Chocks: ஒருவன் பிறந்த கதை

Thursday, February 15, 2024

ஒருவன் பிறந்த கதை

ஒருவன் பிறந்த கதை

ஒரு ஊரில் ஒரு தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. சில ஆண்டுகளுக்கு பிறகு, மனைவி மீண்டும் கர்ப்பமானார். அதோடு சில வாரங்களில் மனைவியின் உடல் வலியும் வேதனையும் அதிகரித்தது. கணவர் என்ன செய்வார்? மனைவியை மருத்துவமனையில் சேர்த்தார்.

மருத்துவமனையில் சேர்த்த நாள் முதல் மருத்துவர் குளுக்கோஸ் பாட்டில் பாட்டிலாக ஏற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அறையில் பல காலி குளுக்கோஸ் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த அறையில் மனைவி தனக்கு கஷ்டமாக இருப்பதாகவும், கருவை கலைத்துவிட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் பேசிக் கொண்டிருந்தாள்.

கருக்கலைப்பு குறித்து மருத்துவரிடம் கருத்து கேட்ட போது, ​​"இரண்டு நாட்கள் காத்திருங்கள், என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்" என்று மருத்துவர் கூறினார். ஒரு நாள் மருத்துவ அறையை சுத்தம் செய்ய வந்த பணிப்பெண் அவர்களின் உரையாடலை கேட்டு "ஏம்மா! உனக்கு எத்தனை குழந்தைகள்?" என்று கேட்டாள்.

"எனக்கு ஒரு மகள் இருக்கிறாள்" மனைவி பதிலளித்தார். "அப்போது அதிக வலி இருந்ததா?" என்று பணிப்பெண் அடுத்த கேள்வியை கேட்டாள். அதற்கு மனைவி, “தாங்கிக்கொள்ள கூடிய அளவில் தான் வலி இருந்தது” என்று பதிலளித்தாள்.

அதை கேட்டுவிட்டு, "கொஞ்சம் வலியை தாங்குமா, ரெண்டாவது குழந்தைக்கு அதிக வலியில் துடித்தால் அது ஆண் குழந்தையாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் எனக்கு அப்படித் தான் இருந்தது. ஒரு பெண் - ஒரு ஆண் என்று இரண்டு குழந்தைகள் என்று சொல்ல நல்லாத்தானே இருக்கு?" என்றாள் பணிப்பெண்.

மருத்துவரும் பணிப்பெண்ணும் கூறியதையடுத்து உடல் வலியை மனைவி பொறுமையாக தாங்கி கொண்டார். சுமார் ஒரு வார சிகிச்சைக்கு பிறகு, ஓரளவு குணமடைந்த மனைவியை கணவர் வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார். சில மாதங்கள் கழித்து அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பலரின் பொறுமை அந்த குழந்தை பிறக்க வழி செய்தது. பிறகு, அந்த குழந்தையே நான் தான் என்பதில் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.
வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

Tamil Nadu's Language Rights Revolution

Tamil Nadu's Language Rights Revolution Note  =  This post gives a basic overview based on available information and is not a complete a...