின் மிகப் பெரிய ஊழலாக ஜோடித்து மற்றும் அன்னா ஹசாரேவை வாழும் காந்தியாகக் காட்டி இந்திய ஊடகங்கள் செய்த பெரும் உதவியால் மே 2014 அன்று பா.ஜ.க அரியணையை பிடித்தது.

2G வழக்கு குறித்து பல்வேறு கற்பனை கதைகளை கட்டவிழ்த்து விட்ட இந்திய ஊடகங்கள் இன்று தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழல் தொடர்பாக வெளிவந்த செய்திகளை அதிகளவு விவாதிக்காமல் கள்ள மௌனம் காக்கின்றன. இதன் மூலம் 2G வழக்கு மற்றும் தேசியப் பங்குச்சந்தை வழக்கு நோக்கிய நகர்வுகளில் இருந்து இந்திய ஊடகங்கள் அடிப்படையில் வலதுசாரிகளோ (ஆங்காங்கே சில விதிவிலக்குகளுடன்) என்ற கவலையை வரவழைக்கிறது.

மேலும் சமூக வலைத்தளங்களில் 2G வழக்கு நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த அ.ராசா மற்றும் கனிமொழி குறித்து விமர்சித்தவர்கள் இன்று தேசியப் பங்குச்சந்தை வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்ரமணியன் குறித்து அதிகளவில் விமர்சிக்காமல் மௌனம் சாதிப்பது கவனிக்கத்தக்கது. மொத்தத்தில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் சார்ந்த பிரச்சனைகளுக்கு துள்ளிக் குதிக்கும் குறிப்பிட்ட சில ஊடகங்கள் இன்று பா.ஜ.க ஆட்சியில் வெளிவந்துள்ள மிகப்பெரிய ஊழல் குறித்த செய்திகளை விவாதிக்காமல் மௌனமாக நிற்பதன் மூலம் தாங்கள் வலது பக்கமென சாட்சியமளிக்கிறார்கள் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டி இருக்கிறது. 

முடிவுரை

ஆனந்த் சுப்ரமணியன் யோகி இல்லை என்று சித்ரா ராமகிருஷ்ணா மறுத்துள்ள நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட தடயவியல் தணிக்கை அறிக்கை அவரை நோக்கியே விரல் நீட்டுகிறது. உண்மையில் ஆனந்த் சுப்ரமணியன் தான் அந்த யோகியா? அல்லது இவ்வழக்கில் செல்வாக்கு மிக்க ஒருவரை காப்பாற்றுவதற்கா ஆனந்த் சுப்ரமணியன் பலிகடா ஆக்கப்பட்டடாரா? மொத்தத்தில் வழக்கு விசாரணை வருங்காலத்தில் திசை திரும்புகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

இதற்கிடையே, R.T.I சட்டத்தின் கீழ் தேசியப் பங்குச்சந்தை ஊழல் குறித்த ஆய்வு அறிக்கைகளை வெளியிட செபி மறுத்துள்ளது. இது உள் நிர்வாக செயல்பாடுகளை சீர்குலைக்கும் என்று காரணம் கூறியுள்ளது. மேலும் இவ்வழக்கில் "ஆதாரத்தின் சுமை அதிகமாக (Burden of Proof) இருப்பதால் கிடைக்கக்கூடிய தகவல்களைக் கொண்டு ஊழலை நிரூபிப்பது கடினம் எனினும் செபி உத்தரவுகள் Quasi Judicial சார்ந்தவை என்றும் ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு முடிவான தீர்ப்புக்கு வரலாம்" என்றும் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். 

விவரணைகள்

Video - NSE Co-location Scam


Video Stock Trading Algorithms 


VideoYogi in Market Manipulation


Video Anand Subramanian arrested by CBI


VideoSEBI Investigates NSE Algo Scam


Yogi of Dalal Street


NSE Co-location Facility 


NSE Real Time Data


Yogi's Advice to Ex-NSE Chief


Moneylife against NSE Scam 


Who is Anand Subramanian?


Who is Chitra Ramakrishna?


NSE Co-location Case Probe 


SEBI refuses to disclose reports under RTI


யார் இந்த சித்ரா ராமகிருஷ்ணா?


சித்ரா ராமகிருஷ்ணா கைது


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -