Chocks: கல்வி வரலாறு : சங்க காலம் முதல் திராவிட இயக்கம் வரை

Wednesday, June 4, 2025

கல்வி வரலாறு : சங்க காலம் முதல் திராவிட இயக்கம் வரை

கல்வி வரலாறு : சங்க காலம் முதல் திராவிட இயக்கம் வரை
பொருளடக்கம் 
  1. முகவுரை 
  2. சங்க காலத்தில் கல்வி
  3. ஆரியர்களின் வருகை
  4. நீதிக்கட்சியின் வருகை
  5. ராஜாஜியின் திணிப்பு
  6. காமராசரின் தொலைநோக்கு
  7. அண்ணாவின் இருமொழி கொள்கை
  8. அண்ணா இட்ட அடித்தளம் 
  9. கலைஞரின் உயர்கல்வி திட்டம்
  10. பெண் கல்வியை ஊக்குவித்த கலைஞர்
  11. எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா
  12. ஸ்டாலினின் திராவிட மாடல்
  13. இட ஒதுக்கீட்டின் கதை 
  14. திராவிட இயக்கத்தால் வளர்ந்த கல்வி
  15. முடிவுரை
  16. விவரணைகள் 
முகவுரை

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி என்பது சமூக நீதி, மொழி உரிமை, பெண்களின் உரிமை மற்றும் சமூக மாற்றங்களுடன் நேரடி தொடர்புடையது. இந்த கட்டுரை தமிழ்நாட்டின் கல்வி வரலாறு பற்றிய சுருக்கமான கண்ணோட்டத்தை வழங்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. முழுமையான விளக்கங்கள் அளிப்பதற்காக அல்ல. சங்க கால கல்வி, ஆரியர்களின் சூழ்ச்சி, நீதிக்கட்சியின் பங்களிப்பு, பெரியாரின் போராட்டம் மற்றும் திராவிட இயக்கங்கள் மூலம் ஏற்பட்ட கல்வி மேம்பாடுகளை சுருக்கமாக எடுத்துரைக்கிறது.

சங்க காலத்தில் கல்வி

ஆரியர்களின் வருகைக்கு முன்பு, தமிழ்நாட்டில் சாதி பிரிவினைகள் இல்லாத காலம் இருந்தது. அந்த காலத்தில், ஆண்களும் பெண்களும் எந்தவிதமான பேதமின்றி கல்வி கற்று, தங்கள் திறன்களின் படி தொழில்களில் ஈடுபட்டு, வாழ்க்கையை முன்னெடுத்தனர். அவர்கள் கல்வி, கலை, அறிவியல் மற்றும் பல துறைகளில் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தனர். இதனால், பலர் புகழ்பெற்ற புலவர்கள், தத்துவஞானிகள் மற்றும் சமூக முன்னேற்ற நாயகர்களாக விளங்கினார்கள்.

உதாரணமாக, கூல வாணிகம் செய்த சீத்தலைச் சாத்தனார், பொன் வாணிகம் செய்த உறையூர் இளம்பொன் வாணிகனார், மருத்துவம் செய்த தாமோதரனார், வேளாண்மை செய்த கோவூர் கிழார், சங்கறுக்கும் தொழில் செய்த கீரனார் போன்ற சங்ககால ஆண் புலவர்களும், அவ்வையார், காக்கைப்பாடினியார் நச்செள்ளையார், நக்கண்ணையார் போன்ற சங்ககால பெண் புலவர்களும் உண்டு. இவை போக, முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட திருக்குறள், ஐம்பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி போன்ற நூல்களும் குறிப்பிடத்தக்கது.

ஆரியர்களின் வருகை

ஆரியர்கள் வருகைக்குப் பிறகு, அவர்கள் அடக்கியாளும் சூழ்ச்சியால், சமுதாயத்தில் நான்கு வகையான வர்ணங்களை உருவாக்கினர். அதன் பின்னர், மனு தர்மத்தின் அடிப்படையில், பார்ப்பனர்களைத் தவிர, குறிப்பாக சூத்திரர்களுக்கு கல்வி அளிக்கக் கூடாது என்பது நடைமுறை சட்டமாகிவிட்டது. இதன் விளைவாக, பார்ப்பனர்களல்லாத மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. இதனால், நம் சமுதாயம் அறிவிழந்த ஒரு அடிமைச் சமுதாயமாக மாற்றப்பட்டது.

சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், நாயக்கர், மராத்தியர் ஆகிய ஆட்சிக்காலங்களில், பார்ப்பனர்களல்லாத மக்களுக்கு கல்வி பெரும்பாலும் மறுக்கப்பட்டே வந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் கல்வியறிவு பெற்றிருந்ததையும், அதற்குப் பிறகு நம் பாட்டனுக்கு கல்வி கிடைக்காமல் போனதற்குக் காரணம் பார்ப்பன சூழ்ச்சியே என வரலாற்றுத் தரவுகள் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன.

நீதிக்கட்சியின் வருகை

பேரரசு ஆட்சிக் காலத்திலிருந்து, பார்ப்பனர்கள் மட்டுமே கல்வி கற்பதும், அரசுப் பணிகளில் பெரும்பாலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்துவதும் காணப்பட்டன. நூற்றில் 3% மட்டுமே உள்ள பார்ப்பன சமூகத்தினர் கல்வியையும் வேலை வாய்ப்புகளையும் பெற்றனர். அதே நேரத்தில், நூற்றில் 97% உள்ள பார்ப்பனர் அல்லாத உழைக்கும் மக்களுக்கு அடிப்படை கல்விக்கூட மறுக்கப்பட்டது.

இந்த அநீதியை மாற்றும் நோக்கில், தென்னிந்தியாவில் 1920 களில் “நீதிக்கட்சி” என்ற அரசியல் இயக்கம் தோன்றியது.  “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” என்ற பெயரில் தொடங்கப்பட்ட “நீதிக்கட்சி” இயக்கம், இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய அன்றைய சென்னை மாகாணத்தில், பார்ப்பனரல்லாதவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டது. இந்த இயக்கத்தை டாக்டர் நடேசன், சர் பிட்டி தியாகராயர் மற்றும் டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் நிறுவினர்.

கல்வி மறுசீரமைப்பு

பேரரசுகளின் தயவால் கொடிகட்டி பறந்த பார்ப்பனர்களின் ஆதிக்கம், பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிக் காலத்தில் மெல்ல மெல்ல வலுவிழக்கத் தொடங்கியது. பார்ப்பனர்கள் எதிர்த்தாலும், பிரிட்டிஷ் ஆட்சி அனைத்துப் மக்களுக்கும் மெல்லக் கல்வி வழங்கத் தொடங்கியது. இதன் மூலம், பார்ப்பனர்களுக்கே உரியதாக இருந்த கல்வி அமைப்பில் மாற்றம் ஏற்பட்டது; அதன் பயனாக அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பு உருவாயிற்று. 

இதற்குப் பின்னால், 1920 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி அமைந்ததும், அனைவருக்கும் சமமாக கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பொதுப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுப் பள்ளிக் கல்வி முறையை உருவாக்கியது. மேலும், இட ஒதுக்கீடு முறைக்கும், மத்திய உணவுத் திட்டத்துக்கும் தொடக்கப்புள்ளியாக நீதிக்கட்சி இருந்தது.

இதே காலகட்டத்தில், சமூக நீதிக்கு எதிரான இந்துத்துவ ஆதிக்கம் காங்கிரஸ் கட்சியில் நிலவிய காரணத்தால், பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி, நீதிக்கட்சியின் சமூக சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக முழுமையாக களம் இறங்கினார்.

நீதிக்கட்சியின் முயற்சியால் தென்னிந்தியாவில் கல்வி தரம் உயரத் தொடங்கியது, அது இன்றும் தொடர்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு கல்வியில் முன்னிலையில் இருப்பதற்கான முக்கிய காரணம், நீதிக்கட்சியின் வழியில் திராவிட இயக்கப் பணிகள் இங்கு தொடர்ந்து நிலைத்ததே ஆகும்.

ராஜாஜியின் திணிப்பு

1937 ஆம் ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியடைந்ததுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது. ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில், தமிழ்நாட்டில் கல்விக்கு இடையூறாக கட்டாய இந்தி திணிப்பு திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார். இதற்கு எதிராக, "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற முழக்கத்துடன் பெரியார் இந்தி திணிப்புக்கு எதிராக கடுமையான போராட்டத்தைத் தொடங்கினார். அந்த போராட்டத்தில், பெரியாரின் தளபதியாக அண்ணா முக்கியப் பங்கு வகித்தார். அதே காலத்தில், "ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே!" எனக் கலைஞர் களம் கண்டார்.

1952 ஆம் ஆண்டு தேர்தலில் வென்ற ராஜாஜி, நீதிக்கட்சி திறந்த பல்வேறு பள்ளிகளை திட்டமிட்டு மூடினார். மேலும், 1953 ஆம் ஆண்டு அவரது ஆட்சியில் 'குலக் கல்வி திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. பெற்றோரின் தொழிலையே பிள்ளைகள் கற்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த கொடூரத் திட்டம், தொழிலுடன் பிணைந்த சாதியைக் கட்டாயப்படுத்தும் முயற்சி ஆகும். இதன் பின்னணியில், தமிழர்கள் முழுமையான கல்வியைப் பெறாமல் தடுக்கும் ஒரு இழிவான நோக்கம் இருந்தது. பெரியாரும், அண்ணாவும் தங்கள் திராவிடப் படை வீரர்களுடன் போராட்டத்தில் குதித்தனர்; அந்தப் போராட்டம் ஒரு மக்கள் இயக்கமாக மாறியது. இதன் விளைவாக, ராஜாஜி தனது முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது, பின்னர் காமராசர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

காமராசரின் தொலைநோக்கு

பெரியார் வழியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த காமராசர், ராஜாஜியின் குலக் கல்வி திட்டத்தை ரத்து செய்தார். ராஜாஜி மூடிய பள்ளிகளை திறந்ததோடு, புதிய பள்ளிகளையும் தொடங்கிய காமராசர், நீதிக்கட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி உணவு திட்டத்தை நெ.து.சுந்தரவடிவேலு ஆலோசனையின் பேரில் விரிவுபடுத்தினார். மேலும், சீருடை திட்டத்தை செயல்படுத்துவதிலும் மிகுந்த அக்கறை காட்டினார். இதன் மூலம், "கல்வி கண் திறந்த காமராசர்" எனப் பெரிதும் புகழப்படுகிறார்.

அண்ணாவின் இருமொழி கொள்கை

பேரறிஞர் அண்ணாவின் தலைமையில், திராவிட முன்னேற்றக் கழகம் 1967ஆம் ஆண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை சட்டமாக்கியது. ஏழை மாணவர்களுக்கு பி.யூ.சி வரை இலவசக் கல்வி, இலவச பாட நோட்டுப் புத்தகம் மற்றும் சீருடை வழங்கும் திட்டங்கள் முக்கியமான சமூகநல நடவடிக்கைகளாக அமைந்தன.

அண்ணா இட்ட அடித்தளம் 

"ஓராண்டுக்கு முன்னால், நான் பதவிக்கு வந்தேன். இந்த ஓராண்டில் மூன்று முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறேன். ஒன்று, சுயமரியாதை திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம். இரண்டு, தாய்த் திருநாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம். மூன்று, தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை அறிவிப்பு. இதைப் பார்த்துவிட்டுப் பலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது. இவர்களை விட்டுவைக்கலாமா? ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். முடியுமா என்று நான் சவால் விட மாட்டேன். உங்களால் முடியும். ஆனால், கலைத்து விட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து அண்ணாதுரை கொண்டுவந்த இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று கருதினாலே, உடனே மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும். அந்த அச்சம் இருக்கிற வரையில் , அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள். அந்த அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்துக்கும் ஆட்சியில் யார் இருந்தாலும் இல்லா விட்டாலும் அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள்" என்று பேரறிஞர் அண்ணா பேசியதன் பொருள் இன்று வரை பொருந்தி வருவதோடு, வரும் தலைமுறைகளுக்கும் இதன் எதிரொலி இருக்கும்.

மொத்தத்தில், தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம்: ஆட்சியாளர்கள் இந்திய மொழியை கட்டாயம் திணிக்க முயன்றால், தமிழக மக்களிடத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பும். மேலும், பேரறிஞர் அண்ணா விதைத்த முயற்சியின் பயனாக, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையின் அடிப்படையில் ஆங்கில வழிக்கல்வி வலுப்பெற்றது. இதன் விளைவாக, தமிழர்கள் தங்கள் திறமையால் உலகளவில் பல்வேறு சாதனைகள் புரிந்து வருகின்றனர்.

கலைஞரின் உயர்கல்வி திட்டம்

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, 1969 ஆம் ஆண்டு கலைஞர் கல்வி நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்தி, பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை நிறுவினார். பள்ளிக் கல்விக்குக் "காமராசர்" என்றால், உயர்கல்விக்குக் "கலைஞர்" என்றால் மிகையல்ல.

சத்துணவாக மாணவர்களுக்கு முட்டையும் வாழைப்பழமும் வழங்கி, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் ஏற்பாடு செய்து, எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்திய நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்து, கல்வித் துறையை இரண்டாகப் பிரித்து, உயர்கல்விக்காக தனியாக ‘உயர்கல்வித் துறை’ உருவாக்கி, பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை (Cut-off) குறைத்து, பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயமாக்கி, பற்பல கல்வி நலத்திட்டங்களை நிறைவேற்றினார் கலைஞர்.

பெண் கல்வியை ஊக்குவித்த கலைஞர்

பெண் கல்வியை ஊக்குவிக்க, கலைஞர் மூவலூர் மூதாட்டி ராமாமிர்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதில், மணமகள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், ரூபாய் 5,000 நிதி உதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை 8 ஆம் வகுப்பு வரை படிக்க வைத்தனர்.

பிறகு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், திருமண உதவி ரூபாய் 10,000 ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம், கலைஞர் பெண் மாணவிகளை பத்தாம் வகுப்பு வரை படிக்க ஊக்குவித்தார். மேலும், மணமகள் பட்டப்படிப்பு முடித்தால் ரூபாய் 25,000 நிதி உதவி வழங்கி, ஏழைப் பெண்களை பட்டதாரிகளாக்கினார்.

பெண்கள் கல்வி கற்க வேண்டும், பொருளாதார சுதந்திரத்துடன் இருக்க வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருந்த கலைஞர், அதற்குரிய திட்டங்களை கவனமாகவும் மெல்லவும் நடைமுறைப்படுத்தி வந்ததன் விளைவே, அவர்கள் எட்டாம் வகுப்பை தாண்டி உயர்கல்வி கற்று, பட்டதாரியாகவும் பணியில் சென்று சுயமாக சம்பாதிக்க முடிகிறது.

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா

1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர், பள்ளிகளில் வழங்கப்பட்ட உணவு திட்டத்தை விரிவுபடுத்தி, சத்துணவு திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். மாணவர் விடுதிகளும், சுயநிதி கல்லூரிகளும் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் பெரிதளவில் வளர்ச்சி பெற்றன. தொழில்முறை கல்லூரி படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரின் திட்டத்தை பின்னாட்களில் கலைஞர் ரத்து செய்தார்.

மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளும் இலவச லேப்டாப்களும் வழங்கியதுடன், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறையை பள்ளி கல்வியில் அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா. பின்னாட்களில் முப்பருவ கல்வி முறையை எடப்பாடி பழனிசாமி ரத்து செய்தார்.

ஸ்டாலினின் திராவிட மாடல்

தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கும் "நான் முதல்வன்" திட்டம், தமிழ் வழியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பெறும் மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் "புதுமைப் பெண் / தமிழ் புதல்வன்" திட்டம், தொடக்கப்பள்ளி மாணவர்களின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவும் சத்தான "காலை உணவுத் திட்டம்" என்று பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் பயணிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது.

2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த ஆரிய சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பா.ஜ.க, தனது தேசிய கல்விக் கொள்கையின் மூலம் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயல்கிறது. ஆனால், மு.க.ஸ்டாலினின் வலுவான தலைமையின் கீழ், தமிழ்நாடு இந்தி திணிப்பை உறுதியாக எதிர்த்து வருகிறது. இதற்கு பதிலாக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட கல்வி நிதியை பா.ஜ.க நிறுத்தி வைத்து, ஆரிய கருத்தியலுக்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இது நவீன கால ஆரிய-திராவிட போரின் எடுத்துக்காட்டாகும் என்றால் மிகையில்லை.

இட ஒதுக்கீட்டின் கதை 

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இந்தியாவில் பின்தங்கிய வகுப்புகளுக்கான உரிமைகளை நிலைநாட்ட, பார்ப்பனரல்லாதோர் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் போராடின. 1921 ஆம் ஆண்டு, ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி, கல்வி மற்றும் அரசு வேலைகளில் பார்ப்பனரல்லாதோருக்கான இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது.
1992 ஆம் ஆண்டு, இந்திரா சாவ்னி வழக்கில் இட ஒதுக்கீடு 50% பங்கைத் தாண்டக்கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த பின்னணியில், 1993-1994 ஆம் ஆண்டு, ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு ஒரு தனிச்சட்டத்தை கொண்டு வந்து, தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 69% இட ஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தது.

திராவிட இயக்கத்தால் வளர்ந்த கல்வி

நாம் முறைப்படி கல்வி பெற்றவர்கள் என்பதற்கு சான்றாக சங்க கால இலக்கியங்களை குறிப்பிடலாம். ஆனால், சங்க காலத்துக்குப் பிறகு சுமார் 2000 ஆண்டுகள் ஒரு இருண்ட காலமாக இருந்தது. சாதி என்ற நான்கு வர்ண அமைப்பு, பார்ப்பனர்களை உயர்த்தி பிடிக்கும் சனாதன தர்மம், கடவுளின் மேன்மை போன்ற பெயர்களின் கீழ் அர்த்தமற்ற கட்டுப்பாடுகள் சமூகத்தில் விதிக்கப்பட்டன. இதற்கு ஆரியப் பண்பாட்டு படையெடுப்பு மற்றும் அதனால் மாறிய சமூக அமைப்புகளே அடிப்படை காரணமாகும். இதனால், நாம் அறிவின் வெளிச்சம் இல்லாமல் தள்ளப்பட்டோம்.

பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக, பெரியார் வழியில் அவர்தம் சீடர்கள் அனைவரையும் உள்ளடக்கி உருவாக்கிய கல்வி திட்டங்கள் தமிழ்நாட்டில் பாடத் திட்டங்களையும் கல்வி நிலையங்களையும் மேம்படுத்தி, கல்வியின் தரத்தை உயர்த்தியது. மேலும், திராவிட இயக்கம், கல்வியின் முக்கியத்துவத்தை முன்னிட்டு பல்வேறு கல்வி நலத்திட்டங்களை செயல்படுத்தி, சமூக முன்னேற்றத்திற்கு வழிகாட்டியது.

முடிவுரை

சங்க காலத்தில் கல்வியறிவு செழித்திருந்ததையும், பின்னர் 2000 ஆண்டுகள் கல்வி வீழ்ச்சியடைந்ததையும், திராவிட இயக்கம் நம்மை மீட்டெடுத்ததையும் நன்கு உணர முடிகிறது. பெரியார், காமராசர், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் மூலம் தமிழ்நாட்டில் கல்வியின் அடித்தளம் வலுவாக அமைந்தது. 

திராவிட இயக்கத்தின் நிலையான முயற்சிகளினால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி சேர்க்கைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், தமிழ்நாடு கல்வி மற்றும் சமூக வளர்ச்சியில் முன்னிலை வகிக்கிறது. இன்றைய கல்வி வளர்ச்சி, திராவிட இயக்கம் வடிவமைத்த சமூக நீதி அடிப்படையிலான கல்வித் திட்டங்களின் பலனே என்பதில் சந்தேகமில்லை.

விவரணைகள் 







வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

உதயசூரியன் சின்னம் பிறந்த கதை

உதயசூரியன் சின்னம் பிறந்த கதை தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 1948 இல் எஸ்.எஸ்.ராமசாமி தலைமையில் "வன்னியர் குல சத்திரியர்" என தொடங்கப்ப...